நண்பர்களுக்கு வணக்கம்.
விகாரி வருடத்திய ஆனி மாத அகல் மின்னிதழ் நம் பார்வைக்கு! இவ்விதழில் : பேரூர் ஹரிஹரன் சுரேஷ் அவர்களின் “பிறவா நெறியானே” ப்ரியா ராஜூ அவர்களின் “புத்தக வாசிப்பும் எதிர்கால தலைமுறையும்” அசோக்ராஜ் அவர்களின் சிறுகதை “தொப்பை” பரிவை சே. குமார் அவர்களின் “சிறு தெய்வங்கள்” இராஜேஷ் ஜெயபிரகாஷம் அவர்களின் “அடடா வோர்ல்ட் கப்” கார்த்திக் ஸ்ரீநிவாசன் அவர்களின் “Strange Matter” சத்யா GP யின் “புக்... புக் ஃபேர்... புக் ஃபேரில் புக் ரிலீஸ்” ராஜ்குமார் பார்த்திபன் அவர்களின் “கீதா(அ)ஞ்சலி” பாரியன்பன் நாகராஜ் அவர்களின் “கவிதைப் பக்கம்” ஜான்ஸி ராணி அவர்களின் “வாசிப்பனுபவம்” சத்யா GP யின் “அவள்(ன்) கணக்கு” இந்த இதழைப் படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளையும், அடுத்த மாத அகலுக்கான தங்கள் படைப்புகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] நண்பர்கள் தங்கள் வழமையான ஆதரவினைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் பேரன்புடன் சத்யா GP
0 Comments
காஞ்சி மாநதியின் கரையில் விளங்குபவரை, பேரூர் கடவுளை புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றோ, இனி நாம் பெறுவது யாது … என சுந்தரர் 7 ஆம் திருமுறையில் 90 ஆவது பதிகத்தில் 10 ஆவது பாடலில் குறிப்பிடுகிறார். புலியூரில் பேரூரானை நினைத்து பரவசமடைந்தார் சுந்தரர். நான் அன்றாடம் பேரூர் பட்டிஸ்வரர் பாதத்தில் நிற்பவன். இங்கு இருக்கும் அற்புதங்களை, ஆசிகளை அள்ள அள்ள குறையா தெய்வீக பிரவாகத்தை அனுதினமும் அனுபவிக்கப் பெற்றவன். இதன் புராதானப் பெயரான பிப்பலாரண்யம் (பிப்பலம் – அரச மரம், ஆரண்யம் – காடு) ஆதிபுரி, தட்சிண கயிலாயம், கல்யாணபுரம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம், ஞான புரம் என இத்தலம் கொண்டிருக்கும் பெயர்கள் ஏராளம். ஒவ்வொறு உருவத்திலும், ஒவ்வொறு திருப்பெயரிலும் அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை, மனித குலத்திற்கு அவரளித்த ஞானக்கொடையை சிந்தித்து பார்த்தாலே நம் வினைகள் வேரருந்து வீழக்கூடும். யுகங்கள் கடந்திருக்கும் இத்திருக்கோவிலின் கண்கூட சாட்சி அரசம்பலவாணர். காலவமுனிவரால் காசியில் அமைந்துள்ள இறைவனை நினைத்து தவமிருந்து அரசம்பலவாணராக பேரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அரசம்பலவாணர். இங்குள்ள காலவேசுவர சுவாமியும், அகிலாண்டேஸ்வரியும் பல முனிவர்களால், சித்தர்களால் வழிபடப்பட்டவர்கள். இன்று இருக்கும் பேரூர் ஆலயம் பெரிய கோவில், அரசம்பலவாணர் கோவில் சின்ன கோவில் என அழைப்பதே உள்ளூர் மக்களின் வழக்கம். காரணம் இதுவே ஆதிக்கோவில். இது ஆதிக்கோவிலாய் இருப்பதாலே இதற்கு கோபுரம் இல்லை. இன்றும் இத்திருத்தலத்தில் நிற்கிற வேளையில் சிரசுக்கு ஏறும் ஆற்றலை எப்படி விளிப்பது? உள்ளூர் மக்கள் துவங்கி, வெளிநாட்டவர் வரையிலும் இங்குள்ள ஐந்து அதிசயங்களை குறித்து எண்ணி நெகிழ்ந்தவர் பலர், எழுதி எழுதி தீராத ஆய்வு கட்டுரைகள் ஏராளம். இது குறித்த காணொளிகல் சமூக வலைத்தளங்களில் கொட்டி கிடக்கின்றன ஆனால் அந்த அதிசயங்களின் நிழலிலேயே வளர்ந்தவன் என்பதால், அதை பார்க்கிற, கடக்கிற ஒவ்வொறு நொடிப்பொழுதும் அந்த சிலிர்ப்பிலிருந்து மீளாதவனாய் இருக்கிறேன். பூப்புக்கும், காய் காய்க்கும் பழமும் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது, கேட்க கேட்க ஆச்சர்யம் இராஜ கோபுரத்தின் எதிரில் உள்ள பிறவாப்புளி எனும் புளியமரத்தின் விதைகள் பிறப்பதேயில்லை என்பது இதன் முதல் அதிசயம் பெரிய கோவிலின் வடக்கே உள்ள நொய்யலாற்றின் தென்கரையில் பிரம்மன் பூஜித்த வடகையிலாயம் என்னும் சின்ன கோவிலின் வெளிமுகப்பில் உள்ளது இறவாப்பனை. யுகங்கள் கடந்து நிற்கும் மரம். எத்தனை பிறவிகள் கடந்தாலும் நிலையான வாழ்வை தருபவன் இறைவன் என்பதை பறைசாற்றும் இந்த இறவாப்பனை இரண்டாம் அதிசயம். இக்கோவிலை சுற்றியுள்ள கால்நடைகளின் சாணங்களில் புழுக்கள் உருவாவதில்லை என்பது இத்திருத்தலத்தின் மூன்றாம் அதிசயம்.
ஆதி சங்கரர் தன் தாயின் ஈம சடங்குகளை பேரூர் காஞ்சி மா நதியில் (நொய்யல்) நடத்தினார் எனும் வரலாற்று சிறப்பு மிக்க, இந்த நதியில் கரைக்கப்படும் எலும்புகள் வெண் கற்கலாக மாறுவதாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நான்காம் அதிசயம். ஐந்தாவது அதிசயமாக சொல்லப்படுவது, இத்தலத்தை சுற்றி உயிர் பிரியும் வேளையில் அவர்கள் தங்கள் வலது காதினை எப்போதும் மேல் புறம் நோக்கி வைத்திருப்பார்களாம். சிவபெருமான் நமசிவாயத்தை ஓதி தன்னடியில் சேர்த்து கொள்வார் என்பதனாலாம் . இவையெல்லாம் பொதுவான அதிசயங்கள் எனினும், அன்றாடம் தொழும் பட்டீஸ்வரரின் அர்த்தஜாம பூஜை என்பது என் ஆன்மாவினை வருடி செல்லும் ஓர் வைபவம். அன்றாடம் இரவு செய்யப்படுவது தான், வாய்ப்பிருக்கும் வேளையில் எல்லாம் அப்பூஜையில் பங்கேற்று, பார்த்து, தரிசித்து மனம் மகிழ்ந்து கொள்வேன். சாந்த சொரூபராக, ஜோதி சொரூபராக பல்லக்கில் ஏறி பவனியை துவக்குவார் உற்சவர், அவர் பல்லக்கு அசைந்து வர என் சிந்தை மட்டும் நிலையாய் அவரை நோக்கியே குவிந்திருக்கும் பொழுது, உழவார பணிக்குழுவினர் அவர் வலம் வரும் பாதையெங்கும் பட்டு கம்பளத்தை இரத்தின கம்பள தோரணையில் விரிக்க, அந்த காரிருளில் நம் ஆற்றலை சுண்டியிழுக்கும் கையிலாய வாத்தியம் முழங்க, நாசி வழியேறி எண்ணத்தை சுத்திகரிக்கும் நறுமணம் கமழ, கவரி மான் உதிர்த்த வெண் சாமாரம் அசைய, ஒவ்வொறு இரவும், அதிரூப அழகனாய், அண்டத்தின் பேரரசனாய் இக்கோவிலின் அம்பாள், மரகதம்பாள் என்னும் பச்சைநாயகியை நோக்கி பவனி வரும் அத்தருணம் காண கண்கள் இரண்டு நிச்சயம் போதாது. பள்ளியறை ஊஞ்சலை தங்களால் கைகளால் தொடுத்த மலர் சரத்தால் மக்கள் அலங்கரித்திருக்க, ஒவ்வொறு இரவும் பல்வேறு விதமான பலகாரங்களை செய்து பரிமாற, செவிகள் திளைக்க பதிகம் பாட பள்ளியறை பூஜை நிறைவு பெறும் அக்கணப்பொழுதில் கண்களும், நெஞ்சமும் தழும்ப நின்றிருப்பேன். அத்தனை தெய்வீகம், ஆன்மீக தேடலுக்கு பலனாய் கிடைக்கும் ஓர் அற்புத காட்சி. பக்தி மார்கத்தில் தோய்ந்து அந்த பரம்பொருளை தரிசிக்க காத்திருப்போருக்கு ஒவ்வொறு இரவும் அவனளிக்கும் அருட்கொடை அக்காட்சி. ஒவ்வொறு யுகமாக மாறி, கலியுகத்தில் தல விருட்சமாய் இருக்கும் பன்னீர் மரம் துவங்கி, சைவமார் நால்வரில் சுந்தரர் வருகை புரிந்த தலம், அருணகிரி நாதர் பாடிய தலம், கச்சியப்ப முனிவர் தம் பேரூர் புராணத்தில் பாடிய திருத்தலம். கலைக்கு கனக சபை, சிற்ப வல்லமைக்கு வியத்தகு எட்டுச்சிற்பங்கள், வண்ணம் சூழ் ஓவியங்கள் என எடுத்து வைக்கும் அடியெங்கும் வரலாறு, தொட்டு தீண்டும் இடமெல்லாம் தொன்மம், பார்வை படரும் இடமெல்லாம் புராண கதைகள். தெய்வீக சாரம், திருநீற்று வாசம், தீவிரமான தேடலை உடைய யாவரையும் ஒரு கணம் அருளின் துளியை, ஆன்மீக ருசியை உணர்த்த கூடிய இத்திருத்தலத்தை, வணங்கினால் மட்டுமல்ல நினைத்தாலே முக்தி என்பது சான்றோர் வாக்கு!! ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரனே பேரூர் உறைவாய் பட்டிபெருமான் பிறவா நெறியானே பாரூரு பலரும் ப்ரவப் ப்புடவாய் பாசூர் அம்மானே பிறவா நெறி தந்தருளும் பேரூர் பட்டி பெருமான் அருளை பெற்று எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். 37 வது சர்வதேச புத்தக கண்காட்சி ஷார்ஜாவில் நவம்பரில் நடந்து முடிந்தது. அதை ஒட்டி நடந்த விவாதங்களும் எழுந்த நினைவுகளுமே இக்கட்டுரையின் தொடக்கம். நான் இங்கு குடியேறி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அதில் நான் சென்றிருந்த இரண்டாவது கண்காட்சி இது. கடந்த முறை தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கண்காட்சிக்கு வந்திருந்ததாய் வந்த செய்தியே எங்களை கண்காட்சியின் பக்கம் உந்தி தள்ளியது ஆனால் சென்ற தமிழர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு தமிழ் புத்தகம் கூட அங்கு கிடைக்கவில்லை. ஆர்வத்துடன் வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
இந்த வருடம் அப்படியானதாய் அமையவில்லை உலக அளவில் மூன்றாவது பெரிய புத்தக கண்காட்சியில் உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழிக்கு முதல் முறையாய் அரங்கு. தமிழுக்கு மட்டுமே தனியாய் அரங்கு அமைத்தும் பக்கத்து மாநிலமாம் கேரளத்து பதிப்பாளர்களுடன் கை கோர்த்து அவர்களுடன் இணைந்து அமைத்த அரங்கு என மொத்தம் மூன்று அரங்குகளில் தமிழ் புத்தகங்கள். எத்தனை மகிழ்ச்சியான செய்தி. சரி இதுவெல்லாம் இருக்கட்டும் நான் இங்கு பேச நினைப்பது இதை பற்றியல்ல இதையும் தாண்டிய இதை வளர்க்கத் தேவையான வாசிப்பு பழக்கம் குறித்து. எத்தனைதான் பதிப்பாளர்கள் ஆர்வத்துடன் வந்தாலும் அரங்குகள் அமைத்தாலும் உண்மையில் இதுபோன்ற கண்காட்சிகளின் வெற்றி என்பது வாசகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததே. நான் இங்கு மட்டும் கூறவில்லை தாயகத்தையும் சேர்த்தே கூறுகிறேன். இன்றைய பொழுதுகளில் இது போன்ற கண்காட்சிகளுக்கு வரும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை தூரம் உற்சாகம் தருவதாய் இருக்கிறது? புத்தக வாசிப்பில் இளைஞர்களின் பங்களிப்பு எத்தனை தூரம் பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது? நம் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி இது. யோசிக்கையில் சிறிது பயத்தையும் சேர்த்தே விதைக்கிறது இல்லையா? இங்கு வாசிப்பு பழக்கம் உள்ள எத்தனை பேர் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்? எத்தனை இளைஞர்கள் தத்தமது வீட்டிலுள்ள புத்தகங்களை குறைந்தபட்சம் தொட்டாவது பார்த்திருப்பார்கள்? அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லுவது புத்தகம் படித்தால் எங்களுக்கு தூக்கம் தான் வருகிறது. சொல்ல நினைப்பதை வீடியோவாக சொல்லுங்களேன் நாங்கள் யூ டியூபில் பார்த்து கொள்கிறோம் என்பது. ஒரு வகையில் இது சரி என்றாலும் அத்தனை விஷயங்களுக்கும் இது பொருந்துமா? வாசிப்பு பழக்கம் இல்லையெனில் நம் சங்க இலக்கியங்களையும் பழந்தமிழர் ஏடுகளையும் அடுத்த தலைமுறை எங்கனம் கண்டுணர முடியும்? அவைகள் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படாமலே அழிந்துவிடுமா? எத்தனை பெரிய பொக்கிஷங்கள் அந்த நூல்களெல்லாம். இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க நம்முடைய பங்களிப்பென்ன? நாம் எடுக்க போகும் முயற்சிகள் என்ன? கேள்விகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. நான் சிறுமியாக இருக்கையில் என் பள்ளிக்கூட நாட்களில் என் அம்மா நூலகத்தில் உறுப்பினர். பல நேரங்களில் அவர் வேலையாக இருக்கும் போது நூலகத்திற்கு புத்தகத்தை மாற்றி வர என்னைத்தான் அனுப்புவார். தாயகத்தில் இருந்த வரை நான் அந்த நூலகத்தின் உறுப்பினர். எனக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பு என்பது அப்படித்தான் ஆரம்பித்தது. அதைத்தாண்டி படிக்கு ஆர்வம் வளர்வதற்கான காரணம் அந்த நூலகர். அம்மா கொடுக்கும் புத்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டு அவரிடமே எடுத்து தர சொல்லி அடுத்த புத்தகத்தை அம்மாவிற்கு மாற்றி எடுத்து செல்வேன் இவ்வளவுதான் ஆரம்பத்தில் எனது வேலை. இதில் ஒரு நாளில் நூலகர் சில புத்தகங்களை என்னிடம் கொடுத்து இதையெல்லாம் படி என்றார். முதலில் தயங்கினாலும் பின்னர் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறுவர் புத்தகங்களே அவை. பின்னர் அதிலிருந்து படிப்படியாக வேறு சில சிறுவர் இலக்கிய நூல்களையும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படி ஆரம்பித்து அங்கு தொடங்கியதுதான் எனது வாசிப்பு பழக்கம், அதன் அச்சாணி அந்த நூலகரே. அதன்படி இன்று முதலில் நம்மில் எத்தனை பேருக்கு நூலகம் செல்லும் பழக்கம் இருக்கிறது? நேரமின்மை என்ற பதில் மட்டுமே பெரும்பாலும் இங்கு கிடைக்கும். நேரம் என்பது நாம் உருவாக்கிக் கொள்வதுதானே? சரி இதற்கெல்லாம் என்னதான் தீர்வு எப்படித்தான் இவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டு செல்வது, இதோ எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை இங்கே சொல்கிறேன் முடிந்தால் செயல்படுத்துங்கள். உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளையும் பிறருக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் வீட்டில் புத்தக அலமாரி இருக்கிறதா? அதை முதலில் எல்லோர் கண்ணிலும் படும்படி ஒரு இடத்தில் வையுங்கள். அது உங்கள் வரவேற்பறையாகவும் இருக்கலாம். குடும்பத்தில் அனைவர் கண்ணிலும் படும்படியாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்து வாசியுங்கள். அலைபேசிக்கான நேரத்தைக் குறைத்து அதை புத்தகங்களுக்கான நேரமாக மாற்றுங்கள். முதலில் யாரும் உஙகளை கண்டுகொள்ளாமல் போகலாம்.நாள் செல்ல செல்ல அப்படி என்னதான் படிக்கிறீர்கள் என்ற கேள்வி வரும் பின்பு அந்த புத்தகங்களை எடுத்து பார்க்கும் எண்ணம் வரும், பின்பு புரட்டி பார்க்கவும் தோன்றலாம், படிக்கவும். உங்கள் வீட்டில் 3-4 வயது குழந்தைகள் இருக்கிறார்களா? கட்டாயம் அவர்கள் முன்பு சிறிது நேரம் புத்தகங்களைப் புரட்டுங்கள், அவர்களை புத்தகங்களைத் தொட அனுமதியுங்கள். புத்தகங்களை சுத்தம் செய்து அடுக்கி வைக்கும் போது அவர்களைத் துணைக்கு அழையுங்கள், பிஞ்சு விரல்கள் புத்தகங்களைத் தொடட்டும் அதன் வாசம்தனை நுகரட்டும், தானாகவே அவர்கள் புத்தகங்களுடன் நெருக்கம் கொள்வார்கள். பெரும்பாலும் குழந்தைகள் நம்மை பார்த்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நம் நேரம் எதில் அதிகம் செலவாகிறதோ அதிலேயே அவர்களும் செலவழிப்பார்கள். நம்மை புத்தகத்துடன் அதிகம் பார்த்தால் அவர்களுக்கும் அப்பழக்கம் எளிதில் வரும். குழந்தைகள் புத்தகத்தை கிழித்து விடுவார்கள் என்ற பயம் வேண்டாம் ஆரம்பத்தில் அதை செய்தாலும் கற்றுக் கொடுத்தால் புரிந்து கொள்வார்கள். அதே தவறு திரும்ப நடக்காது. ஆரம்ப நாட்களில் வேண்டுமானால் சிறிது கண்காணிப்புடன் இருங்கள் பின்னால் அவர்களே பழகிக் கொள்வார்கள். பிஞ்சு மூளைகளில் எதையும் விதைப்பது சுலபம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஒன்று கூடும் அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் குறித்த ஒரு விவாதத்தினை நடத்துங்கள். அது சங்க இலக்கியமாகவோ பெரிய எழுத்தாளரின் புத்தகமாகவோ மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை எந்த புத்தகமாக இருந்தாலும் விவாதியுங்கள். ஏதேனும் ஒன்றின் தொடக்கமாக இது அமையட்டும். விவாதம் நடத்த பெரிய அரங்கொன்றைத் தேடிப்பிடுத்து அங்கேதான் நடத்த வேண்டுமென்றில்லை உங்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்கா கூட சிறந்த இடம்தான்.அனைத்து செயல்பாடுகளின் தொடக்கமுமே, விவாதம் தான் விவாதம் மட்டும் தான். நாலு பேரில் ஆரம்பிக்கும் ஒன்று கூடல் சில சமயம் நாற்பதாகலாம் நானூறாகலாம் இல்லை நான்கிலேயே முடிந்தும் போகலாம். இருக்கட்டுமே தவறென்ன? தொடக்கம்தான் முக்கியம், தொடங்குவதுதான் முக்கியம். எத்தனையோ விவாதங்கள் தெருமுனை டீ கடைகளில் தொடங்கி பெரும் பேசுபொருளாயிருக்கின்றன. ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களையும், வாசிப்பையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றே தீரவேண்டிய காலகட்டம் இது. நமக்கு முந்திய தலைமுறைக்கு அந்த பிரச்சினை இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் வாசிப்பு என்பது பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது, மரியாதைக்குரிய ஒன்றாக இருந்தது. அதிகம் வாசிப்பு பழக்கம் இருந்தவருக்கு சமூகத்தில் பெரும் மதிப்பு இருந்தது. ஆனால் இப்போதைய காலகட்டம் அப்படியானதில்லை. இங்கு வாசிப்பு மதிப்பற்றதாய மாறியிருக்கிறது, நேர விரையம் என்றாயிருக்கிறது. புத்தகங்கள் வாங்குவது தேவையற்ற செலவில் சேர்ந்திருக்கிறது. சிந்தியுங்கள் இது மாற வேண்டிய ஒன்று. மாற்றப்பட வேண்டிய ஒன்று. எங்கேயோ பார்த்த கருத்து சித்திரமொன்று நியாபகத்திற்கு வருகிறது. ஒரு மெட்ரோ ரயில் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் கலந்து பயணிக்கின்றனர். அனைவரது கைகளிலும் வழக்கம் போல் அலைபேசி, ஒரு ஒருவரும் தனித்தனி தீவாக. ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டும் கூட்டத்திலே தனித்து கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கிறது, அதை வாசித்து கொண்டும் இருக்கிறது. ஆச்சர்யத்துடன் அருகே கவனித்தால் குழந்தையின் தாயும் அருகே புத்தகம் வாசித்தபடி அமர்ந்திருக்கிறார். அவ்வளவுதான் செய்தி. நாம் எதை செய்கிறோமோ அதைத்தான் அடுத்த தலைமுறையும் தொடரும். வினை விதைத்தால் வினை முளைக்கும் திணை விதைத்தால் திணை முளைக்கும். எது முளைக்க வேண்டுமென்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நல்லது வளர நல்லதையே விதைப்போம். தொப்பை
உஷா கல்யாணத்திற்குப் போகலாம் என்று நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்தான் பரமு. ஆனால் ஏனோ இன்று காலை எழுந்ததிலிருந்தே தயக்கமாக இருந்தது. அதனாலோ என்னவோ வழக்கமாக கறிக்கடைக்குச் செல்ல ஆறு மணிக்கே எழுந்திருக்கும் அவன் இன்று எட்டு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. கக்கத்தை சொறிந்து கொண்டு கொட்டாவியோடு ரூமிலிருந்து வெளிப்பட்ட அவனை ஹாலில் டிவியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்த அப்பா ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு ''நீயும் வர்றியாடா..?'' என்றார். அவர் குளித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் பளிச்சென்று உட்கார்ந்திருந்தார். பரமு முதலில் ''எங்கே?'' என்றான், பிறகு ''நான் வரலை'' என்றான். ''நீயும் வந்தா உன் பைக்ல அம்மா வந்துடும். நான் பஸ்ல வந்துடறேன்'' என்றார் அப்பா. அவர் சொன்னவுடன் பட்டீஸ்வரத்திலிருந்து அம்மாப் பேட்டைக்கு பைக்கில் செல்வதை நினைத்துப் பார்த்தான் பரமு. வயல்வழி ஊடே, பச்சை நெல் வாசனையை முகர்ந்து கொண்டு பைக்கில் செல்வது அவனுக்கு பிடிக்கும். ஆனால் ''வேண்டாம் அம்மாவும் பஸ்லயே வரட்டும்'' என்றான். அவர்கள் கிளம்பும் போது வாசல் வந்த அவனிடம் ''ஏண்டா நேத்து வரைக்கும் வர்றேன்னு சொல்லிட்டிருந்த.. கடையும் போடலை.. கல்யாணத்துக்கும் வரலை?'' என்று அம்மா கேட்டாள். ''வேலை இருக்கும்மா'' என்று மட்டும் சுரத்தில்லாமல் சொன்ன பரமு, எதிரில் உஷா வீட்டில் பந்தல் போட்டு வாழைமரம் கட்டி வெல்கம் மற்றும் இரண்டு பக்கமும் குத்துவிளக்கு சீரியல் செட்டுகள் பளபளத்துக் கொண்டிருந்ததையும், ஒன்றிரண்டு பேரைத் தவிர ஏனையோர் வேனில் மண்டபத்திற்கு சென்றுவிட்டதையும் பார்த்தான். ''பரமம்மா நீங்க இன்னும் கிளம்பலையா? எதிர்த்த வீட்டுக் காரங்க... நீங்களே இப்படி முகூர்த்த நேரத்துக்கு கிளம்பினா எப்படி? அங்க தான் போறேன். ரெண்டு பேரும் ஏறுங்க முதல்ல' அடுத்த ரவுண்டு போக நின்ற வேனைக் காட்டினான் சிங்காரம். ''சொந்தக் காரங்கள்லாம் போறீங்க.. இடம் இருக்காது.. நாங்க பஸ்ல'' என்று இழுத்த அப்பாவை பேசவிடாமல் வேனில் ஏற்றிவிட்டார்கள். இருவரும் ஏறியதும், மேல் துண்டை உதறிக் கொண்டு உள்ளே வந்த பரமு அடுக்களை சென்று தண்ணீர் குடித்தான். இப்படித் தண்ணீர் குடிக்கும் போது மட்டும் அவன் கை தன்னியல்பாக அவன் தொப்பையைத் தடவும். தன் தொப்பையைக் குனிந்து பார்த்தான். தன்னையும் உஷாவையும் பிரித்த நந்தி போல் தெரிந்தது அவனுக்கு. 'முதல்ல தொப்பையைக் குறைங்க' என்ற உஷாவின் அந்த வார்த்தைகள் மனதில் ஒலித்தது. பழைய யமஹா பைக்கிற்கென்று பிரத்யேக ஒலியிருக்கும். சின்னத் தெரு ஆகையால் அந்த ஒலி தெரு முனையில் நுழைந்தவுடனே பரமு வீட்டிற்கும் உஷா வீட்டிற்கும் கேட்கும். சரியாக பரமு வீட்டண்டை வரும் நேரம், வாசலில் வந்து நிற்பாள் உஷா. ''பரமு, அம்மா ரத்தம் கேட்டிருந்துச்சாம், கொண்டாந்திங்களா?'' என்பாள். ''அதென்ன அடிக்கடி உங்கம்மா ரத்தம் மட்டும் கேக்கறாங்க? ஆட்டுல தொடைக்கறி இருக்கு, நெஞ்செலும்பு இருக்கு, குடல் இருக்கு, ஈரல் இருக்கு'' ''போதும் போதும், ஆட்டுல எல்லாம் இருக்கு எங்களுக்கும் தெரியும் ஆனா இது தான் எனக்குப் பிடிக்கும், எங்கம்மா ரத்தத்துல பொரியல் செஞ்சா இன்னிக்குப் பூரா சாப்பிடலாம் தெரியுமா?'' ''ரத்ததுல கல்லப்பருப்பு போட்டு குருமா செய்வாங்க தெரியுமா? இட்லி தோசை இடியாப்பம் எல்லாம் சும்மா பூ மாதிரி இறங்கும்'' என்பான் பரமு. ''ஆட்டு ரத்தத்துல என்னன்ன செய்ய முடியுமோ அதெல்லாம் எங்கம்மாவுக்குத் தெரியும் ஆட்டுக்கறி தான் அம்மாவுக்கு ஆகாது'' என்பாள் உஷா. சொல்லும் போது என்னவோ ஆட்டின் இரத்தத்தில் சமையல் செய்வதற்கு உலக ரீதியில் அவள் குடும்பம் தான் உரிமை கோரியிருப்பது போல் ஒரு பாவனை இருக்கும். ஒரு நாள் ஆட்டு ரத்தம் தீர்ந்து போய், பரமு நெஞ்செலும்பும், ஈரலும் கொண்டு வந்தான். வழக்கமாக ஆட்டு ரத்தத்திற்கு நாற்பது ரூபாய் கொடுப்பாள் உஷாவின் அம்மா. கையால் நிறுத்துப் பார்த்த அவள் ''என்ன பரமு அரை கிலோ தேறும் போல அம்புட்டு காசுக்கு எங்க போவேன்'' என்றாள். அன்று தான் ஆட்டுக் கறி அவள் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஆகாதது என்பது புரிந்தது பரமுவுக்கு. ''காசு யாரு கேட்டாம்மா? இன்னிக்கு ஒரு பாய் வீட்டு ஆர்டர், முழுக்கெடா மொத்தமா வீட்டுக்கே போய் வெட்டிக் கொடுத்துட்டு வந்தேன். அதுல ஒதுங்கினது, சும்மா ஜமாய்ங்க” என்ற பரமுவிடம் உஷா ''பரமு.. இப்படியே கொடுத்திட்டிருந்தீங்கன்னா நானும் தின்னுட்டிருந்தன்னா உங்களை மாதிரி எனக்கும் புள்ளதாச்சி கணக்கா தொப்பை விழுந்துடும்'' என்று சிரித்தாள். பரமுவுக்கு அந்த நேரம் எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை ஆனால் வீட்டிற்கு வந்ததும் பீரோ கண்ணாடியில் சட்டையைக் கழட்டிவிட்டு நேராகவும், திரும்பித் திரும்பியும் தன் தொப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தான் பரமு. வாழ் நாளில் முதல் முதலாக இத்தனை நாள் கூடவே வந்திருந்த தொப்பையை, இன்று மட்டும் உபரியாக ஒட்டிக் கொண்டது போலப் பார்த்தான். என்றிலிருந்து இந்தத் தொப்பை தன்னுடன் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு நினைவு தெரிந்த காலங்களிலெல்லாமும் அது தன்னுடனே வருவதாகத் தான் தோன்றிற்று. பூபதி சித்தப்பா.. வாடா பலூன்! என்று தொப்பையில் குத்துவது, 'இவனுக்கு வயிறு நிறையறதே தெரியாது.. சாப்பிடு' என்று கேட்க கேட்க அம்மாச்சி இவனுக்கு ஊட்டிவிடுவது, பாலா என்ற ஒருவன், மூன்றாம் வகுப்பில் ரப்பரைப் பிய்த்துவிட்டதற்காக தொப்பையைக் கிள்ளியது, மூளையை என்ன வயித்துல வச்சிரிக்கியா என்று கணக்கு வாத்தியார் அவன் வயிற்றிலேயே ஸ்கேலால் அடித்தது என்று பலதை நினைத்துக் கொண்டிருந்தான் பரமு. அம்மா ''அது தாண்டா உனக்கு அழகு!'' என்பாள். அப்பா இன்னும் மோசம் ''தொப்பை ஆம்பளைக்கு வேணும்டா.. இல்லாட்டி தம் இருக்காது. அதுலயும் நமக்கு இருக்கிறது பரம்பரைத் தொப்பை!'' பரம்பரை வழுக்கை கேள்விப்பட்டிருக்கும் பரமுவிற்கு பரம்பரைத் தொப்பை என்பது ஒரே நேரம் சிரிப்பாகவும் கோபமாகவும் வந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். அதிகபட்சம் மூன்றே மாதத்தில் தொப்பையைக் குறைப்பது. இன்னும் சொல்வதென்றால் சினிமா நாயகர்களைப் போல சிக்ஸ் பேக் வைப்பது தான் லட்சியம் என்று சங்கல்பம் செய்து கொண்டான் பரமு. ஒரு நாள் ஆறு கிலோ டம்பெல் இரண்டு வாங்கி வந்தான். பதினைந்து கிலோவில் ராடும் டிஸ்கும் வாங்கி வந்தான். படுத்துக் கொண்டு பாரைத் தூக்க ஒரு மர பெஞ்சு வாங்கி வந்தான். மொட்டை மாடியில் இவையெல்லாவற்றையும் ஏற்றி, மூன்று மாதம் என்ன முப்பதே நிமிஷத்தில் தொப்பையைக் குறைக்கும் முஸ்தீபில் உடலை வருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த பரமுவின் அப்பா ''என்னடா இதெல்லாம்?'' என்றார். அவர் கேட்ட கேள்வியில் அவருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. உறவுக்காரப் பையன் ஒருவன் இப்படித் தான் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து இறந்தானாம். அதைச் சொல்லி ''இதெல்லாம் வேண்டாம்டா நீ பார்க்கிற வேலையே போதும்டா ஒரு ஆட்டை வெட்டி கறியைப் பிரிக்கிறது என்ன சாதாரண வேலையா? அதுவே பெரிய எக்ஸர்சைஸ் தான் காலைலேருந்து சாயங்கலாம் வரை செஞ்சுட்டு வர்றே, இதுவே போதும்டா எதுக்கு இந்த வேண்டாத வேலை?'' என்றார். பரமு கேட்பதாக இல்லை. ''நானும் அஞ்சு வருஷமாத்தான் கறிக்கடை வெச்சிருக்கேன். தொப்பை ஏறிட்டுத் தான் போகுது'' என்றான் பரமு. ''அதுக்கு நீ மிச்சம் மீதிப் படுதேனு வேண்டாத கொழுப்பு கன்றாவியெல்லாம் தின்னாம இருக்கணும். டெய்லி எடுத்துட்டு வந்து அம்மாவை சமைக்கச் சொல்றே.. கவுச்சி இல்லன்னா சோறு உள்ள போக மாட்டிங்குது உனக்கு” அப்பா உண்மையைச் சொன்னார். பரமுவின் பதிலில் ஒரு அருமையான தர்க்கம் இருந்தது. ''அப்படின்னா உடம்பு பூராவும் தானே ஏறணும் தொப்பை மட்டும் ஏன் ஏறுது கை கால் எல்லாம் குச்சி மாதிரி இருக்கு?'' என்றான், சின்னக் குழந்தை போல. பரமுவின் அப்பா அவனை முறைத்தார். என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தார். வேறு பதிலே இல்லை ''உடல் வாகுடா பரம்பரை'' என்றார். அந்த பதிலை ஒப்புக் கொள்வதாய் இல்லை பரமு. மாறாக 'எது எதுக்கு பரம்பரை பெருமை பேசறதுனு ஒரு விவஸ்தை இல்லையா?' என்பதாகப் பார்த்தான். இப்படியாக அவன் மாடியில் மினி ஜிம் செய்து உடலை வருத்திக் கொண்டதில் கடையில் வேலை பார்க்கும் நேரத்தில் சோர்ந்து போனான். தூக்கம் தூக்கமாக வந்தது. பகல் பனிரெண்டு மணிக்கு மேல்.. கருப்பை ''அண்ணே கொஞ்சம் வெட்டுங்கண்ணே'' என்று கட்டையில் நிற்கச் சொல்லிவிட்டு உட்காருவான். தொப்பையைத் தடவுவான். 'குறைய மாட்றியே?' என்று அதனிடம் பேசுவான். அதுவும் 'என்னையா அழிக்கப் பார்க்கிறாய்? உன் கூடப் பிறந்தேன்.. உன்னுடனேயே இருப்பேன்' என்பது போல் கல் கணக்காய் அவன் வயிற்றில் அழுத்தமாக உட்கார்ந்திருக்கும். கட்டுடலாக சினிமா ஹீரோ மாதிரி இருக்கும் கெளதம் சார் தினமும் கறி வாங்க வருவார். அவரிடம் ''எப்படி சார்?'' என்றான் பரமு. அவர் தான் அவருக்குப் புதிய பாடத்தை நடத்தினார். ''ஒண்ணும் பெரிய விஷயமில்லை பரமு. அப்பர் பாடி டெவலப் ஆகாம லோயர் பாடி டெவலப் ஆகாது. சரி சமமா உடம்புல இருக்கிற எல்லா தசைகளுக்கும் வேலை கொடுக்கணும். தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப் போனா அப்படிச் செய்யறதுனால தசைகள் பெருசா வளராது. சோற்றுச் சாப்பாடைக் குறைக்கணும். காய்கறி, புரோட்டீன் உணவு எடுத்துக்கணும். சரியான வழிகாட்டுதல் இல்லாம செஞ்சா விபரீதமான விளைவுகள் கூட ஏற்பட்டுடும். ஒரு நாள் செஞ்சா மறு நாள் உடம்புக்கு ஓய்வு கொடுத்திடணும். அந்த நேரம் நல்லா சத்தா சாப்பிடணும். பவுடர்லாம் இருக்கு. அந்த நேரத்துல தான் வேண்டாத கொழுப்பு போறதும் தேவைப் படற தசைகள் வளர்றதும் நடக்கும்'' பரமுவுக்கு அவர் கோர்வையாகப் பேசுவது அப்படியே புரியவில்லை எனினும், அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றிற்று. அவர் பேசும் போதே தன் தொப்பை குறைந்து அவரின் கட்டுடல் வயிறு போல் ஆகிவிடுவது போல் கற்பனை செய்து கொண்டிருந்தான். ஒரு ஞாயிறன்று மதியம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்த போது உஷா வீட்டில் கூட்டமிருப்பதையும் வெளியே ஒரு வேன் நிற்பதையும் பார்த்தான். அம்மா உஷாவைப் பெண் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள். ''மாப்பிள்ளை அம்மா பேட்டை! துபாய்ல பில்டிங் வேலையாம். வேன்லருந்து இறங்கும் போது பார்த்தேன். நல்லாத் தான் இருந்தான். முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்'' என்று சாதாரணமாகச் சொன்னாள் அம்மா. பரமு பதிலேதும் சொல்லவில்லை. ''நம்மளைக் கூப்பிடலையா?'' என்றான். ''லூசுப் பயலே... அவங்களுக்குள்ள பேசிக்குவாங்கடா... நிச்சயத்துக்குத் தான் கூப்பிடுவாங்க'' என்றதும் பரமுவுக்கு கொஞ்சம் தைரியமும் தெம்பும் வந்தது. நிச்சயம் இன்னும் ஆகவில்லை. பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண்ணை அவனுக்கும், அவனுக்குப் பெண்ணும் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறதே.. அப்போது தான் அதன் சாத்தியங்களை நினைக்கும் போது, யாருக்கு யாரைப் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது என்று யோசித்தான் பரமு. உஷாவை நினைத்தான். அழகான ட்ராகுலா மாதிரி 'பரமு ரத்தம் கொண்டாந்திங்களா?' என்று அவள் கேட்பதை நினைத்துப் பார்த்தான். பெரும்பாலும் நைட்டி அணிந்திருப்பாள். பச்சை வண்ணம் அவளுக்கு பிடித்தமானதாக இருக்கும் போல. அவள் வைத்திருக்கும் மூன்றில் இரண்டு நைட்டி பச்சைக் கலர் என்கிற புள்ளி விபரம் பரமுவுக்கு தெரிந்திருந்தது. கச்சிதமான உயரம் அவள். நல்ல சிகப்பு. முதுகு முடியும் இடம் வரை முடி இருக்கும். தலை குளித்திருந்தாளாயின், கேட்கவே வேண்டாம், கிறங்குவான் பரமு. விரல்களை விரிந்த தலைமுடிக்கிடையில் விட்டு கோதிக் கொண்டே திண்ணையில் அமர்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பாள். நிஜத்தில் ஏதாவது வம்படி செய்து கொண்டிருப்பாள். பெரிய கண்களில் மை எழுதி, இருக்கிறதா இல்லையா என்பது போல் ஒரு பொட்டை வைத்திருப்பாள். பரமுவின் அனுமானிப்பில் அவள் கோகுல் சந்தனப் பவுடரை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருந்தான். அந்த சந்தன வாடை வேறு எந்த பவுடருக்காவது இருக்கிறதா என்ன? பரமு அறிந்த வரையில் அவளை மாப்பிள்ளைக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை. மாப்பிள்ளையும் அழகாக இருப்பதாக அம்மா சொல்கிறாள். ஒரு வேளை இந்த சம்பந்தம் முடிந்துவிடுமோ என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டிருந்த பரமு, மறு நாள் அதை அவளிடம் கேட்டே விட்டான். வெளியில் நின்று கொண்டிருந்தவளிடம் ''மாப்பிள்ளை எப்படி?'' என்றான் எடுத்த எடுப்பில் உஷாவும் சிரித்தபடி ''வாங்களேன் போட்டோ காட்டறேன்'' என்றாள். ''போட்டோ இருக்கா எங்கே காட்டு'' என்று ஆர்வமாகப் போக அவன் உள்ளே வந்ததும் ஒரு போட்டோவைக் காட்டி ''அம்மா கடைக்குப் போயிருக்கு சீக்கிரம் பாத்துட்டு கொடுங்க, திட்டும்'' என்றாள். போட்டோவை வாங்கிப் பார்த்த பரமு மாப்பிள்ளையின் முகத்தை முதலில் பார்க்கவில்லை. அவனுக்குத் தொப்பை இருக்கிறதா என்று தான் பார்த்தான், ஏமாந்தான். அவனுக்கு ஸ்லேட்டு மாதிரி தட்டையான வயிறு. ஒரு கணம் கறிக்கடையை விட்டுவிட்டு துபாயில் கொத்து வேலை பார்க்கலாம் என்று யோசித்தான் பரமு. ''எப்படி இருக்கார்?'' என்று வெள்ளந்தியாகக் கேட்ட உஷாவிடம் ''என் அளவுக்கு கலரில்லை கொஞ்சம் கருப்பு தான் ஆனா நல்லா இருக்கார்'' என்றான் பரமு. ''ஐ அதென்ன உங்க அளவுக்கு? அவருக்கு என்ன உங்க மாதிரி தொப்பையா இருக்கு?'' என்றாள் உஷா, அவன் கையிலிருந்த போட்டோவை வெடுக்கென பிடுங்கியபடி. அவள் பதிலிலும், செய்கையிலும், அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருப்பதை உணர்ந்த பரமு, ''என்ன சொன்னார்?'' என்றான். ''ஜாதகம் பொருந்தினா நேரடியா கல்யாணம் தான். கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயம் வெச்சுக்கலாம்னு சொல்லியிருக்காங்க ஜாஸ்தி எதிர்பார்க்குறாங்க'' இந்த இடத்தை தன் ஆம்பளைத்தன்மையை நிறுவ, முற்போக்கு மனோபாவத்தைக் காட்ட நல்ல வாய்ப்பு என்று கருதி பரமு ''இதென்ன பேடித்தனம். வரதட்சணைலாம் கேட்கவே கூடாது தெரியுமா? ஒரு அழகான பொண்ணைக் கட்ட ஆம்பளை தான் வரதட்சணை கொடுக்கணும். பொண்ணையும் கொடுப்பாங்க பொன்னையும் கொடுப்பாங்களா? நல்ல ஆம்பளை விரும்புவானா இதை?'' என்று வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்த பரமுவை ''ஹலோ ஹலோ என்ன ஆச்சு? எதுவும் சினிமா பார்த்தீங்களா ராத்திரி?'' என்று அலட்சியமாக இடை நிறுத்தினாள் உஷா. பேச்சை நிறுத்திவிட்டு அவளை இரண்டொரு வினாடி அடித்துப் பார்த்தான் பரமு. அவளும் அவன் கண்களைப் பார்த்தாள். அந்த நேரம் ஏன் இப்படிப் பார்க்கிறான் என்று கூட நினைத்திருப்பாள். என்ன? என்பது போல் கண்களால் கேட்ட அவளிடம் ''எனக்கு உன் மேல ஒரு இது இருக்கு உஷா!'' என்றான். அவளை நேராகப் பார்த்தான். முந்தைய வினாடி வரை இப்படிச் சொல்லிவிட வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை. இப்படிச் சொல்வான் என்று அவளும் நினைக்கவில்லை. ''ஒண்ணும் மோசமில்லை ஒரு வேளை ஜாதகம் பொருந்தலைன்னா'' ஆரம்பித்த பரமுவை நிறுத்தினாள் உஷா... ''அபசகுனமாப் பேசாதீங்க பரமு'' என்றவள் ''நீங்க கிளம்புங்க அம்மா வந்துடுவாங்க'' என்றாள். முகம் சிறுத்திருந்தது. ''நான் தானே அம்மா வந்தா என்ன? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன். வேணுமின்னா உங்க அம்மா கிட்ட பேசறேன்'' என்றான் பரமு. ''பரமு நீங்க விளையாட்டுக்குப் பேசறீங்கனு தான் நினைக்கிறேன் ஒருவேளை இந்த சம்பந்தம் முடியலன்னா'' என்றுவிட்டு மேற்கொண்டு பேசாமல் நிறுத்தினாள் உஷா. வாசலில் அம்மா செருப்பு சத்தம் கேட்டது. ''யாரு பரமுவா?'' என்றபடி உள்ளே வந்து கொண்டிருந்தாள் உஷாவின் அம்மா. ''சொல்லு உஷா ஏதோ சொல்ல வந்தியே?'' அம்மா வந்துவிட்டாள் பேச உசிதமில்லை என்பதாக சைகை செய்த உஷா, சகஜமாக ''முதல்ல தொப்பையைக் குறைங்க பரமு பார்த்துக்கலாம்'' என்று சிரித்தாள். அன்று இரவு படுத்திருந்த மேனிக்கு குலசாமி அத்திவெட்டி வைரவரிடம் உஷாவிற்கு இந்த மாப்பிள்ளை முடியக் கூடாது என்று வேண்டிக் கொண்டான் பரமு. என்ன செய்தும் கிஞ்சித்தும் குறையாத தொப்பையை ஏதோ முன்னோர்கள் இட்ட சாபம் என்று நினைக்க ஆரம்பித்தான் பரமு. கெளதம் சார் சொன்னது போல் ஜிம்மிற்குச் சென்றான். இரண்டே நாளில் உடம்பு அடித்துப் போட்டது போல் வலித்தது. அப்போது தான் அவனுக்கு இது நாள் வரை மொட்டை மாடியில் செய்தது எல்லாம் ஓர் உடற்பயிற்சியே இல்லை என்பது விளங்கியது. உடலை மாற்றுவது எத்தனைப் பெரிய வித்தை? உடல், உணவு, மனசு மூன்று ஒத்திசைவோடு நின்றால் மட்டுமே உடம்பு விரும்பிய தினுசுக்கு மாறும் என்று ஜிம் மாஸ்டர் சொன்னார். தன் மனசுக்கு என்ன குறை? தொப்பையைக் குறைத்தே ஆக வேண்டும் என்று தானே நினைக்கிறது? இல்லையில்லை உஷாவை அடைந்தாக வேண்டும் என்று தான் நினைக்கிறதோ? ஒரு நாள் சற்றே அதிகப்படியான எடையுள்ள பாரை தவறுதலாகத் தூக்கி அடித்ததில், பரமுவுக்கு வலது தோள்பட்டை தசை சற்றே நழுவிக் கொண்டு கையை இரண்டு வாரம் தூக்கவே முடியாதபடிக்குச் செய்துவிட்டது. அவனால் பைக் ஓட்ட முடியவில்லை. இரத்த ஓட்டம் குன்றிப் போய் கைவிரல்கள் அடிக்கடி மரத்துப் போயின. இதற்காக ஒரு நரம்பு டாக்டரைப் பார்க்க வேண்டியதாயிற்று. அன்றைக்குப் போன போது பைக்கைக் கூட கருப்பண்ணன் தான் ஓட்டினார். கையை அசைக்காமல் ஒருக்களித்து பைக்கில் ஏறிய பரமுவைப் பார்த்து வெளியில் நின்று கொண்டிருந்த உஷா ''என்னாச்சு பரமு?'' என்றாள். ''சுளுக்கு!'' என்று மட்டும் சொன்ன பரமு, கருப்பண்ணனிடம் கடுப்படித்தான் ''எடுங்கண்ணே வண்டியை'' டாக்டர் ''கை நரம்புகள் கம்ப்ரஸ் ஆகியிருக்கு'' என்றார். அதற்கு என்ன அர்த்தம் என்று கூட பரமு கேட்கவில்லை. எப்போது சரியாகும் என்று தான் கேட்டான். டாக்டரின் பதில் முத்தாய்ப்பாக இருந்தது. ''சொல்ல முடியாது. இனிமே எக்ஸர்சைஸே பண்ணாதீங்க இந்த மருந்துகளை சாப்பிடுங்க. அதுவா சரியாகிடும்'' என்றார். கருப்பண்ணன் வீட்டில் அப்பாவிடம் டாக்டர் சொன்னதைச் சொல்லிவிட்டு போனதும், அப்பா ஆரம்பித்துவிட்டார், ''அப்பவே சொன்னேன் கேட்டீயா?'' என்று. மாடிக்குப் போய் எல்லா உடற்பயிற்சி உபகரணங்களையும் ஒரு சாக்கில் போட்டு ஒழித்துக் கட்டினார். சில நாட்கள் வீட்டில் இருந்தான். கடையை கருப்பண்ணன் கவனித்துக் கொண்டார். கை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருந்தது. உஷாவின் அம்மா வந்து சம்பந்தம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாதத்தில் கல்யாணம் வைத்திருப்பதாகவும் சொல்லி பத்திரிகை வைத்துச் சென்றாள். பரமு பத்திரிக்கையை வாங்கி மாப்பிள்ளையின் பெயரை மட்டும் பார்த்தான். மதிவாணன் கேம்ப் துபாய்! பரமசிவம், ஸ்டார் மட்டன் ஸ்டால் என்று பொருத்திப் பார்த்தான். பெருமூச்சு விட்டான். மறு நாளில் இருந்து கை வலியையும் பொருட்படுத்தாமல் கடைக்கு போக ஆரம்பித்திருந்தான் பரமு. மதியம் சாப்பிடாமலேயே தூங்கிப் போயிருந்த பரமு, மூன்று மணி சுமாருக்கு வாசலில் ஆரவாரம் கேட்க எட்டிப் பார்த்தான். மாப்பிள்ளையும் பெண்ணும் காரில் பெண் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வேனிலிருந்து பரமுவின் அம்மாவும் அப்பாவும் இறங்கினார்கள். வீட்டு வாசலில் வந்து நின்ற காரினின்று முதலில் உஷா இறங்கினாள். அசங்கி இருந்த கல்யாண சீலையைச் சரி செய்து கொண்டவள் ஒரே ஒரு கணம் பரமுவைப் பார்த்தாள். பரமு சிரிக்க முற்பட, அதற்குள் குனிந்து கொண்டாள். தொடர்ந்து மாப்பிள்ளை இறங்கினார். அதிர்ந்தான் பரமு. முப்பத்திரண்டு வயது மதிப்பில் பெருத்த தொப்பையுடன் இறங்கிய மனிதருக்கு லேசாக முன் தலையில் வழுக்கை வேறு இருந்தது. முதலில் போட்டோவில் பார்த்த மாப்பிள்ளைக்கு இந்த ஒன்றரை மாதத்தில் அதற்குள் தொப்பை விழுந்துவிட்டதா என்று தான் யோசித்தான். பிறகு தான் அவன் வேறு இவர் வேறு என்பதே புரிந்தது. ''என்னடா பனியனோட வெளில நிக்கறே? வாடா'' என்றபடி உள்ளே நுழைந்த அம்மாவிடம் ''என்னம்மா ஆச்சு?'' என்றான் பரமு. ''அந்தக் கூத்தை ஏண்டா கேட்கறே, மாப்பிள்ளை ஓடிட்டாண்டா முகூர்த்த நேரம் ஒரு மணி முன்னாடி வரைக்கும் மண்டபத்துல இருந்தவன் ஓடிட்டான். ஏதோ லவ்வாம். லெட்டர் எழுதி வெச்சிட்டு போயிட்டான். மண்டபமே அமளிதுமளிப் பட்டுப்போச்சு! அப்புறமா சொந்தத்துல யாரையோ உடனே புடிச்சி சொன்ன முகூர்த்தத்துல கட்டி வெச்சுட்டாங்க பாவம் உஷா!'' என்றவள் ரூமிற்குள் நுழைந்தாள். இவனும் தன்னிலை மறந்து அதிர்ச்சியிலிருந்து விலகாதவனாக அம்மாவைத் தொடர்ந்து உள்ளே போக, ''நீ எங்கடா வர்றே வெளிய போ புடைவை மாத்தணும்'' என்று கதவைச் சாத்தினாள். ''இவ்ளோ நடந்திருக்கு என் கிட்ட ஏம்மா சொல்லலை?'' என்று சாத்திய கதவைப் பார்த்துக் கத்தினான் பரமு. ***************** கிராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் பல இடங்களில் உருவமற்றும் இருப்பார்கள். கிராமத்தை ஒட்டிய பெரிய கோவில்களிலும் இவர்களைக் காணலாம்... அதிகமாய் யாராலும் கும்பிடப்படாமல் தனித்து இருப்பார்கள். இந்தத் தெய்வங்களுக்கு பூசாரி என்றெல்லாம் ஒருவர் இருப்பதில்லை... ஊருக்குள் யாரேனும் ஒருவர் அந்தப் பணியைச் செய்வார். முனீஸ்வரன், அம்மன், கருப்பர் போன்றவர்களுக்கு வேளார் என்று சொல்லக் கூடியவர்கள் முக்கிய தினங்களில் பூஜை செய்வார்கள். மற்ற நாட்களில் எல்லாம் உள்ளூர் ஆட்கள்தான். பெரிய கோவில்களில் தெய்வத்தைக்காண காசு கொடுத்துக் காத்திருந்தாலும் மக்கள் கூட்டத்தின் அளவைப் பொறுத்துத்தான் தரிசனத்தின் நிமிடங்கள் அமையும். இங்கு அப்படியில்லை... நம் எதிரே சிறு தெய்வம் இருக்கும்... நாம் அதனருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலான கிராமங்களில் அம்மன் கோவில்கள் முதலில் மண் மேடையில்தான் உருவாகியிருக்கின்றன. ஒரு மண் மேடையின் மீது சின்னதாய் மண் பீடம் என்பதே ஆதி உருவாய்... அதன் பின்னான வருடங்களில் ஊர் மக்களின் முன்னெடுப்பில் ஒரு சிறிய ஒட்டுக் கொட்டகைக்குள் அம்மன் பீடமாய்.. அதற்குப் பெயர் அம்மாமடை (அம்மன் மேடை) என்பதாய்... எங்கள் ஊரில் கூட அம்மன் கோவில் அப்படித்தான் உருவாகியிருக்கிறது. எங்க அண்ணன் வயதொத்தவர்கள் சிறிய மேடை அமைத்து சாமி கும்பிட்டிருக்கிறார்கள். அதுவே பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஓட்டுக் கொட்டகையாய்... சுற்றிலும் கம்பி அடைத்து.. அதற்குள் அம்மன் பீடம் வைத்து... முன்பக்கம் சிறிய கொட்டையும் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு அருகே வீடு என்பதால் கோவில் சாவி எங்க வீட்டில்தான் இருக்கும். செவ்வாய், வெள்ளி எங்க அண்ணன் சாம்பிராணி போடுவார்,.. பின்னர் அக்கா... அதன் பின் நான்... தம்பி எனத் தொடர்ந்தது. இப்போது நாங்கள் யாரும் அங்கில்லை என்பதால் வேறொருவர் செவ்வாய், வெள்ளி சாம்பிராணி போடுகிறார். சாம்பிராணி போடுவதில் பால் வேறுபாடெல்லாம் பார்க்கவில்லை அம்மன்... பொங்கல் என்றால் முதல்நாள் இரவு வயது வந்த பெண்கள்தான் உள்ளே ஏறிக் கோலம் போடுவார்கள். ஊராரின் முன்னெடுப்பில் பிள்ளையார், முருகன் இணைய, ஓட்டுக் கொட்டகை சில வருடங்களுக்கு முன்னர் சிறிய கோபுரத்துடன் கூடிய கோயிலாக மாறியது. கிராமத்துக் கோவில்களில் அம்மன்கள் பெரும்பாலும் உருவமாய் இருப்பதில்லை. பீடமாய்த்தான் இருக்கும். பீடத்தின் வடிவங்கள் மாறும்... அதன் அமைப்பு பெரும்பாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். எங்க ஊரில் கருப்பர்கள் (பெரிய கருப்பன், சின்னக் கருப்பன்) இருவரும் ஒரு கோவிலுக்குள் பீடமாய்த்தான் இருக்கிறார்கள். இந்த சிறு தெய்வ வழிபாட்டிலும் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். சில கிராமங்கள் சேர்ந்து ஒரு தெய்வத்தைக் கும்பிடுவார்கள். வருடம் ஒருமுறை திருவிழா... அதன் தொடர்ச்சியாய் கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், எருது கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என திருவிழா களைகட்டும். இதற்குள்ளும் எங்க ஊருக்குத்தான் முதல் மரியாதை தரணும் என வீண் பிடிவாதங்கள் எழுந்து அதுவே சண்டையாகி திருவிழாவே காணாமல் பூட்டிக்கிடக்கும் கோவில்களையும் காணலாம். எடுத்துச் செலுத்த ஆளில்லாமல் சிதைந்த கிடக்கும் கோவில்களையும் காணலாம். எங்க ஊர் ஐய்யனார் கோவிலில் எருதுகட்டு வருடா வருடம் சிறப்பாக நடக்குமாம்... எங்களுக்கு விவரம் தெரிந்தது முதல் நடப்பதில்லை. மேலே சொன்னது போல் இரு ஊர் மரியாதைப் பிரச்சினைதான் காரணம். அதேபோல் கருப்பர் கோவிலில் அவரைக் குலதெய்வமாக வழிபடும் பல ஊர்ப் பங்காளிகள் சேர்ந்து கிடா வெட்டு சிறப்பாக நடத்துவார்களாம். எங்களுக்குத் தெரிய கிடா வெட்டு இல்லை என்றாலும் வருடம் ஒருமுறை கூடி சாமியாவது கும்பிட்டார்கள். அதிலும் பிரச்சினை என்றாக அவரவர் ஊரில் கருப்பனுக்கு கோவில் கட்டி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இப்படித்தான் சிறு தெய்வங்கள் வழிபாடுகளில் சிக்கல்கள் வழிவழி தொடர்கின்றன... தீர்க்கப்படாமலே. பங்காளிகளுக்கென்று குலதெய்வம் போக சிறுதெய்வம் அதாவது வீட்டுச்சாமி என்று ஒன்று இருக்கும். இது பெரும்பாலும் உருவமற்ற பெண் தெய்வமாக இருக்கும். அந்தப் பங்காளிகள் வகையில் சில தலைமுறைக்கு முன்னர் பிறந்து மரித்ததாகவோ அல்லது வழிவழியாக கும்பிட்டு வருவதாகவோ இருக்கும்.
இந்தத் தெய்வங்களுக்கு வருடம் ஒருமுறை கோழிப்பூஜை, படையல், கருப்பட்டி பணியாரம், பால்சோறு என சிறப்பாக பூஜை போடுவார்கள். இந்த வீட்டுச்சாமிகள் வழிபாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்களே பூஜை செய்வார்கள்... சில இடங்களில் வாயைக் கட்டிக் கொண்டு செய்வதையும் காணலாம். இந்த வீட்டுச்சாமி கும்பிடுவதிலும் பங்காளிச் சண்டையால் குழப்பம் வருவதுண்டு. எங்க வீட்டுச்சாமியான உமையவள் (உமையரம்மத்தா சொல் வழக்கு) கூட இப்போது அவரவர் இல்லத்தில் வைத்துத்தான் கும்பிடுகிறோம். பெரும்பாலான வீட்டுச்சாமிகளுக்குப் படைக்கப்படுபவை அவர்கள் தவிர் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டவைதான். மிச்சமிருந்தாலும் நாய், நரி சாப்பிடாமல் மண்ணுக்குள் புதைக்க வேண்டும். மரங்களில் வைத்துக் கும்பிடப்படும் சிறுதெய்வங்களின் கதை சுவராஸ்யமானவை. பெரும்பாலும் அது ஏதோ ஒரு வகையில் காவல் தெய்வமாக இருக்கும். மரத்தில் ஆணி அடித்தோ அல்லது குங்குமம் மட்டும் வைத்தோ கும்பிடப்படும் தெய்வங்கள் இவை. மரம் பட்டுப் போதல் அல்லது ஏதாவது ஒரு வகையில் சாய்ந்து போதல் நிகழும் பட்சத்தில் அருகிருக்கும் மரம் சாமியைத் தாங்கும். அரிதாக அந்த மரத்துடன் காணாமல் போன தெய்வங்களும் உண்டு. மக்கள் செல்ல வழியில்லாத கருவைகள் நிறைந்து மறந்து போன தெய்வங்களும் உண்டு. எங்கோ இருக்கும் தெய்வத்துக்கு ரோட்டில் சிதறு தேங்காய் உடைத்துக் கும்பிடும் நிகழ்வும் உண்டு. இன்று பரபரப்பாக இருக்கும் பெரிய தெய்வங்களின் கோவில்களில் நின்று மனசார வேண்டிக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. வரிசையில் வருபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே கும்பிடும் கால நேரத்தின் அளவிருக்கும் அதுவும் 'போ.. போ...' என்று விரட்டும் காவலர் இல்லாத பட்சத்தில் மட்டுமே நிகழும். அதுபோக சாமியைப் பார்க்க பணம் என்ற முறைக்குள் கோவில்கள் வந்த பிறகு சாமிகளுடனான நெருக்கம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. பெரிய கோவில்களில் பரபரப்பில்லாத கோவில்களில் காசு வாங்காத கோவில்களில் நீண்ட் நேர சாமி தரிசனம் கிடைக்கும். சிறுதெய்வங்களுடன் நாம் 'நம் கஷ்டத்தைச் சொல்லி அழலாம்... 'நீ என்னைக் காப்பாத்திட்டேடா என சந்தோஷத்தில் கட்டி அணைக்கலாம்... 'இப்படி ஏமாத்திட்டியே' எனத் திட்டலாம்... தொட்டுக் கழுவலாம்... மேல் துண்டால் துடைக்கலாம்... குளித்து ஈரத்துண்டோடு கரையிலிருக்கும் தெய்வத்தை வேண்டலாம்... நினைத்த நேரத்தில் கும்பிடலாம்.. நீண்ட நேரம் அங்கிருக்கலாம்... மனநிறைவோடு திரும்பலாம். கிராமங்களில் காவல் தெய்வங்களாய் இந்த சிறுதெய்வங்கள்தான் காத்து நிற்கும். முனியய்யாவும் கருப்பரும் காவல் தெய்வமாய் எல்லாக் கிராமத்திலும் இரு வேறு திசைகளில் எழுந்தருளியிருக்கும். பல கிராமங்களில் கல்லில் மஞ்சளும் குங்குமமும் கொட்டி வைத்து ஏதோ ஒரு பெயரில் சாமி கும்பிடுவதைப் பார்க்கலாம். ' 'அந்தப் பக்கம் போகதே அங்கிட்டு வனப்பேச்சி இருக்கா...', இந்தா இந்த பனங்காட்டுக்குள்ளதான் வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இருக்காரு... ராத்திரியில வானத்துக்கும் பூமிக்கும் வெள்ள உருவமா நிப்பாரு...', 'கம்மாக்கரை ஒரம்பா மரத்துல நாகரை வச்சிக் கும்பிடுறாக...' என உருவமற்ற தெய்வங்களுக்கு எல்லாம் உயிரூட்டி வைத்திருக்கும் கிராமங்களில் கருப்பர், அய்யனார், முனியய்யா தவிர பல பெயர் தெரிய சிறு தெய்வங்கள் காணாமலே போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இன்னும் இரண்டு தலைமுறைகளில் பெரும்பாலான சிறுதெய்வங்கள் பற்றித் தெரியாமலே போகக்கூடும் என்பதும் உண்மையே. * ஒருநாள் போட்டிகளில் விளையாடும் எல்லா கிரிக்கெட் வீரர்களின் கனவும் உலகக்கோப்பையை வெல்வது, சிறந்த வீரர்களாக கருதப்படும் பிரைன் லாரா, கங்குலி, டிராவிட், காலிஸ், வால்ஷ் போன்றவர்களுக்கு அந்த கனவு நனவாகவில்லை ஆனால் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத வீரர் ஒருவர் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தியாவின் சுனில் வல்சான், 1983 ஆம் ஆண்டு அணியில் இருந்தார், எந்த போட்டியிலும் விளையாடவில்லை, பின்பு தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படவும் இல்லை. * 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் சுனில் கவாஸ்கர் 174 பந்தில் ஆமை வேகத்தில் 36 ரன்கள் குவித்து கடும் விமர்சனத்திற்கு ஆளானார், ஆனால் அவரே 1987 உலக கோப்பையில் நியூசிலாந்து எதிராக 88 பந்தில் 103 ரன்கள் குவித்து தன் முதல் மட்டும் கடைசி ஒருநாள் சதத்தை அடித்தார். * 1975 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் மே.இ.தீவுகளின் Roy fedricks, ஆஸ்திரேலியாவின் Dennis Lillie வீசிய பந்தில் ஹூக் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்தார் ஆனால் பேலன்ஸ் தவறி கால் ஸ்டெம்பில் பட, உலக கோப்பையில் முதல் Hit-wicket ஆனார் (இந்த உலக கோப்பையில் இங்கிலாந்தின் ஆர்சர் வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டு வீக்கெட் கீப்பர் தலை மேல பறந்து பௌண்டரி தாண்டி விழுந்தது) * 1987ம் ஆண்டு உலக கோப்பையில் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேம் என்று சொல்வதற்கு ஏற்ப இரண்டு விஷயங்கள் நடந்தன. இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான லீக் போட்டியில், ஆஸி வீரர் Dean Jones அடித்த பந்து எல்லை கோட்டிற்கு சென்றது, நடுவர்களுக்கு அது ஃபோரா இல்ல சிக்ஸா என்ற சந்தேகம், அங்கு பீல்டிங் செய்த ரவி சாஸ்திரியிடம் கேட்க, அவர் ஃபோர் என சொல்ல, நடுவர்களும் அதையே அறிவித்தனர். பின்னர் ஆஸி அணி முறையிட, நடுவர்கள் இந்திய கேப்டன் கபில்தேவிடம் கேட்க, அவரும் அதை சிக்ஸ் என அறிவிக்க ஒத்துக்கொண்டார். இந்தியா அந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. மே.இ.தீவுகள் - பாகிஸ்தான் இடையிலான மற்றொரு லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை வால்ஷ் வீசினார், வெற்றிக்கு பாகிஸ்தானுக்கு இரண்டு ரன் தேவைப்பட கடைசி விக்கெட் ஜோடி களத்திலிருந்தது, வால்ஷ் பந்து வீச வரும் போது Non-striker சலீம் ஜாஃபர் கீரிஸுக்கு வெளியே போக, வால்ஷ் அவரை Mankad முறையில் அவுட் வாய்ப்பு இருந்தும், அதை செய்யாமல் திரும்ப சென்றார். கடைசி பந்தில் அப்துல் காதர் இரண்டு ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்று தந்தார். அந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது, மே.இ.தீவுகள் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. * இந்தியாவின் மொகிந்தர் அமர்நாத், இலங்கையின் அரவிந்த் டி சில்வா, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் அரையிறுதி மற்றும் இறுதியாட்டத்தில் இரண்டிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிகப்பட்சமாக 9 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருக்கிறார். * உலகக்கோப்பையின் முதல் Hat-trick ஐ இந்தியாவின் சேத்தன் ஷர்மா எடுத்தார், பின்னர் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இலங்கையின் மலிங்கா, மே.இ.தீவுகளின் கெமர் ரோச், இங்கிலாந்தின் ஸ்டீபன் ஃபின், தெ.ஆப்பிரிக்காவின் டுமினி ஆகியோர் இச்சாதனையை புரிந்துள்ளனார். இதில் மலிங்கா இரண்டு முறை இச்சாதனையை புரிந்துள்ளார், தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிராக நாலு பந்தில் நாலு விக்கெட் எடுத்துள்ளார் ஆனால் அது இலங்கைக்கு வெற்றியை தேடி தரவில்லை, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. சமிந்தா வாஸ் வங்கதேசத்திற்கு எதிராக முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இச்சாதனையை புரிந்துள்ளார். இங்கிலாந்தின் ஸ்டீபன் ஃபின்னுக்கு ஆஸிக்கு எதிராக அவர் Hat-trick எடுத்தும், இங்கிலாந்து தோற்றது. * டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது கென்யா. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இச்சாதனையை அந்த அணி புரிந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து கென்யாவில் விளையாட மறுக்க, லீக் சுற்றில் இலங்கை, வங்கதேசத்தை வென்றது, சூப்பர் சிக்ஸில் ஜிம்பாபவேவை வென்னு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. * உலகக் கோப்பையில் பங்கேற்ற அப்பா - மகன் ஜோடி டொனால்ட் பிரிங்கேல், டெரிக் பிரிங்கேல். அப்பா கிழக்கு ஆப்பிரிக்காவிற்காக 1975 உலகக்கோப்பையில் ஆட, மகன் இங்கிலாந்திற்காக 1987, 1992 உலகக் கோப்பையில் விளையாடினார். * 1992 உலகக்கோப்பையில் தான் பல மாற்றங்கள் செய்யப்பட்டது, வண்ண உடைகள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டன, லீக் போட்டிகளுக்கு மாற்றாக ரவுண்ட் ராபின் முறை பயன்படுத்தப்பட்டது, வெள்ளை நிற பந்துகள் அறிமுகப்படுத்தபட்டது, முக்கியமாக முதல்முறையாக மழை காரணமாக போட்டி கைவிடப்பதும் இந்த உலகக்கோப்பையில் தான். * உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் ஆறு சதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங், சங்கக்காரா ஐந்து சதத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளனர். 2015 உலகக்கோப்பையில் சங்கக்காரா தொடர்ச்சியாக அடித்த நாலு சதமே, ஒரு தொடரில் அடிக்கபட்ட தனி நபர் அதிக சதங்கள். மார்க் வாஹ் 1996, கங்குலி 2003, ஹேடன் 2007 என மூன்று சதம் அடித்திருக்கிறார்கள். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் 2278 ரன்களுடன் இருக்கிறார். பாண்டிங் 1743 ரன்களுடன் இரண்டாமிடத்திலும், சங்கக்காரா 1532 ரன்களுடன் முன்றாமிடத்தில் இருக்கிறார். * பந்து வீச்சில் மெக்ராத் 71 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருக்கிறார், முரளிதரன் 68 விக்கெட்டும், வாசிம் அக்ரம் 55 விக்கெட்டும் எடுத்து இரண்டாம், முன்றாமிடத்தில் இருக்கின்றனர். ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் விழ்தியவர்கள் பட்டியலிலும் மெக்ராத் 26 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருக்கிறார், 2007 உலகக்கோப்பையில் இச்சாதனையை அவர் படைத்தார். ஒரு போட்டியின் மிகச்சிறந்த பந்துவீச்சும் அவர் வசமே, நமீபியாவிற்கு எதிராக 2007 உலகக்கோப்பையில் அவர் எடுத்த 7/15 ஒரு போட்டியின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இந்தியாவிற்காக ஸாகிர் கான், ஸ்ரீநாத் 42 விக்கெட்கள் விழ்த்தியுள்ளனர். * இரு வேறு நாட்டிற்காக உலகக்கோப்பையில் விளையாடியவர்கள். கெப்ளர் வெசில்ஸ்- ஆஸ்திரேலியா (1983), தென் ஆப்பிரிக்கா (1992) ஆண்டர்சைன் கம்மின்ஸ் - மே.இ.தீவுகள் (1992), கனடா (2007) ஈயன் மார்கன் - அயர்லாந்து (2007) , இங்கிலாந்து (2011-19) எட் ஜாய்ஸ் - இங்கிலாந்து (2007), அயர்லாந்து (2011) இதில் எட் ஜாய்ஸ் 2007 ல் இங்கிலாந்திற்காக அயர்லாந்துக்கு எதிராகவும், 2011 ல் அயர்லாந்திற்காக இங்கிலாந்துக்கு எதிராவுக்கும் விளையாடி தனிச்சிறப்பு பெற்றுள்ளார். இரு போட்டிகளிலும் அவர் பங்கேற்ற அணியே வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தாலும் மோர்கன், அயர்லாந்திற்கு எதிராக விளையாடவில்லை, விளையாடி இருந்தால் அவரும் இச்சாதனை படைத்திருப்பார் ஆனால் இரு முறையும் தோற்ற அணியில் இருந்திருப்பார். * ரிக்கி பாண்டிங், மெக்ராத், கில்கிரிஸ்ட் ஆகியோர் அதிகபட்சமாக மூன்று முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ரிக்கி பாண்டிங், மெக்ராத் அதிகபட்சமாக நாலு முறை பங்கேற்றிருக்கின்றனர் .. இங்கிலாந்தின் கிரஹம் கூச் மூன்று முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றாலும், ஒரு முறை கூட அவரால் வெற்றிக் கோப்பையை ருசிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் லீமேன் வீரராக 1999 லும், பயிற்சியாளாராக 2015 லும் கோப்பையை வென்று தனிச்சிறப்பு பெற்றிருக்கிறார். புஸ்தகங்களை விரும்பிப் படித்துக் கொண்டும், தேடிப் பிடித்து தேவையானதை வாங்கிக் கொண்டும் வளைய வரும் வரை சத்யாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு புஸ்தகம் எழுதி அதை வெளியிட முடிவெடுத்த போது தான் பல விசித்திரமான சம்பவங்கள் நடந்தேறத் துவங்கின. சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய முதல் புத்தகமான “சர்வேஷின் கதைகள்” (சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்தப் புத்தக வெளியீடு ஏன் என்பதற்கே ஒரு கதை உண்டு. அனைத்தையும் சொல்லத் துவங்கினால் மஹாபாரதம் போல் கதை... கதைக்குள் கதை... கதைக்குள் கதைக்குள் கதை என நீளும் என்பதால் அதைத் தவிர்த்து முதல் புத்தக வெளியீடு தொடர்பாக சுருக்கமாகவும், இந்த 2019 ஆம் ஆண்டு நந்தனம் ஒய்.எம்ஸி.ஏ மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட இரண்டாவது புத்தகமான “முகங்கள்” குறித்தும் பார்ப்போம். முதல் புத்தக வெளியீட்டுக்கான நாள் குறிப்பதிலேயே ஈசனின் திருவிளையாடல்கள் பிரமாதமாக அரங்கேறின. மூன்று முறை தேதிகள் மாற்றி இறுதியில் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வருடம் 2018 என்று முடிவானது. தேதிகள் பல முறை மாறியும் அரங்கம் மாறவில்லை. அதன் உரிமையாளருக்கு ஆயுள் முழுதும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். புத்தக வெளியீடு 29 ஆம் தேதி மாலை ஐந்து மணி என முடிவானது ஆனால் அன்று மதியம் ஒரு மணி வரை அந்த நிகழ்வு சொன்னது போல் நடக்குமா? என்னும் ஊசலாட்டம், தவிப்பு, பதட்டம் என சகலமும் இருந்தது. இறுதியில் வெற்றிகரமாக வெளியீடு இனிதே நடந்து முடிந்தது. புத்தக விற்பனையும் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. 2019 ஆம் வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் அடுத்த புத்தகம் என்று ஒரு நாள் முடிவானது. முதல் புத்தகத்தை நண்பர்கள் பதிப்பகம் வெளியிட இரண்டாம் புத்தகத்தை வெளியிட முன் வந்தவர் வாதினி பதிப்பக உரிமையாளர் திரு. சுப்ரஜா ஸ்ரீதரன். இவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் துவக்கம் முதல் பரஸ்பர புரிதலும், இணக்கமான சூழலும் இயல்பாக அமைந்தது. மின்னஞ்சல் ஒன்று அனுப்புவேன். அடுத்த நாள் “சார் அதுல ஒரு மாறுதல் இருக்கு இப்போ இன்னொரு மெயில் அனுப்பி இருக்கேன் இதை இறுதியா வெச்சுக்கோங்க” இது ஒரு டெம்ப்ளேட் வசனமாகி ஆறே முக்கால் முறை அச்சிட வேண்டிய சங்கதிகள் மின்னஞ்சல் வழியே மாறி மாறி என்னிடமிருந்து ஸ்ரீதரன் சாருக்கு போனது ஆனால் சார் அசரவே இல்லை. “ஒன்னும் பிரச்சனை இல்லை. இதையே செய்துடலாங்க” இது ஒவ்வொருமுறையும் அவர் சொல்லும் டெம்ப்ளேட் வசனம்.
புத்தக வெளியீடு தொடர்பாக அவர் குறிப்பிட்டு எதுவும் முன்வைக்கவில்லை. அனைத்தையும் என் விருப்பத்திற்கே விட்டுவிட்டார். “நான்காம் தேதி கண்காட்சி துவக்கம். அன்று அதிகமாக வேலை இருக்கும். மறு நாள் சற்று ஆசுவாசபடுத்திக்கணும். ஐந்தாம் தேதிக்குப் பிறகு எந்த தேதியில் வேண்டுமானாலும் வெளியிடலாம்” என்று மட்டும் சொன்னார். என்னுடைய பதில் கேள்வியானது “ஆறாம் தேதி வெச்சுக்கலாமா சார்?” அவர் மனதுள் என்ன நினைத்தாரோ அந்த சர்வேஸ்வரனுக்கே வெளிச்சம். வாய் வார்த்தை “சரிங்க”. அவ்வளவு தான்! அதே போல் நான்கு மற்றும் ஐந்து தேதிகளில் புத்தக கண்காட்சி அரங்கிற்கு வர சொன்னார். நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து பேச, திட்டமிட! நான் வேறொரு அலுவலில் வசமாக சிக்க, அனைத்தையும் ஸ்ரீதரன் சார் தனியாளாக சமாளித்தார். ஏற்பாடுகளை செய்து முடித்தார். ஆறாம் தேதி என்றவுடன், ஒரு நண்பர் நிறைய எடுத்து சொன்னார். “அன்னிக்கு வேண்டாமே, பாட்டி அம்மாவாசை, அப்புறம் மத்தியானம் வெயில் நேரம் பன்னெண்டு மணின்னு சொல்ற, வேற நாள் வை” எனக்கு நாள், கிழமை, நல்ல நேரம் அனைத்திலும் நம்பிக்கை உண்டு. இருப்பினும் அவருக்கு சொன்ன பதில். “மாதந்தவறாம பாட்டி அம்மாவசை வரும் பாஸ் ஆனால் வருஷத்துக்கு ஒரு நாள் தான் ஜனவரி ஆறு வரும்” “அப்படி என்ன ஜனவரி ஆறில் விசேஷம்” “அன்னிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாள்” “ரைட்டு” என்பதே அவரிடமிருந்து வந்த ஒற்றைச் சொல். எழுத்தாளர் வித்யா மேடம், விருட்சம் அழகிய சிங்கர் சார் அனைவரிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கி, நண்பர்களிடம் தகவல் சொல்லி, அழைப்பிதழை பேஸ்புக்கில் பதிவிட்டு சமூக (வலைத்தள) கடமைகள் அனைத்தையும் முடிக்க ஆறாம் தேதி இனிதே விடிந்தது. அனைவருக்கும் அலை பேசி நினைவூட்டினேன். எல்லோரும் சரியான நேரத்திற்கு வந்து விட்டார்கள். நான் தான் தாமதமாக பன்னிரெண்டே முக்கால் மணி அளவில் போய் சேர்ந்தேன். பொதுவாக தாமதமாக எந்த நிகழ்வுக்கும் செல்ல மாட்டேன். ஆனால் விதி கிண்டியில் இருபது நிமிடங்களுக்கு வாகனத்தை வரிசையாக நிறுத்தி வைத்து விளையாடியது. அதில் எங்கள் வாகனமும் தப்பவில்லை. அரங்க ஏற்பாடுகள் எல்லாம் முடித்து நிகழ்வு துவங்கிய போது மணி ஒன்றரை. வித்யா மேடம் அவர்கள் பன்னிரெண்டு மணிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு மணி வாக்கில் வீட்டுக்கு புறப்படுவது போல் திட்டமிட்டு வந்திருந்தார். அவருக்கு மருத்துவமனை தொடர்பாக வீட்டிலிருந்து தொடர் அலைபேசி அழைப்புகள் வர, காரணத்தை சொல்லி வாழ்த்திவிட்டு புறப்பட்டார். ஸ்ரீதரன் சார் அவர்கள் வெளியிட, அழகிய சிங்கர் பெற்றுக் கொள்ள அரங்கில் நிறைந்திருந்த “இருபது நண்பர்களின்” (செம கூட்டம்ல!) பலத்த கரகோஷத்திற்கிடையே புத்தகம் வெளியீடு முடிந்தது. அழகிய சிங்கர் சார் “முகங்கள்” தொகுப்பில் உள்ள “நூல் முகம்” அத்தியாயத்தை ஸ்லாகித்துப் பேசினார். வந்திருந்த நண்பர்கள் அனைவரும் தவறாமல் “முகங்கள்” தொகுப்பை வாங்கினார்கள். இந்த நிகழ்வுக்காக என் பூர்வீகப் பிராந்தியமான தஞ்சை ஜில்லாவிலிருந்து நண்பர் ஒருவர் வெளியீடு விழாவுக்கு வந்து நெகிழ்வுணர்ச்சியை அதிகமாக்கினார். அவர் முதல் நாள் அதிகாலை மூன்று மணிக்கு மெட்ராஸ் வந்தது. அந்த அகால வேளையில் காலச்சுவடு, சாரு நிவேதிதா, அராத்துவின் “பொண்டாட்டி” என்றெல்லாம் பேசியது மற்றொரு கிளைக்கதை. நண்பர்களின் ஆதுரமான ஆதரவு, வாழ்த்துகள் போன்றவை மனதை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்தாலும், தேடித் தேடி அழைத்தும் அதிக அளவில் நண்பர்கள் ஞாயிற்றுக் கிழமை கூட வராமல் இருந்தது கொஞ்சம் கண்ணை வியர்க்க வைத்தது. நிகழ்வு முடிந்து, மதிய போஜனம் கடந்து, நண்பர்களுடன் அரங்குகள் அனைத்தையும் சுற்றி வந்து, துவக்க நாள் பாராம்பரியத்தைக் காப்பாற்ற மூன்று சிறப்பான புத்தகங்கள் வாங்கி... அனைத்தும் முறை தவறாமல், புத்தகக் கண்காட்சி ஆகம விதிப்படி நடந்தன. நண்பர்கள் ஒவ்வொருவராக புறப்பட, இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீதரன் சாருடன் சேர்ந்து அவரவர் இல்லம் திரும்புவது என முடிவெடுத்தோம். அரங்கில் உட்கார்ந்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என யோசித்து வாங்கிய புத்தகங்களை சில நொடிகள் நோட்டம் விட்டேன். அடுத்த சில வினாடிகளில் கையில் சுஜாதா அவர்கள் எழுதிய “சிறுகதை எழுதுவது எப்படி” புத்தகத்துடன் கண்காட்சி எனக்கு களைகட்டியது. புத்தகக் கண்காட்சியில், படிப்பதற்காக மக்கள் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருக்க நான் படிக்க வாங்கிய ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்ரீதரன் சார் சொன்னது “ஏகப்பட்ட புக் ஃபேர், பல வருடங்கள் பார்த்தாச்சு, இங்க தினமும் வந்து உட்கார்ந்தாலே போதும் எழுத ஏகப்பட்ட கரு கிடைக்கும்” என்றார். நான் ஆச்சரியப்பட்டு “உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏதாவது...” வாயைக் கிளற அவர் பேசத் துவங்கினார். “என்னோட அரங்குக்கு ஒரு குடும்பம் வருஷா வருஷம் தொடர்ந்து வருவாங்க. கணவன், மனைவி, அப்புறம் அவங்க மகள். அந்தப் பொண்ணை குட்டி வாண்டா இருக்கறதுல இருந்து பாக்கறேன். இப்போ பெரிய மனுஷி ஆகிட்டா, ப்ளஸ் ஒன் படிக்கிறா, நிறைய புக்ஸ் வாங்குவாங்க, என்கிட்ட நிறைய ஆலோசனையும் கேட்பாங்க” சார் சொல்ல சொல்ல ஆச்சர்யம். “அவங்க கிட்ட சர்வேஷின் கதைகள் & முகங்கள் வாங்க சொல்லுங்க சார்” என்றேன். ஏதோ என்னால் முடிந்தது. இரவு உணவு முடித்து, சார் வீட்டில் அவர் எனக்காக வைத்திருந்த அச்சிட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது மணி இரவு பத்து. சார், ஓலா ஆட்டோ புக் செய்து தர வாகனம் புறப்பட்டது. வாகன ஓட்டி நங்கநல்லூரில் வசிப்பவர். என் இருப்பிடம் அருகே தான் அவர் வீடு. விலாசம், சாலை அனைத்தும் அறிந்தவர். “வேறென்ன வேறென்ன வேண்டும்” என்ற பாடலை என்னையறியாமல் வாய் முணுமுணுத்தது. வழக்கம் போல் டிரைவருடன் பேசியபடி பயணிக்கத் துவங்கினேன். “சார் போகும் போது நம்ம வீட்டாண்ட கடையெல்லாம் சாத்திடுவாங்க, இங்கேயே ஒரு நல்ல டீக்கடை கம் பொட்டிக்கடையா பார்த்து நிப்பாட்டுங்க, டீயும் சாப்பிட்டுப் போய்டுவோம்” என் சொல்லைத் தட்டாமல் கல்கி அலுவலகம் தாண்டிய பின் உள்ள அந்த டீக்கடையில் நிறுத்தி “இங்க டீ நல்லா இருக்கும் சார்” என்றார். “தெரியுங்க, இதுவும் என் வழக்கமான டீக்கடை தான்” என்று சொல்லி அதை உர்ஜிதப்படுத்த கடை தொடர்பான சில தரவுகளை சொன்னேன். அவர் பரிசோதித்து ஆச்சர்யப்பட்டார். இருவருக்கிமிடையே இயல்பான நெருக்கம் வளரத் துவங்கியது. புத்தகக் கண்காட்சி, புத்தக வெளியீடு தொடர்பாக இருவரும் பேச, அவர் விசாரிக்க நான் “முகங்கள்” பற்றி சொல்ல... அடுத்து மீண்டும் வாகனம் புறப்பட்ட போது இருவரும் அதைப் பற்றி அதிகம் பேசினோம். அவர் தன்னுடைய சொந்த ஊர் “சிதம்பரம்” என்று சொன்னதும் காவிரிக்கரை வாசியின் வழமையான புத்தி ஆனந்தக் கூத்தாடியது. என் பூர்வீகம் தெரிந்த பின் அவரும் அந்த மோன நிலைக்கு சென்றுவிட்டார். பேச்சு இயல்பு த்வனிக்கு மாறியது. “எல்லா டைப் ஆளுங்களையும் இதுல எழுதி இருக்கீங்களா சார்?” “ஆமா சார் டாக்டர், ஆட்டோக்காரர், கேபிள் டிவிகாரர், ஓபிஎஸ் முக ஜாடையில் ஒருத்தர், ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வேலை செய்யறவர், டீச்சர், மினி பஸ் டிரைவர்...” “நமக்கு ஒரு புக் தாங்க” “கண்டிப்பாங்க” “வண்டி நங்கநல்லூர் தாண்ட அங்கே ஒரு பெட்டிக்கடை திறந்திருக்க வண்டியை நிறுத்த சொன்னேன். அவரை அழைக்க “வேண்டாம் சார், நீங்க போங்க” என்றார். “புக் கேட்டீங்களே, இந்தாங்க” பெட்டிக்கடை போய் திரும்பி வந்த போது அவர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். நான் போய் “போலாமா” என்று கேட்க, இரு நிமிடங்கள் கழித்து புத்தகத்தில் அடையாளம் ஒன்றை வைத்து மூடி ஆட்டோவைக் கிளப்பினார். “ஆட்டோ அண்ணா செம, மினி பஸ் டிரைவர் படிக்க படிக்க எங்க அம்மா நினைப்பு வந்துட்டு, நல்லா எழுதி இருக்கீங்க, இந்த ரெண்டு தான் படிச்சேன்” என்றார். வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி புத்தகங்களை எடுத்து வைக்க உதவினார். கட்டணம் மீட்டரில் 195 ரூபாய் என்று காட்ட அவரிடம் இருநூறு ரூபாய் தாள் ஒன்றைத் தர, அவர் நூற்றி அறுபத்தைந்து ரூபாய் மீதி தர தடுத்து “எதற்கு” என்று கேட்டேன். “புக் விலை நூத்தி அறுபதுன்னு போட்டிருக்கு” “இருக்கட்டுங்க” “தப்புங்க புக்குக்கு காசு எடுத்துக்குங்க” “அப்போ நூறு ரூபாய் மட்டும் தாங்க, டிஸ்கவுண்ட் விலை ப்ளீஸ்” பரஸ்பரம் அலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டு நான் மாடிப்படி ஏற அவர் புறப்பட்டார். நூல் வெளியீட்டு விழாவவில் திறக்கு இல்லையே என்னும் வருத்தம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கியது. முகங்களில் மற்றொரு “முகம்” இந்தப் புதிரான பொருளைப் பற்றிய முழுமையான புரிதல் நமக்கு இன்னும் வரவில்லை, புரிந்தது ஒன்றே ஒன்றுதான் - அந்தப் பொருளுடன் எந்த பொருள் சேர்ந்தாலும், சேரும் பொருளை அந்தப் பொருள் விழுங்கி, ஜீரணித்து, அதனையும் புதிரான பொருளாக மாற்றி விடும்! அது உயிருள்ள பொருளோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் - கற்கள் முதற்கொண்டு மண், மலைகள், கோள்கள், நட்சத்திரங்கள் வரை! இந்தப் புதிரான பொருளைப் பற்றி ஒரு ஆரம்ப புரிதலைக் கொள்ள நமக்கு நியூட்ரான் நட்சத்திரங்கள் (neutron stars) மற்றும் நியூட்ரான்கள் (neutrons), ப்ரோட்டான்கள் (protons) ஆகிய அணுக்கூறுகளின் அடிப்படைப் புரிதல்கள் அவசியம்! பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது, அணுக்கள் - அணு மையமும் (nucleus) எலக்ட்ரான்களும் (electrons) கொண்டது. அணுவின் மையத்தில் ப்ரோட்டான்களும் நியூட்ரான்களும் இருக்கின்றன. அந்த புரோட்டான்களும் நியூட்ரான்களும், க்வார்க்குகளால் (quarks) உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ப்ரோட்டானுக்குள்ளும், நியூட்ரானுக்குள்ளும் 3 க்வார்க்குகள் இருக்கின்றன. அந்த மூன்று க்வார்க்குகளும் க்ளுவான்களால் (gluons) இணைக்கப்பட்டிருக்கின்றன. க்வார்க்குகள் ஆறு வகைப்படும், அவை - Up, Down, Charm, Top, Bottom, Strange எனப்படும். துகள் இயற்பியல், இப்போதைக்கு இவ்வளவு போதும்! எந்த ஒரு பொருளும் அணுக்களால் ஆனது என்ற அடிப்படை அறிவியல் நமக்கு நன்றாகத் தெரியும். நம் உடல், மரம்-செடி-கொடிகள், கல், மண் என அனைத்தும் அணுக்களால் ஆனதே. சில பொருட்கள் வளைந்து கொடுக்கும், சில பொருட்கள் வளைந்து கொடுக்காது. நம் உடலின் ஒரு பகுதியை ஒரு விரலால் அழுத்தினால் அது சற்றே உள் வாங்கி வளைந்து கொடுக்கும். ஒரு அளவிற்கு மேல் விரல் உள்ளே செல்லாது அந்த இடத்தில் இருக்கும் அணுக்கள் (செல்களில் இருப்பது) சற்று விலகுவதால் அவ்வாறு செய்ய முடிகிறது. அதே ஒரு இரும்புத் துண்டை அவ்வாறு விரலால் அழுத்தினால் வளைந்து கொடுக்குமா என்றால், கொடுக்கும் - ஆனால் அது நம்மால் உணர முடியாத அளவிற்கு இருக்கும். அழுத்தத்தை நாம் ஓர் அளவிற்கு மேல் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு நாம் ஒரு இரும்புத் துண்டை அழுத்திக் கொண்டே இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம், மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தால் என்ன ஆகும்? விரல் வலிக்கும் என்பதை விட்டுவிட்டு, நம்மால் அழுத்த முடியும் என்று எடுத்துக்கொள்வோம்! அவ்வாறு அழுத்திக் கொண்டே போனால், நாம் அழுத்தப்படும் அணுக்களில் இருக்கும் மையங்கள் ஒன்றிணைந்து, ஒரு புதிய பொருளை உருவாக்கும். சூரியன் போன்ற நட்சத்திரங்களில் இதுதான் நடக்கிறது. அதிக அழுத்தத்தின் காரணமாக சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக மாறுகிறது, அதாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாக மாறுகிறது! ஒரு நட்சத்திரம், தான் பிறந்தது தொடங்கி ஹைட்ரஜன் அணுக்களை அழுத்தி ஹீலியம் அணுக்களாக மற்றும். அதன் பின், அதன் எடையைப் பொறுத்து ஹீலியம் அணுக்களை வேறு அணுக்களாகவோ அல்லது, சிதறி நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறும். (நட்சத்திரங்களின் பிறப்பு-இறப்பு சுழற்சி பற்றித் தனியாகப் பார்ப்போம்). நட்சத்திரங்கள் இறக்கும் போது, சிறிய நட்சத்திரங்கள், நியூட்ரான் நட்சத்திரங்களாகவும், பெரிய நட்சத்திரங்கள் கருந்துளைகளாகவும் மாறும். நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறிய அளவில் மட்டுமே இருக்கும், அதன் விட்டம் சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர்கள் தான் இருக்கும்! ஆனால் நம் சூரியனை விட ஒன்றரை மடங்கு எடை அதிகமாக இருக்கும். ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து, ஒரு ஸ்பூன் அளவு பொருளை எடுத்தால் அதன் எடை சுமார் 10 மில்லியன் டன்களாக இருக்கும்! இந்த நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிய ஒரு அனுமானம் என்னவென்றால், அது ஓர் அளவிற்கு மேல் அழுத்தம் தாங்காமல் வெடித்துச் சிதறும். அவ்வாறு வெடித்துச் சிதறும் போது அது ஒரு க்வார்க் நட்சத்திரமாக (quark star) மாறும், அந்த க்வார்க் நட்சத்திரமும் அழுத்தம் காரணமாக சிதையும் நேரத்தில், ஒரு வகை விசித்திரமான க்வார்க்குகள் (strange quarks) உருவாகும்! அந்த வகை விசித்திரமான க்வார்க்களைத்தான் "புதிரான பொருள்" என்று அழைக்கிறோம், காரணம் அதன் செயற்பாடுகள் பற்றிய புரிதல் நமக்கு இன்னும் வரவில்லை! இதுவரை இந்த strange க்வார்க்களை நாம் நேரடியாகக் கண்டதில்லை, அணுகியதுமில்லை. இந்த strange க்வார்க்குகள் பிரபஞ்சத்திற்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்பது ஒரு அறிவியல் அனுமானம்! ஒரு மெய்நிகர் சோதனை (virtual experiment) செய்வோம். ஒரு இரும்புக் குண்டை எடுத்து அதன் அனைத்து பக்கங்களிலும் அழுத்தம் கொடுப்போம். கொடுக்கப்படும் அழுத்த விசை அதிகரிக்க-அதிகரிக்க, அந்த இரும்புக் குண்டின் அணுக்கரு மையங்கள் ஒன்றிணைய துவங்கும் (fusion). அது ஒரு புதிய தனிமத்தை / பொருளை உருவாக்கும். அந்தப் புதிய பொருளை நாம் strange let என்போம். மேலும் நாம் அழுத்தம் கொடுப்பதைத் தொடர்நது கொண்டே இருந்தால் அவை ஒன்றோடு-ஒன்று மோதி, அழுந்தி புதிய வகைக் க்வார்க்குகளை உருவாக்கும், அவை சாதாரண க்வார்க்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாக செயல்படக் கூடியதாக இருக்கும்! இப்போது அங்கு இருப்பது இரும்புக் குண்டு அல்ல, அது ஏதோ வேறு வகைப் பொருள், அது என்னவென்று நமக்கு தெரியாது, அந்தப் பொருளின் எடை பன்மடங்கு அதிகரித்திருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அணுக்கள், ஒரு சில விதிகளுக்குக் கட்டுப்பட்டு, ஒரு வரையறைக்கு உட்பட்டு, கோர்வையாக இயங்கக்கூடியது. ஆனால் strangeletகள் அப்படி அல்ல. அதில் உள்ள க்வார்க்குககளின் செயற்பாட்டினை அனுமானிக்க முடியாது. நாம் strangeletகளை உருவாக்கி விட்டால், அதன் பிறகு அதை மாற்றவோ, உடைக்கவோ, சிதைக்கவோ முடியாது. அது அப்படியே பிரபஞ்சத்தை சுற்றிக்கொண்டிருக்கும், எதிர்ப்படும் பொருட்களையெல்லாம் strange let களாக மாற்றிக் கொண்டிருக்கும்! நினைத்துப் பாருங்கள் - குக்கரில் அரிசியை வேக வைத்து - அழுத்தத்திற்கு உட்படுத்துகிறோம். குக்கர் வெடித்து அல்லது திறந்தவுடன் வெளிவரும் சோறு, எதிர்ப்படும் அனைத்துப் பொருட்களையும், அதாவது சமையலறையில் இருக்கும் ஸ்டாவ், பாத்திரங்கள், டைனிங் டேபிள் சேர் என அனைத்தையும் விழுங்கி, வீட்டையும் விழுங்கினால் எப்படி இருக்கும்? பிறகு பக்கத்து வீடு எதிர் வீடு என சுற்றி இருக்கும் செடி-கொடிகள், மண், கற்களின் என அனைத்தையும் வழங்கிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்? அவ்வாறு விழுங்கிய பொருட்களை மறுபக்கம் வேறு ஒரு பொருளாக மாற்றி வெளியிட்டுக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் strange let! இதே, ஒரு நியூட்ரான் நட்சத்திரம் வெடித்துச் சிதறி க்வார்க் நட்சத்திரமாக மாறி அதுவும் strange க்வார்க்களாக மாறி, பிரபஞ்சத்தை சுற்றிக்கொண்டு, எதிர்ப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தையும் விழுங்கி மறுபக்கம் விசித்திரமான குவார்க்குகளாக மாற்றி கொண்டே வந்தால்? இப்பிரபஞ்சம் முழுவதும் strange க்வார்க்களாக மாறி அழியும். அது ஒரு விண்வெளி படையெடுப்பைப் (space invasion) போல இருக்கும். இதை எப்படித் தடுப்பது? நமக்கு இருக்கும் ஒரே ஆபத்பாந்தவன் கருந்துளை மட்டுமே! ஒருவேளை strange க்வார்க்களைக் கண்டால் எப்படியாவது அவற்றைத் திசை-திருப்பி கருந்துளையை நோக்கி செலுத்த வேண்டும். ஆனால் அதற்குண்டான அறிவியல் அறிவு / தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை.
நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் மேலே படித்தது அனைத்தும் தற்போதைக்கு ஒரு கருதுகோள் (hypothesis) மட்டுமே! இவற்றை ஆய்வகத்தில் உருவாக்க முடியுமா என்றால் முடியும்! ஆனால் உருவாக்கும் ஆய்வகமே உருகிப் போகும் அளவிற்கு வெப்பம் உண்டாகும் என்பதால் நாம் இதனை உருவாக்கி ஆய்வு செய்ய தற்போதைய சூழலில் வசதியும் தொழில் நுட்பமும் இல்லை! குக்கரில் அழுத்தம் கொடுக்கப்பட்ட அரிசி strange let டாக மாறாமல் சோறாகவே மாறி வரும் என நினைப்போம்! பேரன்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வு அது. இயக்குனர் ராம் படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களையும் மேடைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நட்சத்திரத்தை இப்படி அழைக்கிறது ராமின் குரல். "உங்களுக்கெல்லாம் அஞ்சலி, எனக்கு ஆனந்தி. சினிமாத்துறைக்கு வந்து பத்து வருசத்துக்கும் மேல ஆகுது. எந்த பெரிய நடிகர்களோட படத்துலயும் நடிக்காம இவ்ளோ வருசம் சினிமாவுல இருக்கணும்னா நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். அப்படி நடிக்கத் தெரிந்த நடிகைதான் ஆனந்தி. ஆனந்தியை அன்போடு மேடைக்கு அழைக்கிறேன்" ராமின் வார்த்தைகளை வழக்கமான மேடை மரியாதையாக புறந்தள்ள முடியாது. ஒரு இயக்குனர் தான் உருவாக்கிய "ஆனந்தி" கதாபாத்திரத்திலிருந்து பத்து வருடங்களுக்கு மேல் வெளிவராமல் அந்தக் கதாபத்திரத்தில் நடித்த நடிகையை இன்னமும் ஆனந்தியாகவே பார்க்கிறார் என்றால் அந்த நடிகை எப்பேர்ப்பட்ட நடிப்பைத் தந்திருக்க வேண்டும். அதுவும் முதல் படத்திலேயே. ஆம். அவர்தான் அஞ்சலி. சமகாலத் தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரஸோல் என்னும் ஊரில் வறுமையில் பிறந்த பாலா திரிபுர சுந்தரி (அஞ்சலியின் நிஜப்பெயர்) பின்னாட்களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக, ஜொலிக்கும் திரை நட்சத்திரமாக உயர்ந்தார். வழக்கமானதாய் இருந்தாலும் இதைச் சொல்ல வேண்டும். அஞ்சலி இந்த உயரத்தை எட்டக் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. கரடுமுரடானது. மற்ற முன்னணி நடிகைகள் போல வாய்ப்புகள் அஞ்சலிக்கு மிகச்சாதாரணமாய்க் கிடைத்து விடவில்லை. ஒவ்வொரு தடவையும் பெரும் போராட்டத்தையும் தோல்வியையும் சந்திக்க வேண்டி இருந்தது. வறுமை, குடும்ப சூழ்நிலை என அவரைச் சுற்றி இருந்த நெருக்கடிகள் சினிமாவில் ஒரு வெற்றிக்காக அவரைத் தொடர்ந்து துரத்தின. 2006 ஆம் ஆண்டு வாக்கில் மாடலிங் செய்து கொண்டிருந்த போது சிவநாகேஸ்வர ராவ் இயக்கிய ஃபோட்டோ என்ற தெலுங்குப்படம் மூலம் அஞ்சலி முதல் முறையாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார் ஆனால் அப்படி ஒரு படம் வந்ததே பலருக்கும் தெரியாமல் போனது. படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அடுத்து "பிரேமலேகா ராசா" என்ற இன்னொரு தெலுங்குப்பட வாய்ப்பும் அஞ்சலிக்குக் கிடைக்கிறது ஆனால் முதல் படத்தை விடவும் இது இன்னும் மோசமான தோல்வியைச் சந்திக்கிறது. இந்தத் தோல்விகளெல்லாம் அஞ்சலியை முடக்கிப் போடவில்லை. சினிமாவில் வென்றே தீருவது என்ற உறுதியோடு ஓடிக் கொண்டிருந்தார். அதே காலகட்டத்தில் சென்னையில் வந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். அப்போது இயக்குனர் களஞ்சியத்தின் "சத்தமின்றி முத்தமிடு" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் நிதிச்சிக்கலில் மாட்டிக் கொண்ட அந்தப்படம் பாதி வளர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழலில்தான் "கற்றது தமிழ்" படத்துக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் ராம். அஞ்சலியின் தோற்றமும் நடிப்பும் ராமைக் கவர்ந்து விட கற்றது தமிழின் நாயகியானார் அஞ்சலி. கற்றது தமிழின் அஞ்சலி அறிமுகக் காட்சியை கவனியுங்கள். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு கதாநாயகி தன் முதல் படத்தின் அறிமுகக் காட்சியிலேயே கதறி அழுதபடி அறிமுகமானது அஞ்சலியாகத்தான் இருக்கும். ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். உதடு துடித்துத் தேம்பல் அடக்கி கண்கள் கலங்க அஞ்சலி கேட்கிற "நெஜமாதான் சொல்றியா" அனைவரது மனதையும் என்னமோ செய்தது. அந்தப்பெண் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கினாள். என்ன தான் கற்றது தமிழ் பேசப்பட்ட படமானாலும் கமர்ஷியலாய் அது வெற்றிப்படமில்லை. இந்நிலையில் ஹோங்கனஸ் என்ற படம் மூலம் கன்னடத் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார் அஞ்சலி. அந்தப்படமும் தோல்வியையே அஞ்சலிக்குப் பரிசாகத் தருகிறது. மீண்டும் தமிழில் இயக்குனர் சுந்தர்.சி நாயகனாக நடித்த ஆயுதம் செய்வோம் படத்தில் நாயகியாக நடித்தார். தோல்வி தொடர்ந்தது. வெற்றியை நோக்கிய வைராக்கியத்தோடு திரையுலகில் அடிமேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது ஒரு படம்... அங்காடித்தெரு. ஒரு வெற்றி... ஒரே ஒரு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை கோபுரத்தின் உச்சியில் அமர்த்தி அழகு பார்த்தது அந்தப்படம். ஆயுதம் செய்வோம் படத்திற்குப் பிறகு செய்வதறியாது திகைத்த அஞ்சலியை அங்காடித்தெருவுக்காக அழைத்தார் இயக்குனர் வசந்த பாலன். படத்தின் அதிமுக்கியமான காட்சிகளை முதல் மூன்று நாட்கள் அஞ்சலியை வைத்துப் படமாக்கினார். அப்போது அவரே எதிர்பாராத நடிப்பை அஞ்சலி நடித்துக் காட்டினார். குடும்ப வறுமை, வென்றே ஆக வேண்டிய கட்டாயம்... இதெல்லாம் வேறு அந்தப் பெண்ணின் யதார்த்த நடிப்பிற்குக் கூடுதலாய் துணை நின்றது. வசந்த பாலனின் முகம் மலர்ந்தது. அன்று அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. “எத்தனை பேர இந்தக் கேரக்டருக்கு தேடிருப்பேன். நீ வந்துதான் நடிக்கணும்னு இருந்துருக்கு. சரிதா, ரேவதி, சுஹாசினி வரிசைல ஒனக்கும் ஒரு நிச்சய இடமுண்டு" படத்தில் சேர்மக்கனி என்ற கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்து அத்தனை ரசிகர்களையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டார். உன் பேரைச் சொல்லும் போது, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகளைப் பேசும் விழி அருகே பாடல்களெல்லாம் இதுவரை அஞ்சலியை யார் என்றே தெரியாதவர்களை எல்லாம் தெரிய வைத்தது. பட்டிதொட்டியெங்கும் அஞ்சலி என்ற நடிகை போய்ச் சேர்ந்தார். வாய்ப்புகள் வரிசை கட்டத் தொடங்கின. அங்காடித்தெரு அஞ்சலிக்குப் பல விருதுகளையும் வாங்கித் தந்தது. தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் சிகரம் பாலசந்தர் இணைந்து நடித்த ரெட்டச்சுழி படத்தில் பாரதிராஜாவின் பேத்தியாக நடித்தார் அஞ்சலி. இந்தப்படம் கமர்ஷியல் வெற்றி அடையவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு முறை பாலசந்தர் அஞ்சலியிடம் "நீ என் பட கதாநாயகிகளை நினைவுபடுத்துகிறாய்' என்று பாராட்டியதை இப்போதும் பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிடுவார் அஞ்சலி. இயக்குனர் வ. கவுதமன், நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படமாக்கினார். அக்கா தம்பி அன்பை மையப்படுத்திய வட்டார வழக்குத் திரைப்படம் இது. திரைப்படம் மிக நேர்த்தியாகப் படமாக்கப் பட்டிருந்தாலும் ஏனோ படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. இந்தப் படத்தில் குழலி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் அஞ்சலி. அஞ்சலி தன் திரையுலக பயணத்தில் சில தவறான படங்களையும் தேர்வு செய்திருக்கிறார். அப்படி தேர்வு செய்து அஞ்சலி நடித்த படம் கருங்காலி. கொஞ்சங்கூட ஏற்றுக்கொள்ளவே முடியாத திரைக்கதை அமைப்பு கொண்ட இந்தப் படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் அஞ்சலியின் நடிப்பு தான் ஆனாலும் இந்தப்படம் அஞ்சலியின் இமேஜைக் காலி செய்தது. அங்காடித்தெருவுக்குப் பிறகு ஒரு க்ளீன் வெற்றி அஞ்சலிக்குத் தேவைப்பட்டது. இந்த நேரத்தில்தான் அஜீத்தின் மங்காத்தா படத்தில் ஒரு சிறு வேடத்தில் கமிட் ஆகிறார். மங்காத்தா என்ன தான் பெருவெற்றியடைந்த படமானாலும் அஞ்சலிக்கு அதில் குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரம் இல்லை. இருப்பினும் அந்தப் படத்தில் தன் இருப்பைப் பதிவு செய்தார். மங்காத்தாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் "எங்கேயும் எப்போதும்" என்ற படம் வெளி வருகிறது. ஒரு சாலை விபத்தை மையப்படுத்திய முதல் தமிழ்ப்படம். படத்தில் அஞ்சலிக்கு செவிலியர் வேடம். அங்காடித்தெரு போன்று அஞ்சலிக்கு பெரும் பெயரையும் புகழையும் குவித்தது எங்கேயும் எப்போதும். படத்தில் மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் வந்து கலக்கியிருப்பார். படபட தடதடவென ஜெய்யை இவர் காதலிக்கிற காட்சிகள் படத்தின் அல்ட்டிமேட்டாய் அமைந்திருக்கும். படத்தில் இன்னொரு நாயகியாக அனன்யா இருந்தாலும் படம் முழுக்க தன் அதிரடி நடிப்பின் மூலம் அஞ்சலியே வியாபித்திருப்பார். குறிப்பாய் க்ளைமேக்ஸில் ஜெய்யை சடலமாகப் பார்த்து ஒரு சிறு அமைதி இடைவெளி விட்டு வெடித்துக் கதறுவார் பாருங்கள்... நிச்சயமாய் அஞ்சலியைத் தவிர யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது அந்தக் கதாபாத்திரத்தில். இந்தப்படத்துக்காகவும் விருதுகளை வாங்கிக் குவித்தார். மங்காத்தா, எங்கேயும் எப்போதும் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு அஞ்சலி தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை ஆனார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படம் அஞ்சலி என்ற அடையாளத்துடனேயே வெளி வந்தது. கதாநாயகி நயன்தாரா போன்று நடிகை அஞ்சலிக்கும் தியேட்டர்களில் ஒரு ஓப்பனிங் இருந்தது. படத்தில் லூர்து மேரி என்ற கதாபாத்திரத்தில் வழக்கம் போல சிறப்பாகவே நடித்திருந்தார். கொலைகாரா... பாடல் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட். இடையில் பையன்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரைக்கும் அறிமுகமானார் அஞ்சலி. அஞ்சலியால் இப்படியும் நடிக்க முடியுமா என்று எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்த ஒரு திரைப்படம் வெளிவந்தது. கலகலப்பு. பெயருக்கேற்ற மாதிரி படு கலகலப்பாய் அமைந்த இந்தப்படத்தில் அஞ்சலி ஒரு முழு கமர்ஷியல் கதாநாயகி ஆனார். கலகலப்பு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது அஞ்சலிக்கு. கலகலப்பு படத்திற்குப் பிறகுதான் ஆர்யா, விஷால் என ஓரளவுக்கு தெரிந்த ஹீரோக்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. இதற்கிடையே 2013ல் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் மீண்டும் வத்திக்குச்சி படத்தில் நடித்தார். ஹிந்தியில் ஆமிர்கான் தயாரிப்பில் டெல்லிபெல்லி என்ற அடல்ட் காமெடித் திரைப்படம் சக்கை போடு போட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப்படம் தமிழில் பெரிய பேனரில் சேட்டை என்று ரீமேக் செய்யப்பட்டது. இதில் இதுவரையிலான அஞ்சலியை முழுதாக மாற்றி ஆங்கிலப் பத்திரிக்கையின் நிருபராக நடிக்க வைத்திருப்பார்கள். குடும்ப பாங்கான, விளிம்புநிலைக் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த அஞ்சலிக்கு இந்தப்படத்தில் முற்றிலும் நேர்மாறான மாடர்ன் கதாபாத்திரம். உடல் மொழியில் அத்தனை மாற்றங்களை அசாத்தியமாகக் கொண்டு வந்திருப்பார். வழக்கமாய் எல்லாப் படங்களுக்கும் சொந்தக் குரலிலேயே பேசும் அஞ்சலி இந்தப்படத்தில் டப்பிங் பேசியிருக்க மாட்டார். தீபா வெங்கட் அஞ்சலிக்குக் குரல் கொடுத்திருந்தார். கொஞ்சங் கூட புதுக்குரல் துருத்தித் தெரியாது. காரணம் அஞ்சலி தன் நடிப்பால் அனைத்தையும் ஈடு கட்டியிருப்பார். சாதாரண கதாபாத்திரங்களைக் கூட பிரகாசிக்கச் செய்கிற திறமை அஞ்சலிக்கு இருந்தது. ஆம்... கண்களிலேயே நடிப்பைக் கடத்துவார். இன்றைக்கு கேமராவை நேருக்கு நேர் பார்த்து க்ளோஸப் ஷாட்டில் அழும் கதாநாயகிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நடிகைகளில் சோனியா அகர்வாலைக் கவனித்தால் அவர் கண்களில் ஒரு மெல்லிய சோகம் தெரியும். ஜஸ்ட் லைக் தட்... நடித்துவிட்டுப் போவார். அந்த சோகம் அஞ்சலியின் கண்களிலும் இருக்கிறது. எவ்வளவு அழுத்தமான கதாபாத்திரங்களையும் ஏன்... படத்தையே தூக்கி நிறுத்துகிற பாத்திரங்களைத் தாங்கும் திறமை கொண்டவர் அஞ்சலி. இந்த இடைப்பட்ட நேரத்தில் அஞ்சலிக்குத் தெலுங்கு சினிமாவில் ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் அடித்ததைச் சொல்லியே ஆக வேண்டும். ஃபோட்டோ, பிரேமலேகா ராசா படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையை விட்டுத் தள்ளியே இருந்தார் அஞ்சலி. அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களெல்லாம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கே பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும் நேரடியாக எந்தத் தெலுங்குப் படத்திலும் அஞ்சலி நடிக்கவில்லை. இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன் தம்பிகளாக நடிக்க "சீதம்மா வகிட்லோ ஸ்ரீமலே செட்டு" என்ற படத்தின் அறிவிப்பு வெளி வருகிறது. இந்தப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி விட வெங்கடேஷ் ஜோடியாக டைட்டில் ரோலில் நடிக்க அனுஷ்கா, பூமிகா, சினேகா உள்ளிட்ட எந்த நடிகையும் முன்வரவில்லை. காரணம், வெங்கடேஷ் ஜோடியாக நடித்தால் மகேஷ்பாபுவுக்கு அண்ணியாகி விடுவோம் என்று அனைவரும் ஒதுங்கினர். அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டு ஓரிரு நாள் நடித்து பிறகு படத்திலிருந்து வெளியேறினார். இறுதியாக அந்த வாய்ப்பு அஞ்சலிக்குக் கிடைத்தது. அவர் எது பற்றியும் யோசிக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஒரு கொழு கொம்பு போல் பற்றிக்கொண்டு சீதா என்ற அந்தக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படம் 2013 சங்கராந்தி அன்று வெளியாகி ஆந்திர சினிமாவையே வசூலில் மிரளச் செய்தது. எந்தத் தெலுங்கு சினிமா அஞ்சலியை நிராகரித்து ஒதுக்கியதோ அதே தெலுங்கு சினிமா அஞ்சலிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. ஆந்திர ரசகர்கள் அஞ்சலியை இப்போதும் சீதா என்றே அழைக்கிறார்கள். அந்தளவிற்கு அஞ்சலியின் வாழ்நாள் கதாபாத்திரம் சீதா. இந்தப்படத்திற்காக ஆந்திர அரசின் உயர்ந்த விருதான நந்தி விருதை வென்றார். இதன் பிறகு தெலுங்கில் ரவிதேஜாவுடன் பலுபு, மீண்டும் வெங்கடேஷ் உடன் மசாலா... படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அஞ்சலி. இந்த நேரத்தில் அஞ்சலிக்கு சில குடும்பப் பிரச்சினைகள் எழுந்தது. நடிப்பில் தற்காலிக இடைவெளி விழுந்தது. இருப்பினும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட பலுபு, மசாலா படங்களில் நடித்துக் கொடுத்தார். அந்தப்படங்கள் வெளியாகி பலுபு நல்ல வரவேற்பையும் மசாலா சுமாரான வரவேற்பையும் பெற்றது. அதன் பிறகு நடிப்பில் ஓர் இடைவெளி எடுத்துக் கொண்டார் அஞ்சலி. இடையில் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள். அஞ்சலிக்குக் கடுமையான நோய், அரசியல் புள்ளி மருமகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் என ஒவ்வொரு வதந்தியும் ஒவ்வொரு த்ரில்லர் ரகம். தன்னைப் பற்றிய அத்தனை வதந்திகளையும் உடைத்து 2014 ஆம் ஆண்டிலேயே தெலுங்கில் ஒரு மாபெரும் வெற்றிப்படத்துடன் ரீ என்ட்ரி கொடுத்தார் அஞ்சலி. முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட அந்தப்படம் கீதாஞ்சலி. அஞ்சலி முதன்முதலாய் இரட்டை வேடம் ஏற்று நடித்த இந்தப்படம் ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்தது. அஞ்சலி என்ற ஒற்றை முகமே இந்தப்படத்தின் அடையாளம். ஏற்கனவே சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லே செட்டு படத்திற்காக ஆந்திர அரசின் மிக உயரிய விருதான நந்தி விருதை வென்றிருந்த அஞ்சலி மீண்டும் இந்தப்படத்துக்காக 2014ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார். இடையில் தமிழ்ப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த அஞ்சலி முதல்முறையாக சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்கு இந்தப் பாடலும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. இதனிடையே ஹோங்கனஸ் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் கன்னட சினிமா ஒன்றில் நடித்தார் அஞ்சலி. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த ராணா விக்ரமா தான் அந்தப்படம். நிகழ்காலத்தையும் வரலாற்றையும் இணைத்துச் செய்யப்பட்ட கதையம்சம் கொண்ட படம் அது. அதில் நிகழ்கால கதாநாயகியாக அதா ஷர்மாவும் வரலாற்று போர்ஷன்களில் அஞ்சலியும் நாயகியாக நடித்தார்கள். வழக்கம் போலவே அஞ்சலியின் கதாபாத்திரம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஹைலைட்டாக அந்த பீரியட் காட்சிகளும் அதிலிருந்த அஞ்சலியின் கதாபாத்திர வடிவமைப்பும் இடம் பிடித்தது. படத்தின் அறிமுகக் காட்சியில் வாள் சண்டை போடுவார் அஞ்சலி. இதற்காக முறைப்படி அவர் வாள் சண்டை கற்றுக் கொண்டார். தெலுங்கைப் போலவே கன்னட சினிமாவிலும் அழுத்தமாகத் தன் வெற்றியைப் பதிவு செய்தார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு "சகலகலா வல்லவன்" வெளியானது. கருங்காலி படத்துக்குப் பிறகு அஞ்சலி தேர்வு செய்த தவறான படம் இது. படமும் சரி. அஞ்சலியின் பாத்திரமும் சரி. அரைகுறையாய் அமைந்தது. கீதாஞ்சலி மூலம் தெலுங்கில் தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த கதாசிரியர் கோனாவெங்கட்டின் "சங்கராபரணம்" படத்தில் பெண் ரவுடியாக ஒரு சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி. படத்தில் அஞ்சலியின் உடை, உடல் மொழி என அத்தனையையும் அவ்வளவு மெனக்கெட்டு மாற்றியிருப்பார்கள். படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டில் ரவுடி பேபியாக அஞ்சலி அதகளம் செய்திருப்பார். ஒரு நடிகை ஒரே காலகட்டத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை வெவ்வேறு உடல் மொழிகளில் நடிப்பது என்பது மிகவும் ஆச்சர்யம் நிறைந்தது அல்லவா? அஞ்சலி அப்படியான ஒரு நடிகை. சிங்கம் 2 படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் "சரைனொடு" என்ற படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ஒரு பாடலுக்கு ஆடினார் அஞ்சலி. யூ ட்யூப்பில் இந்தப் பாடலின் காணொளி கோடி பார்வைகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. பிறகு தமிழில் மாப்ள சிங்கம் என்ற டீசண்டான காமெடி படம் ஒன்றில் நடித்தார் அஞ்சலி. தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு விமல் ஜோடியாக மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் நடித்தார். படம் ஓரளவுக்கு நன்றாக இருந்த போதிலும் ஆவரேஜான வெற்றியையே பதிவு செய்தது. காரணம் படம் வெளியாகும் ஒரு வாரம் முன்பு இந்தப்படத்தின் சென்ஸார் பிரிண்ட் முழுவதுமாக இணையத்தில் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதனிடையே தெலுங்கில் கோனாவெங்கட்டின் எழுத்தில் மீண்டும் நாயகியாக பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் அஞ்சலி. டிக்டேட்டர் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அங்கே கமர்ஷியலாய் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களில் அஞ்சலி நடனத்தில் பின்னியிருப்பார். இப்போது மீண்டும் தமிழ். யெஸ். இந்த முறை தமிழில் அஞ்சலிக்கு உண்மையான கம்பேக் கிடைத்தது என்றே சொல்லலாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படம் வெளியானது. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாய் நடித்திருந்தார் அஞ்சலி. மல்ட்டி ஸ்டார் படமான இதில் நடிப்பில் அத்தனை நடிகர்களுக்கும் சவாலாய் விளங்கினார் அஞ்சலி. படத்தில் எமோஷனலான நிறைய காட்சிகளில் உணர்வுகளை அவ்வளவு நுணுக்கமாக வெளிப்படுத்தி நடிப்புத் தாண்டவமே ஆடினார். இந்தளவுக்கு நடிப்பு தேவைப்பட்டதாலேயே அஞ்சலியை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தேன் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ஆம். அஞ்சலி இயக்குனர்களின் கதாநாயகி. கீதாஞ்சலி படத்தை அடுத்து தெலுங்கில் மீண்டும் நாயகியை மையமாக வைத்துத் தயாரான "சித்ரங்கதா" படத்தின் மையப் பாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி. 2017 ல் வெளியான இந்தப்படம் மிக வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டது. உளவியல் பிரச்னைகளை த்ரில்லர் பாணியில் பேசிய இந்தப்படத்தில் நடிகைகள் யாருமே ஏற்கத் தயங்குகிற சிக்கலான ஒரு கேரக்டரை ஏற்றிருந்தார் அஞ்சலி. கிட்டத்தட்ட லெஸ்பியனை ஒத்த அந்த சித்ரங்கதா கதாபாத்திரமானது குழப்பம், பெருங்கோபம், சோகம், வியப்பு எனப் பல்வேறு உணர்வுகளை படம் நெடுகிலும் வெளிப்படுத்த வேண்டும். படத்தின் அத்தனை காட்சிகளிலும் நடிப்பின் எல்லைகளைத் தொட்டார் அஞ்சலி. முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரான இந்தப்படத்தில் இதுவரை பார்க்காத அஞ்சலியைப் பார்க்கலாம். படம் முழுக்க மாடர்ன் உடைகளை அணிந்து நடித்திருப்பார். அஞ்சலி பன்முகத்திறமை கொண்ட ஒரு நடிகை என்பதற்கு இன்னொரு சான்றும் இந்தப்படத்தில் இருந்தது. இந்தப்படத்தில் செல்வகணேஷ் இசையில் அஞ்சலி அறிமுகப் பாடல் ஒன்றையும் பாடினார். அதே ஆண்டு தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராமின் "தரமணி" படத்தில் வெறும் பத்து நிமிடங்களே வந்து போகும் சிறப்பு வேடத்தை ஏற்றிருந்தார் அஞ்சலி. மிகக் குறுகிய நேரமே என்றாலும் அந்தப்படத்தின் எல்லா ஊடக விமர்சனங்களிலும் அஞ்சலியின் பெயர் இடம்பெற்றிருந்தது. சௌம்யா என்ற அந்த கதாபாத்திரத்திற்கு பத்து நிமிடத்திலேயே உயிரூட்டிச் சென்றிருந்தார் நவீன சாவித்திரி. எங்கேயும் எப்போதும் படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஜெய் அஞ்சலி ஜோடி "பலூன்" படத்தில் இணைந்தது. ஹாரர் காமெடி வகையில் அமைந்த இந்தப்படம் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. படத்தில் யோகிபாபுவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. அஞ்சலி எப்போதும் புதுமையை விரும்பும் ஒரு நடிகை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் 2018ல் அஞ்சலி நடிப்பில் வெளியான மலையாளப்படம் "ரோசாப்பூ". படத்தில் ஆபாசப்பட நடிகை கதாபாத்திரத்தில் அஞ்சலி துணிச்சலாக நடித்திருப்பார். போகப்போக அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை எப்படி மாறுகிறது என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப்படத்தை ப்ளாக் காமெடி ஃப்ளேவரில் கொடுத்திருப்பார்கள்.
விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி நடித்த காளி இதே ஆண்டு வெளிவந்தது. அஞ்சலிக்கு இந்தப்படம் பெரிதாய் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. நீண்ட நாள் கழித்து அஞ்சலிக்கு பெயர் சொல்லும் படியான ஒரு படம் 2019 ல் வெளிவந்தது. படம் : பேரன்பு. இயக்குனர் ராம் மூன்றாவது முறையாக அஞ்சலிக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார். படத்தில் விஜயலெட்சுமி என்ற கேரக்டரில் மம்முட்டிக்கு ஈடு கொடுத்து அஞ்சலி அண்டர்ப்ளே செய்திருப்பார். "எதுக்காக பண்ணோம்னு கேட்டுப் போங்க ஸார்..." என்ற காட்சி ஒரு சோறு பதம். நெதர்லாந்தின் ராட்டர்டேம் படவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 200 படங்கள் திரையிடப்பட்டது. அதில் தேர்வான 20 படங்களில் பேரன்பு படமும் இடம்பெற்றது. மேலும் கோவா உள்ளிட்ட பட விழாக்களிலும் பேரன்பு திரையிடப்பட்டது. அஞ்சலி நடித்து மிகச் சமீபத்தில் மற்றுமொரு புதிய முயற்சியான இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3D ஹாரர் படம் லிசா வெளியானது. எடுத்துக் கொண்ட கதைக்கரு... நடிகர்கள் தேர்வு என எல்லாம் அபாரமாய் இருந்தும் படம் அழுத்தமில்லாமல் போனது. மகரந்த் தேஷ்பாண்டே, அஞ்சலி ஆகியோர் மிக ஈடுபாட்டோடு நடித்திருந்த போதும் நீண்ட நேரமாய் படத்தை கதையின்றி நகர்த்திவிட்டு கடைசி பத்து நிமிடத்தில் ப்ளாஷ்பேக்கை அவசர அவசரமாகச் சொன்னது ஏமாற்றமாய் இருந்தது ஆனால் அந்த ப்ளாஷ்பேக் இதுவரை யாரும் தொடாதது. திரைக்கதையை மட்டும் செழுமைப்படுத்தி இருந்தால் லிசா மிக முக்கியப் படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும். இதுவரைக்குமான அஞ்சலியின் திரையுலக பயணம் வெற்றி தோல்விகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது ஆனால் வெற்றி தோல்விகளை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் அஞ்சலி சமகாலத்தின் தனித்துவமிக்க சிறந்த நடிகை என்பது புரியும். இன்றைய நடிகைகளில் தான் நடிக்கிற எல்லாப் படத்துக்கும் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசுகிற ஒரே நடிகை அஞ்சலி. டப்பிங்கில்தான் நடிப்புக்கலை முழுமை அடையும் என்பது எத்தனை உண்மை. விளிம்பு நிலைக் கதாபாத்திரம், கமர்ஷியல் நாயகி என எந்தக் கேரக்டருக்கும் பொருந்தக் கூடியவர் அஞ்சலி ஆனால் இன்னமும் அஞ்சலியின் நடிப்புத் திறனுக்கேற்ற பாத்திரங்களை எழுதும் இயக்குனர்கள் இங்கே குறைவு. திரையுலகம் இன்னமும் அவரின் திறமையை நன்றாகப் பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஒரு நடிகை எந்த ஸ்டார் நடிகர்களோடும் நடிக்காமல் பத்து வருடங்களுக்கும் மேல் திரையிலகில் நாயகியாக நீடித்திருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ராம் சொல்வது மாதிரி அதற்கு நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அஞ்சலி மாதிரி நடிகைகள் திரையுலகில் அபூர்வம்தான். அஞ்சலி நடித்து திரைக்கு வரவிருக்கிற படங்களான நாடோடிகள் 2, சிந்துபாத், சைலன்ஸ், ஒ, கீதாஞ்சலி 2, ஆனந்த பைரவி, அருள் நிதி, சீனுராமசாமி இணையும் படம்... என அத்தனை படங்களும் பெரு வெற்றி அடைய வாழ்த்துவோம். அவரின் தேசிய விருதுக் கனவும் நனவாகட்டும். மௌனம் என்னிலிருந்து
அதைச் சிதையாமல் எடுக்கப் பார்க்கிறேன். அடுத்தொருவர் சொல்பட்டு உடைவதற்கு முன்பு அதைக் கவனமுடன் கழற்ற வேண்டும் நான். ஒருவர்க்கும் அதன் மென்மையை அறியவோ உணரவோ திராணியில்லை. பூவினும் பஞ்சினும் இறகினும் நுரையினும் மெல்லிய அதன் மென்மையோ அலாதி சுகம் நிறைந்தது. என்னிடமிருந்து வேரொருவரின் கைமாற்றிடவும் மனம்மாற்றிடவும் விருப்பமில்லை எனக்கு. யாரோவொருவரால் எனக்குச் சொந்தமாக்கப் பட்டிருக்கிறது இந்த மௌனம். அதைக் கையாள்வதென்பது சற்று சிரமமெனினும் அது உடனிருக்கும் தனிமைப் பிடிகள் எல்லையில்லாப் பேரானந்த தருணங்கள். தலைப்பு : பறவையின் வாசனை ஆசிரியர் : கமலாதாஸ் பதிப்பகம் : காலச்சுவடு தலைப்பு : பறவையின் வாசனை ஆசிரியர் : கமலாதாஸ் பதிப்பகம் : காலச்சுவடு 1953 ~1984 வரை அவர் எழுதிய 140 கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின் உச்சத்தைத் தொட்ட அவரது படைப்புகளின் ஒட்டுமொத்த சித்திரத்தை முன்வைக்கும் 16 சிறுகதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. (இக்கதைகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நிர்மால்யா அவர்களின் குறிப்பிலிருந்து) ஒன்றைப் போல் ஒன்றில்லாத கதைகள் சிலவும், ஒரு கதையின் நீட்சியெனத் தோன்றும் சில கதைகளும் என பதினாறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளை மையமாகக் கொண்டவை. அவற்றை படிப்பவருக்கும் கடத்தும் திறம் கொண்ட சொற்களால் பின்னப்பட்ட கதைகள். எனக்கு "என் கதை" வாசிப்பனுபவம் கொண்ட காரணத்தினால் பல கதைகள் அவரின் வாழ்வின் ஒரு விள்ளல் என்றே தோன்றுகிறது. சிலவற்றை சராசரியான மனநிலையோடும் சிலவற்றை அசராசரி மன உணர்வுடனும் எழுதியிருக்க வேண்டுமெனவும் நினைத்துக் கொள்கிறேன். எவ்விதமாய் புரிந்து கொள்வது என லேசான மனமயக்கம் தரும் புதிர் தன்மையோடு படைக்கப்பட்ட சில கதைகள் மீள் வாசிப்பில் வசப்படக்கூடும். பெரும்பாலான கதைகளில் மையப் பாத்திரமான அந்தப் பெண்ணிற்கு பெயரில்லை. எது நிகழ் (reality), எது மாயத் தோற்றம் (hallucination) என குழப்பம் கொள்ளும் அப்பெண்ணைப் போலவே வாசகரும் உணரக்கூடும். Logical/Illogical என அறிவு செய்யும் தர்க்கங்களையும் மீறி ஆசிரியரின் சொல்லாடல்களில் சொக்கித்தான் போகிறது மனசு. அடிநாதமாய் இருக்கும் புனைவுத் தன்மையற்றமையின் ஒரு இழை வார்த்தைகளுக்குத் தனித்த வசீகரத்தை அளித்து மிளிர வைக்கிறதென நான் நம்புகிறேன். * காரில் ஏறி அமர்ந்தவுடன் உதிராத கண்ணீர்த் துளிகள் அவரது கண்களை வேதனைப்படுத்தின _என படிக்கும் போதே நெகிழ்ந்து நம் கண்கள் வேர்த்துப் போகுமளவிற்கு வீர்யம் – துரோகம்
* பயம் அவளது நெஞ்சில் ஒரு பறவையைப் போல படபடத்தது (மலைச்சரிவுகளில்) * ஞாபகங்கள் நைந்த கண்ணிகளாக இருந்தன. நான் உலகத்தின் கலங்கிய கண்ணில் ஒரு தூசியைப் போல நகர்ந்து கொண்டிருந்தேன் – வெளவால்கள் பறக்கும் போது * தேன் குடிப்பதைப் போல சொட்டு சொட்டாக கண்களைத் திறந்தாள் – நீர் மாதுளையின் பூக்கள் * பாம்புகள் சட்டையுரிப்பதைப் போல அனாயசமாக அவள் அம்மிணி என்கிற பெயரைக் கைவிட்டாள் (கல்யாணி) இப்படியாக வசியக் கண்ணியென வார்த்தைகள் அங்கங்கே நிரவிக்கிடக்கின்றன. "பொய்கள்," "துரோகம்", "வெளியேற்றம்" ஆகிய தலைப்பிட்ட கதைகளில் வேறு வேறு ஆண்கள், வேறு வேறு பின்னணி, வேறு வேறு உரையாடல்கள், வேறு வேறு கதைகள்... ஆனால் மனைவிக்கு கணவனால் அளிக்கப்படும் ஒரே துரோகம். எத்தனை முயன்றாலும் வார்த்தைகள் ஒரு பூரண அனுபவத்தை கடத்திட முடிவதில்லை என்றே உணர்கிறேன். அதனை நீங்களே வாசித்து துய்க்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என நண்பரும் நானும் திட்டமிட்டோம். அதிகாலை யானை தான் சன்னிதானத்தைத் திறக்கும் என்று நண்பர் திருத்தலம் பற்றி சொன்னது ஆவலை அதிகப்படுத்தியது. இரு சக்கர வாகனத்தில் மெட்ராஸில் இருந்து செல்ல முடிவானது.
காலை நான்கு மணிக்குப் புறப்பட்டு கோயிலுக்குப் போய் பெருமாளை தரிசித்து திரும்பி வரும் போது உணவு முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது என ஏற்பாடு. என்ன கணக்கு நாம் போட்டாலும் அவள்(ன்) கணக்கு வேறல்லவா? காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோது மணி ஐந்தரை. ஏழு மணியளவில் கோயிலுக்குப் போனால் அங்கு நடை திறக்கவில்லை. கோயிலுக்கு சம்பந்தமுடைய நபர் ஒருவர் இறந்துவிட்டதால் மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப்படும் என்று சொல்லிவிட்டார்கள். அருகே உள்ள வேறு இரு பெருமாள் சந்நிதிகளுக்கு செல்ல முடிவெடுத்தோம். முதலில் சென்றது மதுரமங்கலம் கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில் (எம்பார் கோயில்) இந்த புண்ணிய ஸ்தல வரலாறு குறித்து பிறிதொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன். காலை நைவேத்தியம் மற்றும் பூஜை நடக்கும் நேரம். அமைதியான கோயில். கிணற்றில் ஒரு சொம்பை உள்ளே விட்டு நீரை எடுத்து குடிக்கலாம். தண்ணீர் ஸ்படிகம் போல் சுத்தமாக இருந்தது. நைவேத்தியம், ஆராதனை முடித்து பெருமாளையும், தாயாரையும் சேவித்து பட்டருடன் அரை மணித்தியாலத்திற்கு பேசி அடுத்து இடையார் பாக்கத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத வைகுண்ட ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். இருவருக்கும் தெரிந்த நண்பர் வேறு அங்கிருக்க நிதானமாக மனம் குளிர பெருமாளை தரிசித்தோம். மதியம் அங்கிருந்து புறப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்றோம். நடை திறந்திருந்தது. மதிய நைவேத்தியம் அமர்க்களமாக நடந்தது. தாயார், பெருமாள் (விஸ்வரூப தரிசனம்) & ராமானுஜர் என தரிசனம் தந்த மன திருப்தி எங்கும் கிடைக்காத ஒன்று. பிரசாத தீர்த்தம் பருகி கோயில் பிரகாரத்தை வலம் வந்து முடிக்கும் போது நடை சாத்தும் முஸ்தீபுகளை ஆலயப் பணியாளர்கள் மேற்கொள்ளத் துவங்கி இருந்தார்கள். “காலைல திட்டப்படி வெள்ளன வந்திருந்தாலும் யானை கதவை திறந்து பக்தர்கள் உள்ள தரிசனத்துக்கு போவதை பார்த்திருக்க முடியாது. என்னமோ நமக்கு கொடுப்பினை இல்லை. பெருமாள் புண்ணியத்துல தரிசனம் கிடைச்சுதே” என்று நண்பர் அங்கலாய்த்தார். வெளியே இரு சக்கர வாகனத்திற்கு அருகே வைத்திருந்த காலணிகளை அணியும் போது தான் ஒரு நிகழ்வைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த அனுபவம் கிடைத்தது. ஒரு பெண்மணி புஷ்பங்கள், மாலைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் கையில் பெரிய கனமான துணிப் பையை சுமந்தபடி வந்தார். அவர் மனைவியும், மகனும். உடன் இருந்தனர். அவரைப் பார்த்து புஷ்ப பெண் சிரித்தார். அந்தப் பெண்மணியிடம் வந்து “என்ன வேணும்?” என்று மனிதர் சிரித்தபடி கேட்டார். “எப்பவும் தரதையே தாங்க சார்” பையில் இருந்து ஒரு பெரிய பொட்டலம் அந்தப் பெண்ணின் கைகளை வந்தடைந்தது. அடுத்து அந்த மனிதர் அந்தக் கோயிலுக்கு வெளியே யாசகம் கேட்பவர்களாகத் தேடிப் போய் பொட்டலங்களைத் தந்தார். சிலர் உரிமையாக இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க பொட்டலங்களை மாற்றித் தந்தார். பையில் இருந்த அனைத்து பொட்டலங்களையும் தந்து காலி பையை எடுத்துக் கொண்டு புஷ்பப் பெண்ணிடம் வரேன் மா என்று சொல்லிக் கிளம்பினார். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நான் அப்பெண்ணிடம் “யாரும்மா அவர்” என்று விசாரிக்க அவர் பேசத் துவங்கினார். “அவர் இங்க ஹோட்டல் வெச்சுருக்காருங்க” “சைவ உணவகம்னு அம்புக்குறி போட்டு அங்க போர்ட் இருக்கே அதுவா?” “அதே தான் சார்” “அன்ன தானம் செய்யறாரா?” “தினமும் இருபது பாக்கெட் கலவை சாதம் கொண்டு வருவார், அதுல சாம்பார் சாதமோ, லெமன் சாதமோ, தக்காளி சாதமோ இருக்கும். அதோட போரியல், கொஞ்சம் தயிர் சாதம் & ஊறுகாய், நல்லா தாராளமா இருக்கும் சார், சாப்பிடத் திணறும், வயிறு நல்லா நிறையும்” “தினமுமா?” ‘ஆமா சார், எல்லா நாளும் கொண்டு வருவார், ஏதாவது பண்டிகைன்னா ஸ்வீட் இருக்கும், ஒரு நாளைக்கு இருபது பாக்கெட்” அந்தப் பெண் சொல்ல சொல்ல மனம் கணக்கு போட்டது. எதுவும் பேசாமல் நண்பருடன் வண்டியில் புறப்பட்டேன். சிறிது தொலைவு சென்றிருப்போம், அந்த மனிதர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். நண்பரை வாகனத்தை நிறுத்த சொல்லி அந்த மனிதர் அருகே போய் “சார்” என்றேன். அவர் என்னை யோசித்தபடி பார்த்தார். “இப்போ தான் உங்களை கோயில்ல பார்த்தேன், அந்த பூக்காரப் பொண்ணு எல்லாத்தையும் சொன்னாங்க, உங்களைப் பார்த்தா வாழ்த்து சொல்லனும்னு நினைச்சேன், கடவுள் புண்ணியத்துல பார்த்துட்டேன், கிரேட் சார்” “இதுல என்ன சார் இருக்கு, கோயில் பக்கத்துல ஹோட்டல், வியாபாரம் நல்லா நடக்குது, சாமி கும்பிட்டு போறவங்க நிறைய பேர் வந்து சாப்பிடுறாங்க, எல்லாம் பெருமாள் தந்தது, அவர் தந்ததை நான் கொஞ்சம் தரேன், இதென்ன பெரிய விஷயமா?” அவரிடம் விடை பெற்றுக் கிளம்பினேன். யானை... நடை திறப்பு... தாமதமாக மதிய நேரத்தில் தரிசனம்... மனம் எதை எதையோ சிந்தித்தது... ஓம் நமோ நாராயணாய... கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது... வாய் ஏனோ அப்பாடலை முணுமுணுத்தது... |