நண்பர்களுக்கு வணக்கம். ஐப்பசி மாத அகல் தீபாவளி சிறப்பிதழ் நம் பார்வைக்கு!
இவ்விதழில் : சாந்தா தேவி அவர்களின் “தீபாவளி வாழ்த்து அ. முத்துலிங்கம் அவர்களின் “நாட் குறிப்புகள்” பரிவை சே. குமார் அவர்களின் “தீபாவளி சிந்தனைகள்” சுப்ரஜா ஸ்ரீதர் அவர்களின் “சிறுகதை – அம்மா” பாரியன்பன் நாகராஜன் அவர்களின் “துளிப்பாக்கள் பக்கம்” சத்யா GP யின் “சிறுகதை – உப்பு மாமா” ராஜ்குமார் பார்த்திபன் அவர்களின் “Cinema நூலகம்” சத்யா GP யின் “நிகழ் (கால) தீபாவளி ஊர் சுற்றி போஜனம் தேடி, காய், கனி மகத்துவம், ரெடி 1...2...3 சந்திராயன்ஸ் போன்ற வழக்காமான தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும் நண்பர்கள் அனைவருக்கும் உள்ளங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் பேரன்புடன் சத்யா GP ஆசிரியர் – அகல் மின்னிதழ் மழைக்காலத்தில் வந்திடும் ஐப்பசியின் சிறப்பான தீபாவளி பண்டிகை வரும் குளிர் பனி கால நோய்த்தடுப்பின் தொட்டுத் தொடர்ந்திடும் வாழ்வியல் பாரம்பரியம்... உடற்கடிகார அடிப்படையில் நுரையீரல் நன்கு இயங்கும் விடியற்காலை நேரத்தில் கபமறுக்கும் குறுமிளகும் வாதமறுக்கும் பூண்டும் பித்தமகற்றும் அரிசியும் அழகூட்டி மென்மையாக்கும் கருவேப்பிலையும் உடல் சூடு தணிக்கும் வெந்தயமும் கலந்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்து உடல் வனப்பு மேம்பட நலங்குமாவும்
கூந்தல் செழுமைக்கு சிகைக்காயும் சேர்த்து நதிகளின் நீரோட்டமெல்லாம் கங்கையின் சங்கமமெனும் ஐதீகத்தின்படி கங்கா ஸ்நானம் செய்ய எண்ணெய் குளியலின் பூரணபலனிற்காக வெந்நீரில் நீராடி உண்ணும் பலகாரங்கள் செரிமானமாகவும் குளிர்கால நோய்கள் நெருங்கா வண்ணம் காத்திடும் சுகமான சுக்கு மிளகு திப்பிலி ஏலம் கருப்பட்டி நெய் சேர்த்து கிளறிய தீபாவளி லேகியம் உண்டு வகை வகையான இனிப்புகளும் புதுவிதமான பலகார பட்சணங்களுடன் பகிர்ந்துண்டு களித்து புத்தாடை அணிகலனுடன் சூழல் சீர்கேட்டை கவனத்தில் கொண்டு கவனமுடன் பட்டாசுகளிலும் வானவேடிக்கைகளிலும் மகிழ்வித்து மகிழும் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! இந்த வாரத்தில் 2 நாட்கள் முதல் நாள் : கார் கத்தியது
பெரிய ஹொட்டலில் விருந்து நடந்தது. என் மேசையில் இருந்த நண்பர் கேட்டார், ‘நீங்கள் இப்பவும் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?’ நான் சொன்னேன். ‘நான் எங்கே தொலைந்து போகிறேன். ரோட்டுகள் அல்லவா திடீர் திடீரென்று தொலைந்து போகின்றன’ அதுதான் நடந்தது. நான் புறப்பட்டபோது இரவு 11 மணி. கையிலே ரோட்டு வரைபடம் இருந்தது. செல்பேசியில் போகும் பாதைக் குறிப்பு இருந்தது. போதாததற்கு காரிலே GPS இருந்தது. ஹொட்டலை விட்டு வெளியே வந்து ஒரேயொரு திருப்பம் எடுத்தேன். பத்து நிமிடத்தில் பெயர் தெரியாத ஓர் ஊரில் நின்றேன். வரைபடம் முன்னெப்பொழுதும் கேள்விப்பட்டிராத ரோட்டின் பெயரைக் காட்டியது. சரி திரும்புவோமென்றால் எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியவில்லை. தெரிந்த ஒரு ரோட்டின் பெயர் வரும்வரைக்கும் காரை ஓட்டினேன். மிகவும் பரிச்சயமான ஒரு வீதி வந்ததும் காரை அதற்குள் வெட்டினேன். கார் போகப்போக ஒன்று புரிந்தது. சரியான ரோட்டு; ஆனால் பிழையான திசை. அடுத்து வந்த சைகை விளக்கில் இடது பக்கம் திரும்பினேன். அதுதான் நான் அந்த இரவு விட்ட ஆகப் பெரிய தவறு. இடது பக்கம் ரோட்டே கிடையாது. வலது பக்கம் மட்டும் இருந்தது. என்னுடைய கார் இடது பக்க வீதியில் ஓடியது. எதிரே கார்கள் படுவேகத்தில் வந்தன. வலது பக்க வீதிக்கு மாறவேண்டும். இரண்டு பிரச்சினைகள். பின்னால் கார்கள் வந்துகொண்டேயிருந்தன. நடுவிலே ரோட்டைப் பிரித்து அரை அடி உயரமான சிமெண்ட் தரை இருந்தது. வருவது வரட்டும் என்று காரை அதன்மேல் ஏற்றி மறுபக்கம் வந்து சேர்ந்தேன். பின்னுக்கு வந்த கார் அடிக்காமல் தப்பினேன். நெஞ்சு படபடவென்று அடித்தது. அன்று உயிர் தப்பியது மிகப்பெரிய ஆச்சரியம்தான் இரண்டு பக்கமும் கார்கள் இல்லையென்று உறுதிப்படுத்திவிட்டு யூ திருப்பம் எடுத்தேன். இப்போது பாதை பிடிபட்டுவிட்டது. ஆனால் கைகள் நடுங்கியதை நிறுத்த வெகு நேரமாகியது. வீடுவந்து சேர்ந்தபோது இரவு ஒரு மணி. You have reached your destination (உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்) என்று கார் கத்தியது, இரண்டாம் நாள் : பணக்காரன் என்னுடைய வங்கிக்கு போனேன். யன்னலில் ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தார். நெஞ்சு சட்டையில் ‘பயிலுநர்’ என்று குத்தியிருந்தது. வங்கி நடப்புகளை பயில்வதற்காக புதிதாக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் பயிற்சியில் வெற்றி பெற்றால் இவரை நிரந்தரமாக்குவார்கள் என்று நினைக்கிறேன். என்னைக் கண்டதும் பயிற்சி சிரிப்பை வெளியே விட்டார். எப்படிச் சிரிப்பது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பளிச்சென்று எல்லா பற்களும் மின்னின. என்னுடைய பல் வைத்தியர் ஞாபகத்துக்கு வந்தார். அவர் சொல்லுவார். ‘ஐயா, எல்லாப் பற்களையும் நீங்கள் சுத்தம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. எதற்காக மெனக்கெட வேண்டும். எந்த எந்த பற்கள் தேவையோ அவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதும்’ இந்தப் பெண்ணுக்கு எல்லாப் பற்களும் தேவையாக இருக்கும்போல என்று பட்டது. ’உங்களுக்கு நான் இன்று எப்படி உதவலாம்?’ ஒவ்வொரு சொல்லையும் மனனம் செய்த ஒருவர் உச்சரிப்பதுபோல, கனடாவின் குப்பை வண்டி போல நிறுத்தி நிறுத்தி சொன்னார். ’உங்கள் பெயர் தெரியவில்லையே?’ என்றேன். அவர் ’அநுபமா’ என்றார். பயிற்சியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இப்போது பெயர் கிடையாது. நிரந்தரமாக வேலை கிடைத்ததும் அவர் தன் பெயரை மார்புச் சட்டையில் குத்தலாம். அவர் தொலைந்துபோனால் தேடுவது சுலபமாக இருக்கும். அவர் ஓர் இலங்கைப் பெண்ணாக இருக்கலாம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ் ஆகவும் இருக்கலாம். ஆனால் அவர் புன்னகையை பாம்பு வாலைச் சுருட்டுவதுபோல பட்டென்று சுருட்டி முடித்தபோது இலங்கைப் பெண்ணாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று என்னை நினைக்கவைத்தது. ‘ஒரு காசோலை வந்திருக்கிறது. அதை வங்கியில் என் கணக்கில் கட்டவேண்டும்’ என்றேன். ‘சரி. மிக்க மகிழ்ச்சியுடன்’ என்று சொன்னார். உடன் அட்டையை மெசினுள் நுழைத்து, என் கடவு எண்ணையும் பதிந்த பின்னர் காசோலையை நீட்டினேன். அதைப் பெற்றவர் பல் வைத்தியருக்கு தலையை உயர்த்துவது போல உயர்த்தி காசோலையை மேலே நீட்டிப் பிடித்து ஆராய்ந்தார். அதன் பின் பக்கத்தில் கையொப்பம் வைக்கச் சொன்னார். வைத்தேன். கம்புயூட்டரில் விரல்களால் வேகமாக அடித்தார். நகங்களில் பொய் நகம் ஓட்டி நீட்டியிருப்பதால் விரல்களால் குத்தாமல் சாய்த்து வைத்து பதிந்தார். பின்னர் எழுந்து நின்று சறுக்குவது போல நகர்ந்து மேலாளரிடம் சென்று ஏதோ ஆலோசனை கேட்டர். மறுபடியும் இருக்கைக்கு திரும்பி சாவதானமாக உட்கார்ந்து புன்சிரிப்பையும் ரசீதையும் தந்தார். நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன். நடக்கும்போதே ரசீதைப் பார்த்தேன். என்னுடைய வங்கிக்கணக்கு பத்து மடங்கு பெருகியிருந்தது. நான் கொடுத்த காசோலை 2500 டொலர்கள் மட்டுமே. அவர் வரவு வைத்தது 25,001 டொலர்கள். காசோலையில் குறுக்காக இழுத்த கோட்டை ஒரு தானம் என நினைத்து 25,001 டொலரை கணக்கில் சேர்த்திருந்தார். திரும்பவும் அவரிடம் போனேன். குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தார். ’இன்று என்னை மிகவும் சந்தோசப்படுத்திவிட்டீர்கள்’ என்றேன். ரசீத்தைப் பார்த்த பின்னரும் அவருக்கு விசயம் புரியவில்லை. பிழையை சுட்டிக் காட்டினேன். பள்ளிச் சிறுமி செய்வது போல நாக்கை ஒருகணம் வெளியே நீட்டி உள்ளே இழுத்து தன்னைத்தானே கடிந்து கொண்டார். பிழையை விறுவிறுவென்று திருத்தி புதிய ரசீது ஒன்றை தந்த போது ’மன்னிக்கவும்’ என்றார். ‘நான் ஏன் மன்னிக்கவேண்டும். நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றேன். அவர் ஒன்றுமே சொல்லாமல் அழகாகச் செதுக்கப்பட்ட புருவத்தை, அதற்கும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமே என்பது போல உயர்த்தினார். ’இன்று நான் பணக்காரனாகியிருந்தேன். ஒரு நிமிடம் மட்டுமே என்றாலும் பணக்காரன் பணக்காரன்தானே’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார். 25,001 டொலர் பெறுமதியான புன்னகை. பண்டிகையின் உற்சாகத்தைத் தொலைக்காதிருப்போம் தீபாவளி... இதைப் பற்றி எழுத எண்ண இருக்குன்னு யோசிக்கும் போதுதான் எவ்வளவோ இருக்கேன்னு தோணுச்சு... ஆமா... அகல் மின்னிதழின் தீபாவளி மலருக்கு ஏதாவது எழுதுங்களேன் என நண்பர் சத்யா கேட்டபோது சிறுகதை அனுப்பலாம் என ஒரு எண்ணம்... அதன் பின்னே எந்தச் சிறுகதை என்ற ஒரு கேள்வி... பண்டிகை என்றால் அதை ஒட்டிய சிறுகதைதான் எழுதணும் என்பது தமிழ்ப் பத்திரிக்கைகள் வகுத்து வைத்த ஒரு வடிவம் என்பதால் இனி உட்கார்ந்து சிறுகதை எழுதணுமான்னு ஒரு யோசனை... சமீபமாய் சில மனக் கஷ்டங்களால் சிறுகதை எழுதும் மனநிலைக்கு மாறுவதென்பது கடினமாக இருக்கிறது... அதனால் அம்முடிவுக்கும் முடிவு கட்டியாச்சு. அகலுக்கும் எனக்கும் எப்பவும் ஒரு ராசி உண்டு... எல்லா மின்னிதழ்களுக்கும் சிறுகதைகள் மட்டுமே கொடுப்பவன் அகல் என்றால் கட்டுரைகள்தான் அதிகமாய்க் கொடுத்திருக்கிறேன். அந்த ராசிப்படி இப்போதும் கட்டுரையே.
முதலில் நட்புக்கள், உறவுகள், அகல் மின்னிதழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவாளி... அன்றைய தீபாவளிக்கும் இன்றைய தீபாவளிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் வந்துவிட்டன... அன்று பண்டிகை தினம் என்பது சொந்தங்கள் எல்லாம் கூடிக் களிக்கும் ஒரு தினமாக, திருநாளாக இருந்தது. இன்று கலைஞர் தொலைக்காட்சி சொல்வது போல் விடுமுறை தினமெனக் கடந்து விடுகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு விடுமுறை தினமென்பது இந்துக்களின் பண்டிகை மட்டுமே என்பது வேறு விஷயம். விழிகளில் மகிழ்வை, சந்தோஷத்தை நிரப்பாமல் வெறுமையை மட்டுமே நிரப்பி, ம்ம்ம்.... அப்பல்லாம் தீபாவளின்னா... என்ற நினைவு மீட்டுபுடன் மரணித்து விடுகின்றன பண்டிகை நாட்கள். தீபாவளி வரப் போகிறதென்றால் இரண்டு மாதம் முன்னதாகவே பள்ளிக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடைகளில் துப்பாக்கி, பொட்டு வெடி, ரோல் கேப், உதிரிச் சீனி வெடி எல்லாம் விற்பனைக்கு வரும். துப்பாக்கி உள்ளிட்ட எல்லாவற்றையும் சணலில் சரமெனக் கட்டித் தொங்க வைத்திருப்பார்கள். பார்க்கும் போதே வந்து என்னை வாங்கிக் கொள் என அழைக்கும். எப்படியும் வாங்கிவிடுவோம் என்பது வேறு விஷயம். துப்பாக்கியும் ரோல் கேப்பும் வாங்கி, திருடன் போலீஸ் விளையாடும் போது போலீஸ் அதை வைத்துத் திருடனைச் சுடுவதாய் விளையாடியிருக்கிறோம். உதிரிச் சீனி வெடியை 25, 50 காசுகளுக்கு வாங்கி வந்து வீட்டில் அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் விறகை எடுத்து வந்து அதில் சீனி வெடியின் கிள்ளிய முனையைத் தொட்டுத் தூக்கி வீச அது அந்தரத்தில் வெடிக்கும்... அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான் இல்லையா..? அதுவும் மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க... ஹீரோவாய் கொள்ளிக்கட்டையில் வெடியைப் பிடித்துத் தூக்கி உயரத்தில் வீசி வெடிக்க வைக்கும் போது மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்... இரண்டு மூன்று வெடிகளை ஒன்றாய் இணைத்துப் பிடித்து தூக்கிப் போட்டு என்னைய மாதிரி உன்னால விட முடியுமாடா அப்படிங்கிற பார்வையை பக்கத்தில் வேடிக்கை பார்ப்பவன் மீது செலுத்தி, தூக்கிப் போடும் வெடி வெடித்துக் காகிதங்கள் பறந்து வந்து முகத்திலடிக்கும் போது கிடைக்கும் சுகம் தனி சுகம்தானே.... தீபாவளி என்றாலே பலகாரங்கள்தானே முக்கியம்... பலகாரம் இல்லாத தீபாவளியா... பொங்கலுக்குப் பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதேபோல வெடி, புத்தாடை என்பதைத் தாண்டி பலகாரமே முக்கியமானதாக இருக்கும். ஒரு மாதத்துக்கு முன்னரே என்னென்ன பலகாரம் செய்வதென வீட்டில் முடிவு செய்து விடுவார்கள். அதிரசம், முறுக்குக்கு எல்லாம் மாவு அரைத்து வைத்து விடுவார்கள். அதிரசத்துக்கான மாவை நாலைந்து நாள் முன்னதாகவே தயார் பண்ணி, கை படாமல் அறைக்குள் வைத்து விடுவார்கள். அப்பத்தான் அதிரசம் அதீத சுவையுடன், கல்லுப் போலில்லாமல் இருக்கும். அதிரசம் செய்து மிச்ச மாவை அப்புறம் செய்து சாப்பிடலாம் என வைக்கும் போது அந்த மாவை எடுத்துத் தின்பதில் போட்டியிருக்கும்... சில நேரங்களில் அடிதடியும் இருக்கும்.... அப்போதெல்லாம் குறைந்த வீட்டுக்கு நாலு இருக்கும்... எங்க வீட்டில் எல்லாம் ஏழு... இப்பத்தானே ஒன்றே போதும் அப்படின்னு சொல்லி உறவு தெரியாம வளர்க்கிறோம். பெரும்பாலும் முறுக்கு, அதிரசம் என சில நாட்களுக்கு வைத்துச் சாப்பிடும் பலகாரங்களைத்தான் அதிகம் செய்வார்கள்... அதுவும் முறுக்குச் சுடும் போது பாதி வெந்தும் வேகாமலும் எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொல்வார் எங்கம்மா.... ஆஹா... அந்தச் சுவையே தனிதான்.... அதுக்காகவே அம்மாவுக்கு உதவியாய் அடுப்பருகே அமர்ந்து முறுக்குக் கட்டையில் மாவு வைத்துக் கொடுக்கும் வேலையையோ, முறுக்கைத் திருப்பி விட்டுப் பதம் பார்த்து எடுக்கும் வேலையையோ செய்வதுண்டு. எங்கம்மா சுருள் போளி என்று ஒன்று செய்வார்கள். மாவை சப்பாத்தி மாதிரித் தேய்த்து எண்ணெயில் போட்டு எடுத்து அதில் சீனி, பொட்டுக்கடலை இன்னும் சில பொருட்கள் சேர்த்து அரைத்ததை வைத்துச் சூட்டோடு சுருட்டி வைக்க வேண்டும்... பல நாள் வைத்துச் சாப்பிடலாம்... அந்தச் சுவை சாப்பிட்டால் மட்டுமே தெரியும். பெரும்பாலும் வைத்துச் சாப்பிடும் பலகாரங்களாகச் செய்யக் காரணம் என்னவென்றால் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என எல்லாமே விவசாய மாதங்கள்... நல்ல மழை பருவத்தில் பெய்து கண்மாய் நிறைந்திருந்தால் எல்லாருமே பெரும்பாலும் பகல் நேரங்களில் வயல்களில்தான் கிடப்பார்கள். ஆத்துப் பூத்துப் போய் சாயந்தரம் வரும்போது நமநமண்ணு இருக்கும் வாய்க்கு எதாவது திங்கலாம்ன்னு தோணும் போது முறுக்கையோ, அதிரசத்தையோ எடுத்து வைத்துச் சாப்பிடுவார்கள். அதற்காகவே தீபாவளியைக் காரணம் காட்டி சட்டி சட்டியாக முறுக்கு, அதிரசம் செய்து வைக்கப்படும். தீபாவளி அன்னைக்கு வீட்டுல எண்ணெய் சட்டி வைக்காமல் இருக்கக் கூடாதுன்னு துக்கம் நிகழ்ந்த வீடாயிருந்தாலும் வடையாச்சும் தட்டுவாங்க... இப்போது இந்த நடைமுறையை எல்லாம் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை.... பல வீடுகளில் எண்ணெய் சட்டி வைப்பதேயில்லை. இனிப்பு, காரம், அதிரசம், முறுக்கு என எல்லாமே கடையில் இருந்தோ அல்லது தீபாவளிக்காகச் செய்து விற்பவர்களிடம் இருந்தோ வாங்கிக் கொள்கிறோம்... இட்லி, சாம்பார் மட்டுமே வீட்டில் செய்கிறோம். தீபாவளி அன்று ஹோட்டல்கள் இருக்காது என்பதால் அதைச் செய்கிறோம்... இல்லைன்னா அதையும் ஆர்டர் பண்ணி வாங்கிச் சாப்பிட்டு தீபாவளியைக் கொண்டாடி முடித்து விடுவோம் இல்லையா..? தீபாவளி அன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது மிகப்பெரும் சடங்காய் இருந்தது அப்போது... தீபாவளிக்கு மளிகைச் சாமான் வாங்கும் போது நல்லெண்ணெய், சீயக்காய் எல்லாம் மறக்காமல் வாங்கி வந்து விடுவார்கள். புலி மார்க் பாக்கெட் சீயக்காய்தான்... ஒரே பாக்கெட்தான்... அதை ஒரு டப்பாவில் கொட்டி காற்றுப் போகாமல் மூடி வைத்திருப்பார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் போகும் போது டம்ளரில் கொஞ்சம் சீயக்காயும் எடுத்துச் செல்ல வேண்டும். உடம்பில், தலையில் தேய்க்கும் போது நுரை அவ்வளவாக வராதென்றாலும் உடம்பில் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கைச் சுத்தமாக எடுத்துவிடும்... தலை முடி பஞ்சு பஞ்சாக இருக்கும்... அப்புறம் மீரா சீயக்காய் வந்தது.... நுரை நல்லா வந்தது... அதன்பின் ஷாம்பு வர, நுரை நுரையாய் வந்தது. புலி மார்க் பலியாகிப் போனது... புலியைப் போல் காணாமலும் போனது. எண்ணெய் தேய்த்தல் பற்றிச் சொல்ல வந்தேன் இல்லையா...? ஒரு டவராவில் எண்ணெய் ஊற்றி சாமி அறையில் வைத்துக் கும்பிட்டுவிட்டு அப்பாவிடம் கொடுக்கப்படும்... அவர் அன்று எந்தப்பக்கம் சூலமெனப் பார்த்து உக்கார, அவருக்கு எதிரே வயதுப்படி வரிசையாய் அமர, மூன்று முறை எண்ணெய்யை எடுத்துத் தலையில் தேய்த்து, உடம்பெல்லாம் தேய்த்து விடுவார்... ஒவ்வொருவருக்கும் அப்படித்தான் தேய்ப்பார்... நீண்ட நேரம் எடுப்பார்... வயது ஆக ஆக, எனக்கு எண்ணெய் ஒத்துக்காது சும்மா சாத்தரப்புக்குத் தொட்டு வையுங்க போதும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதுண்டு. கண்மாயில் தண்ணீர் இருந்தால் கையில் சீயக்காய் டம்ளர், சோப்பு சகிதமாய்ப் போய் ஆட்டம் போட்டுக் குளித்து, முனியய்யாவை வணங்கி வீடு வந்து சேர்வோம். தண்ணி இல்லை என்றால் அடிபைப்பில் அடித்துத்தான் குளிக்க வேண்டும். அடி பைப்தான் என்றால் அதிக எண்ணெய் தேய்க்க விடுவதில்லை... எண்ணெய் தேய்த்துக் கண்மாயில் நீந்திக் குளிப்பதுவே சுகம்... இப்பத்தான் ஷவரைத் திறந்துவிட்டுட்டு நனைஞ்சா நனஞ்சிக்க நனையாட்டிப் போன்னு... சாமிக்கு நெய் வேத்தியம் பண்ணும் போது பார்த்தா பாத்துக்க பாக்காட்டிப் போன்னு திறந்து மூடுற கணக்கால குளிச்சிட்டு வர்றோம். எண்ணெய் தேய்கிறதைப் பேசும்போது இன்னைக்குத் தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறாங்களான்னு கேட்டா, இன்றைய தலைமுறை அதை அதிகம் விரும்புவதில்லை என்பதே உண்மை... ஒண்ணு அவனுக்கு ஒத்துக்காதுன்னு அம்மா சொல்லிடுவாங்க... இல்லேன்னா சும்மா சாத்தரப்புக்குத் தலையில தொட்டு வையிங்க போதும்ன்னு அவனே சொல்லிடுவான். அப்போ வாராவாரமோ, மாதம் ஒரு முறையோ எண்ணெய் தேய்த்துக் குளித்தோம் அதனால் நல்லெண்ணை சூடு தணிக்கும்ன்னு தெரிஞ்சி வச்சிருந்தோம்.... இன்னைக்கு யாருமே எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில்லை... உடம்பு சூடா இருக்குன்னு சொன்னா பீர் சாப்பிடு கூலாயிரும்ன்னு சொல்ற காலத்துல நல்லெண்ணெய்யின் பலன் நமக்கெதுக்கு...? பிறந்த குழந்தைக்கு கண், காதுல எல்லாம் நல்லெண்ணெய் விட்டு, இளம் வெயில் படுற மாதிரி கால்ல போட்டுக்கிட்டு வெயில்ல உக்காந்திருப்பாங்க... வேப்பிலை, துளசி, ஓமவள்ளி, தூதுவலை என பல வகையான இலைகளை அரைத்துச் சாரெடுத்துக் கொடுப்பார்கள். இப்ப எங்கே இதெல்லாம் செய்யப்படுகிறது... பிறந்து வீட்டுக்கு வரும்போதே டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து, சோப்பு என வந்து விடுகிறோம்... மண்ணில் இறங்கி விளையாட விடுவதேயில்லை... கிருமி வரும்... புண் வருமெனப் பாதுகாப்பாய் வளர்க்க ஆரம்பித்து விடுகிறோம். இங்கே பிலிப்பைனி நாம் விட்டதையெல்லாம் செய்கிறான்... காலையில் குழந்தைக்கு கண்ணில் எண்ணெய் விட்டு வெயிலில் காட்டிக் கொண்டிருக்கிறான். நாம் மேல் நாட்டு மோகத்திற்குள் செல்ல, அவனோ நம் பாரம்பரியத்தைக் கலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்திருக்கிறான்... நம் கஞ்சியை காசாக்குறான்... பிரண்டை, குமுட்டிக்காய், கோவக்காய், மிளகுதக்காளிப் பழம், சப்பாத்திக்கள்ளிப் பழம், நுங்கு என எல்லாவற்றையும் காசாக்கிக் கொண்டிருக்கிறான். வீட்டில், வயலில் தானே விளைந்து கிடந்ததைப் பறித்துத் தின்ன நாதியில்லாமல் இருந்தது... இன்னும் சில இடங்களில் இருக்கிறது... இங்கே பிரஷருக்கு நல்லது, சுகருக்கு நல்லதுன்னு பாக்கெட்டில் விற்பதை அதிக விலை கொடுத்து வாங்கித் தின்கிறோம். என்னைக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் என நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிப் பெட்டி வழி நம் இல்லத்தை ஆக்கிரமித்தார்களோ அன்னைக்கே பண்டிகை நாட்கள் எல்லாம் பாழாப் போய்விட்டது. ஆம் குளித்து வந்து, சாமி கும்பிட்டு, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள் சாப்பிட்டு, வெடியுடன் கோவிலுக்குச் சென்றால் அங்கே மற்றவர்கள் காத்து நிற்ப்பார்கள். எல்லாருமாய்ச் சேர்ந்து வெடி வெடித்து மகிழ்ந்து சிரித்து ஆட்டம் போட்டு வீடு வரும் போது மதியச் சமையலின் வாசம் நம்மை மல்லுக்கட்டும். சாப்பிட்ட பின்னும் மீண்டும் கோவில்... வெடி... ஆட்டம்... பாட்டம்... சந்தோஷமென இரவு புஷ்வானம், சங்கு சக்கரம், ராக்கெட் விடுவதில் முடிந்து மறுநாள் காலை வெடித்த குப்பைகளை எல்லாம் குவித்து நெருப்பு வைத்து அதில் வெடிக்காத வெடிகளைப் போட்டு வெடிக்க வைப்பதில் முடியும்... கொஞ்சம் வெடிகளை பத்திரப்படுத்தி வைப்போம் பெரிய கார்த்திகைக்குப் போட வேண்டுமென. காலையில் பலகாரம் சாப்பிட்டதும் மற்ற வீடுகளுக்குக் கொண்டு போய் கொடுப்பதும், அவர்கள் கொடுப்பதை வேண்டாமெனச் சொல்லாமல் வாங்கி வருவதும், ஒருவருக்கு ஒருவர் புத்தாடையைப் பற்றிப் பேசி மகிழ்வதும் மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை... சினிமா நட்சத்திரங்கள் வந்த பின் தொலைக்காட்சி முன்னே தீபாவளி கழிய ஆரம்பித்த போது இந்தச் சந்தோஷங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. உறவுகளை மறந்து, பக்கத்து வீட்டுக்குக் கொடுப்பதைத் துறந்து, ரம்யா பாண்டியன்களின் இடுப்பு மடிப்பைப் பார்த்தபடி தீபாவளி குறித்து அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டோம். பண்டிகை தினங்கள் பொலிவிழந்து வருடங்களாகிவிட்டன... இனியேனும் பண்டிகை தினங்களை மகிழ்வோடு கொண்டாடுவோம்... இனியேனும் பண்டிகை தினங்களை உறவுகளுடன் உற்சாகமாய்க் கொண்டாடுவோம். இனியேனும் பண்டிகை தினங்களை ரசித்துக் கொண்டாடுவோம். இழந்ததை மீட்டெடுக்க முடியுமா தெரியவில்லை... இருப்பதை இழக்காதிருப்போம். மொத்தத்தில்... தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பண்டிகையின் உற்சாகத்தைத் தொலைக்காதிருப்போம். "அம்மா" உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். இன்னமும் விடியவில்லை. நேரம் என்ன இருக்கும்? காகம் ஓன்று ஜன்னலில் உட்கார்ந்து கரைய ஆரம்பித்தது. விடியும் முன் காகம் கரைவது வித்தியாசமாய்இருந்தது. இது அதிகம் பசி பிடித்த காகம். கண்ட கண்ட வேளைகளில் கரையும். சூ என்று விரட்டினேன். அது சட்டை செய்யாமல் மீண்டும் 'கா கா 'வென்று இன்னமும் உச்ச ஸ்தாயியில் கரைய ஆரம்பித்தது. எரிச்சல் மிக எழுந்தேன். அது கொஞ்சம் கூட அசராமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தது. விளக்கைப் போட்டு கடிகாரம் பார்த்தேன். மணி மூன்று நாற்பது. இந்த நேரத்தில் இது என் இப்படி கரைத்து எரிச்சலை உண்டு பண்ணுகிறது. மீண்டும் கையை தூக்கி விரட்டினேன். அது இன்னமும் வேகமாக கரைய ஆரம்பித்தது.
கதவு தட்டப்படும் ஓசை. இந்த நேரத்தில் யார்? "யாரு?" என்றேன். "நான் வாசு?" "வாசுன்னா" என்று கேட்டபடியே கதவை திறந்தேன். அந்த பையன் அங்கு நின்றிருந்தான். அரை இருட்டில் அவன் முகத்தை என் நினைவறைகளில் தேடினேன்.ம்ஹும் .யார் என்று தெரியவில்லை. "யாருப்பா நீ?" "சார் என்னை அடையாளம் தெரியலையா.. நான்தான் வாசு, உங்க பெரிய அண்ணன் முரளி வீட்டு சொந்தக்காரர் பையன்..உங்கம்மா இறந்துட்டாங்க உடனே உங்களை கூட்டு வரச் சொன்னாரு" "நீ எதுலப்பா வந்த?" "சைக்கிள் சார், வாங்க நான் டபுள்ஸ் அடிப்பேன்" சைக்கிளில் அவன் பின்னால் உட்கார்ந்து போனேன்.அவன் மேல் இருந்து வியர்வை ஸ்மெல் அடித்துக் கொண்டிருந்தது. வேகமாக மிதித்து போனான். அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். எந்த சலனமும் முகத்தில் இல்லை. வயதின் முதுமை ரேகைகள் மட்டுமே. "எப்படி?" அண்ணன் பக்கம் திரும்பி கேட்டேன். மன்னி பதில் சொன்னாள். " சீக்கிரமே எழுந்துட்டாங்க. .. காபி கேட்டாங்க .. பால் இன்னும் வரலைன்னு சொன்னேன்.. ஒரு டம்பளர் சுடு தண்ணியாவது கொடுன்னாங்க.. கொண்டு வரதுக்குள்ள கூப்டுப் பார்த்தேன் பதில் இல்ல.. தொட்டு எழுப்பலாம்னு தொட்டேன்.. சில்லிப்பாய் இருந்தது.. எதிர்த்தால இருக்கிற டாக்டரை எழுப்பி இவர் கூட்டிண்டு வந்தார்.. பார்த்ததும் சொல்லிட்டார் ." “சம்பத்துக்கும், சாரிக்குக் சொல்லிட்டேன்.. அவங்க மதுரையில் இருந்து கிளம்பியாச்சு.. சந்தானத்தை தான் எப்படி காண்டக்ட் பண்றதுன்னு தெரியலை" "நான் பார்த்துக்கறேன்" என்றேன். "எப்படி? சொல்லாம விட்டுட்டோம்ன்னு குதிப்பான்.. தூரத்தில இருக்கான்.. சொல்ல வேண்டியது நம்மா கடமை. வரானோ இல்லையோ?" அண்ணன் இழுத்தான். சந்தானம் வேலை செய்வது சிப்சாகர், அஸ்ஸாம் கேந்திர வித்யாலயாவில்... ஆறு வருடம் முன்னால் அங்கே வேலைக்குப் போனவன் அங்கேயே ஒரு அஸ்ஸாமியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அதற்கு பின் வரவேயில்லை.. அம்மாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.. அவனுக்கு பிடிச்சிருக்கும் பண்ணிண்டிருப்பான்... அவன் ஒருத்தன் தான் டான்னு ஒண்ணாம் தேதியானா ஆயிரம் ரூபாய் சொளையா அனுப்பறான்.. வேற யார் எனக்கு சேசரா?" என்பாள். யாருக்கு தெரியும் அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று. கேந்திரிய வித்யாலாவிற்கு செய்தி அனுப்ப ஒ.என்.ஜி.சி.யை தான் நாட வேண்டும்.அவர்களிடம் நிச்சயம் ஹாட் லைன் இருக்கும். சாவு வேறு கோரிக்கை வைத்தால் செய்வார்கள். கதீட்ரல் சர்ச் அருகே அவர்களின் அலுவுலகத்தைப் பார்த்த நினைவு. வாசுவின் சைக்கிளை வாங்கி கொண்டு வேகமாய் மிதித்துப் போனேன். டூட்டியில் இருந்த வாலிபர் செண்டிமெண்டலானவராய் இருப்பார் போல் இருக்கிறது. விஷயம் சொன்னதும் "வயசு என்ன?" என்று கேட்டார். சொன்னேன், "ஒ எழுபதா, நடமாடிட்டு இருந்தாங்களா..?" "ம்?" "அட்டாக்கா?" "ஆமாம்" "அஸ்ஸாமுக்கு தான் சொல்ல முடியும், சொல்லிடறேன். அவங்க சிப்சாகர் பாஸ் பண்ணிடுவாங்க. எப்படியும் அவர் அஸ்ஸாம் வரைக்கு ரயில்தான் வரணும். அங்க வந்து பிளைட் பிடிக்கலாம்" விவரங்களை எழுதித் தர சொன்னார். எழுதிக் கொடுத்தேன். "நான் சொல்லிடறேன் நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க?" "நன்றி சார்?" "இதுக்கு ஏன் நன்றி, கிளம்புங்க.. எங்கம்மாவுக்கு வயசு அறுபத்து ஆறு" என்றார். வீட்டிற்கு திரும்பிய போது சில சொந்தக்கார்கள், உள்ளூர்காரர்கள் வந்திருந்தார்கள். காசி பாட்டி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். காசி பாட்டிக்கு வயது தொன்னூற்று ஆறு. இன்னமும் கிழங்கு மாதிரி இருந்தாள். பாட்டியின் பெயர் வேறு ஆனால் எப்பொழுது சண்டை வந்தாலும்" எனக்கு என்ன இருக்கு.. வேண்டாம்னு தீர்மானம் பண்ணேன்னா கிளம்பி காசி போயிடுவேன்.. அங்க ஒரு மூலையில உட்கார்ந்தா ஒரு உருண்டை சாதம் கிடைக்காதா?" என்பாள். அதனால் அவர் பெயரே காசி பாட்டி என்றாகி விட்டது. என்னைப் பார்த்ததும் "ஸ்ரீதரா எங்கடா போனே, சந்தானத்துக்கு சொல்லிட்டியா?" என்று கூப்பிட்டாள். வந்த உடன் செய்திகளை சேகரித்து விட்டாள் போல. பக்கத்தில் போன என் கைகளை தன் தளர்ந்த சுருங்கிய கைகளால் பிடித்துக் கொண்டாள். "என்னடா பண்றே உன் கல்யாணத்தை பார்த்துட்டு தான் கண்ணை மூடுவேன்னு சொன்னா மகராசி போயிட்டா சந்தானம் சந்தானம்னு மூச்சுக்கு மூச்சு சொல்வாளே அவன் வர வரைக்கும் வச்சிக்க முடியாதா?" "தூரத்திலே இருந்து கவனித்து கொண்டிருந்த அண்ணன் வந்து விட்டான். "நான் தான் சொன்னேனே பாட்டி வீட்டு ஓனர் ஒத்துக்க மாட்டார்னு அவர் வீட்டுல சின்ன பொண்ணுங்க எல்லாம் இருக்கு ரெண்டு தடவை வந்து பார்த்துட்டு போயிட்டார்" "ஆமாம்" “அண்ணன் உங்களை பின்னாடி கூப்பிடறா காபி இருக்காம்" பாட்டி எழுந்து போனாள். அண்ணன், "வாத்தியாருக்கு சொல்லிட்டேன் பணம் ஏதும் கொண்டு வந்தியா?" என்றான். "ம்" என்றேன். அண்ணன் நகர்ந்து விட்டான். நான் அம்மாவின் உடலைப் பார்த்தேன். மதுரையில் இருக்கும் சகோதரர்கள் வீடு, அண்ணன் வீடு என மாறி மாறி இரண்டு மாசம் இருப்பாள். சந்தானம் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பி விடுவான். அதை பெருமையாக சொல்வார். "வேற யார் இப்படி சேசரா. ஒண்ணாம் தேதியான டான்னு பணம் கைக்கு வந்துடும்" என்பாள். அப்படி சொல்லும் போது நான் எந்த பதிலும் சொல்ல மாட்டேன். என்ன சொன்னாலும் தவறாக போகும். வாத்தியார் வந்து விட்டார். "ஏன்டா எப்ப எடுக்கறதா இருக்கேள் இன்னைக்கா நாளைக்கா முடிவு பண்ணிடேள்னா... முதல்ல இடு காட்டுக்கு பணம் கட்டி ரசீது போட்டுண்டு வந்திடுங்கோ ஐஸ் பொட்டிக்கு சொல்லலையா?" "ம்ஹும், ஐஸ் பாருக்கு ஆள் அனுப்பியிருக்கேன்.. மதுரையில இருந்து தம்பிங்க வந்ததும் இன்னைக்கே எடுத்துடலாம்னு" "அவா எத்தனை மணிக்கு வந்து சேர்வா?" "ஆறு மணிக்குள்ள வந்துடுவான்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்.." "சரி ஒரு மூவாயிரம் கொடு மத்த வேலைகளை நான் பார்க்கிறேன்" என்றார் வாத்தியார். அண்ணன் என்னைப் பார்த்தான். "நான் பேங்க் திறந்ததும் எடுத்துண்டு வரணும். உன்கிட்ட இருந்து மூவாயிரம் மாமாகிட்ட கொடு அப்புறம் கணக்கு பார்த்துக்காலம்" என்றான். "என் கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு" "மன்னி கிட்ட கேளு அவகிட்ட அப்புறம் தந்துக்கலாம் " என்றான். மன்னியிடம் பணம் ஆயிரம் வாங்கி என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து அவரிடம் கொடுத்தேன். அவர் "யாராவது ஒருத்தர் கணக்கு வைச்சுக்கோங்கோ அப்பப்ப தேவைப்படும்" என்றபடியே போனார். வந்த சொந்தக்காரர்கள் எல்லாம் அம்மாவை பற்றி விசாரித்து விட்டு அடுத்து 'ஏன் கல்யாணம் பண்ணிக்கலை' என்று என்னை துக்கம் விசாரித்தார்கள். நேரம் கரைய கரைய டென்ஷனில் தலை வலிக்க ஆரம்பித்தது. பின்புறம் போய் அங்கே கொதியில் இருந்த காபியை எடுத்து குடித்தேன். வீட்டு ஓனர் வந்தார். "உங்க அண்ணா சந்தானம் என்னோட லைனுக்கு போன் பண்ணினார்.. நாளைக்கு ராத்திரிதான் ப்ளைட்டாம் டெல்லி வந்து அங்க இருந்து மாறி வரணுமாம். உங்க அண்ணா கிட்ட சொல்லிடுங்கோ ..ஆமாம் இன்னைக்கு எடுத்துடுவேள் இல்ல" நான் அவரைப் பார்த்தேன். அவர் கவலை அவருக்கு. "ம் எடுத்துடுவோம்" என்றேன். ஹாலில் சம்பத் சாரி பேச்சுக் குரல் கேட்டது. வந்துவிட்டார்கள் போல் இருக்கிறது. சம்பத் நிச்சயம் கொஞ்ச நேரத்தில் பின்னாடி வருவான். காபி குடிக்காமல் இருக்க அவனால் முடியாது. சரியாய் வந்து விட்டான். "என்னடா நீ இங்க தான் இருக்கியா" அவனிடம் ஒரு டம்ளர் காபியை எடுத்து கொடுத்தார் பரிசாரகர். "ஏன்னா" என்றபடியே சின்ன மன்னியும் அங்கு வந்து விட்டாள். ஒரு நிமிடம் அவனை தனியாய் யாருடனும் பேச விட மாட்டாள்" "ஸ்ரீதர், அம்மாக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை, போன மாசம் வந்திருந்தபோது கூட சொன்னா.. எனக்கு என்னமோ தோணித்து.. இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போங்களேன்னு? பெரியவனைப் பார்க்கணும்ன்னு கிளம்பி வந்துட்டா" வாத்தியார் குரல் தான் பிரதானமாய் கேட்டது. "எல்லோரும் முடி எடுத்துட்டு தலையில தண்ணி ஊத்திண்டுட்டேளா" "ம்." என்றோம். "இங்க வா" புடவையின் ஒரு முனை அம்மாவின் மேல் கிடந்தது.இன்னொரு முனையைப் பிடித்து என் கையில் கொடுத்தார். "இத அப்படியே வாசல் படியில கொண்டு போடு" போட்டேன். வெளியில் மூங்கில் தயாரக இருந்தது. வேனும் நின்று கொண்டிருந்தது. அண்ணன் என்னைப் பார்த்தான். "நீ அம்மா கூட வேன்ல வந்துடு.. நாங்க முன்னாடி கார்ல போயிடறோம்" "ம்" வேனில் ஏற்றியதும் எல்லோரும் காருக்கு பாய்ந்தார்கள். நான் வேனில் அம்மாவின் பாடைக்கு அருகில் உட்கார்ந்தேன். "என்ன எல்லோரும் மாறி மாறி பந்தாடறா? இங்க ரெண்டு மாசம் அங்க ரெண்டு மாசம்னு, சமைக்கவும் விட மாட்டேங்கறா சரியில்ல" அந்த நாள் எனக்கு நினைவில் வந்தது. அன்று சனிக்கிழமை. வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தேன். கதவைத் தட்டும் ஓசை. திறந்தேன். அம்மா! "உள்ள வாம்மா" "எப்படிடா இருக்க, கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன். உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளம் சபொரிச்சு தா டா" "நல்ல மணமா பண்ற ஒரு வேளை சமைக்க தெரியாம இருந்தா கல்யாணம் பண்ணிண்டு இருப்பியோ என்னமோ” நான் எந்த பதிலும் சொல்லவில்லை. போகும் போது ஒரு டம்ளரில் ஊற்றி தரச் சொல்லி வேப்பம் பூ ரசத்தை குடித்து விட்டு போனாள். அதன் பின் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இடுகாடும் வந்து விட்டது. வேனில் இருந்து இறக்கி தயாராக இருந்த சிதையை நோக்கி தூக்கிப் போனோம். நான் கால் மாட்டில் ஒரு பக்கம் பிடித்திருந்தேன். சிதையை நெருங்கும் போது தான் கவனித்தேன். நான் பிடித்திருந்த பக்கம் அம்மாவின் கட்டை விரல் துணி தாண்டி வெளியல் தெரிந்தது. அது மெல்ல அசைந்தது. எனக்கு தூக்கி வாரி போட்டது. பிரமை இல்லை உண்மைதான். உயிர் போகவில்லை. வேறு யாரும் கவனிக்கவில்லை. "எப்படிடா இருக்க? கோவிலுக்கு போறேன்னு சொல்லிண்டு வந்திருக்கேன். உன்னை பார்க்க வரேன்னு தெரிஞ்சா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்பா அந்த ராட்சஸி வாய்க்கு இதமா சாப்பிட்டு இரண்டு வருஷம் ஆறது. கொஞ்சம் வேப்பம் பூ ரசம் பண்ணி அப்பளம் பொரிச்சு தாடா" அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது. சடுதியில் கோட்டி துணியை இழுத்து விட்டேன். விரல்கள் வெளியே தெரியாதவாறு மூடினேன். சாம்பலாக இன்னும் சில வினாடிகள் தான். வெயிலை வெட்டி எடுக்க கொஞ்சம் கொஞ்சமாய் பரவுகிறது நிழல். வார்த்தையற்ற சொல் கேட்கிறாய் மென்மையான மௌனத்தை கடத்துகிறேன் உனக்கு. அணைந்த சுடரில்
விலாசம் தேடித் தோற்கிறது இருள். பழைய அமரர் ஊர்தி புதிது புதிதாய் பயணிக்கும் பிணங்கள். தரையிறங்கியது வானம் மழை. உப்பு மாமா கீழ வாசலில் கிளம்பி வழியில் எங்கேயும் நிறுத்தக் கூடாது என்று நினைத்தபடி சிவராமன் எக்ஸ்எல் சூப்பரை ஓட்டிக் கொண்டு வந்தார். வாகனத்தின் முன்னே வைக்கப்பட்டிருந்த இரண்டு பைகள், வண்டியின் பக்காவாட்டில் க்ளாம்ப் பொருத்தப்பட்ட இடத்தில் இரு பைகள், சுமை அதிகம் ஆனால் ஒவ்வொரு முறையும் நினைப்பு பிரசவ வைராக்கியமாகத்தான் மாறிப் போகிறது. பள்ளியக்ரஹாரத்தில் ஒரு வட்டம் அடித்து அந்தப் பக்கம் இருக்கும் தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் வண்டியை நிறுத்தி மனமுருக பிரார்த்தனை செய்து, நெற்றி நிறைய திருநீரை அள்ளிப்பூசி வண்டியை திட்டை நோக்கி சீரான வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது கிடைக்கும் மனதிருப்தியை சிவராமனுக்கு யாராலும் தர இயலாது. சிவ தரிசனம் முடித்து வண்டியை சீரான வேகத்தில் ஓட்டி திட்டைக்குப் போய் சேர்ந்த போது மணி ஏழு. ஆறரை மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள். ப்ளஸ் டூ படிக்கும் மகன் சர்வேஷை அதிகம் தொந்தரவு செய்வதாக சிவராமன் நினைத்தார். ரகு கடையைப் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவன் தான். இருந்தாலும் தனி ஆளாக சமாளிப்பது கஷ்டம்!
முதல் நாள் இரவும், மறு நாள் முழுதும் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் குளத்தில் வறட்சி இல்லை. நிறையவும் இல்லை. சிறு ஓடை போல் நீர் கண்ணுக்குப் புலப்பட்டது. சனிக்கிழமை கோயிலில் திரக்கு காணப்படவில்லை. வியாழக்கிழமைகளில் ஜனம் அதிகம் கூடும். இறைவி மற்றும் இறைவனின் பெயர்களை மறந்து நவக்கிரக கோயிலாகவும், பரிகார ஸ்தலமாகவும் மாற்றி, ஆன்மீகப் பத்திரிகைகளும் அப்படியே எழுத இவை கண்டு மக்களும் புத்தி மாறிப் போய்விட்டார்களே என்று சிவராமன் முன்பெல்லாம் அடிக்கடி அங்கலாய்ப்பார். இப்போது சில நிமிடங்களுக்கு பெருமூச்சு, அவ்வளவு தான்! புத்தி பழகிவிட்டது. மகன் சர்வேஷை மெஸ் வியாபாரத்தில் நிறுத்துவது உறுத்தல் தான் ஆனால் ரகுவுக்கு அவ்வளவு சூசனை கிடையாது. பணத்தை வேகமாக எண்ணும் கலை கை கூடவில்லை. ஒரே சமயத்தில் பலர் ஆர்டர் சொன்னால் பதட்டம் அடைவான். வாளியில் இருந்து சாம்பார் கீழே சிந்தும். கைகள் நடுங்கும். கல்லாவில் சர்வேஷ், பரிமாற ரகு. இது சரியாக இருக்கும். அவ்வளவு கூட்டம் இல்லை. இட்லி மாவை அரைத்து, உப்பு சேர்த்து, கரைத்து பெரிய சம்படத்தில் வைத்தாகிவிட்டது. தேங்காய் சட்னி அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தான் கிளம்பினார். ஆறே முக்கால் மணிக்கு ராப்பலகாரத்திற்கு இலை போடுவது “அன்னப்பூரணி மெஸ்”ஸின் வழக்கம். ஒன்பதரை மணிக்கெல்லாம் கடைக்கு ஜன வரத்து குறைந்துவிடும் ஆனால் சிவராமன் பத்தரை மணிக்கு தான் கடை சாத்துவார். சொல்லி வைத்தார் போல் இரண்டு மெடிக்கல் ரெப்புகள் தினமும் பத்தே கால் மணிக்கு வந்து சப்பாத்தி, தோசை சாப்பிட்டு மோர் குடிப்பார்கள். அவர்களுக்காக காத்திருப்பது பழக்கமாகிவிட்டது. அவர்கள் ஊரில் இல்லையென்றால் போன் செய்து முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி, உளுந்து, கோதுமை மாவு, வெந்தயம், பெருங்காயத்தூள், கடலெண்ணெய், பசுநெய், காபித்தூள், ஜீனி, வர மிளகாய், தனியா, உப்பு, து. பருப்பு, பா. பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மணத்தக்காளி வற்றல், அப்பளம், வாழை இலை, காய்கறிகள்... சகலமும் வாங்கி வந்தார். வெங்காயம், உருளை, சேனை போன்ற அதிக நாட்கள் தாங்குபவற்றை பேரம் பேசி மொத்தமாக வாங்கி வந்துவிடுவார். தினமும் காலை ஐந்தரை மணிக்கு லக்ஷ்மி கீரைக் கட்டுகள் தருவது வாடிக்கை. வண்டியிலிருந்து பைகளைப் பிரித்தார். கனத்தது... மெஸ்ஸுக்குள் நோட்டம் விட்டார். உள்ளே உப்பு மாமாவுக்கு இலை பரிமாறப்பட்டு இருந்தது. அவர் சாப்பிட்டபடி சர்வேஷிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். உப்பு மாமாவின் ரா போஜன நேரம் அதுவே! “என்ன மாமா நாழியாகிடுத்து? நானே புளி, மிளகாய் அரைச்ச சட்னி தாளிச்சுட்டேன்” “நாலுக்கு கிளம்பி இருக்கணும் ரகு அஞ்சு மணிக்கு புறப்பட்டேனா அதான் தாமசம்” சிவராமன், உப்பு மாமா அமர்ந்திருந்த டேபிளை கவனித்தார். இலைக்கருகே ஒரு சின்ன கப், அதில் வழக்கம் போல் உப்பு. “என்ன ஓய் மெஸ்ஸுக்கு தானே மளிகை வாங்க கீழ வாசல் போன, என்னமோ கல்யாணத்துக்கு சாமான் வாங்கப் போன மாதிரி வர” “உப்பு மாமா பேரு சரியாத்தான் இருக்கு” சிவராமன் முணுமுணுத்தபடி, “ஒண்ணுமில்லை மாமா எப்பவும் வாங்கறது தான்” “நீ முணுமுணுக்கறது காதுல விழுந்துது” “...” உப்பு மாமா அவருக்கு இஷ்டமான வெங்காய ஊத்தப்பத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஊத்தப்பத்திற்கு அவர் சொன்ன செய் முறை விளக்கத்தை சிவராமன் மறக்கவே இல்லை. அதை ரகுவிடமும் தெளிவாக சொல்லி இருந்தார். மாவை கல்லில் ஊற்றி விட்டு மொளாப்டியைத் தூவ வேண்டும். அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அள்ளித் தெளிக்க வேண்டும். மீண்டும் மேலே மொளாப்டி, நிறைய எண்ணெய் விட்டு நன்கு வெந்ததும் பதமாக எடுத்துத் திருப்பிப் போட வேண்டும். இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் பரிமாற வேண்டும். ஊத்தப்பத்தின் நடுவே உப்பலாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருப்பதே உண்மையான ஊத்தப்பம் என்பார் உப்பு மாமா. மூன்று இட்லி, ஒரு வெங்காயப் பொடி ஊத்தப்பம், ஒரு கிளாஸ் மோர் இது தான் அவரின் இரவு உணவு மெனு. அதில் மாற்றமே கிடையாது. சாப்பிடும் போது அருகே சிறு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு வைத்துவிடுவது உத்தமம். சாம்பார், சட்னி போன்றவற்றில் உப்பு பத்தல என்று சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். “உப்பிட்டவரை...” இது உனக்குத் தான் பொருந்தும் சிவராமா என்று அவ்வப்போது பகடி செய்வார். திடீரென சர்வேஷின் படிப்பு பற்றி பேச ஆரம்பித்தார். “ஏன் டா உன் பிள்ளையாண்டான் பத்தாவதுல மார்க் கம்மியா வாங்கினானா, காமர்ஸ் க்ரூப் சேர்த்துருக்க?” மாமா திட்டை வந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இது வரை கேட்காத கேள்வி. சிவராமன் பேச ஆரம்பித்தார். “கணக்குல நூத்துக்கு நூறு, சைன்ஸ்லயும் சென்டம், தமிழ்ல தொண்ணுத்தி ஏழு, இங்கிலீஷ்ல தொண்ணுத்தி அஞ்சு, சோஷல் சைன்ஸ்ல தொண்ணுத்தி எட்டு” “ஐந்நூறுக்கு நானூத்தி தொண்ணுறு எடுத்துருக்கான், ஃபர்ஸ்ட் க்ரூப் சேர்த்துருக்கலாமே ஏன்?” “அவனுக்கு மெடிக்கல் படிக்க இஷ்டம்” “அப்புறம் என்ன படுபாவி?” “என்ன செய்ய, இந்த ஏழை கடன்கார பிராமணனுக்கு மகனா பிறந்துட்டான், மெடிக்கலுக்கு எல்லாம் கொடுப்பினை வேணும். தாய் இல்லாத பிள்ளை, ஏதோ குறை வைக்காம படிக்க வைக்கறேன், பி.காம் சேர்க்கலாம்னு?” “அது படிச்சா மட்டும் பணக்காரனாகிடுவானா?” “ஆயிரத்தி இருநூறுக்கு ஆயிரத்தி இருநூறு எடுத்தாலும் இவன் பொறப்புக்கு மெடிக்கல் கிடைக்காது மாமா விட்டுடுங்கோ” “அடப் போடா பிரும்மஹத்தி, டேய் சர்வேஷ் உன்னை சி.ஏ சேர்த்து விட்டா படிப்பியா? செலவை நான் பாத்துக்கறேன்” “சரி மாமா” “டேய் உங்கப்பனும் மாமான்னு சொல்றான், நீயும் மாமான்னு சொல்றியே, வாய் நிறைய தாத்தான்னு கூப்பிடுறா” “சரி தாத்தா” மழை இரு நாள் கூத்தாகி வழக்கம் போல் சூரியன் மண்டையைப் பிளக்க நாட்கள் இயல்பாகிப் போனது. உப்பு மாமாவும் கோயில், மெஸ், வாரம் ஒரு நாள் பெரிய கோயில், இரு வாரங்களுக்கொரு நாள் வைத்தீஸ்வரன் கோயில், மாதமொரு முறை ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் என்று ஏகாந்தமாக வளைய வந்து கொண்டிருந்தார். ஒரு நாள் காலை காபி குடிக்க வந்தவர். சிவராமனிடம் “என்னமோ தெரியல படபடப்பா இருக்கு” என்றார். உப்பு மாமாவுக்கு காபி கொஞ்சம் கசப்பாக இருக்க வேண்டும். நுரை தளும்ப இருந்தால் தான் தொண்டைக் குழிக்குள் இறங்கும். “காபி கசப்பா குடிக்கணும் ஆனா டீ அப்படியில்லை. கொஞ்சம் பால் வட்டமா, சக்கரை குறைவில்லாம, ஏலக்காய், இஞ்சி போட்டு இருக்கணும்” மாமாவுக்கு எல்லாவற்றிலும் டேஸ்ட் முக்கியம். “உன்னி கிருஷ்ணன், சஞ்சய் சுப்பிரமணியம் ஏதோ நன்னா பாடறா இருந்தாலும் அந்தக் காலத்துல...” பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். வியர்த்துக் கொட்டியது. மாமாவுக்கு ஷுகர், பிபி போன்ற எந்த தொந்தரவும் கிடையாது. சிவராமன் பதறினார். “என்னாச்சு மாமா?” “ஒன்னும் இல்லை, இந்த காபி தம்ளர வாங்கு” பாதி குடித்த தம்ளரை சிவராமன் வாங்க, “ராமா” என்று சொல்லியபடி மாமா டேபிளில் சரிந்தார். பதறிய சிவராமன் ரகுவை அழைத்து அடுத்த தெருவில் உள்ள டாக்டரை அழைத்து வர சொன்னார். டாக்டர் “எல்லாம் முடிந்துவிட்டது” என்று சொன்னபோது சிவராமனுக்கு ஈஸ்வரனுக்கு தீபாராதனை காட்டும் அர்ச்சகர் லிங்கத்தைப் பார்க்க விடாமல் முதுகு காட்டி நிற்பது போல் இருந்தது. ****************** மாமா எப்போதும் சொல்லும் டயரி அவர் வீட்டு டிவிக்கு அருகே உள்ள செட்டப் பாக்ஸ் பக்கத்தில் அமைதியாக இருந்தது. உயிரற்ற காகிதக் குவியலில் உயிருடன் இருக்கும் போது ஒரு ஜீவன் எழுதிய முக்கியக் குறிப்புகள். சிவராமனுக்கு, தனியாக இருந்த மாமாவின் ரத்த சொந்தங்களை அழைக்க வேண்டும். கடைசிக் காரியங்களை செய்ய வாரிசு வர வேண்டாமா? மாமாவின் கட்டை வேக வேண்டாமா? டயரியைப் புரட்ட ஆரம்பித்தார். அவரின் பிறந்த நாளானா மே பதினைந்தாம் தேதி சொத்துப்பங்கீடு குறித்து விரிவாக எழுதி இருந்தார். முடிச்சூரில் உள்ள வீடு மேஜர் ஆன பின் அவரது பேரனுக்கு, தவிர வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணம், மூன்று வங்கி மற்றும் இரு நிறுவனங்களில் உள்ள வைப்பு நிதி, அவரது டீமேட் கணக்கில் உள்ள பதினோரு ப்ளூ சிப் நிறுவனப் பங்குகள் குறித்த விவரம்... அனைத்தும் அவர் மகனுக்கு என்று எழுதி இருந்தது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்க விரும்பினால் தங்கிக் கொள்ள எதுவாக திட்டை வீட்டை நிர்வகிக்க வேண்டும் என்றும், திட்டை வீடு சிவராமனுக்கு என்று மாமா குறிப்பு எழுதி இருந்தார். இது தவிர டாடா மோட்டர்ஸ் போன்ற பதினோரு பெரிய நிறுவனங்களில் ஓர் ஆண்டு காலத்திற்கு சேமிப்பு என்னும் காலக்கெடுவில் உள்ள பத்து லட்ச ரூபாய் வைப்பு நிதியானது சிவராமனின் மகன் சர்வேஷின் மேற்படிப்புக்குப் பயன் படுத்த வேண்டும் என்றும் அத்தொகையை சிவராமன் எடுத்துக் கொள்ளலாம் என்று தெளிவாக எழுதி இருந்தார். அனைத்தும் உயிலாக எழுதப்பட்டு பதிவு செய்துள்ளதாகவும் உயிலின் ஒரு பிரதி அலமாரியிலும் மற்றொரு பிரதி திருச்சியில் உள்ள வழக்கறிஞர் நீலகண்டனிடமும் உள்ளதாக தகவல் தந்திருந்தார். கையில் இருந்த டயரி கனப்பது போல் சிவராமனுக்குத் தோன்றியது. டயரியில் இருந்த மாமாவின் மகன் ஸ்ரீநிவாசனின் அலைபேசி எண்ணை எடுத்துப் பேசத் துவங்கினார். ************* சொன்ன சொல்லை ஸ்ரீநிவாசன் தட்டவே இல்லை. சென்னையில் இருந்து இரண்டு மணி நேரத்தில் கிளம்பி மனைவி மற்றும் மகனுடன் திட்டைக்கு அவர் கார் வரும் போது மணி மாலை நான்கு. பிரயாணத்தின் போது மணிக்கொரு முறை சிவராமனிடம் ஸ்ரீநிவாசன் பேசத் தவறவில்லை. பெரிய அளவில் கூட்டமிருக்காது என்று சிவராமன் நினைத்தார். உப்பு மாமா விஷயத்தில் எது எதிர்பார்த்தது போல் நடந்திருக்கிறது. மெட்ராஸ், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரம், வைத்தீஸ்வரன் கோயில், குளித்தலை, பெரம்பலூர், திருவையாறு, திருவாரூர், நாகப்பட்டினம்... பல்வேறு ஊர்களிலிருந்து ஏகப்பட்ட நண்பர்கள் வருகை அனைத்தையும் பிரமிக்க வைத்தது. இரண்டு நாட்களுக்கு மெஸ் மூடப்பட்டது. ஈமக்கிரியை முடித்து பத்தாம் நாள் காரியமும் முடிந்தது. கிரேக்கியத்திற்கு தஞ்சை மஹாராஜாவில் புத்தாடை வாங்கப்பட்டது. சிவராமனின் நளபாகம். போஜனத்தில் அவர் குறை வைக்கவே இல்லை. குட மிளகாய் சாம்பார், அவரைக் காரக் குழம்பு, தக்காளி எலுமிச்சை ரசம், டாங்கர்ஸ் பச்சடி... பார்த்து பார்த்து செய்தார். உப்பு மாமா இறந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள். ஸ்ரீனி புறப்படத் தயாரானான். சிவராமன் பேச ஆரம்பித்தார். “நான் மூணு நாள் தாயாதிக்காரன் கூட கிடையாது, அவர் என்னமோ எழுதி வெச்சுட்டுப் போயிட்டார், நான் வேணா எதுவும் வேண்டாம்னு எழுதி...” ஸ்ரீனி இடைமறித்தான். “வேண்டாம் மாமா, சட்டப்பூர்வமா உயில் எழுதி இருக்கார், அவரோட புள்ளையா நான் செய்யற கடமை அவரோட கடைசி ஆசையை நிறைவேத்துறது தான் ப்ளீஸ்” ஸ்ரீனியின் மனைவியும் அதை ஆமோதித்து தலையாட்டினாள். “ஸ்ரீனி சொல்றது தான் சரி. நீங்க பெரியவங்க எல்லா சம்பிரதாயமும் தெரிஞ்சவங்க, அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டாமா? “உங்க கூடவே இருந்திருக்கலாம் அவர் ஏன் தனியா பிரிஞ்சு இருந்தார்?” “அம்மா காலமான போது எனக்கு பதினாலு வயசு, வீட்டுக்கு ஒரே பையன், எல்லாரும் அவரை இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொன்னாங்க, என் பையன் முக்கியம்னு மறுத்துட்டார், என்னை நல்ல படியா வளர்த்தார், படிக்க வைச்சார், சொந்தக் கால்ல நான் நிக்கிற வரைக்கும் தாங்கினார், கல்யாணம் செஞ்சு வெச்சார், நான் தான்...” சொல்லியபடி ரோஹிணியைப் பார்க்க அவள் மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். ஸ்ரீனியின் மகன் சந்துருவும் சகஜமாக சிவராமனிடம் பேசத் துவங்கி இருந்தான். அம்மாவுடன் அமைதியாக வெளியே கிளம்பினான். “என்னப்பா சொல்ற, அதான் கல்யாணம் செஞ்சுண்டு நிறைவா குடித்தனம் செய்யறியே அப்புறம் என்ன” “பரம்பரை ராசி மாமா, எனக்கு கல்யாணம் இருபத்தேழு வயசுல நடந்தது. அவ மூனே வருஷத்துல போய் சேர்ந்துட்டா” “அப்போ...” “ரெண்டாம் கல்யாணம், உடனே செஞ்சுக்கல, மூணு வருஷம் கழிச்சு தான், அப்போ குழந்தையும் இல்லை, எனக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேண்டாமா? “ரோஹிணி?” “ரோஹிணியும் என்னை மாதிரி தான். அவ முதல் ஹஸ்பண்ட் ஆக்சிடெண்ட்ல தவறிட்டார். அவ என் ஆஃபீஸ் கலீக், எப்படியோ பிடிச்சுப் போய் நான் ப்ரபோஸ் செய்ய, அவளும் யோசிச்சு ஒரு மாசம் கழிச்சு சரின்னு சொன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் சந்துரு மேல பாசம் குறையக் கூடாதுன்னு ரெண்டு பேரும் இன்னொரு குழந்தை வேண்டாம்னு முடிவு செஞ்சுட்டோம்” “புரியறது” “அப்பாக்கு பிடிக்கல... ரெண்டு பேருக்கும் முக்கியமான விஷயங்கள் எல்லாத்துலயும் ஒத்துப் போச்சு. அவளும் என்னை மாதிரி வெஜிடேரியன் தான். தெய்வ பக்தி, ரசனை... வேவ் லெங்த் பிரச்சனை இல்லை, என்னை விட ஒரு வயசு பெரியவ” “வயசு... வளர்ந்த சூழல், எக்ஸ்போஷர், உங்கப்பாக்கு ஒட்டல” “இவளுக்கு விநாயகர்னா இஷ்டம், சங்கடஹார சதுர்த்தியைக் கொண்டாடினா, சஷ்டி நினைவில்லையான்னு அப்பா கேட்பார், சிவன் கோயிலுக்குப் போனா, ராமர் ஆகாதா, சைவ சித்தாந்தமான்னு? மடக்குவார். காபில சக்கரை கூட போடு, டீல கம்மியா போடு, இப்படி தொட்டதுக்கெல்லாம்” ஸ்ரீனி சொல்ல சொல்ல சிவராமன் மனதுள் எண்ணங்கள் சுழற்றி அடித்தன. அனைத்தும் விளங்கியது. பேச்சை நிறைவு செய்யும் விதத்தில் பேசினார். “சரி மத்யானம் மெஸ்ல வந்து சாப்டு புறப்படுங்க” ******* மெஸ்ஸில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர். மகனை அழைத்து ஸ்ரீனிக்கு அறிமுகப்படுத்தினார். “துக்க வீட்டுல வழக்கமான ஃபார்மாலிட்டி வேண்டாம்னு பேசாம இருந்தேன். இவன் தான் என் பிள்ளையாண்டான் ப்ளஸ் 2 படிக்கறான்” “நல்லா படிப்பா, வித்தை முக்கியம்” “சரிங்கோ மாமா” “உன் பேர் என்ன?” இடை மறித்து சிவராமன் சொன்னார். “உன் தோப்பனார் பேர் தான் ஸ்ரீனி” “அப்படியா?” “ஆமா அதே சர்வேஷ்” ****************************************** சினிமாக்களுக்கும் பழிவாங்குதல் படலத்திற்கும் உள்ள தொடர்பு சினிமா தோன்றிய ஆதிப்புள்ளியிலிருந்தே உருவான ஒன்று. யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் இதுவரையிலான நம் வாழ்வில் ஒரு சிறு பழிவாங்குதல் படலத்தையாவது நிகழ்த்தியிருப்போம். அது எந்த வடிவத்திலும் இருந்திருக்கலாம். அப்படியான நம் எல்லோருக்கும் தெரிந்த நமக்கு நன்கு பரீட்சயமான இந்தப் பழிவாங்குதல் உத்தியானது, 2003ல் வெளிவந்த தொன்கொரியப் படமான Old Boy யிலும் இருக்கிறது. சினிமாவில் பழிவாங்குதல் என்பது எவ்வளவு பழைய உத்தி என்பதை மேற்கண்ட வரிகளில் சொல்லிவிட்டோம் அல்லவா? பிறகு அப்படியென்ன இந்தப் படத்தில் ஸ்பெஷல் என்று நிச்சயம் ஒரு சலிப்பு இந்நேரத்துக்கு உங்களுக்கு தோன்றியிருக்கலாம். இந்தப்படத்தின் நாயகனுக்கும் வில்லனுக்கும்.... என்ன பிரச்சினை? ... இன்னொன்று, நாயகன் வில்லன் என்பதை விட இரண்டு பேர்... என்று வைத்துக்கொள்ளலாம். காரணம், வில்லன் யார் என்பதை சூழ்நிலைகளே தீர்மானிக்கிறது என்பது படத்தில் அடிக்கோடிடப்பட்ட ஒரு முக்கிய விசயம். ஓகே. இரண்டு மத்திய வயது ஆண்கள். அவர்களுக்கு இடையே நிகழ்ந்த பிரச்சினைகள் என்ன? அதில் ஒருவன் இன்னொருத்தனை எத்தனை குரூரமாக பழி தீர்த்துக் கொண்டான் என்பதே Old Boy. படத்தின் தொடக்க காட்சிகளே நிமிர்ந்து நோக்க வைக்கிறது. குறிப்பாய் மொட்டைமாடியில் தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருத்தனைத் தடுத்து நிறுத்தி தன் கதையை நாயகன் விவரிக்கத் தொடங்குவதில் இருக்கிற அந்த சூழல் எதிர்பார்ப்பின் ஆரம்பப் புள்ளி. நன்றாய்க் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட ஓர் இரவில் போலிஸின் பிடியிலிருக்கிற நாயகன் Oh Dae-su (Choi min sik) வை அவரது நண்பர் மீட்டுக் கொண்டு வருகிறார். அப்போதுதான் அன்று அவருடைய மகளின் பிறந்த தினம் என்பது நினைவுக்கு வருகிறது. உனக்காக ஒரு பரிசுடன் வருகிறேன் என்று தொலைபேசியில் மகளிடம் ஆசையாய்ச் சொல்லும் Oh Dae-su திடீரென்று மாயமாகிறார். விழித்துப் பார்த்தால் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். உள்ளே ஒரு தொலைக்காட்சி இருக்கிறது. நேரத்துக்கு ஒரே வகையான உணவு வருகிறது. இப்படியே நாட்கள் கழியும் போது ஒருநாள் தொலைக்காட்சியில் Oh Dae su வின் மனைவி கொல்லப்பட்டதாகவும் கொலையாளியான கணவரை போலீஸ் தேடுகிறது என்றும் செய்தி ஒளிபரப்பாகிறது. அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்லும் நாயகன் தன்னை அடைத்து வைத்தது யார்... ஏன்... என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் கிடந்து தவிக்கிறார். தற்கொலைக்கு முயலும் போது அறையில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு தற்கொலை தடுக்கப்படுகிறது. இப்படியே பதினைந்து ஆண்டுகள் கழிகிறது. ஒருநாள் Oh Dae-su திடீரென்று விடுவிக்கப்படுகிறார். பின்புதான் அந்தத் தேடல் ஆரம்பமாகிறது. யார் தன்னை இவ்வளவு காலம் ஒற்றை அறையில் அடைத்து வைத்தது? ஏன் என்று தேடி பல முயற்சிகளுக்குப் பிறகு அந்த வில்லனின் (yoo ji-tae) முன்பு போய் நிற்கிறார் நாயகன். (நம் புரிதலுக்காக நாயகன் வில்லன் என்றே குறிப்பிடுகிறேன்) அப்போது அந்த வில்லன் ஐந்து நாட்களுக்குள் என்னைக் கண்டுபிடி. நானே தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் உன் நெருக்கமான தோழியை கொன்று விடுவேன் என்கிறான். ஆம். பதினைந்து வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியில் வரும் நாயகனுக்கு ஹோட்டலில் பணி செய்யும் Mi-do என்ற இளம் பெண்ணுடன் (kang hye Jung) காதல் ஏற்பட்டு உடல்வரை பறிமாறிக் கொள்கிறார்கள். நாயகனுக்கு அந்தக் காதல் பெரும் ஆசுவாசமாக இருக்கிறது. ரைட் நாயகன் ஐந்து நாட்களில் அவன் யாரென்று கண்டுபிடித்து அவனிடம் போய்ச் சொல்லுகிறான். அவனை தற்கொலை செய்யச் சொல்லி வலியுறுத்துகிறான். அப்போது வில்லன் ஒரு பரிசுப்பெட்டியை நாயகனிடம் கொடுக்கிறான். அதைப் பிரித்து பார்க்கும் நாயகனுக்கு பேரதிர்ச்சி. யெஸ். கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் தான் எவ்வளவு குரூரமாகப் பழிவாங்கப் பட்டிருக்கிறோம் என்பது நாயகனுக்குப் புரிகிறது. தீ பட்ட புழு போலத் துடிக்கிறான். வில்லனிடம் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று தன் நாக்கை அறுத்துக் கொள்கிறான். தன் வாழ்நாள் முழுவதிலும் தன்னை பாதிக்கப் போகிற நூதனப் பழிவாங்கலில் இருந்து நாயகனால் மீள முடிந்ததா என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இப்படத்தின் நாயகன் Choi min sik பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நடிப்பு ராட்சசன். காட்சிகளுக்காக எந்த அளவுக்கும் மெனக்கெடுபவர். படத்தில் இவர் ஒரு ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடும் காட்சி வருகிறது. காட்சியின் தத்ரூபத்துக்காக நிஜ ஆக்டோபஸையே உண்டிருக்கிறார். (இவர் புத்த மதம் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) பதினைந்து வருடங்கள் எந்த சக உயிர்த் தொடர்பும் இல்லாத ஒருவர் இப்படித்தான் இருப்பார் என்பதை இயக்குனர் விளக்குகிற இடம் இது. இந்தப்படத்தின் ஜீவனே க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்தான். அதுதான் மொத்தப்படத்தையும் தாங்குகிறது. ஒருவேளை அந்த இடத்தில் சறுக்கியிருந்தால் மொத்தப்படமும் வீழ்ந்திருக்கும். வில்லன் yoo ji-tae வும் தன் பங்கிற்கு கண்களாலேயே மிரட்டியிருப்பார். இந்த சமூகம் வகுத்த ஒழுக்க விழுமியங்களையும் நியதிகளையுமே கொண்டு நாயகனை வீழ்த்துகிற வன்மம் இவர் கண்களில் இயல்பாகவே இழையோடியிருந்தது. இந்தச் சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை ஆக்கியதில் இயக்குனர் Park chan wookன் உழைப்பு ஒவ்வொரு இடத்திலும் மிளிர்கிறது. இவர் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாசிரியராக இயக்குனராக தயாரிப்பாளராக தன் பங்கினைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாய் இந்த பழிவாங்குதல் வகைப் படங்கள் இவருக்கு கை வந்த கலை. படத்தில் பதினைந்து வருடங்கள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை அந்த ஒற்றை அறையில் இருக்கிற தொலைக்காட்சியின் செய்திகளை ஃபாஸ்ட் கட்டிங் செய்து புரிய வைத்திருப்பார்கள். அன்றைய காலகட்டத்தில் மிக புத்திசாலித்தனமான காட்சியமைப்பு இது. படத்தில் நான்கு நிமிட சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. ஒரே கோணத்தில் ஒரே டேக்கில் இதைப் படம்பிடித்து அசத்தியிருப்பார்கள். இந்தப் படத்தை இந்தியாவில் நிச்சயமாய் ரீமேக் செய்ய முடியாது. ஆனாலும் இதன் கருவை மாற்றி இந்தியில் Zinda என்றொரு படம் Unofficial ஆக வெளிவந்தது. இதில் சஞ்சய் தத், ஜான் ஆபிரஹாம் போன்றோர் நடித்திருந்தார்கள். மேலும் இப்படம் 2013ல் ஹாலிவுட்டில் சிறுசிறு மாற்றங்களுடன் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதனின் உச்சகட்ட வஞ்சம் என்பது இப்படத்தில் நாயகனுக்கு நிகழும் சம்பவம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன். இதில் நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதை நம்மால் முடிவு செய்யவே முடியாது. ஒழுக்கமும் இயற்கையை மீறாத வாழ்வும் நம்மை சீராக பயணிக்க வைக்கும். இதில் ஒன்றை மாற்றி யோசித்தாலும் இப்படத்தில் வில்லனுக்குத் தோன்றுவது போல உச்சகட்ட வஞ்சத்தையும் குரூரங்களையும் கட்டவிழ்த்து விடும் என்பதே இயக்குனர் நமக்குச் சொல்லும் செய்தி. அந்த குரூரங்கள் பேராபத்துகளை நிகழ்த்தும் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறது Old Boy. ஒரு பழைய ஜப்பானிய காமிக்ஸின் பாதிப்பில் உருவான இந்தப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாய் 2004ல் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தலைசிறந்த இயக்குனர் Quentin tarantino முன்னிலையில் சிறந்த படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. படம் : Old Boy மொழி. South Korean நடிகர்கள் Choi min sik, Yoo ji-Tae, Kang Hye Jung... இயக்கம் Park chan wook நான் முன்பு பணி புரிந்த நிறுவனமொன்றில் உடன் சேர்ந்து பணிபுரிந்த பெண்ணொருவர் தமக்குத் தெரிந்த பெண் ஒருவரிடம் நான் செய்யும் வியாபாரம் தொடர்பான விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். என்னுடைய அலைபேசி எண்ணையும் அவரிடம் தர, அந்தப் பெண்மணி என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு தன் பெயர் உஷா என அறிமுகப்படுத்திக் கொண்டு மளிகைப் பொருட்கள் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். பட்டாசுகள் மலிவு விலையில் வாங்கித்தர முடியுமா என்றார். மேலும் தீபாவளிப் பண்டிகைக்கான தின்பண்டங்களை எப்போதும் வீட்டில் தான் செய்வதாகவும், மாதத்தை நிறைவு செய்யத் தேவைப்படும் மளிகைப் பொருட்கள், இனிப்பு உறைப்பு பலகாரங்கள் செய்யத் தேவையான அரிசி மாவு, ஜீனி, வெல்லம், பசு நெய், மரச்செக்கு எண்ணை கேன், ஹிந்துப்பு, விளக்கேற்றும் எண்ணை, மிளகாய் தூள், மிளகுத் தூள், வெண்ணெய், அமுல் மித்தாய் மேட், ஏலக்காய், முந்திரி, பாதாம், கடலை மாவு, நிலக்கடலை என சகலமும் வாங்கினார். நானும் மலிவு விலை பட்டாசுகளுக்கு ஏற்பாடு செய்தேன். ஐம்பது செ.மீ மத்தாப்பு, பெரிய சங்கு சக்கர பாக்கெட், ஸ்பெஷல் பூச்சட்டி டப்பா, ஸ்பெஷல் லக்ஷ்மி வெடி, இரண்டு மூன்று ஃபேன்ஸி ஐட்டங்கள்... வெடிப் பட்டியலில் இது எதுவும் கவனத்தை ஈர்க்கவில்லை. 28 வாலா (ஜெயின்ட்) 6 பாக்கெட்டுகள்... இதுவும் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. 10,000 வாலா – 4 டப்பா... இது தான் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
பட்டாசு பார்ஸலை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். தன் கணவருக்கு வெள்ளிக்கிழமையுடன் அலுவலகம் செல்லத் தேவை இருக்காது என்றும் சனி, ஞாயிறு, திங்கள் என வரிசையாக மூன்று நாட்களுக்கு விடுமுறை என்றார். வெள்ளியன்று மாலை ஐந்து மணியளவில் அந்த கணவர் என்னிடம் அலை’பேசினார். ஆறு மணியளவில் வருவதாக சொன்னார். டிஎம்எஸ்ஸில் இருந்து அம்மா மெட்ரோவில் பயணித்து மவுண்ட் ஸ்டேஷனுக்கு வருவதாக சொன்னார். நானும் ஸ்டேஷன் வாசலில் அவருக்காக காத்திருந்தேன். வந்தார். இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெடி பார்ஸலை எடுக்க வீடு நோக்கி பயணமானோம். வாகனத்தில் செல்லும் போது பேசினோம். அடுத்து வாகனத்தை ஒரு கடையில் நிறுத்தி ரிலாக்ஸ் செய்யும் போது பேசினோம். மீண்டும் புறப்பட்டு வீடு செல்லும் வரை பேசினோம். இருவருக்கு இடையிலான சம்பாஷணை : பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு பேச்சு சுவாரசியமாகத் தொடர்ந்தது. “சார் நீங்க வருஷா வருஷம் பட்டாசு வியாபாரம் செய்றீங்களா?” “இல்லை சார், நண்பர் சிவகாசி பட்டாசு விற்பனை செய்யறார், இந்த வருஷம் அதை என் ஃப்ரெண்ட் உங்க வைஃப் கிட்ட சொல்லி இருக்காங்க, என் ஃப்ரெண்ட் என்கிட்ட ப்ரொவிஷன்ஸ் வாங்கறாங்க அதை உங்க வைஃப் கிட்ட சொல்லும் போது பட்டாசையும் சொல்லி இருக்காங்க” “எப்படியோ எங்களுக்கு ஈஸியா கிடைச்சுருச்சு” “எனக்கொரு டவுட் சார்” “சொல்லுங்க” “பட்டாசு எல்லாரும் வாங்கற மாதிரி தான் இருக்கு ஆனால் பத்தாயிரம் வாலா மட்டும் என்ன சார் மூணு? அதென்ன கணக்கு?” “என் மகளுக்கொன்னு, மகனுக்கொன்னு, வைஃப்க்கு அப்புறம் எனக்கு” “கணக்கு சரி சமமாவா சார்?” “ஆமாங்க போன வருஷம் வரைக்கும் என் மகள் வாலா வைக்க மாட்டா, இந்த வருஷம் நானும் வைக்கறேன்னு சொன்னா, எனக்கு சந்தோஷம் தாங்கல சார்” “சூப்பர் மகள், மகன் என்ன படிக்கிறாங்க சார்? “மகன் எட்டாவது, மகள் ஆறாவது சார், தீபாவளிக்கு உங்க ப்ளான் என்ன சார்?” “பெருசா எதுவும் கிடையாதுங்க, சிவன் கோயில் போவேன் அவ்ளோ தான் நீங்க?” “உங்க ஃப்ரெண்ட் என் ஃவைஃப்க்கு நல்ல க்ளோஸ் சார், உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்காங்க, என் வைஃப்க்கும் சிவன்னா இஷ்டம், தீபாவளி அன்னிக்கு காலைல திரிசூலநாதர் கோயில் போவோம், ஈவ்னிங் கபாலீஸ்வரர், மண்டே பிகில் படத்துக்கு புக் செய்துட்டேன், அவளுக்கு ஆபீஸ் உண்டு, எனக்கு பசங்களுக்கு லீவ், அவளையும் லீவ் போட சொல்லிட்டேன்” “செம செம” “மண்டே நீ ஆஃபீஸ், நாங்க மூணு பேரும் சேர்ந்து கலாய்ப்போம்னு சொல்லிக்கிட்டே இருந்தேன், லீவ் போட்டா, அப்புறம் தான் டிக்கெட் புக் பண்ணேன், அவ விஜய் ஃபேன் சார்” “நீங்க” “தல” “அது” “என் ஃப்ரெண்ட் என்னைப் பத்தி என்ன சார் சொன்னா?” “நிறைய சார், நீங்க எழுதுறது, உங்க அரசியல் பார்வை இப்படி நிறைய...” “சார் ஒன்னு கவனிச்சீங்களா, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேரே கேட்டுக்கல” ‘அட ஆமாம் சார்” “சத்யா ஜிபிங்கற பெயர்ல எழுதறதா சொல்லி கிறுக்குறேன் சார், என் நிஜப் பெயர் கணேஷ், உங்க பேரு பசங்க பேரு எல்லாம் சொல்லுங்க” “பொண்ணு பேரு ஈஸ்வரி சார், பொண்ணு பிறந்தா இந்த பேர் வைக்கனும்னு ஆசை ஆனால் முதல்ல மகன் பிறந்தான், பொண்ணு பிறந்த உடனே வெச்சுட்டேன்” “மகன் பேரு சார்?” “உங்களுக்குப் பிடிச்ச அரசியல் தலைவரோட பெயர், எனக்கும் அவரைப் பிடிக்கும், அவர் பெயரையே வெச்சுட்டேன்” “பேரை சொல்லுங்க சார்” “ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், செடன் மாதிரி பெரிய வண்டி ஓலா புக் பண்ணா பட்டாசு பெட்டியை ஈஸியா வெச்சுடலாம் சார்” “ஆமா, சார் உங்க பேர்” “ஜான்ஸன்” அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ! |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |