புரட்டாசி மாத அகல் மின்னிதழில்
மின்னஞ்சல் முகவரி : [email protected] பேரன்புடன் சத்யா GP
0 Comments
சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் புரட்டாசி மாதம் என்கிறோம். புரட்டாசி மாசம் பெருமாளுக்கு உகந்தது... புரட்டாசி மாத வழிபாடு, விரத அனுஷ்டானங்கள் குறித்து பார்ப்போம் : பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்து வழிபாடு செய்வது விசேஷமானது. துளசி இலையினால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்த விஷயம். பச்சரிசி மாவினால் மாவிளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். துளசியும், மாவிளக்கும் பூஜைக்கு படைத்த தேங்காயுமே அன்றைய விரதம் முடிக்க போதுமானது. ஜோதிடக் கணக்கின்படி 6 வது ராசி கன்னி. கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.
கன்னி ராசி என்பதால் இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். பின்னே ஏன் புதனை விட்டு ஏன் சனிக்கிழமைகளில் விரதமிருக்கிறோம் என்பது ஆச்சர்யமாக இருக்கும். அதற்கொரு கதை உண்டு. அதை மற்றொரு தருணத்தில் பார்ப்போம். புரட்டாசி சனி விரத முறை: விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்து நீராடி, பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை சொம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதம் துவங்க வேண்டும். விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ர நாமம் உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும். புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. அதிக ஸ்லோகங்களை பாராயணம் செய்ய இயலாது போனாலும் குறைந்தபட்சம் இந்த முக்கியமான ஸ்லோகத்தை தவறாமல் சொல்லி கோவிந்தனை துதிக்க வேண்டும். பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பொருள் : துதி கோவிந்தனை, துதிகோவிந்தனை , துதி கோவிந்தனே, மூட மனமே! கதவினைக்காலன் தட்டிடும் நேரம் உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம்? துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, மூட மனமே! புரட்டாசி மாத விரதம் இருந்து பெருமாளை சேவிப்பவர்கள் இவ்வருடமும் தொடர்ந்து அப்புனிதப் பணியைத் தொடருங்கள். இதுவரை முயற்சிக்காதவர்கள் இவ்வருடம் முதல் விநாயகரை வணங்கி பிள்ளையார் சுழி போட்டு மங்களகரமான நற்செயலைத் துவக்குவது போல் இனிதே விரத வழிபாடைத் துவக்குங்கள். ஓம் நமோ நாராயணா ஜகதலப்ரதாபன் முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப்படம் வந்தால் அதைக் கிராமங்களில் விளம்பரப் படுத்துவதற்கு மாட்டு வண்டில்களைப் பயன்படுத்துவார்கள். வண்டிலின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில் எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர் ராஜகுமாரியோ, எம்.எஸ். சுப்புலட்சுமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சியளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி வண்டில் கிராமத்து ஒழுங்கைகளில் ஓடும். அப்படி ஓடும்போது விளம்பரத்துண்டுகளை அள்ளி வீசுவார்கள். வாழ்நாள் முழுக்க இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல நானும் தம்பியும் பாய்ந்து புழுதியில் விழுந்து புரண்டு அந்த துண்டுகளை பொறுக்குவோம். முன்னொரு அதே காலத்தில் எங்கள் வீட்டில் பெரிய அண்ணரும் சின்ன அண்ணரும் அடிக்கடி சண்டை போட்டார்கள். பெரிய அண்ணர் எம்.கே.டி பாகவதர் பக்தர். அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருந்தார். சில படங்களை பல தடவை. சின்ன அண்ணர் பி.யு. சின்னப்பா பக்கம். அவருடைய முழுப் பாடல்களையும் மனப்பாடம் செய்திருந்தார்; பாடவும் செய்வார். எம்.கே.டியின் ஒரு பாடலைக்கூட பாடமாட்டார். அப்படி ஒரு வன்மம். எங்கள் ஊர் கடையொன்றின் கிராமபோன் பெட்டியில் தியாகராஜ பாகவதரின் பாட்டுக்களை வைப்பார்கள். என்னுடைய பெரிய அண்ணர் குழாய்க்குள் தலையை விட்டு பாட்டுக்களை கேட்பார். கடைக்காரர் பி.யு.சின்னப்பா பாடல்களையும் போடுவார். அப்போது இரண்டாவது அண்ணர் விழுந்தடித்து கடைக்கு ஓடுவார். நானும் தம்பியும் சிலசமயம் பெரிய அண்ணர் பக்கமும் சிலசமயம் சின்ன அண்ணர் பக்கமும் சாய்ந்து அவர்களை மகிழ்விப்போம். சினிமா என்கிற சமாச்சாரத்தை நாங்கள் பார்த்தது கிடையாது. பெரிய அண்ணரும் சின்ன அண்ணரும் தாங்கள் பார்த்த படக்கதைகளை அளக்கும்போது நாங்கள் ஒரு கற்பனை உலகை சிருஷ்டித்து அதற்குள் மூழ்கிக்கிடப்போம்.
ஜகதலப்ரதாபன் விளம்பரத் துண்டுகளை பொறுக்கிய நாளிலிருந்து எனக்கும் தம்பிக்கும் எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை பெருகத் தொடங்கியது. அந்த ஆசை இன்னும் தங்கச்சிக்கு வரவில்லை. பிறந்ததிலிருந்து அவள் நோஞ்சானாக இருந்தாள். உடம்பில் எந்தப் பகுதியை தொட்டாலும் அங்கே ஒரு எலும்பு இருக்கும். சிரித்து விளையாடுவாள், திடீரென்று படுத்துவிடுவாள். பெலன் காணாது என்று பரியாரியார் சொல்லி ஓர் ஆடும் குட்டியும் அவளுக்காக வாங்கி வீட்டில் விட்டார்கள். அவள் ஆட்டுப்பால்தான் குடிப்பாள். ஆட்டிலும் பார்க்க ஆட்டுக்குட்டிதான் அவள் ஆரோக்கியமாக வளர்வதற்கு காரணம். ஆட்டுக்குட்டிக்கு செங்கமலம் என்று பெயர். தங்கச்சி 'செங்கி, செங்கி' என்று கத்துவாள், அது துள்ளினால்தான் வாயை திறப்பாள். அம்மா ஒரு வாய் தீத்தி விடுவார். இப்படித் தங்கச்சி தேறி வந்தாள். ஒருநாள் நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்தோம். அது பள்ளி விடுமுறை நாளாக இருந்ததால் தங்கச்சி நடுவிலே நின்று எல்லோருக்கும் விளையாட்டுக் காட்டினாள். ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ஒருவரைச் சுற்றித்தான் அது இயங்கிக்கொண்டிருக்கும். எங்கள் வீட்டில் அது தங்கச்சிதான். இடுப்பிலே கைகளை வைத்து, இரண்டு வயதுப் பின்னல் எழும்பி எழும்பி அதே இடத்தில் விழ, அவள் ஆட நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த நேரம் கதவை யாரோ தட்டினார்கள். “நில், நில்” என்று வீட்டிலிருந்த அத்தனை பேரும் கத்த கத்த குடுகுடுவென்று ஓடிச்சென்று நாதாங்கியை இழுத்து கதவை திறந்துவிட்டாள் என் தங்கச்சி. கதவை திறக்க அவளால் முடியும் என்பது முதல் ஆச்சரியம். வாசலில் நின்ற அந்த பெண்மணியை பார்த்தது எங்களுக்கு இரண்டாவது ஆச்சரியம். எங்கள் ஊர் பணக்காரருடைய மனைவி அவர். அம்மாவைக் கண்டால் பல்லுக் கொதி வந்தமாதிரி முகத்தை மாற்றிவிடுவார். அம்மாவுக்கு அவரைப் பிடிக்காது. சாதாரணமாக எங்கள் வீடுகளுக்கெல்லாம் அவர் வரமாட்டார். அன்றைக்கு மஞ்சள் சேலை உடுத்தி, தலை மொட்டையடித்து பெரிய பொட்டு வைத்து வாயை திறந்து ஒன்றுமே பேசாமல் சேலை மடியை விரித்து பிடித்துக்கொண்டு நின்றது துயரமான காட்சி. அம்மா உள்ளே வரும்படி உபசாரத்துக்கு அழைத்தும் அவர் ஒரு சொல் சொல்லாமல் அசையாது நின்றார். நத்தை ஊர்ந்த தடம் போல முகத்திலே கண்ணீர் காய்ந்த கோடு. அம்மா உள்ளே போய் ஒரு கைப்பிடி அரிசி கொண்டுவந்து அவர் மடியில் போட்டார். தலையை ஆட்டிவிட்டு அவர் அடுத்த வீட்டுக்கு புறப்பட்டார். அம்மா அவர் மடிப்பிச்சை எடுக்கிறார் என்று சொன்னார். ஏழு வீடுகளுக்கு போய் பிச்சை எடுத்து கஞ்சி காய்ச்சி குடிப்பார். அது மிகத் தீவிரமான நேர்த்திக்கடன். ஊரிலே நெருப்புக் காய்ச்சல் பரவி வந்த நேரம் அது. அவர்களுடைய ஒரே மகனுக்கு நெருப்புக் காய்ச்சல் கண்டு அவன் படுத்த படுக்கையாக கிடந்தான். அதற்காகத்தான் விரதம் என்றார் அம்மா. அதன் பிறகு அவர் சொன்னதுதான் எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. “அவர்கள் வீட்டிலே மூட்டை மூட்டையாக அரிசி அடுக்கி வைத்திருக்கு. மடிப்பிச்சை எடுக்கிறது எவ்வளவு வெட்கக்கேடு” அம்மாவின் வாயிலிருந்து இப்படியான வார்த்தைகள் எப்படி வந்தன என்றே தெரியவில்லை. இரண்டு நாள் கழித்து அழுது கொண்டே அம்மா அவர்கள் சாவீட்டுக்கு போனார்; அழுது கொண்டே திரும்பி வந்தார். அப்படியும் அவருக்கு அழுகை முடிவடையவில்லை. பி.யு.சின்னப்பா நடித்த ஜகதலப்ரதாபன் படம் விண்ட்சர் தியேட்டரில் ஆறு மாதம் ஓடிவிட்டது. அந்தப் படத்தை பார்க்காமல் வாழ்வதில் ஒருவித பிரயோசனமும் இல்லை என்பது என்னுடைய இரண்டாவது அண்ணரின் முடிவான எண்ணம். அம்மாவிடம் போய் 'படத்தை மாத்தப் போறாங்கள். படம் மாறினால் பின்னர் பார்க்கவே முடியாது' என்றெல்லாம் கெஞ்சினார். நாங்களும் 'முன்வீட்டு மாமி எங்களுக்கு அம்மாவாக பிறந்திருக்கலாம் அல்லது பக்கத்து வீட்டு அக்கா அம்மாவாகப் பிறந்திருக்கலாம்' என்றெல்லாம் சொல்லி அம்மாவின் ஆத்திரத்தை கூட்டினோம். கடைசியில் சின்ன அண்ணர் சொன்னதைக் கேட்ட அம்மாவின் வாய் அப்படியே பிளந்துபோய் நின்றது. 'நான் வயித்திலே இருந்த போது நீங்கள் என்னைக் கரைக்கப் பார்த்தது எனக்கு தெரியும். நான் பிறந்திருக்கவே கூடாது. என்னிலே உங்களுக்கு பட்சமே இல்லை' என்றார். அது வேலை செய்தது. அம்மா ஒருவரும் எதிர்பாராத காரியம் ஒன்று செய்தார். தங்கச்சியின் ஆட்டுக்குட்டியை முன்பின் யோசிக்காமல் விலைபேசி விற்றார். படத்துக்கு அளவான காசை பெரிய அண்ணரிடம் எண்ணிக் கொடுத்து எங்களை பட்டினத்துக்கு கூட்டிப்போய் படத்தைக் காட்டிவிட்டு வரச்சொன்னார். அதுதான் நானும் தம்பியும் பார்க்கப்போகும் முதல் படம். நாங்கள் தியேட்டருக்கு கிட்டத்தட்ட பறந்துதான் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஏற்கனவே வரிசை நீண்டுபோய் கிடந்தது. அத்தனை சனங்களும் ஆடுகளை விற்று வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது மலைப்பானது. கேட் திறந்ததுதான் தாமதம் நாங்கள் நின்ற வரிசை மறைந்து புதிதாக வரிசைகள் முளைத்தன. சிலர் ஆட்களுக்கு மேல் ஏறி வந்து டிக்கட் வாங்குவதை அன்றுதான் பார்த்தேன். ஒடுக்கமான வாங்குகளில் முதுகுகளை நேராக்கிக் கொண்டு நெருக்கியடித்தவாறு நாங்கள் உட்கார்ந்தோம். வலது பக்கத்தில் கயிறு கட்டி சிறைக்கூடம் போல செய்து அதற்குள் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். சோடா, சிகரெட், கடலை என்று தோளிலே தொங்கிய பெட்டியிலிருந்து சின்னப் பெடியன்கள் விற்றார்கள். பிரம்மாண்டமான வெள்ளைத் திரை முன்னே இருந்தது. சும்மா அந்த திரையை பார்த்துக்கொண்டு இருப்பதே புளகாங்கிதம் தரக்கூடியது. அத்தனை கண்களும் அதையே பார்த்தன. எங்கே தங்களுக்கு தெரியாமல் படம் ஆரம்பமாகிவிடுமோ என்ற பயத்தில் அடிக்கடி திரையில் ரோர்ச் லைட் அடித்து சோதனை செய்தார்கள். முதல் மணி அடித்து இரண்டாவது மணியும் ஒலித்தபோது விளக்குகள் அணைந்தன. என்னுடைய இருதயம் என்றைக்கும் இல்லாத மாதிரி ஏன் அவ்வளவு வேகமாக அடித்தது என்பது புரியாத புதிர்தான். என் நெஞ்சு எலும்பு தடுத்திருக்காவிட்டால் இருதயம் வெளியே வந்து விழுந்திருக்கும் என்று நான் அப்போது பயந்தேன். இப்பொழுது நினைவில் இருப்பதெல்லாம் பிரமிப்புதான். அன்றைக்கும் இன்றைக்கும் மறக்கமுடியாத ஆச்சரியத்தை தந்தது பி.யு சின்னப்பா பல வேடங்களில் ஒரு காட்சியில் தோன்றியது. அவரே மிருதங்கம், அவரே கடம், அவரே வயலின், அவரே வாய்ப்பாட்டு, அவரே கொன்னக்கோல். சின்ன அண்ணர் சீட்டில் இருக்க முடியாமல் துள்ளினார். நான் என்னை உயரமாக்குவதற்கு என் கை மேலேயே உட்கார்ந்திருந்தேன். அதனால் துள்ளவில்லை. படம் முடிந்த பிறகும் கூட எங்களுக்கு வெளியே போகத் தோன்றவில்லை. சின்ன அண்ணர் பி.யு.சின்னப்பாவின் பாட்டுகளைப்பாட, நாங்கள் ஊரை நோக்கி நடந்தோம். அங்கே எந்த வீதியில் எந்த நாய் என்பது எங்களுக்கு தெரியும். அவைக்கும் எங்களை தெரியும். அவை குலைத்துக்கொண்டே எங்கள் பின்னால் எல்லை முடியும்வரை வந்தன. அதன்பின்னர் அடுத்த நாய் எங்களை தொடர்ந்தது. இப்படியாக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம். அம்மா எங்களுக்காக சோற்றை வைத்துக்கொண்டு காத்திருந்தார். படக்கதையை சின்ன அண்ணர் உணர்ச்சியோடு, ஒரு சொல் மற்றச் சொல்லை இடித்துக்கொண்டு வெளியே வர, சொன்னார். மிதமிஞ்சிய ஆர்வத்தில் உருட்டிய சோற்றை வாய்க்குள் வைக்காமல் கையிலே பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் காட்சியை வர்ணித்தார். சின்ன அண்ணருக்கு ஆகப் பிடித்த சீன் பி.யு சின்னப்பாவின் சாகசங்கள் நிறைந்த வாள்சண்டைகளும், கம்புச்சண்டைகளும்தான். அம்மா 'சோறு காயப்போகுது. முதலில் வாய்க்குள் வை, பிறகு கதையை சொல்லு' என்றார். பெரிய அண்ணர் வாயை திறந்தால் சின்ன அண்ணர் முழுசிப் பார்த்தார். பி.யு.சின்னப்பா அவருக்குத்தான் சொந்தம், அவர்தான் கதையை சொல்லவேண்டும் என்று நினைத்தார். தங்கச்சி நித்திரையாகி விட்டாள் என்று மட்டுமே அம்மா சொன்னார். அவள் 'செங்கி, செங்கி' என்று ஆட்டுக்குட்டியை கேட்டு நீண்ட நேரம் அரற்றியதையும், எவ்வளவு முயன்றும் சாப்பிடாமலே அழுதபடி தூங்கச் சென்றதையும் எங்களுக்கு சொல்லவில்லை. அடுத்தநாளும் தங்கச்சி சாப்பிட மறுத்துவிட்டாள். முதலில் அவள் உடம்பு பொட்டுப்பொட்டாக சிவந்து தடித்தது. அம்மா எண்ணெய் தடவிவிட்டார். கொஞ்சம் காய்ச்சல்தனமாக இருந்ததால் கைமருந்து கொடுத்தார். நாள் செல்லச் செல்ல காய்ச்சல் நிற்காமல் ஏறிக்கொண்டே போனது. பரியாரியாரைக் கூட்டி வந்ததும் அவர் கையை பிடித்து பார்த்துவிட்டு நிமிடம் கூட யோசிக்காமல் நெருப்புக் காய்ச்சல் என்றார். அவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தும் தப்பமுடியவில்லை. வைத்தியர் கொடுத்த குளிசையை முலைப்பாலில் கரைத்து அம்மா பருக்கினார். காய்ச்சல் விடவில்லை, வரவரக் கூடிக்கொண்டே போனது. காய்ச்சலின் உச்சத்தில் தங்கச்சி 'செங்கி, செங்கி' என்று பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடைசிக்கட்டம் அது என்று பேசிக்கொண்டார்கள். பரியாரியார் வந்து கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு இரண்டு நாளைக்கு பிறகுதான் சொல்லலாம் என்றார். பல வருடங்களுக்கு பின்னர் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் ஒரு சித்திரமே வந்து போகும். ஜகதலப்ரதாபன் படத்தில் பௌர்ணமி வெளிச்சத்தில் அரசன் தன் மகன்களைக் கூப்பிட்டு, அப்படியான ஓர் அற்புத இரவில் என்ன செய்யத் தோன்றுகிறது என்று கேட்பான். எல்லா புதல்வர்களும் அரசனுக்கு பிடித்த காரியத்தையே சொல்வார்கள். ஜகதலப்ரதாபன் மாத்திரம் துணிச்சலோடு தான் மஞ்சத்தில் படுத்திருக்க இந்திராணி, நாககுமாரி, அக்னிகுமாரி, வருணகுமாரி ஆகிய நால்வரும் வெண்சாமரம் வீசியும், இசைபாடியும், நடனமாடியும் பணிவிடை செய்து தன்னை மகிழ்விக்கவேண்டும் என்று மன்னனிடம் சொல்வான். அரசன் அவனை துரத்திவிடுவான். இறுதிக் காட்சியில் ஜகதலப்ரதாபன் சொன்னதை செய்து சபதத்தை முடிப்பான். அவனுடைய வெற்றியைப் பார்த்து நாங்கள் மகிழ்ந்திருந்த அதே வேளை எங்கள் தங்கச்சி 'செங்கி, செங்கி' என்று வீட்டிலே கத்தி அழுது கொண்டிருந்திருப்பாள். அன்றிலிருந்து ஜகதலப்ரதாபன் படத்தை எங்கே, எந்தச் சமயத்தில் நினைத்தாலும் என் தங்கச்சியின் நினைவும் சேர்ந்தே வரும். சில நாட்களாக தங்கச்சி படுத்திருக்கும் அறைக்குள் போகக்கூடாது என்பது அம்மாவின் கட்டளை. கயிற்றுக் கட்டிலின் நடுவே அவள் தனியாகப் படுத்துக் கிடந்தாள். எலும்பான உடம்பு என்றபடியால் அவள் கட்டிலில் கிடப்பதே சில வேளை கண்ணுக்கு தெரியாது. நாங்கள் யன்னல் வழியாக வேடிக்கை காட்டுவோம். வீடு நிறைய இருந்த தங்கச்சி படுத்தவுடன் வீடு ஸ்தம்பித்த நிலைக்கு வந்திருந்தது. அவள் படுக்கையில் கிடக்க என் தம்பி நாகலோகத்தில் பேபி கமலா ஆடிய பாம்பு நடனத்தை அப்படியே நெளிந்து நெளிந்து ஆடினான். தங்கச்சி வழக்கத்தில் கைதட்டி விழுந்து விழுந்து சிரிப்பாள். அன்று மெல்ல உதடுகளை அசைத்து தான் சிரிப்பதாகக் காட்டினாள். சில நேரங்களில் அதைக்கூட செய்யாமல், சோர்ந்து போய் தூங்கிவிடுவாள். நாங்கள் ஒவ்வொருவராக படுக்கச் செல்வோம். அம்மா விளக்கை குறைத்துவிட்டு தங்கச்சிக்கு பக்கத்தில் அமர்ந்து கொள்வார். இரவு முழுக்க அப்பாவும் அம்மாவும் தூங்கவில்லை என்றுதான் தோன்றியது. கிரமமாக மருந்து கொடுத்துக்கொண்டும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டும் இருந்தார்கள். அதிகாலையில் சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்ட போது மங்கலாக உருவங்கள் அசைந்தன. ரகஸ்யமான குரலில் பேச்சு நடந்தது. அப்பா கதவுக்கு பக்கத்தில் நிற்பது புகை போல தெரிந்தது. சத்தம் செய்யக்கூடாது என்ற கவனத்துடன் கதவு நாதாங்கி உருவப்பட்டபோது ணங் என்ற மெல்லிய ஒலி எழும்பி வீட்டை நிறைத்தது. கதவை மெள்ளத் திறந்து, மஞ்சள் சேலை உடுத்தி மொட்டையடித்திருந்த என் அம்மா வெளியே போனார். ********************* பாகற்காய் நம் ஊரில் அதிகம் விளையும் காய்களில் ஒன்று. மிதி பாகற்காய் என்று அளவில் பொடிசாக, நீள பாகற்காய் என்று அளவில் பெரிதாக என இரு விதங்களில் காய்த்தாலும் தரும் பலன்களில் வித்தியாசம் இல்லை. நம்மவர்கள் பாவக்காய் என பேச்சு வழக்கில் சொன்னாலும் இந்தக் காய் எந்த பாவத்தையும் செய்வதில்லை. சாப்பிடும் மக்களுக்கு பல நல்ல சங்கதிகளைத் தந்து புண்ணியத்தை தான் சம்பாரிக்கிறது. எனவே இனி நாம் பாவக்காய் என்று சொல்லாது பாகற்காய் என்றே கூப்பிட்டு பழகுவோம். பாகற்காயில் நம் உடலுக்குத் தேவையான அனுகூலங்கள் என்னென்ன இருக்கின்றன என்று பார்ப்போம். பாகற்காயில் கலோரிகள் மிகக் குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையே பட வேண்டாம். 100 கிராம் பாகற்காயில் வேறு பதினேழு என்னும் குறைவான அளவில் தான் கலோரிகள் உள்ளன.
பாகற்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. ஐம்பது கிராம் பாகற்காயில் சுமார் இரண்டு கிராம் என்னும் அளவிற்கு நார்ச்சத்துகள் அடங்கி உள்ளன. நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நார்ச்சதுகளில் சுமார் ஒன்பது விழுக்காடை பாகற்காயை சாப்பிடுவதன் மூலம் பெற முடியும். உடலுக்குத் தேவையான தாதுக்கள் இக்காயில் நிறைவாக காணப்படுகின்றன. நூறு கிராம் எடையுள்ள பாகற்காயில் கால்ஷியம் 19 மில்லி கிராம் என்ற விகிதத்திலும், காப்பர் 0.035 மில்லி கிராம் என்றும், இரும்பு சத்து 0.43 மில்லி கிராம் என்றும், மெக்னீஷியம் 17 மில்லி கிராம் என்றும், மாங்கனீஸ் 0.089 மில்லி கிராம் என்றும், ஜிங்க் 0.80 மில்லி கிராம் என்றும் உள்ளடங்கி இருப்பதால் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்களில் பாகற்காய் முக்கியமானதாகிறது. இயல்பான தாவர ஊட்டச்சத்துகளான ஆல்ஃபா கரோடீன், பீடா கரோடீன் & லூடின் - ஜியாக்சாண்டின் போன்றவை இக்காயில் உள்ளன. லூடின் – ஜியாக்சாண்டின் தனியாக மாத்திரைகளாக கிடைக்கின்றன. ஒரு மாத்திரையின் விலை ரூபாய் பன்னிரெண்டு. பாகற்காயில் கொலஸ்ட்ரால் என்பதே கிடையாது. நூறு கிராம் பாகற்காயில் ப்ரோடீனின் அளவு ஒரு கிராம் என்றும் காணப்படுகின்றன. வைட்டமின்களில் ரிபோஃப்ளாவின், நியாசின், வைட்டமின் – சி, வைட்டமின் – ஏ, பைரிடாக்சின், தியாமின், ஃபோலேட்ஸ் & பேன்தோதேனிக் ஆசிட் போன்றவையும் நமக்குத் தேவையான அளவு நிறைந்திருக்கின்றன. எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லப்படும் சோடியமானது 5 மில்லி கிராம் அளவிற்கும், பொட்டாசியம் 296 மில்லி கிராம் என்ற அளவிற்கும் உள்ளன. பொட்டாசியம் இயல்பிலேயே டை – யூரிடிக்ஸ் என்பதால் சிறுநீர் நன்கு பிரிய பாகற்காய் வழி செய்யும். தாவர ஊட்டச்சத்துகளில் பாலிபெப்டைட் – பி, வித்தியாசமான மருத்துவ குணம் கொண்டது. இதைத் தாவர இன்சுலின் என்கிறார்கள். இது உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சரன்டின் என்று சொல்லப்படும் இரத்தச் சக்கரை குறைப்பு காரணியை பாகற்காய் நன்கு தொகுக்கிறது. டைப் – 2 நீரிழிவு குறைபாட்டில் உள்ளவர்கள் தகுந்த அளவு பாகற்காயை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள க்ளூகோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் தகுந்த அளவு பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றில் உள்ள கருவின் நரம்பு மற்றும் திசுக்களில் எந்தவொரு குறைபாடும் வரமால் காக்க முடியும். இந்த வியத்தகு செயலை பாகற்காயில் உள்ள வைட்டமின் ஃபோலேட்ஸ் செய்கின்றன. வைட்டமின் – சி சத்தானது பாகற்காயில் மிகுந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமான அளவிற்கு அதிகரிக்க உதவுகிறது. ஆல்ஃபா கரோடீன், பீடா கரோடீன், லூடின் - ஜியாக்சாண்டின் போன்ற தாவர ஊட்டச்சத்துகள் போன்றவை கேன்சர் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. மேலும் வயோதிகத்திற்கு காரணமான இயங்கு அயனிகளை கட்டுக்குள் வைத்து தோற்றப் பொலிவுக்கு காரணமாக இருக்கின்றன. பாகற்காயானது தடையற்ற செரிமானத்திற்கும் உடலில் உள்ள தேவையற்ற உணவுக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதால் ஜீரணக் குறைபாடு மற்றும் மலச்சிக்கல் நோய் வராது தடுக்கிறது. டானின், ஃப்ளாவனைட்ஸ் போன்ற பைடோகெமிக்கல் உட்பொருட்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் உடல் நலம் பேண உதவுவதாக சமீபத்திய மேலை நாட்டு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக ஏதாவது நோய் அல்லது குறைபாடிற்காக ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் சில காய் கனிகளை உட்கொள்ளக் கூடாது அவை எதிர்வினை புரியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள் (எளிய உதாரணம் : அகத்திக்கீரை) ஆனால் பாகற்காய் பெரிய அளவில் எந்தவொரு எதிர்வினையும் புரிவதில்லை. இருப்பினும் மருத்துவர்கள் கீழ்காணும் ஆங்கில மருந்துகளை (மாலிக்யூல், பிராண்ட் பெயர் அல்ல) உட்கொள்ளும் போது தற்காலிகமாக பாகற்காயை சாப்பிடாது தவிர்க்கலாம் என்கிறார்கள் அவை :
அறுசுவைகளில் கசப்பும் ஒரு சுவையே! சரிசமவிகித உணவில் கசப்புச்சுவை உணவுப் பதார்த்தங்கள் மிக அவசியம் ஆதலால் வாரம் இருமுறை பாகற்காயை தவறாமல் நம் உணவில் சேர்த்துக் கொள்வோம். சாம்பார், காரக் குழம்பு மட்டுமல்லாது பாகற்காயைக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி மிளகாய்த்தூள், சிறிதளவு மிளகுத்தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நிறைய எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கடுகு தாளித்து சாலட் போல் சாப்பிடலாம். பாகற்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம். கசப்புச் சுவை அதிகம் தெரியக்கூடாது என நினைப்பவர்களுக்கு ஊறுகாய் ஏதுவாக இருக்கும். (தொடரும்) பாகற்காய் குறித்த கட்டுரையைப் படித்த வாசகர்கள் தங்கள் கருத்துகளை, பாகற்காய் குறித்து தங்களுக்குத் தெரிந்த சங்கதிகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். படித்த அகல் மின்னிதழ் வாசகர்களுக்கு நன்றி. அடுத்த மாதம், ஒரு கனி குறித்து விரிவாகப் பார்ப்போம். ஒரு திரைப்படம் மொழி எல்லைகளைக் கடந்து உலகின் வெவ்வேறு கலாச்சார சூழலுக்குள் வாழுகின்ற சகல மக்களின் பொதுவான உணர்வுக்குள் பயணிக்கத் தொடங்குகிறது என்றால் அவற்றை உலக சினிமா எனக் கொள்ளலாம் என்பது என் கருத்து. 2006ல் Kim Rossi Stuart (கிம் ரோஸி ஸ்டூவர்ட்) இயக்கத்தில் வெளிவந்த இத்தாலி நாட்டுத் திரைப்படமான “Along the Ridge” இந்த வகைக்குள் வரும் ஒரு படம். இப்படத்தின் திரைக்கதை பொதுவான ஒரு கருவில் பின்னப்பட்டிருந்தாலும் இந்தியச் சூழலுக்கும் இங்கிருக்கிற குடும்பங்களின் ஒரு முக்கியப் பிரச்சினையையும் மிக ஆழமாகப் பேசுகிறது. தங்களின் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிற ஒரு கணவன் மனைவி அல்லது பெற்றோர்... என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆம் அவர்கள் இரு குழந்தைகளின் தாய் தந்தை. இந்த நான்கு கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இந்த “Along the Ridge” படம் பிரகாசிக்கத் தொடங்குகிறது. இந்தியாவில் மலைபோல் விவாகரத்து வழக்குகள் குவிந்து கிடக்கிறது அல்லவா? அதற்கான காரணிகளை விட்டுவிடுவோம். அவர்களின் குழந்தைகள் அம்மா அல்லது அப்பா யாரேனும் ஒருவர் கவனிப்பில் பந்தாடப்பட, அந்தக் குழந்தைகள் முதிர்ச்சியற்ற நிலையில் இந்த உலகத்தை எவ்விதம் காண்கிறார்கள் என்ற கோணத்தை நாம் யோசித்ததுண்டா? அதற்காக இந்தப்படம் விவாகரத்து பற்றி பேசுகிறது என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம். அப்படியான ஒரு சூழல் படத்தில் நிலவுகிறது. அவ்வளவே. அதாவது, அப்பாவின் அரவணைப்பில் வளரும் 11 வயது சிறுவன் ஒருவனை, அவன் பார்வைக் கோணத்தின் காட்சிகளைப் பிரதானப்படுத்துகிறது படம். ரெனாடோ எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் Kim Rossi Stuart. இவரே இப்படத்தின் இயக்குனர் என்பது இன்னும் சிறப்பு. தன் அடையாளத்தைத் தேடி அடையத் துடிக்கும் பெற்றோர்களாக இப்படத்தில் வரும் ரெனோடா கதாபாத்திரத்தையும், ஸ்டெஃபானியா (Barbora Bobulova) கதாபாத்திரத்தையும் அணுக வேண்டியிருக்கிறது. இவற்றை அவர்களின் பதினொரு வயது மகன் டாமியும் (Alessandro morace) மகள் வயோலாவும் (Marta Nobili) எந்த மாதிரிப் புரிந்து கொள்கிறார்கள்... அவர்கள் குழப்பங்களுக்கான தீர்வை பெற்றவர்களால் தர முடிந்ததா என நீள்கிறது திரைக்கதை. டாமி, வயோலா இருவரும் அப்பாவின் நிழலிலேயே வளர்கிறார்கள். அவர்கள் தேவைகளைப் பார்த்துப் பார்த்து நிறைவேற்றுகிறார் ரெனாடோ. தாய் இல்லாமல் உடைந்த குடும்பத்தின் மென்சோகச் சூழல் அந்த வீடு முழுக்கச் சூழ்ந்திருந்தாலும் ரெனாடோவின் அன்பு அத்தனையையும் துடைத்தெறிகிறது. ரெனாடோ திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். மனதுக்கு நிறைவான வேலை. வாழ்க்கை தென்றல் மாதிரி போய்க் கொண்டிருக்கையில் புயலாய் அந்த வீட்டில் நுழைகிறாள் ஓடிப்போனதாய் சொல்லப்படும் தாய் ஸ்டெஃபானியா. இப்போது இந்தச் சூழலை நன்கு கவனியுங்கள். இந்திய விவாகரத்துச் சம்பவங்களுடன் இதைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்பதாலேயே மேலே அவ்வாறு குறிப்பிட்டேன். அவளிடம் முதலில் வயோலா ஒட்டிக் கொள்கிறாள். அவளை வரவேற்கிறாள். கட்டியணைத்துக் கொள்கிறாள். பெண் பிள்ளைகளின் இயல்பான குணாதிசியங்களின் பிரதிநிதி போல வயோலாவின் பாத்திர வார்ப்பு இருக்கிறது. ரெனாடோ முதலில் கன்னாபின்னாவென்று கோவப்பட்டாலும் பிறகு மனம் மாறுகிறான். பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் சாமியாய் சிந்திக்கிறான். அவளை ஏற்றுக் கொள்கிறான். இங்குதான் டாமியின் கதாபாத்திரம் மற்ற பாத்திரங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது. படம் அவனைத்தான் குவியப்படுத்துகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அம்மாவிடம் ஒட்ட மறுக்கிறான். அமைதியாய் வெறித்துப் பார்க்கிறான். பதினோரு வயதுக்கான உற்சாகமோ துள்ளலோ அவனிடம் இல்லை ஆனால் புத்திசாலி. தனக்கான ஒரு உலகை சிருஷ்டித்துக் கொண்டு கொண்டு அதில் ஜீவிக்கிறான். அந்த வீட்டில் அவனுக்கென்று தனிமையான ஒரு பகுதியை அவனே தேர்ந்தெடுக்கிறான். அங்கிருந்து காணும் காட்சிகள் அவனுக்கு ஆசுவாசமாக இருக்கிறது என்பதை அவன் சொல்லவில்லை என்றாலும் அவன் கதாபாத்திரத்தின் தன்மை சொல்கிறது. ரெனாடோ தன் மகனைப் பார்த்துக் காரணம் கேட்கிறார். "அம்மா மறுபடி போயிருவா..." என்பதே அவன் பதிலாக இருக்கிறது. அது விடையாக மாறப்போகிற நாட்களும் தூரத்தில் இல்லை என்பதை ரெனாடோ, வயோலா அப்போது உணர்ந்திருக்கவில்லை. யெஸ். டாமி ஒரு கல்லூளிமங்கன் என்று நாமே ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். ஸ்டெஃபானியாவின் வருகைக்குப் பின் ரெனாடோவுக்கும் வயோலாவுக்கும் வாழ்க்கை மிகவும் அற்புதமாகக் கழிகிறது ஆனால் டாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் இயல்பாகவே இருக்கிறான். கொண்டாட்டங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. இந்த டாமி கதாபாத்திரத்துக்காக இயக்குனர் நிறைய பள்ளிகளுக்குச் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆடிஷன் செய்து இறுதியாக Alessandro morace ஐ தேர்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நெகட்டிவான கேரக்டர்கள் என்று யாரையும் வகைப்படுத்த முடியாது. எல்லோருக்கும் ஏதோ ஒரு தேவை இருக்கிறது. அவை அன்பாக, கனவாக, லட்சியமாக எனப் பல்வேறு வடிவங்களில் நிறைந்து கிடக்கிறது. படத்தில் இடம்பெறுகிற ஸ்டெஃபானியா, டாமி இடையிலான ஒரு உரையாடல் இதையே அழுத்தமாய் வலியுறுத்துகிறது. தன்னோடு இணக்கமாய் இருக்க மறுக்கும் மகனிடம் ஸ்டெஃபானியா காரணத்தைத் தேட அவன் இப்படிச் சொல்கிறான். "இத்தனை நாள் எனக்கு இப்படியே பழகிடுச்சு. இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனா ஒங்களோட என்னால கொண்டாட்டமா இருக்க முடியாது. திரும்ப நீங்க போய்ட்டீங்கன்னா எனக்கு கஷ்டமாகிடும்ல." கண் கொட்டாமல் மகனையே பார்த்துக் கொண்டிருக்கிற அவள் தன் பக்க நியாயங்களையும் தேவைகளையும் அவனுக்கு எடுத்துச் சொல்கிறாள். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள் ஆனால் படத்தின் அடி நாதமே இதில் அன்பும் அடங்குகிறது என்பது தான். டாமியின் கணிப்பு உண்மையாகிறது. ஸ்டெஃபானியா மீண்டும் வெளியேறுகிறாள். ரெனோடா கிடந்து தவிக்கிறான். வயோலா கதறித் தீர்க்கிறாள் ஆனால் டாமி அமைதியாய் இருக்கிறான் ஆனாலும் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறான். இதற்குப் பிறகான அவர்களின் சமாதானம் எழுத்தில் அடங்காதது. ரெனாடோ தன்னைத்தானே தேற்றிக் கொண்டு சலனமில்லாமல் நிற்கிற மகனைத் தேற்றுகிற காட்சி அவ்வளவு வலியைக் கடத்துகிறது. ரெனாடோ வேலை செய்கிற இடத்தில் பிரச்சினையாகி வேலை இழந்து, மகன் எப்படியும் நீச்சல் போட்டியில் வென்று விடுவான் என்று நம்பிக்கையாய் இருக்கிறான். அது ஒன்றுதான் தனக்கு ஆறுதலாக அமையப்போகிறது என்று எதிர்பார்த்திருக்க அங்கும் ஏமாற்றம் கிடைக்கிற போது உடைந்து நொறுங்குகிற காட்சியெல்லாம் அல்ட்டிமேட். அழகியல்களைக் கொண்டிருந்தாலும் அதற்குச் சமமான அபத்தங்களையும் கொண்டிருக்கிறது இந்த வாழ்வு என்கிறார் இயக்குனர். மனிதர்கள் வகுத்த சில நியதிகளுக்குக் கட்டுப்படுபவர்கள் இங்கு சீரான வாழ்வை வாழ்கிறார்கள். மீறத் துடிப்பவர்கள் ஒரு கட்டத்தில் எந்தப்பக்கமும் போக முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள். குடும்பம் என்பதை அடிமைத்தனமாய் நினைக்காமல் அதை கமிட்மெண்டாய் வாழ்க்கையின் அர்த்தமாய் உணர்வதே சிறப்பு என்பதை கலவையான உணர்வுகளினூடே அழுத்தமாகச் சொல்லி அதிர வைக்கிறார் இயக்குனர். டாமியின் பள்ளி நண்பர்கள் சிலர் அவனிடம் அவன் தாய் பற்றிச் சில கற்பனைகளை கிண்டலாய் சொல்கின்றனர். அது அவனுக்கு ஒரு துயரமான கனவாய் வடிவம் தருகிறது. அவளை யாரோ பிய்த்துத் திண்பது போலக் கனவு காண்கிறான். அது அவனுக்குக் கடுமையான ஒரு மனநிலையைத் தருகிறது. தவறு ஏதுமில்லாமலேயே தான் தண்டிக்கப்படுவது அந்தச் சிறுவனுக்குப் புரிகிறது. (இக்காட்சியில் ஸ்டெஃபானியா அரை நிர்வாணமாய் தோன்றுவார். கதைக்கு மிக முக்கியமான காட்சி இது) படத்தின் கதையில் பெரிதாய் தொடர்பு இல்லாவிட்டாலும் சில நிதர்சனங்களை ஆங்காங்கு தூவிச் செல்கிறார் இயக்குனர். வயோலா டீன் ஏஜில் இருப்பதால் தன் தம்பி டாமியிடம் அந்த வயதிற்கே உரிய குறும்புடன் பாலியல் சார்ந்து சில விளையாட்டுகளை முயற்சிப்பாள். அது மிக இயல்பாக படத்தின் கதையோடு மெல்லிய இழையாய் சொல்லப்பட்டிருக்கும். வார்த்தைகளில் அன்பை சொல்ல முற்பட்டால் அங்கே கபடங்களுக்கு இடங் கொடுக்க நேரிடும் என்பதால் படத்தில் அன்பு என்கிற அதி அற்புதமான விஷயம் உணர்வுகளால் சொல்லப்பட்டிருக்கும். வெற்றுப்பார்வை, அழுகை, அமைதி, சிரிப்பு என ஒவ்வொரு வார்த்தையில்லா நிகழ்வுகளுக்குப் பின்னணியிலும் இந்தப்படம் பேரன்பைச் சுமந்து கொண்டிருக்கும். இறுதியாய் தன் தாய் விட்டுச் சென்ற குறிப்பு ஒன்று டாமியிடம் வந்து சேரும். அதில் ஸ்டெஃபானியா இப்படிச் சொல்லியிருப்பாள். "நான் உன்னை விட்டு இந்த உலகில் எங்கும் இருக்கலாம். ஆனால் என் அன்பும் நினைப்பும் உன்னைச் சுற்றியே இருக்கும். ஒரு கட்டத்தில் நீ அதை உணர்வாய்". டாமியிடம் இப்போது மாற்றம் ஏற்படுகிறது. தன் தாயின் முடிவை அவன் ஏற்றுக் கொள்கிறானோ இல்லையோ அவளைப் புரிந்து கொள்கிறான். மெல்ல தன் இறுக்கங்களிலிருந்து வெளியே வருகிறான். அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீர ஆணாக அவன் உருவாகிக் கொண்டிருக்கிறான் என்று ரெனாடோ நம்பத் தொடங்குகிறான். அன்பைத்தவிர அத்தனையும் கடந்து போகட்டும் என்று நம்மை நினைக்க வைப்பதுதான் இப்படத்தின் வெற்றி. "Children's are watching us" என்ற இத்தாலிய படத்தைத் தழுவி மீண்டும் இத்தாலியிலேயே எடுக்கப்பட்ட இந்தப்படம் 2006 ல் வெளிவந்தது. பல்வேறு உலகப்படவிழாக்களில் திரையிடப்பட்டு இருபதுக்கும் க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளது. படம் : Along The Ridge (Anche libero va Bene)
நடிகர்கள் : Kim Rossi Stuart Alessandro Morace Marta Nobili Barbora bobulova படம் வெளிவந்த ஆண்டு : 2006 பூர்வீகம் : இத்தாலி எங்கம்மா பாக்கதான் இப்படி அமைதியா இருக்காங்க ஆனா தனி ஆளா என்னையும் தங்கச்சியையும் வளர்க்க கஷ்டப்பட்டாங்க. அப்பா எங்க சின்ன வயசுலயே போயிட்டாரு. எங்கள BE, MBA ன்னு படிக்க வச்சு நாங்க லைஃப்ல இப்ப நல்லபடியா செட்டில் ஆகி இருக்கோம்னா அம்மாவோட வைராக்கியம்தான் காரணம். சொத்தெல்லாம் சொந்தகாரங்க தின்னுட்டாங்க. யார் தயவும் வேணாம்னு ஒரு சின்ன பள்ளிக்கூடத்துல டீச்சரா சேர்ந்து படிப்படியா தன்னைத் தகுதிப்படுத்திட்டு ஹெட்மிஸ்ஸா ரிடையர் ஆனாங்க! நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்தது... கூட இருந்த business partners ஏமாத்த, எதிர்பாராம பெரிய நஷ்டம் வந்து, எங்கப்பா இருந்த வீடு, சொத்து எல்லாத்தையும் வித்துட்டு கைல பத்து ரூபா கூட இல்லாத நிலைமை. அதற்குப் பிறகு மறுபடியும் from the scratch தொடங்கி சம்பாதிச்சார். கடவுள் கிருபைல இப்ப நல்லா இருக்கிறோம். சான்ஸே இல்ல... எங்கப்பாவோட வில் பவர்! இப்படியான உண்மைக் கதைகளை நாமும் நெருங்கிய வட்டத்தில் கேட்டு இருப்போம். நமக்கும் கூட நேர்ந்திருக்கும். சினிமா போல் சில நம்ப முடியாதவை எனினும் மன வலிமையால் நிஜத்தில் சாத்தியமானவை. ஒருவரின் வெற்றிக்கு எத்தனை காரணிகள் இருந்தாலும் இந்த mental strength எனும் காரணி இல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
இடர்கள் இல்லாமல் வெற்றி இல்லை. அப்படி இடர்கள், தடைகள் வரும் போது, அதை எதிர் கொண்டு மேலும் பயணிக்கும் வலிமை வேண்டும். உங்களுக்கு இந்த தவளை கதை தெரிந்திருக்கும். எல்லா தவளைகளும் குழுமி இருந்தன. அவர்களுக்குள் போட்டி. ஒரு வழவழப்பான சறுக்கு மரத்தில் யார் முதலில் உச்சியைத் தொடுவது என்று. நிறைய தவளைகள் ஏறத் தொடங்கின. சுற்றி இருந்த தவளைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. பாதியை அடைவதற்குள் பல தவளைகள் சோர்ந்து போய் கீழே குதித்தன. ஒரு சிறிய தவளை நன்றாக முன்னேறிக் கொண்டிருந்தது. அதை பல தவளைகள் கிண்டல் செய்தபடி "இத்தனை பேரால முடியாதது உன்னால் மட்டும் முடியுமா எதற்கு முயற்சி செய்கிறாய் போதும் கீழே குதி" என சத்தம் போட்டபடி இருந்தன. எதற்கும் அசராமல் அது இறுதியில் உச்சியைத் தொட்டேவிட்டது. அனைத்து தவளைகளும் இப்போது கைத்தட்டி "எப்படி உன்னால் வெற்றி பெற முடிந்தது?" என கேள்வி கேட்ட போது "என்ன கேட்கிறீர்கள்? எனக்கு சரியாக காதில் விழவில்லை அருகில் வந்து சத்தமாக கேளுங்கள்" என்றது. ஆம். வெற்றி பெற வேண்டுமெனில் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும். முக்கியமாக நெகடிவாக பேசுபவர்களிடம்! இலக்கு ஒன்றே கண்ணில் தெரிய வேண்டும். அவமானத்தையே அஸ்திவாரமாக்கிக் கொள்ள வேண்டும். தன்னை செவிடன் என்று நக்கல் செய்த நண்பர்களிடையே வெற்றியின் பெருமிதத்தோடு வலம் வந்தது அந்த தவளை! வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவும், அதனை செய்வதற்கான தகுதிப்படுத்திக் கொள்ளலும், ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் சூழலிலும் விட்டுவிடாமல் முயற்சி செய்யும் தன்மையும், இத்துடன் எதற்காக செய்கிறோம் என்ற emotional drive தான் உறுதியுடன் முன்னேறுவதற்கான மனவலிமை தரும் முக்கிய காரணி என்று நினைக்கிறேன். முதலில் சொன்ன சம்பவத்தில் அந்த அம்மா தன் உறவினர்களிடையே "எப்பிடி இவ படிக்க வச்சுடுவா?" என்றோ, "பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுடுவாளா? " என்றோ பிறர் புறம் பேச, விதவிதமாய் அவமானங்களைச் சந்தித்திருக்கக்கூடும். அதையெல்லாம் தாண்டி "என் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்கனும்" என்ற emotional உத்வேகம்தான் அவரை எல்லா தடைகளுக்கு மத்தியிலும் சலிப்பில்லாமல் செயல்படுத்தத் தூண்டி இருக்க வேண்டும். சின்ன விதையாய் இந்த வலிமை இருந்துவிட்டால் போதும், சந்தர்ப்பம் வரும் போது தன்னை விருட்சமாய் உருவாக்கிக் கொள்ளும் அது. எனக்கெல்லாம் வில்பவரே கிடையாதுங்க எப்படி வளர்த்துக்கிறது? என்று கேட்டீர்களெனில் அதற்கு நேர்மைறையாக சிந்தித்தல், நேர்மறையான auto suggestion, லட்சியங்களை நிர்ணயித்தல், உறவுகளை, உணர்வுகளை திறனோடு கையாளுதல், நேர்மறைக் காண் கற்பனை (positive visualization) உள்ளிட்ட சில பயிற்சிகள் இருக்கின்றன. அதை தேடிக் கற்றுக் கொள்ளும் விருப்பமும், கற்றுக் கொண்டதை செயலாக்கும் திறனும் உங்களின் மனவலிமைக்கு வழிகோலும்! அத்தியாயம் – 3 தமிழகத்தின் தலைநகராக இருக்க வேண்டிய நகரம். தமிழகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள நகரம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி உள்ள நகரம். தூங்கா நகரம் என்ற பெயரை உண்மையில் மெய்பிப்பது போல் மத்தியப் பேருந்து நிலையம் இயங்கும் நகரம். குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் என்றில்லாமல் அனைத்து ஜாதி மற்றும் மதத்தினரும் இணைந்து வாழும் நகரம். எந்தவொரு பெரிய இன மற்றும் மத மோதலிலும் சிக்கிக்கொள்ளாமல் வளைய வரும் நகரம். பாராளுமன்ற பொதுத் தொகுதியாக இருந்தாலும் 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பட்டியல் சமூகத்து நபரை வெற்றி பெற வைத்து மக்களவை உறுப்பினராக்கி பெருமை தேடிக் கொண்ட நகரம். அகன்ற காவிரி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை, எறும்பீஸ்வரர் சந்நிதி, பிஎச்ஈஎல், துப்பாக்கித் தொழிற்சாலை... நகரத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பீடிகை, புகழாரம் எல்லாம் எதற்கு என்று இப்போது தெரிந்திருக்கும், இந்த அத்தியாயத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அறுபத்தைந்து வருடங்களாக இயங்கும் ஒரு உணவகத்தைப் பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை உணவகங்களில் உணவுப் பதார்த்தங்களின் விலை என்பது சற்று அதிகமாகத்தான் இருக்கின்றன. மெட்ராஸ், கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமல்லாது அனைத்து ஊர்களிலும் இந்நிலை தான். பிற மாநிலங்களில் தரமான விலை குறைவான உணவகங்கள் நிறைய உண்டு ஆனால் நம் ஊரைப் பொறுத்தவரை தேடித் தேடித் தான் தரமான மலிவு விலை உணவகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பல ஊர்களின் பேருந்து நிலையங்களுக்கு உள்ளே உள்ள உணவகங்களின் விற்கப்படும் பதார்த்தங்களின் தரம் சரியில்லை, விலையும் அதிகம் என்ற ஒரு குறையை பெரும்பாலானோர் சொல்கிறார்கள். அடுத்து பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு அருகே உள்ள முக்கிய வீதிகளில் இயங்கும் உணவகங்களிலும் விலை என்பது உச்சத்தில் இருக்கிறது என்று நம் மக்கள் புலம்புகிறார்கள். ஊருக்கே பெருமை சேர்க்கும் முக்கியமான கோயில்கள் உள்ள ஊர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கோயிலுக்கு அருகே வழிபாடு தொடர்பான பூஜைப் பொருட்களை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிக விலை வைத்து விற்கும் கடைகள், கோயிலுக்கு அருகே இயங்கும் “உயர் தர சைவ உணவகம்” போன்ற இடங்களில் சிகரம் தொடும் அதிக விலை உணவுப் பண்டங்கள்... இது தமிழகத்தின் வழமையான கலாச்சாரமாகிக் கொண்டிருக்கிறது. நம் மாநில ஆட்கள் தவிர, பிற மாநிலங்களிலில் இருந்து இது போன்ற கோயில்களுக்கு வருபவர்களுக்கும் இந்த சூழல் தெரிந்திருக்கிறது. இந்நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை ஆனால் புகழ் பெற்ற சந்நிதி உள்ள ஊரில், ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளாக மெஸ் போன்ற வடிவம் கொண்டு இயங்கி வரும் உணவகம் ஒன்று மலிவான விலையில் தரமான உணவுப் பதார்த்தங்களை விற்பனை செய்கின்றன. புகழ் பெற்ற சந்நிதி – ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் உணவகம் அமைந்துள்ள இடம் – ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு எதிர்புறம் அதாவது ரெயில்வே ஸ்டேஷன் ரோடு. சரியான முகவரியும் உணவகத்தின் பெயரும் வேண்டுமா? “மணீஸ் கஃபே” 22/2, ஸ்டேஷன் ரோடு, ஸ்ரீரங்கம், (ரெயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம்) திருச்சி – 620006 (திருச்சி என்று குறிப்பிட்டு 620 என்ற பின்கோடு வரிசையை எழுத ஆரம்பித்தாலே சொல்ல முடியாதொரு பரவசம், உற்சாகம், குதுகூலம் பொங்கித் ததும்புகிறது) இந்த உணவகத்தில் அடை & அவியல் பிரமாதமாக இருக்கும். இந்த மெஸ்ஸில் சேவை ருசியாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிடும் நெய் ரோஸ்டுக்காக சொத்தையே எழுதி வைக்கலாம். இப்படி ஒவ்வொரு கடைக்கும் ஏதாவதொரு பதார்த்தத்தை ஸிக்னேச்சர் டிஷ் போல் சித்தரித்து நம்மவர்கள் கொண்டாடுவது வாடிக்கை. மணீஸ் கஃபேயைப் பொறுத்தவரை அப்படி எல்லாம் அறவே கிடையாது. எல்லா இடங்களிலும் காலை உணவாக கிடைக்கும் இட்லி, தோசை, பூரி, வடை, காஃபி, டீ போன்றவற்றைத் தான் இவர்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள் ஆனால் ருசி, தரம், விலை இம்மூன்று விஷயங்களிலும் சராமாரியாக ஸ்கோர் செய்கிறார்கள். விலைப் பட்டியலை மட்டும் குறிப்பிடுகிறேன் பார்த்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்
ரவா தோசை, ஸ்பெஷல் ரவா தோசை, சப்பாத்தி & அடை போன்ற உணவு வகைகள் மாலை மட்டுமே கிடைக்கும். தினசரி காலை ஐந்தரை மணிமுதல் முற்பகல் பதினோரு மணி வரை கஃபே இயங்கும் மீண்டும் மாலை ஐந்தரை மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும். கடைக்கு வார விடுமுறை கிடையாது அனால் அமாவாசையன்று மட்டும் கடைக்கு விடுமுறை. திருச்சியில் 2004 ஆம் ஆண்டு வரை குடியிருந்த போது மணீஸ் கஃபேயில் பல முறை காலை ஆகாரத்தை சாப்பிட்டு இருக்கிறேன். யுரேகா ஃபோர்ப்ஸில் வேலை பார்க்கும் போது ஸ்ரீரங்கம் ஏரியா வொர்க்கின் போதும் சாப்பிட்ட அனுபவங்கள் நிறைய உண்டு ஆனால் இப்போது போல முழு போஜனப் பிரியராய் ஒரு உணவகத்தில் சாப்பிடும் உணவு பிடித்துப் போனால் அங்கு சமைப்பவரைப் பார்த்து பாராட்டுவது, ஸ்தாபனத்தின் வரலாறைத் தெரிந்து கொள்வது, சமையல் குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது போன்ற காத்திரமானப் பணிகளை மேற்கொண்டதில்லை. இந்த ஊர் சுற்றி போஜனதைத் தேடி தொடர் கட்டுரைகளை எழுதும் போது “நம்ம திருச்சிக்காரர் கிட்ட இதை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்காம வக்கனையா அங்க போய் போஜனத்தை முடிச்சுருக்கோமே” என்று கவலைப்பட்டேன். இரு வருடங்களுக்கு முன்பாக நான் திருச்சி சென்ற போது மணீஸ் கஃபேயில் காலை போஜனத்தை நிறைவாக முடித்துக் கொண்டேன், பூப் போன்ற மிருதுவான இட்லி, மல்லிமணம் கமழும் சாம்பார், வெள்ளைத் தேங்காய் & பொட்டுக் கடலை சேர்த்து அரைத்த கெட்டிச் சட்னி, வர மிளகாய், தக்காளி & வெங்காயத்தை வதக்கி அரைத்து தாளித்த தக்காளிச் சட்னி, வாயில் கரையும் ரோஸ்ட், பூரி கிழங்கு என்ற பெயருக்கு ஏற்றது போல தாராளமாக உருளைக்கிழங்கை தன் வசம் வைத்திருக்கும் பூரிக்கு இணையாகப் பரிமாறப்படும் மசாலா... எதிலும் குறைவில்லை... அதே நிறைவு. அது தான் மணீஸ் கஃபே. சமீபத்தில் திருச்சிக்கு சென்ற நண்பன் என்னிடமிருந்து தகவல்கள் பெற்று ஒரு நாள் காலை & இரவு என இரு வேளை பலகாரத்தை இங்கு உண்டு தன் பிறவிப் பயனை அடைந்தான். அவன் சொன்ன விலைகளைத் தான் மேலே பட்டியலில் தந்திருக்கிறேன். திருச்சியில் வசிக்கும் ரவி சாரிடம் உடனே மணீஸ் கஃபே குறித்து அலைபேசியில் கதைத்தேன். அந்த சம்பாஷணை : “சாப்பாடு பத்தி அகல்ல மாசா மாசம் எழுதறேன்ல அது சம்பந்தமா நம்ம ஊர்ல இருக்கற ஒரு கடை பத்தி கொஞ்சம் விஷயம் வேணும் சார்” “எந்த ஹோட்டல் பத்தி?” “ஸ்ரீரங்கத்துல ரெயில்வே ஸ்டேஷன் எதிர்க்க இருக்கற மணீஸ் கஃபே” “எனக்கு நல்லா தெரியுமே, அந்த கடை முதலாளி எனக்குப் பழக்கமானவர் தான், நான் இப்ப அந்தக் கடைக்கு பக்கத்துல தான் இருக்கேன், அவர் கிட்டயே நேரடியா பேசறீங்களா?” “கண்டிப்பா சார்” ரவி சார் அலைபேசியை கடை முதலாளியிடம் தர அவரிடம் பேச ஆரம்பித்தேன். சகஜமான அறிமுகம் முடித்து சில நிமிடங்கள் பேசும் போதே ரவி சாருக்கு அவர் அலுவலகத்திலிருந்து அழைப்பு. உடனே “ஓனரை அவர் மொபைல்ல இருந்து உங்க கிட்ட பேச சொல்றேன்” என்றார். உணவகம் பற்றி உடனே தகவல்களைப் பெறுமாறு வழி செய்து வயிற்றில் அமுலை வார்த்தார் ரவி சார். மணீஸ் கஃபே உரிமையாளரிடம் விரிவாகப் பேசினேன் அந்த உரையாடலிலிருந்து : “வணக்கம் சார் நான் மெட்ராஸ்ல இருந்து ரவி சார் ஃப்ரெண்ட் சத்யா பேசறேன். நான் பொறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாம் திருச்சி ஜில்லால தான், 2004 ல தான் மெட்ராஸ் வந்தேன். சின்ன வயசுல உங்க ஹோட்டல்ல பல முறை வந்து சாப்பிட்டுருக்கேன், இப்போ அகல்னு ஒரு ஈ மேகசீன் நடத்தறேன். அதுல மாசா மாசம் ஒவ்வொரு ஊர்ல இருக்கற குறிப்பிட்ட ஹோட்டல் பத்தி எழுதறேன். ஒவ்வொரு உணவகத்துக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கற மாதிரி இயல்பா எழுதும் போதே வந்துருது. அது நிஜமும் கூட. இந்த புரட்டாசி மாசம், நம்ம திருச்சி பத்தி எழுத ஆசைப்பட்டேன், உங்க கஃபே ஞாபகத்துக்கு வந்தது, எனக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் சொன்னா செளகரியமா இருக்கும் சார்” “மெட்ராஸ் போயும் நம்ம கடையை ஞாபகம் வெச்சுண்டு விசாரிக்கிறது சந்தோஷமா இருக்கு, உங்களுக்கு என்ன டீடெயில்ஸ் வேணும்? சொல்லுங்க” “அறுபத்தஞ்சு வருஷமா உங்க ஸ்தாபனம் இருக்கு, இதை ஆரம்பிச்சது யார், நீங்க எப்போ நிர்வாகம் செய்ய ஆரம்பிச்சீங்க? இதெல்லாம் சொல்லுங்க சார்?” “எங்களுக்கு பூர்வீகம் பாலக்காடு, அங்க என்னோட அப்பா மணீஸ் கபேன்னு ஒரு ஹோட்டல் நடத்திண்டு இருந்தார். அங்க இருந்து 1954 ல ஸ்ரீரங்கம் வந்தார். ஊர் மாறும் போது ஹோட்டலை இன்னொருத்தருக்கு கை மாத்தி விட்டார். அப்பா இங்க வந்து அதே பேர்ல ஆரம்பிச்சார். அப்பாவும் அம்மாவும் தான் ஆரம்பத்துல ஹோட்டலை பார்த்துக்கிட்டாங்க. ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு ஹோட்டலை டெவெலப் செஞ்சாங்க. இதே ரெயில்வே ஸ்டேஷன் ரோட்ல தான் அறுபத்தஞ்சு வருஷமா மணீஸ் கஃபே இருக்கு” “பாலக்காட்டுல ரெயில்வே ஜங்க்ஷன் பக்கத்துல அதாவது பழைய என்ட்ரன்ஸ் கிட்ட ஒரு மணீஸ் கஃபே இருக்கே அதுவா?” “சாட்சாத் அதே தான்” “அப்பா பெயர் என்ன சார்? அப்பா ஹோட்டலை நிர்வாகம் மட்டும் செய்வாரா, இல்லை சமையலும் பார்த்துப்பாரா?” “அப்பா அம்மா ரெண்டும் பேரும் சகலமும் செய்வாங்க. சமைப்பாங்க, பரிமாறுவாங்க, இலையை எடுத்துப் போடுவாங்க, டேபிள்களை சுத்தம் செய்வாங்க, கல்லாவைப் பார்த்துப்பாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பாகுபாடு இல்லாம செய்வாங்க. அப்பா பேரு மஹாதேவ ஐயர், அம்மா பேரு லக்ஷ்மியம்மாள்” “நீங்க எப்ப சார் ஹோட்டல் நிர்வாகத்துக்கு வந்தீங்க” “அப்பா எதுக்குமே அசர மாட்டார். சர்வ சாதாரணமா மலைக்கோட்டை, மெயின்கார்ட் கேட், காந்தி மார்க்கெட் எல்லாம் போயிட்டு வருவார். காய்கறி, மளிகை சாமான் எல்லாம் மொத்தமா வாங்கிண்டு வந்துருவார். அவர் கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். 1995 ஆம் வருஷம் கஃபேக்கு வந்து தொழில் பழக ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா மாதிரி எல்லா வேலையும் செய்வேன்” திருச்சியில் வசிப்பவர்கள் மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட் போவது பெரிய ஆச்சரியமான விஷயமில்லை. இதை ஏன் சொல்கிறார் என்று விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. அதனால் சில நிமிடங்கள் பேசாது இருந்தேன். சுதாரித்து தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தேன். “அப்பா, அம்மா இப்பவும் வராங்களா? உங்க பெயரை கேட்க மறந்துட்டேன் அதையும் சொல்லுங்க சார்” “2005 ஆம் வருஷம் வரைக்கும் அப்பாவும் அம்மாவும் ஹோட்டலுக்கு வருவாங்க எல்லாத்தையும் கவனிச்சுப்பாங்க அப்புறம் கிளம்பிடுவாங்க. அந்த வருஷம் அம்மா காலமானாங்க. அப்பா நொடிஞ்சு போயிட்டார். அம்மா போனப்றம் கடைக்கு வரதை அப்பா படிப்படியா குறைச்சுண்டார். ஒரு கட்டத்துல வரதை நிறுத்திட்டார். நானும் என் மனைவியும் தொடர்ந்து பார்த்துக்கறோம். என் பேர் சங்கரன். மிசஸ் பேரு ஜோதி” “உங்களுக்கு குழந்தைங்க?” “எனக்கு ஒரு பொண்ணு அவளை மெட்ராஸ்ல கட்டிக் கொடுத்திருக்கேன். பசங்க வேற யாரும் கிடையாது, எனக்கு அம்பத்திரெண்டு வயசாச்சு, நானும் வைஃப்பும் தான் சகலத்தையும் பாத்துக்கறோம். ஹோட்டல்ல வழக்கம் போல ஸ்டாஃப்ஸ் இருக்கா” “...” “வேற ஏதாவது சங்கதி வேணுமா சார்” “நான் சாப்பிட வர போது, சரியா சொல்லனும்னா 1997 ல இருந்து 2000, விறகடுப்புல தான் சமைப்பீங்க இப்போ எப்படி சார்/” “இப்பவும் விறகடுப்புல தான் எல்லா பதார்த்தமும் சமைக்கிறோம்” “...” “வேற ஒன்னும் இல்லியே” “... இல்... லை அவ்வளவு தான் சார்” “ஏதோ கேட்கனும்னு நினைக்கறீங்க ஆனா தயக்கம் சரியா?” “அப்படியெல்லாம் இல்லை சார்” “நான் அப்பா மலைக்கோட்டை மார்க்கெட் போறதை பத்தி சொன்ன உடனே நீங்க சைலென்ட் ஆனீங்க அப்புறம் பேசுனீங்க அதானே?” “சார் அது வந்து...” “புரியுதுங்க... நான் ஒரு ஆர்வத்துல வேகமா பேசும் போது சொல்ல மறந்துட்டேன் அதான் உங்களுக்கு குழப்பம். அப்பாக்கு பதினெட்டு வயசாகும் போது ஒரு ஆபரேஷன் செய்து ஒரு காலை ரிமூவ் செய்தாங்க. கல்யாணம் செய்து, என்னைப் பெத்து, வளர்த்து, ஆளாக்கி, மணீஸ் கஃபேயையும் குறைவில்லாம நடத்தி... அப்பா அப்பா தான்...” *************** நீல ரத்தம் சொட்டச்சொட்ட காவியம் படைக்கிறது பேனா. அதே கன்னங்கள், உதடுகள் சுவையில் வெவ்வேறு முத்தங்கள். குடித்த நீரை மழையாய்த் தருகிறது மரங்கள். வீணையைத் தொலைத்தவன்
பாடலில் முன்வரிசையில் முகாரி. வீட்டின் நாசித்துவாரங்கள் ஜன்னல்கள். படுத்தபோது ஆகாயமும் விழித்தபோது மண்ணும் பார்த்திருந்தேன். விதைத்த விதை தந்தது பல்லாயிரம். என் பையில் கணம் கூடுகிறது சில்லறை எதிரில் கோயில் வாசல். முதலில் கொதித்தது பொத்தி வைத்த உலை. முத்து முத்தாய் எழுதுகிறது உழைப்பின் கவிதைகளை வியர்வை. குழந்தைக்காக இசைந்திருக்கிறான் புத்தனுக்கு அறவேயில்லை முத்த ஆசை. வெவ்வேறு சுள்ளிகள் எரியும் அடுப்பில் சமரசக் கூட்டணி. ஒரு நல்ல எண்டர்டெயின்மென்ட் டெக்னிக் சொல்றேன் கேளுங்க. பெத்த பொண்ணுன்னா தான் இந்த டெக்னிக் ஒர்க் அவுட் ஆவும். முதல்ல ஏட்டிக்கு போட்டியா அவ கிட்ட என்னத்தையாவது சொல்லி கடுப்பேத்துங்க. அவ்வளவு லேசுல கோவம் வராது அவளுக்கு. இருந்தாலும் விட கூடாது. அவங்க அம்மாவையும் சேத்து நக்கலடிச்சி உசுப்பேத்தணும். ஒரு கட்டத்துல காளியாத்தா களத்துல இறங்கிடுவா. எள்ளும் கொள்ளும் வெடிச்சி தூள் பறக்கும். இப்ப தான் நீங்க நல்லா கவனிக்கணும். ஃபர்ஸ்ட் ஸ்டெப் இப்பொ இருக்கற அவளுடைய முகத்தை மறந்துடுங்க. அப்படியே அவ ப்ரீகேஜி முகத்தை ஞாபகப்படுத்திக்கோங்க. முடிஞ்சுதா? ஒரே சிரிப்பு சிரிப்பா வரும். கண்ட்ரோல் பண்ணாதீங்க. ஃப்ரீயா சிரிங்க. சிரிக்க சிரிக்க காண்டு அதிகமாகி காளியாத்தா ருத்ர தாண்டவம் ஆடுவா. அந்த ப்ரீகேஜி முகத்தை மட்டும் விட்டுடாதீங்க. அப்புறம் இந்த வீட்டம்மா தேவையில்லாம குறுக்கால வருவாங்க.
“நல்லா கேளுடீ எவ்ளோ திட்டுனாலும் உறைக்காத ஜென்மம் அது”ன்னு சொல்லிகிட்டு டிஸ்டர்பன்ஸா? நேக்கா கழட்டி விடுங்க. நானும் என் பொண்ணும் பேசிக்கிறோம் நீ உன் வேலைய பாத்துகிட்டு போடீன்னு கழட்டி விடுங்க. அப்படியே கொஞ்ச நேரம் கழிச்சி திட்டி திட்டி தொண்டை வறண்டு போச்சு இருங்க தண்ணி குடிச்சிட்டு வர்றேன்னு மக போவா. இப்பொ அப்படியே நம்ம மோடை மாத்திக்கணும். நாம இவ்வளவு நேரம் ரசிச்சிக்கிட்டு இருந்ததை காட்டிக்காம அப்படியே சோகமா மூஞ்சிய வச்சுகிட்டு தரையையே பாத்துகிட்டு இருக்கணும். என்ன பேசுனாலும் தலைய தூக்கவே கூடாது. கொஞ்ச நேரத்துல ஓவரா போயிட்டமோன்னு அவளே கன்ஃபியூஸ் ஆயிடுவா. அதே பரிதாப அப்பாவி மூஞ்சிய அப்பிடியே மெயின்டெய்ன் பண்ணுங்க. இப்பொ தப்பி தவறி கூட சிரிச்சி தொலைச்சிட கூடாது. என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பி போயி நம்ம தாடைய தூக்கி ஸாரி டேடின்னு ஒரு பார்வை பாப்பா பாருங்க. ப்ரீகேஜியாவது கீகேஜியாவது இப்ப நம்ம அம்மா முகம் தான் ஞாபகத்துக்கு வரும். டிஸ்க் : வலைவீச்சு என்ற பெயரில் பேஸ்புக் பதிவர்கள் எழுதும் சின்ன சின்ன பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவது வழக்கம். இம்முறை சற்று மாறுபட்டு ஒரே ஒரு பதிவரின் கொஞ்சம் பெரிய பதிவு நம் பார்வைக்கு! பாகம் 2 : ஈர்ப்பு விசையே எரிபொருள் கடந்த மாதம் ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் சந்திரயான் பற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பல மாணவர்கள் முன்வைத்த முக்கியமனான கேள்வி ஒன்றுக்கு விளக்கமான பதில் அளித்திருந்தேன். அதனை இந்தக் கட்டுரையில் வாசகர்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன் அதனால் சென்ற பாகத்தில் பார்த்துக் கொண்டு இருந்த சந்திரயான் 1 பற்றி பிறகு பார்ப்போம். அம்மாணவர்கள் கேட்ட கேள்விகள் இவை தான் :
இதற்கான பதில் - Gravity Assist அல்லது Gravitational Sling-Shot என்ற ஈர்ப்பு விசையை எரிபொருளாகப் பயன்படுத்தும் உத்தி (gravity as fuel), அதனால் தவிர்க்கப்படும் பணச் செலவு! Gravity Assist, ஆழமான கணிதக் கோட்பாடுகளையும், அதன் கணக்கீடுகளையும் கொண்டது. நாம் இக்கட்டுரையில் கணிதத்திற்குள் செல்லப்போவதில்லை, மேம்போக்காக இந்தக் கோட்பாட்டைப் பற்றி மட்டும் பார்ப்போம். ஒரு பொருளின் வேகத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ நாம் எரிபொருளைப் பயன்படுத்தியாக வேண்டும். ஈர்ப்பு விசை என்பதே ஒரு ஆற்றால் தானே, அதனையே எரிபொருளாகப் பயன்படுத்தினால்? ஈர்ப்பு விசை எப்போதும் இருப்பது, அதனை எரிபொருளாகப் பயன்படுத்தினால் நாம் எரிக்க வேண்டிய எரிபொருளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறையுமல்லவா! அது எப்படி என்று பார்ப்போம். Orbital Mechanics எனப்படும் சுற்றுப்பாதை இயக்கவியல், வானியலில் ஒரு தனிப் பிரிவு. ஈர்ப்பு விசையையைப் பயன்படுத்தி ஒரு விண்கலத்தை வேகப்படுத்தவோ, அல்லது வேகத்தை குறைக்கவோ முடியும். இந்த உத்தியைப் பயன்படுத்தி ஒரு விண்கலம் செல்லும் பாதையை/திசையைக் கூட கட்டுப்படுத்த முடியும். விண்வெளியில் உள்ள ஒரு கோளின் ஈர்ப்பு விசையின் துணை கொண்டு இதனைச் செய்யலாம். முதன் முதலில் ரஷ்யா (முந்தைய USSR) இந்த உத்தியைப் பயன்படுத்தி Luna 3 எனும் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. Luna 3 தான், நிலவின் மறுபக்கத்தை (far side) முதன் முதலில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிய விண்கலம். அதன் பிறகு இந்த உத்தி, பல்வேறு விண்கலங்களை வேறு கோள்களுக்கு அனுப்பவும், சூரிய குடும்பத்தை விட்டு வெளியே அனுப்பவும் பயன்படுத்தப்பட்டது. இது பற்றி புரிந்து கொள்ள, நமக்குத் தேவையான அடிப்படை - நியூட்டனின் மூன்று விதிகள். முதல் விதி : ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருந்தால், அதன் நிலை மாறாமல் அப்படியே இருக்கும், வேறு ஒரு புற விசை அதன் மீது செலுத்தப்படாத வரை. அதே சமயம், ஒரு பொருள், ஒரு குறிப்பிட்ட திசையில் பயணித்துக் கொண்டு இருந்தால், அது எந்த வித சலனமும் இன்றி அதே திசையில், அதே வேகத்தில் பயணித்துக் கொண்டே இருக்கும், வேறு ஒரு புற விசை அதன் போக்கை மாற்றாத வரை. நாம் பேருந்தில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது, ஓட்டுனர் ஒரு சடன் பிரேக் போட்டால், நாம் வண்டி பயணிக்கும் திசையில் சற்று முன்னோக்கி தள்ளப்படுவோம் அல்லவா?, அது தான் நியூட்டனின் முதல் விதி! நமது உடல் ஒரு வேகத்தில் குறிப்பிட்ட திசையில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது, அதனை உடனடியாக நிறுத்தும் எந்த ஒரு முயற்சியையும் உடல் எதிர்க்கும், பயணித்துக் கொண்டிருக்கும் திசையிலேயே, அதே வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று உந்தும். அதனால் தான் நாம் முன்னோக்கித் தள்ளப் பாடுகிறோம். பூமி தன் திசையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது, அதன் வேகமோ, அதன் பாதையோ மாறாது. வேறு ஒரு பெரிய கோளோ, வால்-நட்சத்திரமோ பூமியின் மீது மோதும் பட்சத்தில், அதன் வேகம் மாறும், திசையும் மாறும் வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் விதி : F = MA என்று பள்ளிப் பருவத்தில் படித்த ஞாபகம் இருக்கிறதா? விசை (F - force) என்பது ஒரு பொருளின் எடை (M - mass) மற்றும் அதன் வேகத்தை (A - acceleration) பொறுத்தது. Acceleration என்பது நேரத்தைப் பொறுத்த வேக மாற்றம் (கூடுவது அல்லது குறைவது). கிரிக்கெட் விளையாட்டில் கேட்ச் (catch) பிடிக்கும் போது, பந்து வரும் திசையில் சற்றே கையை பின்னோக்கி நகர்த்துவது நியூட்டனின் இரண்டாம் வீதியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான். பந்தைப் பிடிப்பவர் அவ்வாறு கையை பந்து வரும் திசையில் நகர்த்தாவிட்டால் என்ன ஆகும்? அந்தப் பந்தின் எடை மற்றும் வரும் வேகத்தினால் ஏற்படும் விசை அனைத்தையும் கை தாங்க வேண்டி இருக்கும், அதனால் வலி ஏற்படும். அதே, அந்தப் பந்து வரும் திசையில் கையை நகர்த்தி பந்தை நிறுத்தினால் அதன் விசையின் தாக்கம் வெகுவாகக் குறையும் - காரணம் அந்த விசையை நாம் உடனடியாக நிறுத்தாமல், அதற்கு சற்று நேரம் கொடுத்து நிறுத்துகிறோம், வேகம் உடனடியாக மாற்றம் அடையாமல் சிறிது-சிறிதாக மாற்றம் அடைவதால், விசையும் சிறிது-சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து, ஒரு நிலையில் பூஜ்யம் ஆகிறது. மூன்றாம் விதி : இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் - எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு, விசைக்கும் அது பொருந்தும். நாம் ஒரு திசையில் ஒரு விசையை செலுத்தினால், அதற்கு எதிர் திசையில் அதற்கு இணையாக ஒரு விசை கிடைக்கும். நாம் நடப்பதே நியூட்டனின் மூன்றாம் விதியால் தான். நடக்கும் போது நீங்கள் உங்கள் காலால் பூமியைத் தள்ளுகிறீர்கள், அதன் காரணமாக அந்த விசைக்கான எதிர் விசை உங்கள் கால்களுக்குக் கிடைக்கிறது, உங்களால் நகர முடிகிறது. ஒரு ராக்கெட் விண்ணை நோக்கி செல்வதும் இதே விதியின் படி தான். எரிபொருள் எரிப்பின் மூலம் ஒரு விசையை ராக்கெட் பின்னோக்கி செலுத்துவதால், அதன் எதிர்வினையாக அது முன்னோக்கி நகர்கிறது. இந்த விதிகளை வைத்து தான் ஈர்ப்பு விசையை நாம் எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். நாம் ஒரு பந்தை எறிகிறோம், அது சிறிது தூரம் சென்று கீழே விழுந்து ஓடிவிடும். கொஞ்ச வேகமாக வீசுகிறோம், அது இன்னும் கொஞ்சம் தூரம் பயணிக்கும். ஒரு வேளை, நாம் அந்தப் பந்தை மிக வேகமாக வீசி, அதன் பாதையை பூமியின் பரப்பிற்கு இணையாக இருக்குமாறு பார்த்துக் கொண்டோம் என்றால், அது கீழே விழாமல் பூமியை சுற்றத் துவங்கி விடும். இங்கு தான் ஈர்ப்பின் சூட்சமம் வேலை செய்யும், குறிப்பிட்ட வேகத்தில் ஒரு பொருள் வீசப்பட்டால், அது நேர் கோட்டில் பயணிப்பது போல பயணிக்கும், ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை அதனை ஈர்ப்பதால், அதன் பாதை பூமியின் பரப்புக்கு இணையாக இருக்கும், அவ்வாறு சுற்ற ஆரம்பித்த பொருளுக்கு மேலும் சுற்ற (பயணிக்க) எரிபொருள் அவசியப்படாது, சுற்றிக்கொண்டே இருக்கும். இப்படித்தான் நாம் செயற்கைக் கோள்களை சுற்ற வைக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு செயற்கைக் கோள் பூமியை சுற்றும் போது, அதன் சுற்றுப் பாதையில் ஒரு இடத்தில் அதன் வேகத்தை (எடுத்துச் சென்ற எரிபொருள் மூலம்) சற்று அதிகப்படுத்தினால், அந்த செயற்கைக் கோளின் சுற்றுப் பாதை விரிவடையும், வேகம் அதிகமானால் அந்த செயற்கைக் கோள் சுற்றும் பாதையின் விட்டம் அதிகமாகும். இங்கு நாம் செயற்கைக் கோளை பூமியை விட்டு விலகிப் போக செய்யவில்லை, அது சுற்றும் பாதையிலேயே வேகத்தை அதிகரிக்கிறோம். பூமியை விட்டு விலகிப் போக எரிக்கப்படும் எரிபொருளை விட, வேகத்தை அதிகப்படுத்த குறைவான எரிபொருளே செலவாகும். படத்தில், சந்திரயான் 2 சென்ற பாதையில் இதனைக் காணலாம். முதலில் ராக்கெட் பூமிக்கு அருகாமையில் உள்ள சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட வேகத்தில் விண்கலத்தை செலுத்தியது. அது பூமியை சுற்ற ஆரம்பித்த பின், மீண்டும் அதே இடத்திற்கு வரும் போது விண்கலத்தின் வேகம், நாம் எடுத்துச் சென்ற எரிபொருளை சில வினாடிகள் எரிப்பதன் மூலம் அதிகப்படுத்தப்படும். அவ்வாறு வேகம் அதிகமானதும், விண்கலனின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படும், அது நீள்வட்டப் பாதையின் முக்கிய அச்சின் (major axis) நீளத்தை அதிகாரிக்கும், அதனால் சுற்றுப்பாதை விரிவடையும். இவ்வாறு செய்யும் போது குறைந்த அளவு எரிபொருளை எரிப்பதம் மூலம், விண்கலத்தை பூமியை விட்டு அதிக தூரம் பயணிக்க வைக்கிறோம். மீண்டும் அதே இடத்திற்கு அந்த விண்கலம் வரும் போது மேலும் சிறிது எரிபொருளை எரித்து அதன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினால் அந்த விண்கலத்தின் வேகம் இன்னும் அதிகரித்து அது மேலும் தூரம் செல்லும். இதனை ஆங்கிலத்தில் Orbital Transfer - சுற்ற மாற்றம் என்பார்கள், அதனை தமிழில் மேலும் தெளிவாக, சுற்றேற்றம் எனச் சொல்லலாம். இவ்வாறு விண்கலத்தை வேகப்படுத்திக் கொண்டே இருக்கும் போது ஒரு நிலையில் அடுத்த கோளின் (சந்திரயான் 2 ஐப் பொறுத்தவரை சந்திரனின்) ஈர்ப்பு உள்ள இடத்திற்கு விண்கலம் செல்லும். ஒரு கோள், எந்த நேரத்தில் எந்த இடத்திற்கு வரும், எந்த நேரத்தில் விண்கலத்தை செலுத்தினால் அது சரியாக மற்றொரு கோளின் ஈர்ப்பு விசை உள்ள பகுதிக்கு செல்லும் என்பது Celestial Mechanics (வான் இயக்கவியல்) கணக்குகளில் வரும். அதனை துல்லியமாகக் கணக்கிட வேண்டும். அக்கணக்கில் தவறு ஏற்படின், நம் விண்கலம், நேரடியாக அடுத்த கோளில் மோதலாம் அல்லது அதனைத் தாண்டி சென்று விடும் அபாயங்கள் உண்டு. சரியாகக் கணக்கிட்டு அடுத்த கோளின் ஈர்ப்புத் தாக்கம் உள்ள பகுதிக்கு நம் விண்கலம் செல்லும் நேரத்தில், மீண்டும் அது பூமிக்கு திரும்பாத வண்ணம், சிறிது எரிபொருளை எரித்து, அடுத்த கோளின் (இங்கு சந்திரனின்) சுற்றுப் பாதையில் விண்கலத்தை செலுத்தி விட வேண்டும் - இதற்கு Orbital Insertion என்று பெயர், தமிழில் சுற்றுச்-செருகு என்று சொல்லலாம். ஒரு கோளின் ஆதிக்கதிற்குள் நம் விண்கலம் சென்ற பின், அதன் வேகத்தை குறைக்க வேண்டும். வேகம் குறைந்தால், அதன் சுற்றுப் பாதை சுருங்கும் - இதனை ஆங்கிலத்தில் Deorbiting - தமிழில் சுற்றிறக்கம் என்பார்கள். நமக்கு எந்த உயரத்தில் செயற்கைக் கோள் பறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதுவரை நாம் வேகக் குறைப்பு செய்து, அதனை சுற்றிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு நீண்ட நெடிய நேரம் எடுத்துக் கொண்டு சிறிது-சிறிதாக ஒரு விண்கலத்தை அடுத்த கோளுக்கு செலுத்துவதை விட, நேரடியாக ஒரு ராக்கெட்டை அடுத்த கோளுக்கு ஏவ முடியாதா? முடியும், 10/12 மணி நேரத்தில் இங்கிருந்து சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை செலுத்த முடியும், ஆனால், அதற்காகும் எரிபொருள் செலவு இதனை விட பல ஆயிரம் மடங்குகள் அதிகம். எரிபொருள் அதிகம் தேவைப்பட்டால், மொத்த விண்கலத்தின் எடை அதிகாரிக்கும், அதனால் மிகப்பெரிய ராக்கெட் தேவைப்படும், அதற்கான செலவும் அதிகமாகும். மேற்சொன்னவாறு ஈர்ப்பு விசையையே எரிபொருளாக பயன்படுத்தியதால், சந்திரயான் 2 ன் செலவு, ஆயிரம் கோடிகளுக்குள் முடிந்தது, நேரடியாக செலுத்தி இருந்தால், குறைந்த பட்ச செலவு 25 ஆயிரம் கோடிகாளாவது ஆகி இருக்கும்! சந்திரயான் எப்படி சந்திரனுக்கு சென்றது என்று இப்போது ஓரளவிற்கு புரிந்து இருக்கும், இனி, ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி எப்படி ஒரு விண்கலனின் போக்கை மாற்றுவது என்று பார்ப்போம். சனி கிரகத்திற்கு ஒரு விண்கலனை அனுப்போவதாகக் கொள்வோம். நேரடியாக ராக்கெட் மூலம் அனுப்பினால் எரிபொருள் மட்டுமே 10 ராக்கெட் அளவிற்கு தேவைப்படும், gravitational sling-shot என்ற உத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும். முதலில் பூமியில் இருந்து செவ்வாய் நோக்கி விண்கலனை செலுத்த வேண்டும். பூமியை பலமுறை சுற்றிவிட்டு, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை இருக்கும் பகுதிக்கு அதனை செலுத்த வேண்டும்,அவ்வாறு செலுத்தும் போது நம் விண்கலம், செவ்வாய்க்கு சற்றே பின்புறமாக செல்ல வேண்டும். ஒரு கிரகம் முன்னோக்கி செல்லும் போது அதன் பின்புறம் ஒரு பொருள் வந்தால் என்னவாகும்? அப்பொருளைத் தன்னை நோக்கி அந்தக் கிரகம் ஈர்க்கும் அல்லவா? ஏற்கனவே நம் விண்கலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்துக் கொண்டு இருக்கும் போது, செவ்வாய் கிரகம் தன்னை நோக்கி ஈர்த்தால் அதன் வேகம் இன்னமும் அதிகாரிக்கும்தானே! அவ்வாறு அதிகாரிக்கும் போது, நேரடியாக செவ்வாய் கிரகம் நோக்கி விண்கலம் சென்றுவிடாது, காரணம், செவ்வாயின் முழு கட்டுப்பாட்டில் நம் விண்கலம் இருக்காது (அவ்வளவு அருகாமையில் விண்கலத்தை நாம் செலுத்த மாட்டோம்). ஏற்கனவே இருந்த வேகம், மேலும் செவ்வாய் ஈர்ப்பினால் ஏற்பட்ட அதிக வேகம் இரண்டும் சேர்ந்து,நாம் விண்கலனின் திசை மாறும்! (படம் - திசை மாற்றம் - 1). விண்கலனின் திசையை வியாழன் நோக்கி திருப்ப வேண்டும், திருப்பும் போது, வியாழனின் பின்புறமாக விண்கலம் போகுமாறு செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், செவ்வாய் நம் விண்கலனுக்கு செய்த உதவியை வியாழனும் செய்யும். அதன் படி, சரியான நேரத்தில் விண்கலனை திசை திருப்பி சனி கிரகம் நோக்கி செலுத்தி விடலாம். சனியின் ஈர்ப்பு ஆதிக்கப் பகுதிக்குள் விண்கலம் சென்ற பின், விண்கலனுடன் அனுப்பிய எரிபொருளை எரித்து சனியின் முழு கட்டுப்பட்டுக்குள் செலுத்தி சுற்ற வைத்து விடலாம்! ஒரு விண்கலனின் வேகத்தைக் கூட்டவும், திசையை மாற்றவும் கிரகம் செல்லும் பாதைக்கு பின் செல்ல வேண்டும் என்று பார்த்தோம். கிரகம் செல்லும் பாதைக்கு முன் சென்றால் என்னவாகும்? திசை மாறுவதோடு, விண்கலனின் வேகம் குறையும்.
விண்கலம், கிரகம் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் செல்வதால், கிரகத்தின் ஈர்ப்பு காரணமாக திசை மாறும் அதே சமயத்தில், விண்கலம் கிரகத்தை தாண்டி செல்லும் போது, கிரகம் விண்கலத்தை பின்னோக்கி ஈர்ப்பதால் வேகம் குறையும். (படம் - திசை மாற்றம் 2). சனிக் கிரகத்திற்கு நாம் செலுத்திய விண்கலம் செவ்வாய் மற்றும் வியாழனின் பின்புறமாக சென்றது. சனியை சுற்றவைக்க, முதலில் விண்கலனின் வேகத்தைக் குறைக்க வேண்டும், அதனால் சனியின் முன்புறமாக விண்கலனை செலுத்தி, திசையைத் திருப்பி, அதன் வேகத்தை குறைத்து, பின் சனி கிரகத்தை விண்கலம் சுற்றுமாறு செய்ய வேண்டும். இந்த வகையில் விண்கலத்தை வேகப்படுத்தவும், வேகத்தை குறைக்கவும், திசை மாற்றவும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்துகிறோமே, அது இலவசமாகக் கிடைக்கிறதா என்றால் இல்லை, அதற்கான விலை என்ன என்று பார்ப்போம். There is no such thing as a free lunch என்பார்கள் ஆங்கிலத்தில்! இந்தப் பிரபஞ்சம் நமக்கு எதையுமே இலவசமாகக் கொடுப்பதில்லை! ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை என்பது அதன் எடை, அதனால் அதற்கு இருக்கும் ஆற்றல் ஆகியவற்றின் கலவை. நாம் அனுப்பும் விண்கலம், ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, அதனையே சுற்றாமல், அதனில் இருந்து பிரிந்து செல்லும் போது, கிரகத்தின் ஆற்றலில் இருந்து தனக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு செல்கிறது. இவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது, கொடுக்கப்படும் கிரகத்தின் ஆற்றல் சற்றே குறையும். எவ்வளவு ஆற்றல் குறையும்? அதனை நாம் பார்க்கவோ, உணராவோ முடியுமா என்பது ஆற்றல் கொடுக்கும் கிரகத்தின் எடை, ஆற்றலை எடுத்துக் கொள்ளும் பொருளின் எடை இரண்டையும் பொறுத்தது! மேற்சொன்ன திசை மாற்றத்தை எடுத்துக் கொண்டால், ஒரு கோளின் ஆற்றலில் இருந்து விண்கலம் தன் வேகத்தைக் கூட்டிக் கொண்டு, அதனைத் தாண்டி செல்வதால், கோளின் ஆற்றல் குறையவே செய்யும். உதாரணமாக சனி கிரகத்திற்கு நாம் அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தைத் தாண்டும் போது, செவ்வாயின் வேகம் குறையும். எவ்வளவு குறையும் என்று கணக்கிட்டால், மிகவும் புறக்கணிக்கத்தக்க அளவே (negligible) இருக்கும், காரணம் செவ்வாயின் எடையை ஒப்பிடும் போது, நம் விண்கலனின் எடை புறக்கணிக்கத்தக்கதாக உள்ளது. பொதுவான கணக்கின் படி, ஒரு 1000 கிலோ எடை கொண்ட விண்கலம், இவ்வாறு செவ்வாய் கிரகத்தைத் தாண்டி செல்லும் போது,செவ்வாயின் வேகம் பத்து கோடி ஆண்டுகளில் ஒரு மீட்டர் அளவிற்குக் குறையும். சூரியனை செவ்வாய் வினாடிக்கு சுமார் 25 மீட்டர்கள் வேகத்தில் சுற்றுகிறது - அது பத்து கோடி ஆண்டுகளில் ஒரு மீட்டர் குறைந்து போகும்! இது மிக-மிகக் குறைவு, நம்மால் அளக்க முடியாத அளவிற்கு குறைவானது - காகிதத்தில் கோட்பாட்டளவில் (theoretically) வேண்டுமானால் நிரூபிக்கலாம். (டைம் மெஷின் நினைவுக்கு வருகிறதா?) சந்திரனின் அளவிற்கு ஒரு பெரிய விண்கலம் செய்து அதனை செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பைக் கொண்டு திசையை மாற்றினால், செவ்வாயின் ஆற்றலில் மாற்றம் நமக்குத் தெரிய வரும்! அடுத்த அத்தியாயத்தில் விக்ரம் தரையிறங்கு கலம் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து இருக்கும், ISRO அது பற்றி ஏதாவது அறிக்கை வெளியிட்டால் அதனைப் பற்றிப் பார்த்துவிட்டு, சந்திரயான் 1 பற்றி மீண்டும் பேசலாம் - குறிப்பாக நாம் பார்க்கப் போவது சந்திரயான் 1 எந்த அளவிற்கு வெற்றி பெற்றது, சந்திரயான் 2 பெற்ற வெற்றியின் சதவிகிதம் போன்றவற்றை. (தொடரும்) நவராத்திரின்னாலே அழகழகான பொம்மைங்க, கொலு படிக்கட்டு, விதவிதமான சுண்டல் வகையறா, பட்டுப் பாவாடை சட்டை போட்ட சுட்டீஸ், மத்த நாள்ல அசால்ட்டா இருந்துட்டு அந்த பத்து நாளும் அலங்காரமா அம்சமா ஜிலுஜிலுன்னு இருக்கற பாவாடை தாவணி போட்ட தேவதைகள், அம்பாளே தரையிறங்கி நடமாடற மாதிரி மாமிகள்னு தெய்வீகக் கலவையா ஒரு சீன் கண்ணு முன்னாடி வந்துட்டு போகும்.. மத்த பண்டிகையெல்லாம் விட நவராத்திரி ரொம்பவே ஸ்பெஷல்.. இதுல வீட்ல இருக்கற குட்டீஸ் மொதற்கொண்டு பாட்டீஸ் வரை ஆர்வமா கலந்து களைகட்டற ஒரு கலக்கல் பண்டிகைன்னே சொல்லலாம்.. அமாவாசைக்கு முன்னாடியே அமர்க்களம் ஆரம்பிச்சிடும். அஞ்சறைப்பெட்டில இருக்கற சாமானை அள்ளிக்கொட்டி, முளைக்க வச்சி பார்க்ல வக்க செடிங்க ஒரு பக்கம் ரெடியாகும். நம்பளை கல்யாணம் செய்துக்கிட்ட வீட்டுக்காரை வாழ்க்கைல உயர வைக்கறமோ இல்லையோ நவராத்திரிக்கு முன்னாடி கண்டிப்பா உயர வச்சிடுவோம். அட. ஏணியில ஏத்தி பொம்மப்பெட்டி இறக்க, பரண்ல ஏத்தறத சொன்னேன். ஒரு வழியா பொம்மையெல்லாம் எடுத்து வைச்சப்றம் கொலு படிக்கட்டு கட்டற வைபவம் ஆரம்பிக்கும்.
இந்த வருஷம் என்ன புதுசா தீம் வைக்கலாம்னு ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் ரேஞ்சுக்கு ப்ளான் பண்ணிட்டு கடேசில அது நம்ப விசு சார் படம் மாதிரி லோ பட்ஜெட்ல ஆனா விறுவிறுப்பா வந்து நிக்கும். ஒவ்வொரு நாளும் கொலு பாக்க போறதும் கொலுவுக்கு அழைக்கப் போறதும்னு ஒரே மாதிரி ரொட்டீனா ஓடற இயந்திரகதியான வாழ்க்கை சூழல்லேந்து ஒரு அழகான மாற்றம் தானே. சிட்டில அங்கங்கே ஆளுக்கொரு திக்கா சிதறிக்கெடக்கற சொந்த பந்தங்கள இப்படித்தான் நேர்ல பாத்துக்க முடியுது. அதுவும் அந்த நங்கநல்லூர் அத்தை, பாரீஸ் கார்னர் கடைங்கள்ல ஏறி எறங்கி வாங்கின அலங்கார பொருளுங்கள வச்சி வீட்டுக்குள்ள மதுரை மீனாட்சி கோயிலையும், திருப்பதியையும் தத்ரூபமா ஒவ்வொரு வருஷமும் வரவச்சிடுவாங்க. அங்க போயி வண்டி கட்டிட்டு ட்ரெயின்ல பஸ்ல போறதுக்கு பதில் அவுங்க வீட்டுக்கே போயி கும்பல்ல இடிபடாம மீனாட்சியையும், பாலாஜியையும் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்.. நோ ஜருகண்டி ஜருகண்டி. போன வர்ஷம் நங்கநல்லூர் போயிட்டே நாங்க அமர்நாத், கேதார்நாத் எல்லாம் பாத்தோம். அத்தை உபயம். அப்டி ஒரு கிரியேட்டிவிட்டி.. ஒவ்வொரு வீட்லயும் விதவிதமான தீம்ல கொலு வச்சி இருப்பாங்க. அந்த ஒன்பது நாளும் கிட்டதட்ட ஊரே திருவிழா மாதிரி கலகலன்னு இருக்கும். இப்படித்தான் ஒரு நாள் கொலு பாக்க வந்து பாட்டுப் பாடி வெத்தலப்பாக்கு வாங்கினுப் போனாங்க, பக்கத்து வீட்டு ஆன்ட்டி. வீட்டுக்கார் சீக்ரெட் வாய்ஸ்ல விசாரிக்கிறார் "இப்ப வந்துட்டுப் போனாங்களே, அவுங்க யாரு?? மீ : அட தேவுடா!! பக்கத்து வீட்டுக்காரங்க. இங்க வந்து மூனு வருஷமாச்சு! பக்கத்து வீட்ல யாரு இருக்காங்கன்னுக் கூட தெரியாத இந்த மெட்ரோ நகர வாழ்க்கையில ஆசுவாசப்படுத்திக்க இந்த மாதிரி பண்டிகைகள் உதவுது. ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கற கலைநயத்தையும், இசை ஞானத்தையும் வெளில கொண்டு வந்து அவங்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் சந்தோஷத்தையும் தருது. அது தான் உண்மை. சின்னச் சின்ன பரிசுகள் கொலு பாக்க வர்ற குழந்தைகளுக்கு கொடுக்கறதும், அதுங்க தனக்கு தெரிஞ்ச பாட்டு ஸ்லோகத்த சொல்றதும், பாக்கவும் கேக்கவும் அவ்வளவு அழகு. இத சாக்கா வச்சிட்டு நம்ப பாரம்பரியத்த அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர கலாச்சார விழாவா நவராத்திரி கொலு இருக்கு. எந்த கொண்டாட்டமா இருந்தாலும் சாப்பாடு இல்லன்னா நமக்கு சிறக்காதே!! ஒவ்வொரு நாளும் விதவிதமான சுண்டல், கலந்த சாத நைவேத்யங்கள்னு அந்த காலத்துலே அந்தந்த பருவ காலத்துக்கு ஏத்த மாதிரி வடிவமைச்சி ஆரோக்கியமா வாழ வழி சொல்லியிருக்காங்க. என்ன தினமும் அதே நவரத்ன சுண்டல், சென்னா சப்பாத்தியான்னு வீட்ல சலிச்சுக்கறத காதுல வாங்காம கண்டுக்காம போயிடனும். பெண்மையைப் போற்றி புகழ் பாடற ஒரு பண்டிகைய பாகுபாடு இல்லாம எல்லாரும் கொண்டாடறதே இந்த நவராத்திரியோட மகிமைதான். அக்கம்பக்கம் உறவுகள் பேணி பாகுபாடு பாக்காம வீட்டுக்கு வர்ற எல்லா பெண்களையும் வயது வித்தியாசம் இல்லாம கடவுளின் அம்சமா பாக்கறது இந்த விழாவுலதான். நவராத்திரியைக் கொண்டாடி வாழ்க்கைக்கு அவசியமான கல்வி, செல்வம், தைரியம்னு எல்லா அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அந்த முப்பெரும்தேவியர்கள் அனைவருக்கும் வழங்கி அருள் புரிய வேண்டுவோம். 🙏🙏 பிமல் ஜலான் கமிட்டி ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள நிதியை செலவினங்களுக்குப் பிறகு நடுவண் அரசுக்கு வழங்குவது வழமையான ஒரு நடவடிக்கை. இந்த வருடமும் அதை செய்தபோது சிலரால் விமர்சிக்கப்பட்டது. இந்த வருடம் தான் முதன் முதலாக ரிசர்வ் வங்கி இது போன்ற நடவடிக்கையை எடுத்தது போல் சித்தரிக்கவும் முயற்சி நடந்தது. ரிசர்வ் வங்கி எந்த அடிப்படையில் நடுவண் அரசுக்கு வருடந்தோறும் செலவினங்கள் போக தம்மிடமுள்ள இருப்பிலிருந்து நிதியினை வழங்கி வருகிறது. இதற்கு எத்தகைய வழிமுறைகளை அது மேற்கொள்ளுகிறது என்பதையும், முந்தைய கால நடைமுறைகளையும் சற்று விரிவாக இந்த கவர் ஸ்டோரியில் பார்க்கவிருக்கிறோம். இந்த வருட நிதிப் பங்கீடு குறித்து நாம் தெரிந்து கொள்ள பிமல் ஜலான் கமிட்டி பற்றியும், அக்கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும், அதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டது பற்றிய விவரங்கள் அவசியம். அதையே இக்கட்டுரை அலசவிருக்கிறது. பிமல் ஜலான் கமிட்டி பற்றி பார்ப்பதற்கு முன்பு பிமல் ஜலான் யார் என்று பார்ப்போம். பிமல் ஜலான் : 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். பூர்வீகம் ராஜஸ்தான். தற்போது வசிப்பது மேற்கு வங்காளத்தில். இவர் இரு முறை ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணியாற்றி இருக்கிறார். 2003 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நியமன ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இந்திய அரசுப் பணிகளில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்த அனுபவம் ஸ்ரீ. பிமல் ஜலான் அவர்களுக்கு உண்டு. 1980 ஆம் ஆண்டு ஸ்ரீமதி. இந்திரா ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஸ்ரீ. ராஜீவ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் வங்கித்துறையின் உயரிய நிர்வாகப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று 1989 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீ. நரசிம்மாராவ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசால் ஃபைனான்ஸ் செகரெட்டரி என்ற பொருளாதார அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பினைப் பெற்று ஓராண்டு காலம் பணியில் இருந்தார். 1992 – 93 காலகட்டத்திலும் (நரசிம்மராவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சி) 1998 – 2008 (வாஜ்பாய் பிரதமராக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மற்றும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி) என பத்தாண்டுகளுக்கு திட்டக் கமிஷன் துறையில் உள்ள தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஸ்ரீ. பிமல் ஜலான் அவர்கள், முதல் முறை ரிசர்வ் வங்கி ஆளுநராக 1997 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய அரசால் ஐந்தாண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டார். அப்போது பிரதமராக பொறுப்பு வகித்தவர் : ஸ்ரீ. ஐ.கே. குஜரால். அப்போது தேசத்தின் நிதியமைச்சராக இருந்தவர் ஸ்ரீ. ப. சிதம்பரம். இரண்டாவது முறையாக ஸ்ரீ. பிமல் ஜலால் அவர்களின் பதவிக் காலம் 2002 ஆம் ஆண்டு முடிந்த உடனேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பில் நீடிக்கும் மத்திய அரசின் உத்தரவினை அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மந்திரிசபை மூலம் பெற்றார். அப்போது ஸ்ரீ. அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக பொறுப்பு வகித்தார் ஆனால் 2003 ஆம் ஆண்டே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஸ்ரீ. வேணுகோபால் ரெட்டி அவர்களை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்தது. அப்போது ஸ்ரீ, பிமல் ஜலானுக்கு நியமன ராஜ்ய சபா உறுப்பினர் பதவியினை வழங்கி கெளரவித்தது. பிமல் ஜலான் குறித்தும் அவர் வகித்த பொறுப்புகள் குறித்தும் பார்த்தோம். பிமல் ஜலான் கமிட்டி எதற்காக அமைக்கப்பட்டது? அக்கமிட்டியில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்கள்? அக்கமிட்டியின் பரிந்துரைகள் என்ன? இது பற்றியெல்லாம் இனி பார்ப்போம். ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி கையிருப்பை நடுவண் அரசுக்கு வருடந்தோறும் வழங்குவது என்பது வழமையான சம்பிரதாயம் ஆனால் 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் இந்த சம்பிரதாயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நடுவண் அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் இடையே பிரச்சினை மூண்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடுவண் அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வழி காட்டும் நெறிமுறைகளை வகுக்க ஒரு கமிட்டி அமைக்க முடிவெடுத்தது. இப்படித்தான் பிமல் ஜலான் கமிட்டித் தலைவரானார். கமிட்டியின் பரிந்துரைகள் சர்வதேச நாடுகள் கடைபிடிக்கும் நடைமுறைகளைக் கவனத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க முடிவானது. உலகளவில் ஒவ்வொரு நாட்டு வங்கிகளும் கடைபிடிக்கும் பேசில் விதிமுறைகள் போல என்று சொல்லலாம். கமிட்டி அமைத்து அதன் பரிந்துரைகளின் படி ரிசர்வ் வங்கி நடுவண் அரசுக்கு நிதி ஒதுக்குவது என்பதும் நம் தேசத்திற்கு புதிய சங்கதி அல்ல. 2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் அப்போது ஸ்ரீ. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலும் இப்படியொரு குழு அமைக்கப்பட்டது. அதாவது நடுவண் அரசு நிதி கேட்டவுடன் ஸ்ரீ. ஒய்.எச். மலேகம் தலைமையில் ஒரு பார்வையாளர் குழு அமைக்கப்பட்டு அது ரிசர்வ் வங்கியின் நிதிக் கையிருப்பை ஆராய்ந்து நிதி ஒதுக்குவது தொடர்பான பரிந்துரையை அளித்தது. “தற்காலிக மற்றும் சொத்து மேம்பாட்டு நிதி கையிருப்பு திருப்திகரமான நிலையில் இருப்பதால் ரிசர்வ் வங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக தம்முடைய உபரி கையிருப்பு நிதியை வழங்கலாம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு உபரி நிதியிலிருந்து ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் வருடாந்திர இருப்பு நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டும் முடிவெடுக்கலாம். மூன்றாண்டு காலவரம்பு என்பதை சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம்” இது தான் மலேகம் குழு ரிசர்வ் வங்கிக்கு அளித்த பரிந்துரை. இப்பரிந்துரையை ஏற்று முந்தைய நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ஈட்டிய உபரி கையிருப்பு நிதியான தொகை சுமார் 52,679 கோடி ரூபாயை முழுமையாக வழங்கியது. அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் ஸ்ரீ. ரகுராம் ராஜன். பரிந்துரை குறித்து அவர் எந்தவொரு எதிரான கருத்துகளையும் சொல்லவில்லை. முழுமையாக ஏற்றுக் கொண்டார். இந்த நிதியைக் கொண்டு அப்போதைய நடுவண் அரசு என்ன செய்தது? நதி நீர் இணைப்பு, தேசத்தின் பல்வேறு இடங்களில் சரியாக இல்லாத நீர்வழிப் பாதையை சீராக்குதல், துறைமுகம் போன்ற பெரிய கட்டுமானப் பணிகளை செய்தல் போன்ற பெரிய திட்டங்களுக்கு அந்நிதியைப் பயன்படுத்தவில்லை. பொருளாதார ரீதியிலான பல்வேறு சிக்கல்களுக்குள் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சில தவறான கொள்கைகளால் நாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ஸ்ரீ மன்மோகன் சிங் நாட்டின் பிரதமர் இன்னொரு புறம் பொருளாதாரத்தில் சகலமும் கற்றறிந்த நிர்வாகி என சிலரால் புகழாரம் சூட்டப்படும் ஸ்ரீ. ப. சிதம்பரம் நாட்டின் நிதியமைச்சர். இவர்கள் இருவரும் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் போது தான் அந்நிய செலவாணி வீதம் மிக மோசமாக வீழ்ந்து கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சியில் பெரியதொரு சுணக்கம் நிலவியது, பொருளாதார பாதிப்பால் தடுமாறும் நாடுகள் என உலகளவில் “ஃப்ராஜில் 5” என்று ஐந்து நாடுகளைப் பட்டியலிடுவார்கள். அந்த காலகட்டத்தில் இரு பொருளாதார மேதைகள் இருந்த போது இந்தியா அப்பட்டியலில் இடம் பிடித்த அவமானத்தை சந்தித்தது. நிர்வாக ரீதியலான தோல்வியால் விளைந்த பொருளாதார நெருக்கடிகளையும், நிதிப் பற்றாக்குறையையும் சமாளிக்க நடுவண் அரசு இந்நிதியைப் பயன்படுத்தியது. பிமல் ஜலான் கமிட்டி என்ன சொல்கிறது? இதை சற்று விரிவாகப் பார்க்கலாம் : கமிட்டியில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் அவர்கள் பற்றிய விவரம் –
இவர்களைத் தவிர ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு உறுப்பினர்களாக உள்ள மூவர். அவர்களின் விவரம் –
ரிசர்வ் வங்கியின் ஜூன் 2018 கால நிதிநிலை அறிக்கையின் படி பேலன்ஸ் ஷீட்டின் மதிப்பு 36.18 லட்சம் கோடிகள். இதில் மொத்த இருப்பி நிதி சுமார் 9.59 லட்சம் கோடிகள், இதில் கரன்சி மற்றும் தங்க மறுமதிப்பு இருப்பு நிதி 6.91 லட்சம் கோடிகள். எதிர்பாரா செலவினங்களுக்கான நிதி சுமார் 2.32 லட்சம் கோடிகள் மற்றும் சொத்து மேம்பாட்டு நிதி சுமார் 22,811 கோடிகள். ஆக மொத்தம் 9.59 லட்சம் கோடிகள். இதிலிருந்து தான் இவ்வருடத்திற்கான 1.76 லட்சம் கோடியை நடுவண் அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது. கமிட்டி ரிசர்வ் வங்கிக்கு வழங்கிய முக்கியப் பரிந்துரைகள் :
ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்துகள் மதிப்பின் அடிப்படையில் சுமார் 28% என்னும் விகிதாச்சார அடிப்படையில் செலவினங்களுக்குப் பிறகான கையிருப்பு நிதியை தன் கையிருப்பில் வைத்திருக்கிறது. சர்வதேச அளவில் 14% இருக்க வேண்டும் என்ற கணக்கீட்டுடன் ஒப்பிடும் போது இது இருமடங்கு அதிகம். இந்த கணக்கீட்டை ஆராய்ந்து மூன்று கமிட்டிகள் பரிந்துரைகளை வழங்கின. 1997 ஆம் ஆண்டு வி. சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது (அப்போதைய மத்திய கூட்டணி ஆட்சியின் நிதியமைச்சராக இருந்தவர் ஸ்ரீ. ப.சிதம்பரம்) 12% என்ற அளவினை சிபாரிசு செய்தார். அதாவது உலகளவில் கடைபிடிக்கும் விகிதாச்சாரத்தை விட குறைவான அளவீடு. இதை ரிசர்வ் வங்கி கடைபிடிக்க வேண்டுமென்று அப்போதைய நடுவண் அரசும், அப்போதைய நிதியமைச்சர் ஸ்ரீ. ப. சிதம்பரமும் வலியுறுத்தினார்கள். 2004 ஆம் ஆண்டு உஷா தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது பதினெட்டு விழுக்காடு என்ற அளவீட்டை பரிந்துரைத்தது. இதை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. 1997 ஆம் ஆண்டு வி. சுப்பிரமணியம் பரிந்துரைத்த 12% என்ற அளவினை அதாவது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதமபரம் வலியுறுத்திய சர்வதேச அளவுகோலை விட குறைவான கணக்கீட்டை ஏற்போம் என்றது. 2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மலேகம் கமிட்டி இது தொடர்பாக எந்தவொரு கணக்கீட்டையும் பரிந்துரைக்கவில்லை. நடுவண் அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மட்டும் வலியுறுத்தியதோடு தன் பணியை முடித்துக் கொண்டது. தற்போது பிமல் ஜலான் கமிட்டி தன் பரிந்துரைகளில் சர்வதேச அளவான 14% என்ற கணக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. இந்த கணக்கீட்டை எட்ட ரிசர்வ் வங்கி தம்முடைய பிற செலவினங்களை குறைப்பது அவசியம். அப்படித்தான் அயல்நாடுகள் செயல்படுகின்றன. பின் குறிப்பு : பொதுவாக பொருளாதாரம் தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகளில் நான் அரசியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி எழுதாமல் தவிர்த்துவிடுவேன் ஆனால் வருடந்தோறும் ரிசர்வ் வங்கி நடுவண் அரசுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடு என்னும் வழமையான சம்பிரதாயத்தை ஏதோ இந்த வருடம் தான் மத்திய அரசு பெற்றது போலவும், மிரட்டி ரிசர்வ் வங்கியின் நிதி அனைத்தையும் வாங்கிவிட்டது போலவும் சிலர் சித்தரித்து பொய்யாக தகவல் சமைத்ததால் அரசியலையும் குறிப்பிட வேண்டி இருந்தது. அரசியல் கட்சிகள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டையும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டை எடுப்பதையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதைத் தான் செய்யும் ஆனால் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர் பணியின் போது ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதும் பணியிலிருந்து விலகிய பின் முரணாகப் பேசுவதும் ஒட்டு மொத்த தேசத்தையே சீரழிக்கும். பிமல் ஜலான் கமிட்டி பரிந்துரையை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்ட பின் இப்படியொரு அறிக்கை வெளியானது. “ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அதன் தரக் குறியீடு வெகுவாக குறையும், இது சரியான நடவடிக்கை அல்ல” சொன்னவர் : முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஸ்ரீ. ரகுராம் ராஜன் ********************** |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |