Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

சிறுகதை – சத்யா GP

8/21/2019

0 Comments

 
மனசு
அதே அடுக்கு மாடிக் குடியிருப்பு ஆனால் சொந்த வீடு (லோனில் இருந்தாலும்!) அந்த உணர்வு காரணமாய் கொஞ்சம் சந்தோஷமாகத் தான் திவ்யா உணர்ந்தாள். மெட்ராஸ் வந்து ஆறு வருடம் ஆகிவிட்டது. 2 வருடம் வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் அடுத்து காதல் திருமணம் கீழ்ப்பாக்கம் டெயிலர்ஸ் ரோட்டில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடித்தனம். அது கூட அவள் சௌகரியத்திற்காக! ரமேஷ் அந்த ஏரியாவில் வாடகை கூடுதல் என்றாலும் வீடு பார்த்தான். நான்கு வருடம் அங்கு குப்பை கொட்டி இதோ இப்போது சொந்த வீடு.
 
சென்னைக்கு வெளியே மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், கிழக்கு தாம்பரம் ரோடு போன்ற பகுதிகளுக்கு நடுவாந்திரமாக ஒரு ஃப்ளாட். ரமேஷின் அலுவலகம் அருகாமையில்! ஏதோ ஒரு சலிப்பு காரணமாக திவ்யா வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டிருந்தாள். ஒரு ஆன்லைன் போடிக் ஷாப் நடத்தி வருகிறாள். குழந்தை இல்லை என்பது அவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு குறை. அது தவிர்த்து எந்தவொரு மனக்கிலேசமும் இல்லை. ரமேஷுக்கு ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டு ஆனால் திவ்யா அதில் ஈடுபாடு காட்டவில்லை. ரமேஷும் கட்டாயப்படுத்தவில்லை.      ​
Picture
மூன்று பெட் ரூம் ஃப்ளாட், இரண்டு விஸ்தாரமான செடித் தொட்டிகள்  வைக்கக்கூடிய அளவுக்கு பால்கனி. முதல் மாடியில் வீடு. வாசலில் கோலம் போடும் அளவுக்கு போதிய இடம். அகலமான வழி கொண்ட மாடிப் பட்டிக்கட்டுகள். லிஃப்ட். இத்தனையும் இருந்த போதும் நம்ம கும்பகோணம் வீடு போல் வராது என திவ்யாவும், நம்ம மதுரை வீடு மாதிரி இல்லை என்று ரமேஷும் நினைப்பதை ஏனோ மாற்றிக் கொள்ளவில்லை.
 
டெயிலர்ஸ் ரோடு போல் இங்கு இல்லை. பக்கத்தில் அண்ணாச்சி கடை, காலை நான்கு மணிக்கு அடுப்பு பற்ற வைக்கும் சேட்டன் டீக்கடை. மார்கழி மாதத்தில் விடிகாலை கலர்ப்பொடி கொண்டு கோலத்தில் ஜொலிக்கும் தனி வீடுகள் என திவ்யா பூரிக்க நிறைய விஷயங்கள் அக்கம்பக்கத்தில் இருந்தன.
 
புது வீடு வந்து மூன்று நாட்கள் வீட்டை ஒழுங்காக்கி, ஷிஃப்டிங் வேலை முழுமையாக முடித்து சமையலை திவ்யா துவக்க, ஆஃபிஸுக்கு லீவ் போட்டிருந்த ரமேஷும் வேலைக்கு கிளம்பிப் போனான்.
 
காலை பத்து மணி. திவ்யா லேப் டாப்பை உயிர்ப்பித்து தனக்கு வந்த மின்னஞ்சல்கள், ஆன்லைன் போட்டிக் தொடர்பான வியாபார விசாரணைகள், பேஸ்புக்கில் சொந்த வீடு புகைப்பட அப்லோட் (மறக்காமல் சொந்த வீடு எப்படி இருக்கு ப்ரெண்ச்? என்னும் தலைப்பு) என சகலமும் முடித்த போது மணி மதியம் ஒன்று முப்பது. சாப்பாட்டை முடித்து அடுத்து மொபைலில் வாட்ஸப் புகுந்து சில விடியோக்கள் பார்த்து சிரித்து, நேரத்துக்கு சாப்பிடு என ரமேஷுக்கு மெசேஜ் அனுப்பி “கடமைகளை” முடித்த போது மணி மாலை மூன்று.
 
கிழக்கு தாம்பரம் சாலையில் கொஞ்சம் தூரம் போய் சின்ன பர்சேஸ் செய்து வரலாம் என யோசித்து தன் ஆக்டிவாவில் புறப்பட்டாள்.
 
சாலையில் பயணிக்கும் போது ஒரு போர்டைப் பார்த்தவுடன் அவள் வண்டியை நிறுத்தினாள். வெளியே இருந்த போர்டில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணைப் பார்த்து டயல் செய்து ‘ஏதோ கேட்டாள்’, எதிர்முனையில் வந்த பதில் அவள் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது. வண்டியைத் திருப்பிக் கொண்டு போய் ஒரு ரெஸ்டாரண்ட்டில் நிறுத்தி ஃபில்டர் காஃபி சாப்பிட்டு. பின்பு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் போய் பர்சேஸ் முடித்து அந்த போர்டு பார்த்த இடத்திற்கு சென்று விவரம் சொல்லி நுழைந்தாள்.
 
உள்ளே ஒரு பெண்மணி இன்முகத்துடன் திவ்யாவை வரவேற்றார். பாந்தமான உபசரிப்பு, அமைதியான முகம் அதைவிட அவரது நோக்கம், அந்த சூழல்...  அனைத்தும் பிடித்துப் போனது. சிறு வயதில் ஒன்றா... இரண்டா எத்தனை நாய்கள்... தெருவில் குட்டி போட்டு... அந்தக் குட்டிகள் தெருவில் பரிதவிக்க... திவ்யாவும் அவள் அம்மாவும் வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்திருக்கிறார்கள்.
 
திவ்யா தன்னை சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டாள். அந்த அமைப்பை நடத்தும் பெண்மணி பேசத் துவங்கினார்.
 
“என்ன காரணம்னு சொல்லத் தெரியல, பிராணிகளுக்காக இதை ஆரம்பிச்சோம். நிறைய நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை குணப்படுத்தி இருக்கோம். நிறை மாசமா இருக்கற நாய்களை கூட்டிட்டு வந்து பிரசவம் பார்த்து வளர்க்கறோம். நாய் குட்டி வளர்க்கனும்னு கேட்கறவங்க நல்லா வளர்ப்பாங்களான்னு தீர விசாரிச்சு உர்ஜிதப்படுத்தின பின்னாடி வளர்க்க தரோம். அடி மாடுக்குப் போற மாடுகளை காப்பாத்தி வளர்க்கிறோம். எருமையும், பசுவும் அவ்வளவு நாள் பால் தருது, காளை மாடும் ஜல்லிக்கட்டு, செனை பிடிக்கன்னு பல விதத்தில் உபயோகமா இருக்கு ஆனால் வயோதிகம்னு வந்தா அதுகளை அடிமாடுக்கு அனுப்ப மனுஷனுக்கு எப்படித்தான் மனசு வருதோ? சுயநலமே மனுஷனுக்கு பிரதானமாகிப்போச்சு”
 
திவ்யாவிடம் பதில் இல்லை. அந்தம்மாவின் வாடிய முகத்தைப் பார்த்து பேச்சை மாற்ற நினைத்தாள். “பப்ளிக் சப்போர்ட் உங்களுக்கு எப்படி இருக்கு மேம்?”
 
“முதல்ல அக்கம் பக்கம் கேலி, கிண்டல்னு இருந்தாங்க. ‘நிறைய இடம் இருக்கு, பெருசா அப்பார்ட்மெண்ட் கட்டி இருக்கலாம் ஆனா நாய், மாடுன்னு வெச்சுக்கிட்டு சாணி, மூத்திரம் அள்ளுறாங்க, போதாதுக்கு அதுங்க சத்தம் நாராசமா இருக்கு,
ஏதோ பெருசா ஆதாயம் இருக்கும்யா காரணம் இல்லாம தோரணம் கட்டுவாங்களா” இப்படி நிறைய நெகடிவ் கமெண்ட்ஸ். அப்புறம் எங்களை புரிஞ்சுக்கிட்டு தன்மையா பழக ஆரம்பிச்சாங்க. இப்போ அக்கம் பக்கத்துல இருக்கறவங்க முதல் பெரிய வி.ஐ.பின்னு நிறைய பேர் ஹெல்ப் செய்யறாங்க” 
 
‘கிரேட் மேம். நாங்களும் நாய் நிறைய வளர்த்திருக்கோம் எங்க தாத்தா இருக்கும் போது வீட்டுல மாடு உண்டு. இதுல உங்களுக்கு கஷ்டமான விஷயமா எதை மேம் சொல்வீங்க?’ தான் வாங்கி வந்த பெடிக்ரே, பிஸ்கெட், பழங்கள் போன்றவற்றை தந்தபடி திவ்யா கேட்டாள்.
 
“தெருவுல இருக்கிற நாயை கொண்டு வந்து வளர்த்துடலாம் அது சங்கடமே இல்லை ஆனா வீட்டுல செல்லமா வளர்த்துட்டு சடார்னு நாயை கொண்டு வந்து எங்க காம்பவுண்ட் உள்ள விட்டுட்டு போய்டுவாங்க, அதுங்களை கவனிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். செல்லமா, பிரியமா வளர்த்தவங்க ஏன் நம்மளை இப்படி அனாதையா தவிக்க விட்டுட்டுப் போனங்கன்னு அதுங்களுக்கு உள்ள கேள்வி இருக்கும், கோபம் இருக்கும், இயலாமை இருக்கும், சொல்ல முடியாத துக்கம் இருக்கும். அதனால மனோ நிலை பாதிக்கப்பட்டு இருக்கும். அதுங்களை சரிப்படுத்தி... அது தான் ரொம்ப கஷ்டம்”
 
“ஐயோ இப்படி ஒரு ஆங்கிள்ல யோசிக்கவே இல்லை மேம்”
 
“தீர்க்க முடியாத சிக்கல்களை, ரணத்தை வஞ்சனையே இல்லாம சகல ஜீவ ராசிகளுக்கும் தரதுல மனுஷனை அடிச்சுக்க முடியாது திவ்யா”
 
இருவரும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு செக் தந்து விட்டு கைகூப்பி திவ்யா விடைபெற்றாள்.
 
இரண்டு நாட்களாக மனம் பல விஷயங்களை அசை போட்டபடி யோசித்தது. சனிக்கிழமை ஆஃபிஸ் லீவ் என லேட்டாக எழுந்த ரமேஷுக்கு காஃபி தரும் போது “ரமேஷ் நீ சொன்ன தத்தெடுக்கற விஷயத்தில் எனக்கும் பரிபூரண சம்மதம் ஆனா?”
 
“என்ன ஆனா?”
 
“அடாப்ட் செய்யற சைல்ட் ஏற்கனவே பேரண்ட்ஸ் கூட வளர்ந்த வாண்டா இருக்கட்டும்”
 
“யூ மீன் அப்பா, அம்மா இருந்து எதானலயோ அவங்க தவறிப் போய்... அப்படித்தானே?”
 
“ஆமா ரமேஷ்”
 
“எனக்கு ஃப்ரெண்ட் ஒருத்தனைப் பாக்கப் போகணும், ஃபார்மலிட்டீஸ் கொஞ்சம் தெரியும், முழுசா க்ளாரிஃபை செய்துக்க ஈவ்னிங் ஒரு ஹோம்க்கு போகலாம்”
 
“இது தான் ரமேஷ் அதிகம் கேள்வி கேட்க மாட்டான் ஆனால் மனசைப் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்க அவனை மாதிரி யாரும் கிடையாது” – திவ்யா மனம் பெருமிதப்பட்டது. ஈவ்னிங் ஹோம் போவது பற்றியே யோசித்தபடி இருந்தாள்.
 
தன் ஃப்ரெண்ட் தினேஷுக்கு போன் செய்தாள். ‘நான் முடிவு செய்துட்டேன்                                                       
அடாப்ஷனுக்கு ஓகே சொல்லிட்டேன்’
 
‘வாவ்... சூப்பர் என்ன காரணம்? எப்படி இந்த மன மாற்றம்?’ 
 
திவ்யா சொல்ல சொல்ல தினேஷ் மிக கவனமாக கேட்டபடி ஒவ்வொன்றாய் உள் வாங்கிக் கொண்டான்.
 
*****************************************
(கல்கி வார இதழில் பிரசுரமானது)
0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    August 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.