Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ரெடி 1...2...3... சந்திரயான்ஸ் – கார்த்திக் ஸ்ரீநிவாசன்

8/21/2019

2 Comments

 
இந்திய ஜனாதிபதி 2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்,  பாரதி விரும்பியதைப் போலவே பாரதம் அதீத வேகத்தில் அறிவியல் வளர்ச்சியை அடைந்து வருவதாகவும் கூறினார். "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்", எனத் தொடங்கும் பாரதியின் பாடலில் இந்த வரிகள் வரும்.
 
பாரதி கண்ட கனவிற்கேற்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO, செயற்கைக் கோள் ஏவுதல் மற்றும் அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல், சந்திரன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் போன்றவற்றிற்கும் தன் ஆராய்ச்சிகளை நீட்டித்து இரு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.   ​

Picture
ந்திரன் பற்றிய ஆராய்ச்சிகள் இந்திய விண்வெளித் துறைக்கு மிகப்பெரும் உந்துதலுடன் கூடிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுவரை சந்திரனுக்கு அனுப்பப்பட்டவை இரண்டு "யான்"கள், அதாவது வாகனங்கள். சந்திரயான் - 1 மற்றும் சந்திரயான் - 2. இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு சந்திரயான் - 3 சந்திரனுக்கு செல்லும்!
 
சந்திரயான் - 1
 
சந்திரயான் திட்டம், 2003 ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்தன்று அப்போதைய பிரதமர் திரு வாஜ்பேயி அவர்களால் அறிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டாலும், 1999/2000 ஆண்டு முதலே இது பற்றிய முன்னெடுப்புகளை இந்திய அறிவியல் அகடமியும், இந்திய வானியல் குழுமமும் எடுத்து வந்தது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரோ (ISRO - Indian Space Research Organization), பல்துறை அறிவியலாளர்கள் கொண்ட தேசிய சந்திரன் திட்டப் பணிக்குழுவை (National Lunar Mission Task Force) நியமித்தது. அப்பணிக்குழு, தன் அறிக்கையில், இந்தியாவிடம் (இஸ்ரோவிடம்) சந்திர ஆய்வுக்கு உண்டான தொழில்நுட்பம் இருப்பதாக 2003 ஏப்ரலில் சொன்னது. இதனை அடுத்தே 2003 ஆகஸ்ட் சுதந்திர தின உரையில் அப்போதைய பிரதமர் சந்திரயான் திட்டம் பற்றி அறிவித்தார். அதன் பிறகு 2003 நவம்பர் மாதத்தில் அரசு அதற்கான ஒப்புதலையும், நிதி ஆதாரங்கள் குறித்தான ஆணைகளையும் அளித்தது. அரசின் ஆணைக்கிணங்க, சந்திரயான் திட்டத்தின் நோக்கங்கள் வரையறை செய்யப்பட்டன. அவை:
 
1. உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே வடிவமைக்கப்பட (design) வேண்டும்
 
2. உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட (produce) வேண்டும்
 
3. உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே விண்ணில் செலுத்தப்பட (launch) வேண்டும்
 
4. அனுப்பப்படும் விண்கலம் செய்ய வேண்டியவை:
 
(அ) சந்திரனின் முப்பரிமாண வரைபடம் (map) தயாரிக்க வேண்டும், அதில் அதன் நிலம் பற்றிய நீளம் – அகலம் - உயரம் ஆகியவை ± 5 மீட்டர்கள் துல்லியத்தில் இருக்க வேண்டும்.
 
(ஆ) சந்திரனின் மண் எந்தெந்த வேதியல் பொருட்கள், கனிமங்கள் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் கொண்டது என்பதை கண்டு பிடிக்க வேண்டும். சந்திரனின் ஒரு வேதியல் வரை படத்தையும் (chemical imaging) தயாரிக்க வேண்டும், அதாவது, எந்தந்த இடத்தில் எவ்வகைப் பொருட்களின் அடர்த்தி அதிகம் உள்ளது என அறியும் ஒரு தகவல் படம் தயாரிக்க வேண்டும்.
 
(இ) சந்திரனின் நிலத்தை மோதி, தெறிக்க விட்டு, அதில் இருந்து சிதறும் துகள்களை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக Moon Impact Probe எனும் ஆய்வுக்கருவியை அனுப்ப வேண்டும்.
 
இந்த நோக்கங்கள் அறிவிக்கப்பட்ட பின், நாசா (NASA - National Aeronautics and Space Administration) உட்பட, பல வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இஸ்ரோவோடு சேர்ந்து ஆய்வு செய்ய முன் வந்தன. அவ்வாறு முன் வந்த நிறுவனங்களுக்கு, அதன் ஆய்வுக் கருவிகளை இலவசமாக சந்திரனுக்கு எடுத்து செல்ல இஸ்ரோ முடிவெடுத்தது.   
​
Picture
சந்திர வாகனம் எடுத்துச் சென்ற ஆய்வுக்கருவிகள்  :
 
1. நில வரைபட நிழற்படக்கருவி (Terrain Mapping Camera - TMC) - இந்தியத் தயாரிப்பு - இது ±5 மீட்டர்கள் துல்லியத்தில் வரைபடம் தயாரிக்க உதவியது.
 
2. உயர் அலைக்கற்றை பிம்பக்கருவி (HySI - Hyper Spectral Imager) - இந்தியத் தயாரிப்பு - இது கனிம வளங்களை கண்டுபிடிக்க உதவக் கூடியது.
 
3. தூர வரையறை அகச்சிவப்பு சீரொளிக் கருவி (LLRI - Lunar Laser Ranging Instrument) - இந்தியத் தயாரிப்பு - நிலப்பரப்பின் உயரங்ககளை அளக்க உதவக் கூடியது.
 
4. உயர் ஆற்றல் காமா மற்றும் எக்ஸ் - ரே நிற மாலைக் கருவி (HEX - High Energy gamma/x-ray spectrometer) - இந்தியத் தயாரிப்பு - கதிரியக்கப் பொருட்களின் இருப்பு, அளவு மற்றும் அடர்த்தியை அளக்கக் கூடியது.
 
5. சந்திர மோது கருவி (MIP - Moon Impact Probe) - இந்தியத் தயாரிப்பு - சந்திரனின் நிலப்பரப்பின் மீது வேகமாக மோதி, அதனால் சிதறும் துகள்களை ஆய்வு செய்ய உதவக்கூடியது. இந்தக்  கருவி, மேலும் சில துணைக்  கருவிகளைக்  கொண்டிருந்தது, அது பற்றி பிறகு பார்க்கலாம்.
 
6. எக்ஸ் - ரே நிற மாலை ஒளிர்வுக் கருவி (C1XS - X-ray fluorescence spectrometer) - இந்திய மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுத்துறைகளின் கூட்டுத் தயாரிப்பு - இது சில வேதியல் பொருட்களையும், சூரிய ஒளிர்வையும் அளக்கும் கருவி
 
7. தாழ் - ஆற்றல் அணுப் பிரதிலிப்பு பகுப்பாய்வுக் கருவி (SARA - Sub-keV Atom Reflecting Analyser) - ஐரோப்பிய விண்வெளித் துறை தயாரிப்பு - சந்திரனின் மேற்பரப்பில் உள்ள கனிமக் கலவைகளை பற்றிய ஆய்வுகளை செய்யக் கூடியது.  
 
8. சந்திர கனிம படப்பிடிப்புக் கருவி (M3 - Moon Mineralogy Mapper) - அமெரிக்கத் தயாரிப்பு - கனிம வள வரைபடத் தயாரிப்புக்கு உதவக் கூடியது.
 
9. தாழ் அகச்சிவப்பு நிறமாலைக் கருவி (SIR2 - Near infrared Spectrometer) - ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத் தயாரிப்பு - கனிம மூலக்கூறு ஆய்வுக்கானது, இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2003 ஆம் ஆண்டு அனுப்பிய கருவியின் (SIR1) நீட்சி.
 
10. கதிரியக்க அளவு மானி (RADOM - 7, Radiation Dose Monitor Experiment) - பல்கேரியத் தயாரிப்பு - சந்திரனின் பரப்பில் எவ்வளவு கதிரியக்கம் இருக்கிறது என அளவிடக் கூடிய கருவி.
 
11. மிக முக்கியமான கருவி – Mini - SAR எனப்படும் Synthetic Aperture Radar – நாஸா + இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பு. சந்திரனின் துருவப் பகுதியில் இருக்கும் நீர் மூலக்கூறுகள் பற்றி ஆராய உதவிய கருவி. சந்திரனில் தண்ணீர், திட வடிவில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
 
கருவிகளின் பட்டியல் கண்ணைக் கட்டுகிறது, இது பற்றிய மேலதிக விவரங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன், இந்தியா ஏன் இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் எனப் பாப்போம். 
 
சந்திரனில் ஒரு ஆய்வுக் கலத்தை இறக்கி, இந்தியக் கொடியை அங்கே நிறுவுவது இந்தியா தன்  இருப்பை நிலவில் தக்க வைத்துக் கொள்ளவே.     

Picture
சந்திரயான் - 1, சந்திரனில் நீர் மூலக்கூறுகளின் இருப்பை முதலில் உலகிற்கு அறிவித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாம் சந்திரயான் - 1 க்கு பிறகு பார்க்கப்போகும் சந்திரயான் - 2, இதுவரை இஸ்ரோ எடுத்துக் கொண்ட திட்டங்களிலேயே மிகவும் சிக்கலான ஒன்று! இந்தத் திட்டத்தின் முதன்மையான இரண்டு நோக்கங்கள் - சந்திரனில் நீர் பற்றியும், ஆரம்ப கால சூரிய குடும்பம் மற்றும் அதன் உருவாக்கம் பற்றியும் அறிவதாகும். இவை எல்லாம் அறிவியல் சார்ந்த விஷயங்கள் - அறிவியலைத் தவிர இஸ்ரோவிற்கு இருக்கும் மற்றொரு நோக்கம், வளி வர்த்தகம்.
 
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்களை ஏவும் வர்த்தகத்தில் இந்தியா, அதன் குறைந்த விலை ராக்கெட்டுகள் காரணமாக முன்னிலை வகிக்கிறது, அதே போல, சந்திரனுக்கு இனி ஏவப்படும் செயற்கைக் கோள் வர்த்தகத்திலும் முன்னிலை பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது நல்ல விஷயமா என்றால் நிச்சயம் இந்தியாவிற்கு நல்ல விஷயம்தான், ஆனால் உலகில் அனைவருக்கும் நல்ல விஷயமா என்றால் நிச்சயம் இல்லை!
 
இஸ்ரோ ஒரு அரசு சார்ந்த நிறுவனம் என்பதாலும், அதன் ராக்கெட்டுகள் விலை மலிவாக இருப்பதாலும், அமெரிக்க நிறுவனங்கள், வளி வர்த்தகத்தை இந்தியா, முற்று - முழுதாக வளைத்துப் போட்டு விடும் என அஞ்சுகின்றன.
 
COMSTAC என்று ஒரு அமைப்பு இருக்கிறது - Commercial Space Transportation Advisory Committee - இது ஒரு அமெரிக்க நிறுவனம், அமெரிக்க அரசிற்கான வளி பற்றிய விஷயங்களிலும், அதன் வர்த்தகம் பற்றியும் அமெரிக்க அரசிற்கு ஆலோசனைகளை வழங்கும்.
 
இந்நிறுவனம்  அமெரிக்க அரசிற்கு கொடுத்துள்ள ஒரு அறிக்கையில், இந்தியாவின் அரசு சார்பு நிறுவனமான இஸ்ரோவை மேலும் வளர அனுமதித்தால், அது அமெரிக்க வளி வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அரசும், அமெரிக்க தனியார் நிறுவனங்களும் முன்னெடுத்துள்ள பல வளி வர்த்தகங்கள் எவ்வகையில் எல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது.
 
கடந்த மூன்று வருடத்தில் மட்டும் இஸ்ரோவின் வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் 5000 கோடிகளைத் தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணம் அப்படியே அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய பணம் என்பது அந்நிறுவனத்தின் கருத்து,
 
முதலில் அறிவியல், இரண்டாவது வர்த்தகம் - அதோடு முடியவில்லை விஷயம், மூன்றாவதாக அரசியலும் இருக்கிறது.
 
பத்தாண்டுகளில், பூமியை சுற்றும் விண்வெளி நிலையங்கள் போய், நிலவில் விண்வெளிக் கூடங்கள் உருவாகும். சந்திரன் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான ஒரு தற்காலிக தங்கு விடுதியாகவும் எதிர்காலத்தில் மாறும் சாத்தியக்கூறுகள் அதிகம். அடுத்த நூற்றாண்டில், சந்திரனில் மனிதர்கள் வாழ காலனிகள் உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்போது, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஒன்று, சந்திரனில் பிரதிநிதித்துவம் பெறாமல் போவது சரியல்ல, அதனால், இந்தியா நிச்சயம் சந்திரப் பயணங்கள், செவ்வாய்ப் பயணங்கள், அதனைத் தாண்டிய ஆராய்ச்சிகளில், தன்னை முன்னிலைப் படுத்தியே தீரும்.
 
நாளை நிரந்தரக் காலனிகள் சந்திரனில் அமையும் பட்சத்தில் உலகம் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு மேலே செல்ல முடியாது. வீட்டோ அதிகாரத்துடன் கூடிய சந்திரனுக்கான முடிவெடுக்கும் நாடுகள் குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இருக்கும். இந்தியா வளி ஆய்வுகளை முன்னெடுக்காவிட்டால், இந்தியாவிற்கு ஐநாவில் ஏற்பட்ட நிலை நாளை வளி விஷயங்களிலும் ஏற்படும்.
 
உலகில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்ட நாட்டிற்கு ஐநாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கே ஜனநாயகம் இல்லை என்றே பொருள் - ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது, சர்வதேச ராஜதந்திரம் என்பது இரக்கமற்றது, நியாயமற்றது.
 
நாளை சந்திரனில் காலனிகள் அமையும் போது இந்தியாவின் சொல் சபையேறும், ஐநாவில் இந்தியா ஒதுக்கப்பட்டது போல வளி அரசியலில் உலகம் இந்தியாவை ஒதுக்கி விட முடியாது!
 
(தொடரும்)
 

2 Comments
Sundaram
8/25/2019 12:29:47 am

Nice sir

Reply
Hemanth Kumar
8/26/2019 08:43:40 am

ஹைட்ரஜன் அதிகம் சந்திரனில் இருப்பதாகவும், அது ஒரு சிறந்த எரிபொருள் என்றும் அதனாலே மேலை நாடுகள் நிலவு பற்றிய ஆராய்ச்சியை அதிகம் முன்னெடுக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. உண்மையா?

சூரிய வெப்பமே, மாற்று ஆற்றலாக எளிதில் பயன்படுத்தக்கூடிய ஆராய்ச்சி பரவலாக அனைத்து நாடுகளும் ஆரம்பித்து விட்டனர். ஏன் ஹைட்ரஜன்?

Reply



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    August 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.