பாகற்காய் நம் ஊரில் அதிகம் விளையும் காய்களில் ஒன்று. மிதி பாகற்காய் என்று அளவில் பொடிசாக, நீள பாகற்காய் என்று அளவில் பெரிதாக என இரு விதங்களில் காய்த்தாலும் தரும் பலன்களில் வித்தியாசம் இல்லை. நம்மவர்கள் பாவக்காய் என பேச்சு வழக்கில் சொன்னாலும் இந்தக் காய் எந்த பாவத்தையும் செய்வதில்லை. சாப்பிடும் மக்களுக்கு பல நல்ல சங்கதிகளைத் தந்து புண்ணியத்தை தான் சம்பாரிக்கிறது. எனவே இனி நாம் பாவக்காய் என்று சொல்லாது பாகற்காய் என்றே கூப்பிட்டு பழகுவோம். பாகற்காயில் நம் உடலுக்குத் தேவையான அனுகூலங்கள் என்னென்ன இருக்கின்றன என்று பார்ப்போம். பாகற்காயில் கலோரிகள் மிகக் குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையே பட வேண்டாம். 100 கிராம் பாகற்காயில் வேறு பதினேழு என்னும் குறைவான அளவில் தான் கலோரிகள் உள்ளன.
பாகற்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. ஐம்பது கிராம் பாகற்காயில் சுமார் இரண்டு கிராம் என்னும் அளவிற்கு நார்ச்சத்துகள் அடங்கி உள்ளன. நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நார்ச்சதுகளில் சுமார் ஒன்பது விழுக்காடை பாகற்காயை சாப்பிடுவதன் மூலம் பெற முடியும். உடலுக்குத் தேவையான தாதுக்கள் இக்காயில் நிறைவாக காணப்படுகின்றன. நூறு கிராம் எடையுள்ள பாகற்காயில் கால்ஷியம் 19 மில்லி கிராம் என்ற விகிதத்திலும், காப்பர் 0.035 மில்லி கிராம் என்றும், இரும்பு சத்து 0.43 மில்லி கிராம் என்றும், மெக்னீஷியம் 17 மில்லி கிராம் என்றும், மாங்கனீஸ் 0.089 மில்லி கிராம் என்றும், ஜிங்க் 0.80 மில்லி கிராம் என்றும் உள்ளடங்கி இருப்பதால் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்களில் பாகற்காய் முக்கியமானதாகிறது. இயல்பான தாவர ஊட்டச்சத்துகளான ஆல்ஃபா கரோடீன், பீடா கரோடீன் & லூடின் - ஜியாக்சாண்டின் போன்றவை இக்காயில் உள்ளன. லூடின் – ஜியாக்சாண்டின் தனியாக மாத்திரைகளாக கிடைக்கின்றன. ஒரு மாத்திரையின் விலை ரூபாய் பன்னிரெண்டு. பாகற்காயில் கொலஸ்ட்ரால் என்பதே கிடையாது. நூறு கிராம் பாகற்காயில் ப்ரோடீனின் அளவு ஒரு கிராம் என்றும் காணப்படுகின்றன. வைட்டமின்களில் ரிபோஃப்ளாவின், நியாசின், வைட்டமின் – சி, வைட்டமின் – ஏ, பைரிடாக்சின், தியாமின், ஃபோலேட்ஸ் & பேன்தோதேனிக் ஆசிட் போன்றவையும் நமக்குத் தேவையான அளவு நிறைந்திருக்கின்றன. எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லப்படும் சோடியமானது 5 மில்லி கிராம் அளவிற்கும், பொட்டாசியம் 296 மில்லி கிராம் என்ற அளவிற்கும் உள்ளன. பொட்டாசியம் இயல்பிலேயே டை – யூரிடிக்ஸ் என்பதால் சிறுநீர் நன்கு பிரிய பாகற்காய் வழி செய்யும். தாவர ஊட்டச்சத்துகளில் பாலிபெப்டைட் – பி, வித்தியாசமான மருத்துவ குணம் கொண்டது. இதைத் தாவர இன்சுலின் என்கிறார்கள். இது உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சரன்டின் என்று சொல்லப்படும் இரத்தச் சக்கரை குறைப்பு காரணியை பாகற்காய் நன்கு தொகுக்கிறது. டைப் – 2 நீரிழிவு குறைபாட்டில் உள்ளவர்கள் தகுந்த அளவு பாகற்காயை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள க்ளூகோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் தகுந்த அளவு பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றில் உள்ள கருவின் நரம்பு மற்றும் திசுக்களில் எந்தவொரு குறைபாடும் வரமால் காக்க முடியும். இந்த வியத்தகு செயலை பாகற்காயில் உள்ள வைட்டமின் ஃபோலேட்ஸ் செய்கின்றன. வைட்டமின் – சி சத்தானது பாகற்காயில் மிகுந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமான அளவிற்கு அதிகரிக்க உதவுகிறது. ஆல்ஃபா கரோடீன், பீடா கரோடீன், லூடின் - ஜியாக்சாண்டின் போன்ற தாவர ஊட்டச்சத்துகள் போன்றவை கேன்சர் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. மேலும் வயோதிகத்திற்கு காரணமான இயங்கு அயனிகளை கட்டுக்குள் வைத்து தோற்றப் பொலிவுக்கு காரணமாக இருக்கின்றன. பாகற்காயானது தடையற்ற செரிமானத்திற்கும் உடலில் உள்ள தேவையற்ற உணவுக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதால் ஜீரணக் குறைபாடு மற்றும் மலச்சிக்கல் நோய் வராது தடுக்கிறது. டானின், ஃப்ளாவனைட்ஸ் போன்ற பைடோகெமிக்கல் உட்பொருட்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் உடல் நலம் பேண உதவுவதாக சமீபத்திய மேலை நாட்டு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக ஏதாவது நோய் அல்லது குறைபாடிற்காக ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் சில காய் கனிகளை உட்கொள்ளக் கூடாது அவை எதிர்வினை புரியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள் (எளிய உதாரணம் : அகத்திக்கீரை) ஆனால் பாகற்காய் பெரிய அளவில் எந்தவொரு எதிர்வினையும் புரிவதில்லை. இருப்பினும் மருத்துவர்கள் கீழ்காணும் ஆங்கில மருந்துகளை (மாலிக்யூல், பிராண்ட் பெயர் அல்ல) உட்கொள்ளும் போது தற்காலிகமாக பாகற்காயை சாப்பிடாது தவிர்க்கலாம் என்கிறார்கள் அவை :
அறுசுவைகளில் கசப்பும் ஒரு சுவையே! சரிசமவிகித உணவில் கசப்புச்சுவை உணவுப் பதார்த்தங்கள் மிக அவசியம் ஆதலால் வாரம் இருமுறை பாகற்காயை தவறாமல் நம் உணவில் சேர்த்துக் கொள்வோம். சாம்பார், காரக் குழம்பு மட்டுமல்லாது பாகற்காயைக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி மிளகாய்த்தூள், சிறிதளவு மிளகுத்தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நிறைய எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கடுகு தாளித்து சாலட் போல் சாப்பிடலாம். பாகற்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம். கசப்புச் சுவை அதிகம் தெரியக்கூடாது என நினைப்பவர்களுக்கு ஊறுகாய் ஏதுவாக இருக்கும். (தொடரும்) பாகற்காய் குறித்த கட்டுரையைப் படித்த வாசகர்கள் தங்கள் கருத்துகளை, பாகற்காய் குறித்து தங்களுக்குத் தெரிந்த சங்கதிகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். படித்த அகல் மின்னிதழ் வாசகர்களுக்கு நன்றி. அடுத்த மாதம், ஒரு கனி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
0 Comments
Leave a Reply. |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |