நண்பர்களுக்கு வணக்கம். கார்த்திகை மாத அகல் இதழ் நம் பார்வைக்கு. இவ்விதழில் :
அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை “சிம்மாசனம்” அகல் கவர் ஸ்டோரி “பகீர் பிஸ்கெட்டுகள்” கார்த்திக் ஸ்ரீநிவாசன் அவர்களின் “தொடர் – ரெடி 1...2...3... சந்திரயான்ஸ்” பாரியன்பன் நாகராஜன் அவர்களின் “கவிதைகள் பக்கம்” பரிவை சே. குமார் அவர்களின் “அனுபவக் குறிப்புகள் – வாசிப்பு” ராஜ்குமார் பார்த்திபன் அவர்களின் “தொடர் – Cinema நூலகம்” சத்யா GP யின் “ஊர் சுற்றி போஜனம் தேடி” நண்பர்கள் இந்த இதழைப் படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் பேரன்புடன் சத்யா GP ஆசிரியர் – அகல் மின்னிதழ் சிம்மாசனம் தினமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள் முறுகி உருண்டு பெருகி புஜத்தை உடைத்து வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தையூட்டும். கைகட்டி முன்னே நின்றான். ஆசனத்தில் உட்காரமாட்டான். அவன் கையில் பிடித்திருந்த அட்டையை நீட்டினான். ஐந்து நிமிடம் பிந்தி வந்ததால் வருகை நேரம் அட்டையில் சிவப்பாக அச்சடிக்கப்பட்டிருந்தது.
ஆயிரம் பேர் வேலைசெய்யும் அந்த தொழிற்சாலையில் 6 மாதம் முன்னர்தான் வருகை பதிவு மணிக்கூடுகள் இரண்டை நிறுவியிருந்தார்கள். தொழிலாளிகள் நிரையாக வந்து தங்கள் தங்கள் அட்டைகளை மணிக்கூட்டில் செருகி வருகை நேரத்தை பதிவு செய்வார்கள். 5 நிமிடம் பிந்தி வந்தால் 15 நிமிடக் கூலி வெட்டப்படும். 15 நிமிடம் பிந்தி வந்தால் அரைமணி நேரக் கூலி. அரை மணி பிந்தி வந்தால் ஒரு மணிநேரக்கூலி. ஒரு மணி நேரம் பிந்தி வந்தால் தொழிலாளி அன்று உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். . சோமபாலா தினமும் பிந்தி வந்ததால் என் முன்னே நின்றான். அந்த தொழிற்சாலை கொழும்பில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஜிந்தோட்ட என்னுமிடத்தில் இருந்தது. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசம். அங்கே வேலை செய்தவர்களில் நான் ஒருவனே தமிழ் ஆள். நூறு சிங்கள வார்த்தைகளுக்கு மேலே எனக்கு பேசத் தெரியாது. நான் சொல்ல வேண்டியதை அந்த நூறு வார்த்தைகளுக்குள் சுருக்கி சொல்லிவிடவேண்டும். “நீ பிந்தி வருவதால் உன் கூலியை வெட்டிவிடுகிறார்களே. வீட்டிலேயிருந்து ஐந்து நிமிடம் முந்தி புறப்பட்டால் போதுமே. என்ன பிரச்சினை?” என்றேன். சோமபாலா குனிந்து பார்த்தபடியே நின்றான். ஏதோ பேச விரும்பினான் ஆனால் அவனால் முடியவில்லை. அத்தனை பலசாலியான ஒருவன் என் முன்னே கூனிக்குறுகி நின்றது எனக்கே சங்கடமாக இருந்தது. “சரி போ” என்றதும் அவன் போனான். இன்னொரு தொழிலாளி கழுத்தை வளைத்து தலையை மட்டும் நீட்டிப் பார்த்தான். யாரோ பக்கவாட்டில் பிதுக்கி பிதுக்கி நேராக்கியது போல உயரமாகவிருந்தான். வருகை அட்டையுடன் உள்ளே நுழைந்தான். அரசாங்கத்துக்கு சொந்தமான அந்த ஒட்டுப்பலகை நிறுவனம் 20 வருடங்களாக இயங்கியது. தினமும் பெரிய பெரிய லொறிகளில் காட்டு மரங்கள் வந்து குவிந்தன. எந்த நேரமும் மரங்களின் மணம் அங்கே சூழ்ந்திருந்தது. பிரம்மாண்டமான மெசின்களில் மரங்கள் சுழல அவற்றை கூரிய கத்திகள் ஒரு பக்கத்தில் செதுக்க மறுபக்கத்தில் அவைகள் நீண்ட மரத்தாள்களாக விழுந்தன. இந்த இழைகளை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்து 3,5,7,9 மரத்தாள்கள் என ஒட்டி வெவ்வேறு தடிப்புகளில் பலகைகள் செய்யப்பட்டன. அவை வழுவழுப்பாகவும் லேசாகவும் இருக்கும். ஆனால் சாதாரண மரப்பலகைகளிலும் பார்க்க வலுவானவை. ஆகவே விற்பனை அமோகமாகவிருந்தது.. தொழிற்சாலையில் வேலை செய்தவர்களில் அதிகமாகப் படித்தவன் சோமபாலா. ஆனால் அவன் மெசின்களில் வேலை செய்வதில்லை. மரங்களை தரம் பிரிக்கும் பகுதியிலோ மற்றும் மரங்களை மெசினுக்குள் செலுத்தும் பகுதிகளிலோ இல்லை. ஒட்டும்பகுதியிலும் மினுக்கும் பகுதியில்கூட அவனுக்கு வேலை கிடையாது. மரத்துண்டு கழிவுகளை கூட்டி அள்ளும் பகுதியில் வேலை செய்தான் ஆனால் அவனால் நூற்றுக்கு மேல் மரங்களை அடையாளம் காணமுடியும். அவற்றின் குணங்களும் உபயோகங்களும் அவனுக்கு மனப்பாடம். தச்சு வேலையின் நுட்பங்கள் அறிந்தவன். அவனுடைய பரம்பரைத் தொழில் அது ஆனாலும் அங்கே ஆகக் கடைநிலையில் எல்லோருடைய ஏளனத்தையும் சகித்துக்கொண்டு வேலை செய்தான். ஒருநாள் சோமபால அரைமணி நேரம் பிந்தி வந்ததால் அவனுடைய மேலாளர் அவனை மோசமாகத் திட்டினார். “உன் கூலியைத்தான் தண்டனையாகப் பிடிக்கிறார்களே. எதற்காக அவர் உன்னைத் திட்டினார்?” என்று கேட்டேன். “நான் கின்னர சாதி. ஆகக் கீழான சாதி. அப்படித்தான் திட்டுவார்கள்” என்றான். “உனக்கு பழகிவிட்டதா?” என்றேன். கிட்ட வந்து காதோடு தொழிற்சாலையின் பொது மேலாளர் என்ன சாதி தெரியுமா என்றான். எனக்குத் தெரியாது. என்றேன். தேவ சாதி என்றான். அப்படி என்றால்? எங்கள் பழைய அரசர்கள் எல்லாம் தேவ சாதி. ஆக உயர்ந்தது என்றான். பின்னர் இருபக்கமும் பார்த்துவிட்டு “உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? எங்கள் பொதுமேலாளர் ஒரு சிம்மாசனம் செய்கிறார்” என்றான். “சிம்மாசனமா எதற்கு?” “உட்காரத்தான்” பொது மேலாளருக்கு தன் முன்னோர்கள் அமர்ந்தது போல ஒரு சிம்மாசனத்தில் உட்கார வேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. காட்டிலிருந்து வந்து இறங்கும். மரங்களில் சிறந்த மரங்களைத் தேர்ந்தெடுத்து நல்ல சிம்மாசனம் ஒன்றை உருவாக்கச் சொல்லி கட்டளையிட்டிருந்தார். அதற்காகத் தேர்வு செய்யப்பட்டவன் துணிந்து பொய் பேசுகிறவன். அவனை நம்ப முடியாது. அன்னாசிப் பழம் தலையில் விழுந்தது என்று கூசாமல் சொல்வான். அவனுக்கு தச்சுவேலையும் தெரியாது, சிற்ப வேலையும் தெரியாது. பல மரங்களைப் பாழாக்கிவிட்டான். சிம்மாசனத்தின் கால்கள் சிங்கத்தின் முன்னங்கால்கள் போல இருக்கவேண்டுமென்று பொது மேலாளர் சொல்லியிருந்தார். அவனால் கழுதைக் காலைக்கூட உருவாக்க முடியாது.’ “ஒன்றிரண்டு மரங்கள் பொதுமேலாளர் சார்பில் வீணானால் என்ன? பெரிய நட்டம் ஏற்பட்டுவிடுமா?” “நீங்களே இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் வீணாக்குவது சாதாரண மரங்கள் அல்ல. அபூர்வமான மரங்கள். முன்பு எங்களை ஆண்ட வெள்ளைக்காரர்கள் கலுமெதிரிய மரங்களை கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். நூறு வயது மரங்களை அவர்கள் வெட்டியபோது அவற்றுக்கு ஈடாக புதிய மரங்களை நடவில்லை. இங்கிலாந்திலே இந்த மரங்களில் செய்த மேசைகளிலும் நாற்காலிகளிலும் அமர்ந்து உணவருந்துகிறார்கள். இப்படியான மரம் அவர்களுக்கு எங்கேயும் கிடைக்காது. அத்தனை வழுவழுப்பானது; வலுவானது. மினுக்கினால் அதில் முகம் பார்க்கலாம். அவர்கள் அழித்தது போதாதென்று வேலை தெரியாதவர்களும் அழிக்கிறார்கள். கலையம்சம் சிறிதும் இல்லாதவர்கள் மரம் வெட்டும் வேலையை செய்யலாம். மரத்தில் ஒன்றை உருவாக்கும் வேலையை செய்யக்கூடாது. மூளைக்குள் ஏதாவது இருந்தால்தான் அது கலையாக மரத்தில் வெளிப்படும்” சோமபால இத்தனை கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. “என்ன மரம் சிம்மாசனத்துக்கு உகந்தது என்று நீ நினைக்கிறாய்?” “முன்பு ஒரு வெள்ளைக்கார கவர்னர் இருந்தான். அவன் பெயர் சேர் ரோபர்ட் பிரவுண்றிக். இவன் இங்கிலாந்துக்கு காலண்டர் மரங்களை கடத்திப் போய்விட்டான். அவன் வீட்டுக் கதவுகளைக்கூட இந்த வகை மரத்தில்தான் செய்தானாம். அதிலும் மோசமாகவல்லோ இப்பொழுது நடக்கிறது. மரக் கழிவுகளை தினமும் கூட்டி அள்ளும் வேலைசெய்யும் என்னால் இவர்கள் செய்யும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை” நான் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. . “மரங்களில் இத்தனை நேசம் வைத்திருக்கும் நீ எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தாய்?” “வேறு என்ன? மரப்பற்றுத்தான். ஒவ்வொரு நாளும் என்னால் மரங்களுடன் வாழ முடிகிறது. அவற்றின் சரித்திரத்தை படிக்கிறேன். எத்தனை ரகங்கள். 60 அடி 70 அடி உயரமான மரங்கள். 20 அடி சுற்றளவான மரங்கள். 100 வயது வாழ்ந்த மரங்கள். ஆனால் இவை எல்லாம் அழிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இந்த வேலை எனக்கு பொருத்தமானது இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “நீ அநேக கேள்விகள் கேட்கிறாய்” “கேள்விகள்தான் முக்கியம். பதில்கள் அல்ல. உலகம் முன்னேறுவது கேள்விகளால்தான்” “என்ன செய்யப் போகிறாய்?’’ “எனக்கு என்னவோ மரத்தை அழித்துக் கிடைக்கும் காசில் வாழ்வது பிடிக்கவே இல்லை. ஒருநாள் வேலையை விட்டுவிடுவேன்” என்னுடைய தட்டச்சு மெசினில் யூ, கே, எக்ஸ் போன்ற எழுத்துக்கள் அடித்தவுடன் அவை தாளுடன் ஒட்டிவிடும். அவற்றை விரல்களால் கிளப்பிவிடவேண்டும். அந்த எழுத்துகள் வராத வசனங்களாக உண்டாக்கி டைப் அடித்துக்கொண்டிருந்தேன். வேலை முடிந்த சமயம் வாசலில் நிழல் தட்டியது. சோமபாலாவைப் பார்த்து திடுக்கிட்டேன். முகம், முடி, கை, கால் எல்லாம் மரத்தூள் அப்பியிருந்தய்து. ஆளே மாறிவிட்டான். ’உள்ளே வா’ என்றேன். குறுக்காக அறுத்த முழுப் பலகை ஒன்றை தலையிலே தூக்கி வந்திருந்தான். வட்டமான பலகையின் விளிம்புகளை இரண்டு கைகளை நீட்டினாலும் தொடமுடியாது. அதன் சுற்றளவு 20 அடி இருக்கும். மரத்தின் கனத்தில் அவன் புஜங்கள் முறுகி ஏறின. நிலத்தில் கிடத்திவிட்டு ’இது என்ன மரம் தெரியுமா?’ என்றான். ’தெரியாது’ என்றேன். “போபாப். சிங்களத்திலும் தமிழிலும் இதன் பெயர் பெருக்கா மரம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த வகை மரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது. வளையங்களை எண்ணிப் பார்த்தால் வயது தெரியும். இந்த மரத்தின் வயது தெரியுமா? 400 வருடம். 400 வயது மரத்தை வெட்டிவிட்டார்கள். இதைப்போல இன்னொரு மரம் கிடைக்க நாம் 400 வருடம் காத்திருக்க வேண்டும். இதோ இந்த நடுப்புள்ளி இருக்கிறதே இதுதான் இது தோன்றிய காலம். அரசன் விமலதர்மசூரியா ஆண்ட காலம். 400 வருடங்களுக்கு முன்னர் கண்டியை ஆண்டவன். கிறிஸ்தவ சமயத்திலிருந்து புத்த சமயத்துக்கு மாறியவன். பெரிய படையோடு வந்த போர்த்துக்கீசியரை தன் சிறிய படையை திரட்டி தந்திரத்தால் துவம்சன் செய்தவன். அவன் காலத்தில் தோன்றிய மரம் இது. இதோ இந்தப்புள்ளியில் இலங்கையின் கடைசி அரசன் சிறீ விக்கிரமராஜசிங்கன் வேலூர் சிறையில் இறந்தான். இந்தப் புள்ளியில் இலங்கை சுதந்திரம் அடைந்தது.’ இப்படியே சொல்லிக்கொண்டு போனான். “அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியுமா?” “முடியும். அத்துடன் இன்னும் ஒன்று. இந்த மரம் அரிதானது. கடைசிக் கணக்கெடுப்பில் 40 மரங்கள்தான் இருந்தன. அதிலே ஒன்றை இன்று வெட்டிவிட்டார்கள். அதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது. மரங்களை அழித்து வரும் காசில் வாழ்வது வெட்கமாயிருக்கிறது. நான் வேலையை விடப்போகிறேன்” “நீ வேலையை விடமாட்டாய். மரங்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறாய். அவற்றின் அருகாமை உனக்கு தேவை” அவன் சொன்ன மாதிரி சோமபாலா வேலையை விட்டுவிட்டான் என்று நினைத்தேன். ஒருநாள் காலை வருகை அட்டையுடன் எனக்கு முன்னால் நின்றான். “என்ன மறுபடியுமா?” என்றேன். அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் அப்படிப் பேசியதே இல்லை. “நான் என்ன குழந்தைப் பிள்ளையா? திருப்பித் திருப்பி சொல்லி என்ன பிரயோசனம். நான் பிந்தி வந்த காரணம் தெரியுமா? நானும் என் தகப்பனாரும்தான் வீட்டில். எனக்கு ஒருவித உதவியும் இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் வெளியே போய் திரும்பிவர வழி தெரியாமல் தொலைந்துபோய் விடுகிறார். அவருக்கு மறதி வியாதி. நான் காலையில் அவரைக் கழுவி சாப்படு ஊட்டி கட்டிலில் படுக்கவைத்து, முழங்காலில் முத்தமிட்டுவிட்டு, கட்டிலோடு சேர்த்து அவரைக் கயிற்றினால் கட்டிவிட்டு வேலைக்கு வருகிறேன். சிலசமயம் கொஞ்சம் நேரம் பிந்திவிடுகிறது. நான் மாலை போய்த்தான் அவரை விடுதலை செய்கிறேன். மறுபடியும் அவரைக் கழுவி சாப்பாடு கொடுத்து முழங்காலில் முத்தமிட்டு அவரைத் தூங்கவைப்பேன். நான் பிந்தி வந்தால் தண்டனையாக கூலியை பிடித்துவிடுகிறீர்கள். இதிலே என்ன பெரிய நட்டம். நான் மெசின் வேலையா செய்கிறேன். எனக்கு கூட்டி அள்ளும் தொழில்தானே” அந்த நேரம் பார்த்து பிரியங்கா உள்ளே நுழைந்தாள். பொது மேலாளரின் காரியதரிசி. அங்கே வேலை செய்யும் ஒரே பெண். அவளுடைய உடை பழைய காலத்து ராணியின் ஆடைபோல காலையும் தாண்டி நீண்டிருந்ததால் நிலத்திலே அரைந்தது. சேற்றிலே நடப்பதுபோல காலைத் தூக்கி தூக்கி வைத்து நடந்தாள். நான் பாடுபட்டு அச்சடித்த தாளைத் திருப்பித் தந்தாள். யூவோ அல்லது கேயோ தாளில் பதியவில்லை என்று மனேஜர் சுட்டிக்காட்டியிருப்பார். ’டைப்ரைட்டர் பழுதுபட்டுக் கிடக்கிறது’ என்றேன். அவள் ஒன்றுமே பேசாமல் கண்களை எறிந்து கூரையை பார்த்து நாடகத்தனமாக சுழற்றிவிட்டுத் திரும்பினாள். நான் சோமபாலாவிடம் ‘இந்த பெண்ணை உனக்குப் பின்னால் அழைத்துக்கொண்டு போ. அவளுடைய ஆடை நீ கூட்டவேண்டியதை எல்லாம் கூட்டிவிடும்.’ என்றேன். சோமபாலா வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்து குனிந்து சிரித்தான். சிரிக்கும்போதுகூட அவன் புஜங்கள் திரண்டன. அறை மகிழ்ச்சியால் நிரம்பியதும் நான் கேட்டேன். “உனக்கு உதவ யாருமே இல்லையா?” “நான் ஏன் மற்றவர்களிடம் உதவி கேட்கவேண்டும். இது என் கடமையல்லவா? ஒரு மரத்தின் நடுதான் அதன் பலம். வைரமாகவிருக்கும். மரத்தின் மூத்த பகுதியும் அதுதான். ஆனால் மரத்துக்கு வேண்டிய உணவை அதனால் கடத்த முடியாது. மரத்தின் பட்டைகள்தான் உணவை கடத்தும் வேலையை செய்கின்றன. அந்தப் பகுதி இளையது. மனிதர்களும் அதுபோலத்தான். முதியவர்கள் குடும்பத்தின் பலம். இளையவர்கள்தான் வேண்டிய உணவை சம்பாதிக்கவேண்டும்” அதன் பின்னர் அவன் இரவு வேலைக்குச் மாறிவிட்டதாகச் சொன்னார்கள். அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் குறைந்துபோனது. ஒருநாள் இரவு வேளையின்போது லொறியில் வந்த மரங்கள் கட்டு அறுந்து விழுந்து உருளத்தொடங்கின. பள்ளத்தில் அவை வேகம் பிடித்து ஓடியதை சோமபாலா கண்டான். அங்கே வேலை செய்த ஆட்கள்மீது மரம் ஏறினால் ஒன்றிரண்டு பேர் சாவது நிச்சயம். சோமபாலா பாய்ந்து வந்து மரக்குத்தி ஒன்றை குறுக்காகத் தூக்கி எறிந்து விபத்தை தவிர்த்துவிட்டான். அடுத்தநாள் காலை அதுவே பேச்சாக இருந்தது. . அந்த வருசம் தொழிற்சாலை நடத்தும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அவனுக்கு பரிசு கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆட்களின் உயிரை அல்லவா காப்பாற்றியிருந்தான் ஆனால் ஒரு பரிசும் கிடைக்கவில்லை. பொது மேலாளர் என்ன பேசினார் என்ற வதந்தி வெளியே உலாவியது. அவர் சொன்னாராம் ’அவனுக்கு பரிசு கொடுப்பதிலும் பார்க்க ஒரு தமிழனுக்கு கொடுக்கலாம்’ என்று. “நீ பரிசு எதிர்பார்த்தாயா?” என்று கேட்டேன். அவன் சொன்னான் “மரம் உருளத் தொடங்கியபோது நான் ஓடிப்போய் நிறுத்தினேன். அந்த நேரம் பரிசு கிடைக்குமா என்றெல்லாம் யோசித்தது கிடையாது. அவர் அவருக்கு என்ன எழுதி வைத்திருக்கிறதோ அது அதுதான் நடக்கும்” என்றான். நான் ஒன்றுமே சொல்லவில்லை. “நான் வேலையை விட்டுவிடப்போகிறேன்” என்றான். நான் திரும்பி பார்க்காமல் நடந்தேன். சோமபாலா வேலையை விடவில்லை. இரண்டு வாரம் கழித்து நான்தான் என் வேலையை துறந்தேன். சாமான்களை பயணப் பெட்டியில் அடுக்கிக்கொண்டு பஸ்ஸுக்கு புறப்பட்டபோது, பாதி வழியில் சோமபாலாவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவன் இரவு வேலையில் இருந்தான். தொழிற்சாலை இரவு நேரத்தில் முற்றிலும் வேறு மாதிரி காட்சியளித்தது. வாசலில் இரண்டு பெரிய வருகைப் பதிவு மணிக்கூடுகள் நின்றன. காலை நேரத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நின்று அடித்துப்பிடித்துக்கொண்டு தங்கள் நேரங்களை அட்டைகளில் பதியும் காட்சி நினைவுக்கு வந்தது. நான் சென்ற நேரம் அங்கே ஒருவரும் இல்லை. சோமபாலாவைத் தேடிக்கொண்டு போனேன். வழக்கமான இடத்தில் அவனைக் காணவில்லை. மெசின்கள் காது செவிடாகும் ஒலியை எழுப்பின. கட்டடத்தின் ஒதுங்கிய சின்ன மூலையில் தனியாளாக அவன் வேலை செய்தான். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான். “உன்னை பழைய இடத்தில் தேடினேன்” என்றேன். என் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான். “பல மாதங்களையும், அபூர்வ மரங்களையும் வீணடித்துவிட்டார்கள். இப்பொழுது என்னிடம் வேலை வந்திருக்கிறது. பழைய கண்டி அரசர்கள் தங்கள் அரண்மனைகளை அலங்கரிப்பதற்கு விரும்பி பயன்படுத்தியது இந்த மரம்தான். இதன் பெயர் ஹுலான்ஹிக். எப்படியோ வெள்ளைக்காரனிடமிருந்து இது தப்பிவிட்டது. இதிலிருந்து எழும்பும் நறுமணம் அரண்மனையையே நிறைக்கும். கறுப்பு என்பது நிறமே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். மரத்தை மினுக்க மினுக்க அதன் மினுமினுப்பு கூடிக்கொண்டே போகும். இதைப்போல ஒளிவிடும் கறுப்பு மரம் உலகத்திலேயே கிடையாது” கைப்பிடியில் இரண்டு வாய் திறந்த சிங்கங்கள் தத்ரூபமாக நின்றன. கால்களும் பாய்வதற்கு தயாரான சிங்கத்தின் கால்கள் போலவே அமைந்திருந்தன. ஒரு குழந்தைப் பிள்ளையை அரவணைப்பதுபோல மெதுவாக அந்த கைப்பிடிகளை மினுக்கினான். அது கறுப்பு ஒளியை வீசியது. அவன் வேலையில் ஆழ்ந்துபோய் இருந்தான். கலை என்று வந்துவிட்டால் எல்லாம் மறந்துபோகும் போலும். “இதைப்போன்ற நார்வரிகளை எங்கேயும் பார்க்க முடியாது. அவற்றின் உள் அணுத்துகள்களின் ஒழுங்கமைதி அற்புதமானது. மரங்களின் அரசன் இதுதான்” “சிம்மாசனமா செய்கிறாய்?” எங்குமே பார்க்காத ஒரு பார்வை அவனுக்கு வந்தது. “நான் நாற்காலிதான் உருவாக்குகிறேன். ஒரு மன்னன் உடகார்ந்தால்தான் அது சிம்மாசனம் ஆகும்” “நான் வேலையை விட்டுவிட்டேன். உன்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான் வந்திருக்கிறேன்” என்றேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. குனிந்து மிகக் கவனமாக மினுக்கிக்கொண்டு இருந்தான். ஏதோ அவன் மூளையின் உள்ளே ஓடியது. ஆனால் சொல்லாக வடிவம் பெறவில்லை. அவனுக்கு கிடைக்கவேண்டிய கூலியை தாறுமாறாக வெட்டிய ஒருவரிடம் என்ன பேச்சு என்று அவன் நினைத்திருக்கலாம். நான் கொழும்புக்கு போகும் கடைசி பஸ்ஸைப் பிடித்தேன். மூன்று மணிநேரம் பயணம் செய்யவேண்டும். கட்டிலில் கட்டப்பட்டு கிடக்கும் கிழவர் ஒருவரின் ஞாபகம் மனதில் வந்தது. ஆறாம் ஜோர்ஜ் மன்னர் அமர்வதற்கு தகுதியான உத்தமமான சிம்மாசனம் கறுத்து மினுங்கி உருவாகும் காட்சி தொடர்ந்தது. சிவப்பு மையில் நேரம் அச்சடித்த அட்டைகளை வைத்துக்கொண்டு வரிசையாக தொழிலாளர்கள் நிற்கும் காட்சி அடுத்து. தன் பாதை வெளிச்சத்தை தானே உண்டாக்கிக்கொண்டு பஸ் இருளை நோக்கி ஒளிக்கோடாக ஓடிக்கொண்டிருந்தது. ஒருவர் வாழ்நாளில் அருமையாகக் கிடைக்கும் என் நடுநிசி மணித்தியாலங்கள், தன் தகப்பனாரிலும் பார்க்க மரங்களை நேசிக்கும் ஒருவனைப்பற்றி சிந்திப்பதிலேயே கழிந்தது. பகீர் பிஸ்கெட்கள் சமீபத்தில் என் அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்க சென்றிருந்தேன். அம்மாவுக்கு சில உபாதைகள் இருந்தன. மருத்துவர் சில பரிசோதனைகள் செய்து மருந்துகள் எழுதித் தந்தார். மேலும் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும், எந்த காய், கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி தினசரி எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒரு அட்டவணையும் எழுதித் தந்தார். அதில் தேநீருடன் எளிதாக ஜீரணமாகக் கூடிய பிஸ்கெட்களை சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி கடைக்கு சென்று பிஸ்கெட்டுகள் வாங்க முயற்சித்தேன். பொதுவாக பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் மற்றும் பார்லே கிராக் ஜாக் பிஸ்கெட் என்றால் எனக்கு இஷ்டம். அம்மா மேரி பிஸ்கெட்டை விரும்பி சாப்பிடுவார். திகட்டித் திணற வைக்கும் இனிப்பு மேரி பிஸ்கெட்டில் இல்லை என்பது அவர் அபிப்பிராயம். மருத்துவர் சில கட்டுப்பாடுகள் விதித்ததால் ஒவ்வொரு பிஸ்கெட் பாக்கெட்டையும் எடுத்து அதிலுள்ள உட்பொருட்கள் (Ingrediants) என்ன? அதில் உள்ள ஊட்டச்சத்துகள் (Nutrition Facts) என்ன என்று நிதானமாக கவனித்தேன். அதை கவனித்த பின்பு உடனே மனம் “பகீர் பிஸ்கெட்கள்” எழுத வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டது.
“பிஸ்கெட் சகல வயதினரும் விரும்பி உண்பது அதை பகீர் என்கிறேனே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முன்பெல்லாம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் பெரிதாக எந்த விவரங்களையும் குறிப்பிட மாட்டார்கள். அவர்கள் விளம்பரத்தில் உள்ள வாசகமே அந்தப் பொருளுக்கான தர அளவீடு போல் இருந்தது. அன்புமணி ராமதாஸ் அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது பாக்கெட் உணவுகளில் உள்ள உறையில் எந்தெந்த பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன?, அதில் உள்ள ஊட்டச்சத்துகள் என்ன? போன்ற விவரங்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று சட்டம் இயற்றியதால் ஓரளவு நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் இந்த சட்டத்தில் இருந்து எப்படி லாவகமாக உணவுத் தயாரிப்பாளர்கள் தப்பிக்கிறார்கள் என்பது தனிக் கதை அதை இங்கு விவரிக்க ஆரம்பித்தால் ஒரு தனி கவர் ஸ்டோரி ஆகும் என்பதால் எழுத வந்த விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். “பகீர்” இதற்கு என்ன காரணம்? காரணம் இல்லை காரணிகள்... Antioxidant INS 322 Artificial Flavour like Ethyil Vannilin Refined Palm Oil Refined Palmolein Refined Wheat flour (Maida) Nature Identical Flavouring Substances Raising Agents 503, 500 Dough Conditioners Emulsifiers Sodium Artificial sweetener like Sucralose… மேலே உள்ள பட்டியல் ஒரு துளி மட்டுமே, இது போல் பல “பகீர்” உட்பொருட்கள் நாம் தினமும் சாப்பிடும் பிஸ்கெட்டுகளில் உள்ளன. மைதா மாவு, மிதமிஞ்சிய ஜீனி, பாமாயில், செயற்கை சுவையூட்டி, செயற்கை நிறமூட்டி, செயற்கை இனிப்பு உட்பொருள், மாவை மிருதுவாக்கும் கண்டிஷனர், எமுல்ஸிஃபையர், வாசனைக்கு சேர்க்கப்படும் செயற்கை ரசாயனங்கள் (உதாரணம் வெனிலா ஃப்ளேவர், பைன் ஆப்பிள் ஃப்ளேவர், பட்டர் ஸ்காட்ச் ஃப்ளேவர் போன்றவை) இவற்றை கலக்கி திரவ நிலை மாவுக் கலவையாக்கி பேகிங் ஓவன் துணையுடன் பல வடிவ அச்சுகளில் வைத்து வட்டம், சதுரம், முக்கோணம் என பல தினுசாக பெறும் பொருளைத் தான் நாம் பிஸ்கெட் என்று வாங்கி சாப்பிடுகிறோம். ஏராளமான பிஸ்கெட்டுகள் ரகங்கள், விளம்பரங்கள் மூலம் வாங்கியே தீர வேண்டும் என குழந்தைகளை அடம் பிடிக்க வைத்து நம் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. பெரியவர்களையும் விட்டு வைப்பதில்லை. ஷுகர் ஃப்ரீ, ஃபேட் ப்ரீ, ஸீரோ பர்சென்ட் கொலஸ்ட்ரால், ஓட்ஸ் சத்து செறிந்தது, எளிமையான செரிமானத்திற்கானது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு இதுவே ஆரோக்கியம் என்ற கருத்தியல் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. நாமும் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குகிறோம். சில பிஸ்கெட்டுகளை மட்டும் அது எப்படிப்பட்டது என என் புரிதலைப் பகிர்கிறேன் நீங்களே படியுங்கள். நான் குறிப்பிடும் அனைத்தும் பிஸ்கெட் தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்களின் பேக்கில் தந்துள்ள விவரங்களின் அடிப்படையில் மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறேன். முதலில் க்ரீம் பிஸ்கெட் ரகங்களைப் பார்ப்போம், பிஸ்கெட் தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இந்த ரக பிஸ்கெட்டுகளை விற்பனை செய்கின்றன. பெயர்கள் வெவ்வேறு என்றாலும் உட்பொருகள் மற்றும் ஊட்டச்சத்துகள், இரண்டும் பொதுவாக ஒரே மாதிரி தான் இருக்கின்றன 3 முதல் 5 கிராம்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உட்பொருள் விகிதங்களில் வேறுபாடு இருந்தாலும் அனைத்தும் ஒரே அடிப்படையில் தான் தயாராகின்றன. பிரிட்டானியா அந்நிய நாட்டு நிறுவனம் அதாவது விதேசி, பதஞ்சலி நம் நாட்டு நிறுவனம் அதாவது சுதேசி, பதஞ்சலி தயாரிப்புகள் சிறப்பானவை என முன்முடிவுடன் உள்ளவர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள அந்நிறுவனத்தின் இரு தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் : பதஞ்சலி க்ரீம் ஃபீஸ்ட் மில்க் வெனிலா பிஸ்கெட்டுகள் – இதில் உள்ள உட்பொருட்கள் :
அடுத்து இந்த பிஸ்கெட்டில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள் : 100 கிராம் பிஸ்கெட் என்ற அளவு –
அதாவது 34 விழுக்காடு ஜீனியும், ஒட்டு மொத்தமாக சுமார் 70 விழுக்காடு மாவுச்சத்து மட்டுமே இந்த பிஸ்கெட்டில் உள்ளது. மேலும் நார்ச்சத்து சுமார் 3.5 கிராம் என்னும் அளவிற்கு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். பிஸ்கெட்டை உண்பதன் மூலம் நம் உடலுக்கு சேரும் விஷயங்கள் இவை மட்டுமே ஆனால் இந்த பிஸ்கெட்டை எப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்? “இந்த பிஸ்கெட்டில் மைதா, கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பு (Trans fat) பூஜ்ஜிய விழுக்காடு அதாவது மூன்றும் அறவே இல்லை. கூடுதல் நார்ச்சத்தும் ஊட்டச்சத்துகளும் நிரம்பிய பிஸ்கெட்” 100 கிராம் பிஸ்கெட்டில் எத்தனை விழுக்காடு நார்ச்சத்து என்பதைப் பார்த்தீர்கள். மற்றொரு விஷயம் கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பு இல்லை என்றார்கள் அல்லவா? அதில் ஒரு சின்ன தகவல் பாமாயிலில் அதிகளவு கெட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. உட்பொருட்கள் எப்படிப்பட்டவை என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் நாம் அறிந்த பொருட்கள் என்ற வகையில் ஜீனி, பாமாயில், ஸ்டார்ச் போன்றவற்றால் நம் உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள். சின்ன உதாரணம் : ஒரு நாளைக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக இந்த பிஸ்கெட்டை சிறுவர்/சிறுமியர் உண்டு வந்தால் டீ, காபி, பால், இனிப்பு, அரிசி சாதம் மற்றும் பிற உணவுகள் நீங்கலாக மாதம் சுமார் ஒரு கிலோ ஜீனி அவர்கள் உடலில் சேருகிறது என்பதே உண்மை. மாவுச்சத்து ஒரு மாதத்திற்கு சுமார் 2.1 கிலோ. சோடியம் மெடா பை சல்ஃபேட் – நம் உடலில் உள்ள இரைப்பையில் பல உபாதைகளை உண்டாக்கும். மேலும் முதுகுவலி, வாந்தி. மயக்கம், தலை சுற்றல், வயிற்றுப் போக்கு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிஸ்கெட் பதமாக மிருதுவாக அதே சமயம் உறுதியாக தயாராக இந்த ரசாயனத்தை சேர்க்கிறார்கள். டெக்ஸ்ட்ரோஸ், இன்வர்ட் ஷுகர் (செயற்கை தித்திப்பு சுவை கூட்டி) – இந்த ரசாயனத்தை எளிமையான ஜீனி (Simple sugar) என்றழைக்கிறார்கள். அதீத தித்திப்பை செயற்கையான முறையில் தரும் தன்மை கொண்டது இது. உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்தும் திறன் கொண்டது. உண்பது அளவுக்கு அதிகமானால் உடலில் சேமித்துவைக்கப்பட்ட அனைத்து ஊட்டச்சத்துகளின் சாதகங்களையும் நீர்த்து போகச் செய்யும் அளவிற்கு சக்தி கொண்டது இது. வெறும் அதீத தித்திப்பு சுவை என்னவெல்லாம் செய்கிறது என்று பாருங்கள். அது மட்டுமல்ல நுரையீரலில் வீக்கத்தையும், நீரையும் கொண்டு சென்று நுரையீரலை பாதிக்க செய்யும் சக்தியையும் இந்த ரசாயனம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதை அனைத்தையும் தாண்டி முக்கியமான விஷயம் வெனிலா. சுத்தமான வெனிலா பீன்ஸில் இருந்து எடுக்கப்படும் வெனிலா எக்ஸ்ட்ராக்ட்டின் விலை 8 அவுன்ஸ் ரூபாய் 1500/- பத்து ரூபாய் பிஸ்கெட்டுக்கு இத்தனை செலவிடுகிறார்களே என ஆச்சரியப்படாதீர்கள். வெனிலா மாதிரி என்று சொல்லக்கூடிய எதில் வெனிலில் என்ற ஃப்ளேவர் வடிவ ரசாயனம் வெனிலாவின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதன் விலை 1 கிலோ சுமார் 800/- ருபாய் மட்டுமே! விலை மலிவான இந்த ரசாயனம் வழங்கும் பக்க விளைவுகள் : படை, சொறி, சிரங்கு போன்ற தோல் உபாதை நோய்கள் மற்றும் பல்வேறு கண் நோய்கள். இந்த ஃப்ளேவரின் வீரியம் அதிகம் என்பதால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், மந்த நிலை போன்ற பக்க விளைவுகளையும் தருகிறது. வெனிலா, பட்டர் ஸ்காட்ச், ஆரஞ்ச், பைன் ஆப்பிள் என்று பல ரூபங்களில் வரும் க்ரீம் பிஸ்கெட்கள் அனைத்தும் வீரிய செயற்கை ஃப்ளேவர் கொண்டே தயாரிக்கப்படுகின்றன பதஞ்சலியின் தயாரிப்புகள் அனைத்தும் சரியானது அல்ல என்று நான் விவரிக்க எழுதவில்லை. மேலும் நிறுவன பேதமின்றி சந்தையில் விற்கப்படும் க்ரீம் பிஸ்கெட்டுகள் பெரும்பாலானவை இதே உட்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதே சமயம் பதஞ்சலி நிறுவனத்தின் தேங்காய் எண்ணை (Virgin coconut oil) பாத்திரம் துலக்கும் கட்டி (Dish wash bar) போன்ற பொருட்கள் மிகச் சிறப்பானவை, தரமானதும் கூட! க்ரீம் பிஸ்கெட் என்றாலே அப்படித்தான், மேரி பிஸ்கெட் லைட்டா இருக்கும் அது நல்லது என்ற கட்சி உறுப்பினர்களுக்காக அடுத்த கட்ட தகவல்கள் பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கெட் உட்பொருட்கள் (Ingredients) :
கேரமெல் நிறமூட்டியில் சல்ஃபைட்டும் உண்டு சில வகையான கேரமெல் நிறமூட்டியில் கார்சிநோஜெனிக் கெமிக்கல் (4 – methylimidazole) காணப்படுவதும் உண்டு. கார்சிநோஜெனிக் என்றால் புற்று நோய் காரணி என்று பொருள். இதில் உள்ள ஊட்டச்சத்து என்ன என்று பார்ப்போமா? 100 கிராம் பிஸ்கெட்டில் மாவுச்சத்து மட்டும் 78 கிராம் அதில் ஜீனியின் அளவு 22 கிராம். ப்ரோட்டீன் 8 கிராம், நல்ல கொழுப்பு (Saturated fatty acids, Mono Unsaturated & poly unsaturated fatty acids) 9.2 கிராம். எனர்ஜி – 443 kcal (கலோரி) மற்றபடி இரும்புச்சத்து, கால்ஷியம், அயோடின் வைட்டமின் B1, B2, B3, B6, B12 & வைட்டமின் E போன்றவை மில்லி கிராம் & மில்லி செண்டி கிராம் என்று பூதக் கண்ணாடியை வைத்து தேடும் அளவிற்கு இடம் பிடித்துள்ளது. லைட்டானது, ஆரோக்கியமானது என்று பரவலானவர்களால் நம்பப்படும் மேரி பிஸ்கெட்ட்டில் (ஐடிஸி மேரி, இங்கிலீஷ் மேறி, பார்லே மேரி, பதஞ்சலி மேரி என சகலமும் ஒரே மாதிரி தான்) நூறு கிராம் அளவைப் பார்த்தால் அதில் சுமார் எண்பது விழுக்காடு வெறும் மாவுச்சத்து மட்டுமே! பார்லே ஜி என்ற பிஸ்கெட் இந்திய நிறுவனத்துடையது. சுதேசி தயாரிப்பு. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட போராளி சமூகத்தினரிடம் குறுகிய காலத்திற்கு அனுதாபத்தை கணிசமான அளவு சம்பாதித்த நிறுவனம். இதில் 100 கிராம் பிஸ்கெட்டில் மாவுச்சத்து சுமார் 79 கிராம் அதில் ஜீனியின் அளவு சுமார் 26 கிராம். அதே பாமாயில், இன்வர்ட் ஷுகர் ஸிரப்... சகல உட்பொருட்களும் உண்டு. ஓட்ஸ் பிஸ்கெட், உண்மையாக சக்கரை, மைதா இல்லாத பிஸ்கெட் என ஐடிஸி நிறுவனமானது ஃபார்ம்லைட் ஓட்ஸ், ஃபார்ம்லைட் டைஜஸ்டிவ் ஃபைபர் ஆல் குட் என்ற பெயரில் இரு பிஸ்கெட் பிராண்டுகளை வெளியிடுகின்றன. ஓட்ஸ் வகையில் உலர் திராட்சை, பாதாம் & சாக்லேட் என்ற உட்பிரிவுகளும் உண்டு. மைதா, ஜீனி அறவே இல்லை என்றும் பகிரங்கமாக விளம்பரப்படுத்துகின்றன என்று முழங்குபவர்களுக்காக இந்தப் பகுதி. முதலில் ஆல் குட் வகையை பார்ப்போம் : கோதுமை மாவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது (சுமார் 54%) செயற்கை தித்திப்பு சுவை கூட்டியில் பாலியோல் என்ற ரசாயன சர்க்கரை சாராயம் (Sugar alchol) சேர்க்கப்பட்டிருக்கிறது. பெரியவர்களே ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிறார்கள். இந்த பிஸ்கெட்டில் எத்துனை அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரம் பேக்கில் இல்லை. கேரமல் சல்ஃபைட் அமோனியா – நிறமூட்டியானது இந்த பிஸ்கெட்டிலும் காணப்படுகிறது. துவக்கத்தில் தாவர எண்ணை என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தது. அது பாமாயிலா அல்லது வேறா என்று சொல்லவில்லை. தற்போது வரும் ஸ்டாக்குகளில் பாமாயில் என்றே குறிப்பிடுகிறார்கள். ஃப்ளேவர்களில் எந்த ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிடவில்லை. பொத்தம் பொதுவாக பால், வெண்ணை போன்றவற்றிக்கு செயற்கை ஃப்ளேவர் ரசாயனம் சேர்ப்பதாக சொல்லி இருக்கிறார்கள். கார்ன் ஃபேளேக்ஸ் சுமார் 700 மில்லி கிராம் என்ற அளவிற்கு தான் சேர்க்கப்பட்டிருக்கிறது. 100 கிராம் பிஸ்கெட்டில் 67 கிராம் என்னும் அளவிற்கு மாவு சத்து உண்டு. அதில் இயற்கையான சக்கரை அளவு 6.5 கிராம். பாலியோல் என்ற உட்பொருள் இந்த பிஸ்கெட்டில் இடம் பிடித்திருக்கையில் added sugar இல்லை என்று எந்த அடிப்படையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்று கெமிஸ்ட்ரி வித்தகர் யாரிடமாவது விசாரிக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அனைத்தும் பிற பிஸ்கெட்டுகள் போலத்தான் இருக்கின்றன. ஓட்ஸ் வகையிலும் அதே மாதிரியான உட்பொருட்கள் ஆனால் பாமாயில் மற்றும் ஓட்ஸ் சுமார் 16% என சொல்லி இருக்கிறார்கள். ஓட்ஸ் அளவு என்ன என்று தனியாக குறிப்பிடவில்லை. மேலும் ஜீனி மற்றும் திரவ க்ளுகோஸ் என இரண்டும் இந்த பிஸ்கெட்டில் இருக்கிறது. 482 கலோரிகள், 67.4 கிராம் என்னும் அளவிற்கு மாவுச் சத்து அதில் 26.1 கிராம் ஜீனி என்பதை எல்லாம் பார்க்கும் போது இந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்ட பின்பு செரிமானம் ஆக சிறப்பு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது. இத்தனை கலோரி, மாவுச்சத்து மற்றும் சக்கரை அளவு உள்ள மைதா அல்லாத பிஸ்கெட்டிற்குப் பதிலாக மைதா பிஸ்கெட்டே பெட்டர் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லக்கூடும். முக்கிய குறிப்பு : பிஸ்கெட் என்றாலே குழந்தைகளுக்கானது என்று சொல்வார்கள் ஆனால் இந்த ஆல் குட் பிஸ்கெட் குட் ஃபார் ஆல் கிடையாது. பாலியோல் (சர்க்கரை சாராயம்) உட்பொருள் குழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டியது என்பதால் பிஸ்கெட் பாக்கெட்டிலே குழந்தைகள் இந்த பிஸ்கெட்டுகளை சாப்பிடக் கூடாது என்று தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். கோதுமை மாவு, வெல்லம், பசு நெய் அல்லது வெண்ணை ஏலக்காய் பொடி இவற்றின் துணையுடனோ அல்லது கோதுமை மாவிற்கு பதிலாக பல தானியங்களை சேர்த்து அரைத்த சத்து மாவு கொண்டு பிஸ்கெட் தயாரிக்க முடியாதா? செயற்கை நிறமூட்டிகள், செயற்கை தித்திப்பு சுவை கூட்டிகள், பிற ரசாயனங்கள் இல்லாது பிஸ்கெட் தயாரிக்க முடியாதா? முடியும், செலவு கூடுதலாகும், ஷெல் லைஃப் குறையும். இதனால் தான்... மேற் சொன்ன விதத்தில் பிஸ்கெட்டுகளே இல்லையா என்று கேட்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கொழுவியை சொடுக்குங்கள். தரமான பிஸ்கெட்டை கண்டுகொள்ளுங்கள். https://www.amazon.in/gp/product/B01N7AEJ7A/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=fittub-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01N7AEJ7A&linkId=d99fdd17c49d8b5cac7a76c95f3d8fdf **************** பாகம் 3 : வெற்றியா தோல்வியா? சமீபத்தில் எனக்கு Whatsapp மூலம் ஒரு meme வந்தது. அதனைப் படித்தவுடன் சற்று மனம் கலங்க நேர்ந்தது, காரணம் அந்த meme சொன்ன விஷயம் ரஃபேல் விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் பூஜை போட்டது குறித்துதான் என்றாலும், அதில் ஒரு வரி சேர்த்திருந்தார்கள் – அப்படித்தான் பூஜை போடுவோம், ஏன், செத்துப்போன சந்திரயான் 2க்கு திவசம் கூட பண்ணுவோம் – என்றது அந்த meme. சந்திரயான் – 2 வெற்றியா தோல்வியா என்று அறிவியல் உலகம் பேசியதை விட மீடியா அதிகம் பேசி இருக்கிறது. மீடியா இது தோல்வி என்றே எழுதி வருகிறது, இந்தியா என்றல்லாமல், உலக மக்களில் பலர் அதனையே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கட்டுரை மூலம் தெளிவுபடுத்த விரும்புவது ஒன்றே ஒன்று தான் – அறிவியலாளர்கள் எவரும் சந்திரயான் – 2 தோல்வி என்று நினைக்கவில்லை, மீடியா தான் அப்படி மீண்டும்-மீண்டும் எழுதிக் கொண்டு இருக்கிறது. இப்போது அது பற்றிக் கொஞ்சம் பேசிவிடலாம். சந்திரயான் – 2 என்பது பத்து வருடங்களுக்கு முன் இந்தியா அனுப்பிய சந்திரயான் – 1 இன் நீட்சி என்பது நமக்குத் தெரியும். சந்திரயான் 1 உலகை திரும்பிப் பார்க்க வைத்த விஷயம்! அதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவானது. அதனுடன் சில வெளிநாட்டு அமைப்புகளின் கருவிகளும் சென்றது, மற்றும், என்னென்ன ஆய்வுகள் செய்வதற்காக அனுப்பப்பட்டது என்று பகுதி – 1 இல் ஒரு அறிமுகம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அனுப்பப்பட விண்கலம் தான் சந்திரயான் - 2. அந்த விண்கலத்துடன் சேர்த்து விக்ரம் என்று பெயரிடப்பட்ட தரையிறங்கு கலம் ஒன்றும், பிரஞான் என்று பெயரிடப்பட்ட ரோவர் (rover – தானியங்கி திரிவாகனம்) ஒன்றும் அனுப்பப்பட்டது. சந்திரயான் – 1 தான் நிலவில் நீர் இருப்பதை முதல்முறையாக ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சந்திரனில் நீர் திரவ விடிவில் நேரடியாக பரப்பின் மீது இருக்கக் கூடிய சூழல் இல்லை, ஆனால், நீர் சூரிய ஒளி படாத இடங்களில், பாறைகளுக்கு உள்ளும், அடியிலும் பனிப் பாறைகளாக உறைந்த நிலையில் இருக்கலாம் என்று நிறுவியது சந்திரயான் – 1. அதன் தொடர்ச்சியாக நீர் பற்றிய ஆராய்ச்சிக்காக, வடிவமைக்கப்பட்டதுதான் சந்திரயான் – 2. இந்த விண்கலம் எடுத்துச் சென்ற தரையிறங்கு கலம், முதலில் ரஷ்யாவின் உதவியுடன் செயப்படுவதாக இருந்தது. அப்படி செய்திருந்தால் இந்த சந்திரயான் – 2, சென்ற 2013 அல்லது 2014 ஆம் ஆண்டே செலுத்தப்பட்டு இருக்கும். ஆனால், ரஷ்யா இந்தியாவுடன் சேர்ந்து தரையிறங்கு கலம் செய்யும் முடிவினை கைவிட்டதும், இந்தியாவே தனியாக வடிவமைக்க முற்பட்டது. இந்த தரையிறங்கு கலத்தினை வடிவமைக்க ஐஎஸ்ஆர்ஓவுக்கு மூன்றாண்டு காலம் ஆனது! இந்த தரையுறங்கு கலம் தான் சந்திரயான் – 2 இன் பலவீனமான பகுதி! இந்தியாவிற்கு ஒரு கலத்தை மென்னிறக்கம் செய்ய வைத்த முன்னனுபவம் இல்லை என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்றாண்டுகள் என்பது, அதுவும் முதல் முறை, ஒரு மென்-தரையிறங்கு கலம் வடிவமைக்க மோதுமான காலம் அல்ல என்பது இந்த தொழில்நுட்பப்பிரிவில் பணிபுரியும் சர்வதேச அறிவியலாளர்களின் கருத்தாகும். அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இது போன்ற ஒரு திட்டத்தினை செயல்படுத்த இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனது! வடிவமைப்பிற்குப் போதுமான நேரம் இல்லாமை மற்றும் முன் அனுபவம் இல்லாமை ஆகியவற்றை கருத்தில் கொண்டே விக்ரம் தரையிறங்கு கலம் பற்றி நாம் பேச வேண்டும். மேலும், அந்த தரையிறங்கு கலமும், அதனுள் இருந்த ரோவரும் சந்திரயான் – 2 திட்டத்தில் ஒரு 10% பகுதி என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விக்ரம் மற்றும் பிரஞான் கலங்களின் ஆயுள் 2 வாரங்கள் மட்டுமே, ஆனால் சந்திரயான் – 2 இன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
விக்ரம் தரையிறங்கு கலமும், பிரஞான் ரோவரும் சில ஆய்வுகளை செய்ய வடிவமைக்கபப்ட்டு இருந்தாலும், இந்தியாவின் முக்கிய நோக்கம், தன்னால் ஒரு கலத்தை ஒரு வேற்றுக் கோளில் மென்னிறக்கம் செய்ய முடியும் என பறைசாற்றுவது தான். இது ஒரு அரசியல் காரணத்திற்காக செய்யப்பட்டது. அது குறித்தான விளக்கங்களை பகுதி – 2 இல் பார்த்தோம். இந்த அரசியல் முடிவு கூட, கடைசி சில வினாடிகளில் ஏற்பட்ட கோளாறால் தான் (கடைசி சில வினாடிகள் தான் மிகவும் முக்கியமான தருணம் என்பதும் குறிப்பிடத்தக்கது). அதுவரை, அதன் செயற்பாடுகளில் எந்தக் குறையும் இல்லை என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும். சந்திரயான் – 2 கலம் (orbiter) சந்திரனை சரியான பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கிறது, அதன் எரிபொருள் பயன்பாட்டினை மிகவும் திறமையாகக் கையாண்டு அதன் ஆயுட்காலத்தை 7 ஆண்டுகள் வரை இந்தியா நீடித்து வைத்து உள்ளது. இது தான் இந்த திட்டத்தின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள இருக்கும் கலம் – இது தான் சந்திரனை துல்லியமாக map செய்யவும், நீர் மூலக் கூறு ஆராய்ச்சிகளையும் செய்யப் போகும் கலம். இந்தக் கலம் வரையப் போகும் map, இதுவரை வரையப்பட்ட சந்திரனின் mapகளை விட மிகவும் துல்லியமானதாக இருக்கும். நாசா அனுப்பிய Lunar Orbiter கொடுத்த வரைபடங்களை விட, சந்திரயான் – 2 கொடுக்கப் போகும் வரைபடம் அதிக விவரங்களைக் கொடுப்பதாக இருக்கும். குறிப்பாக நீர் எந்தெந்த வடிவங்களில், எங்கெங்கு, எந்த அளவிற்கு இருக்கிறது, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதனை துல்லியமாக அளிக்கவிருக்கிறது. சந்திரயான் – 2 கொடுக்கப்போகும் தரவுகளை வைத்தே சந்திரனுக்கு மனிதர்கள் இனி செல்லபோகும் திட்டங்கள் வடிவமைக்கப்படும். சந்திரயான் – 2, தன் பணிகளை முடிக்கும் முன்னரே, சந்திரனில் மனிதன் காலனி அமைக்கப் பயன்படும் பல அறிய தகவல்களை நிச்ச்யம் தரும். =============================================================== சந்திரனில் நீர் இருப்பது குறித்தான ஆய்வுகள் 1961 முதலே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் எடுத்துக் கொண்டு வந்த மண் மற்றும் கற்களில் சில நீர் மூலக்கூறுகள் இருந்தன, ஆனால் அது மனிதர்கள் எடுத்துக் கொண்டு வந்ததாலும், பூமிக்குள் இருப்பதாலும் ஏதாவது கலந்து (contamination) அதில் நீர் உருவாகி இருக்கலாம் என யூகித்தார்கள். பின்பு 1976 ஆம் ஆண்டு ரஷ்யா அனுப்பிய Luna 24 எனும் விண்கலம் கொண்டு வந்த கல் மற்றும் மண் மாதிரிகளில் 0.1% அளவிற்கு நீர் மூலக்கூறுகள் இருந்ததை ரஷ்யாவின் ஆய்வறிக்கை சொன்னது. பின்பு அமெரிக்கா 1994 ஆம் ஆண்டு அனுப்பிய Clementine probe, சந்திரனின் இருட்டுப் பகுதிகளில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சமிக்ஞைகளை அனுப்பினாலும் அது ஒரு முடிவுக்கு வர முடியாத படி, தெளிவற்று இருந்தது. 1998 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய Lunar Prospector கலமும் சரி, 1999 ஆம் ஆண்டு அனுப்பப்பட Cassini–Huygens கலமும் சரி, 2005 ஆம் ஆண்டு அனுப்பப்பட Deep Impact கலமும் சரி, தெளிவற்ற, முடிவுக்கு வர முடியாத தரவுகளையே கொடுத்தன. 2007 ஆம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய Kaguya கலமும் நீர் இருப்பை உறுதி செய்யவில்லை. சீனா அனுப்பிய Chang'e 1 விண்கலம், அங்கு நீர் பாறை வடிவில் இருக்கலாம் என யூகிக்க வைக்கும் தரவுகளை கொடுத்தது. இந்தியாவின் சந்திரயான் 1 தான், சந்திரனின் பரப்பிலேயே அதனை கண்டுபிடித்து சொல்லி உள்ளது, அதனால் அதற்குண்டான இடம் கிடைத்தது. (தொடரும்) கரும்பலகையில் கனிமரத்தை வாஞ்சையுடன் வரைந்திருக்கிறாள் பவித்ரா குட்டி. அவள் பார்த்துப் பார்த்து வரைந்து முடித்த மரத்தின் கீழ் சில கனிகள் விழுந்து கிடக்கின்றன. ******** சாலையில் தனித்துப் பயணிக்கும் ரயில் பூச்சி விபத்தில்லாமல் எவ்வளவு தூரம் கடக்குமென்று நீங்கள் யாரும் யோசிக்காத வேளையில் அதை அந்தப் பக்கமாய் கடத்திவிட்டு வந்திருக்கிறேன் நான். ************* வாசித்துக் கொண்டிருந்த
புத்தகத்தில் அடையாளத்திற்கென இடைச்செருகலாய் வைத்திருந்த நூலிழையில் வெகு நேரமாய்ச் சிக்கிச் சிணுங்குகிறது ஒரு சொல். *********** பல பருவங்கள் காத்திருந்து ஏமாற்றிய கனிமரத்தை இன்னமும் நான் முழுதாய் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். வாசிப்பு வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்தானே..? வாசிப்புக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய தூரம் இருந்தது... அது படிக்கும் காலம் முதல் இப்போது வரை ஏற்ற இறங்கங்களுடன் நகர்ந்தாலும்... பெரும்பாலும் தூரமாகவேதான் இருந்து வந்தது... சமீபத்தில்தான் சற்று பக்கத்தில் வந்திருக்கிறது என்பது கூட மகிழ்வான விஷயம்தானே. பள்ளியில் படிக்கும் போது வீட்டில் அம்மாவின் விருப்பமாய் 'ராணி' மட்டுமே வாங்கப்படும். செவ்வாய்க்கிழமை கடைகளுக்கு வந்ததும் வாங்கி வர வேண்டும். அதில் அட்டை டூ அட்டை எல்லாரும் வாசிப்போம். சின்னம்மா வீட்டில் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலி மாமா முதல் வாராந்திர, மாதப் பத்திரிக்கைகள் நாவல்கள் எல்லாம் வாங்குவார்கள். அங்கு சென்றால் புத்தகங்கள் அள்ளி வரலாம் என்பதால் இரு ஊருக்கும் இடையில் இருக்கும் கண்மாயைக் கடந்து சென்று புத்தக மூட்டையுடன் திரும்பி வருவோம். அப்போதுதான் க்ரைம், பாக்கெட் நாவல்களின் தீவிர வாசிப்பாளன் ஆனது. கல்லூரியில் படித்தபோது தமிழ்த்துறையோடு சிறிதான தொடர்பு இருந்ததாலும் நண்பன் முருகன் தழித்துறையில் படித்ததாலும் பழனி ஐயாவுடனான நட்பு, உறவாய் மாறி அவரின் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, அங்குதான் பெரிய பெரிய புத்தகங்களாய் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஐயா இருந்தால் பேச்சு பல நல்ல விஷயங்களுக்குள் நுழைந்து பயணிக்கும்... அவர் இல்லைன்னா ஒரு பெருங்கூட்டத்தின் அரட்டைதான் அங்கு நிறைந்திருக்கும்... எல்லாருக்கும் காபி, சாப்பாடென அம்மாதான் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்... என்ன கூட்டம் இங்கே... ஐயா இல்லை போங்க என்று ஒரு வார்த்தை எப்போதும் அவர் வாயில் இருந்து வந்ததேயில்லை... என் பிள்ளைகள் என்றுதான் சொல்வார். ஐயா இருந்தாலும் இல்லையென்றாலும் உபசரிப்பு ஒன்றுதான்... அதில் எப்போதும் மாற்றமிருக்காது.
வீடெங்கும் நிறைந்து கிடக்கும் புத்தகத்தில் எதையும் எடுத்துப் படிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது... நல்ல புத்தகமெனில் ஐயாவே இதை வாசிங்க என்று சொல்லிக் கொடுப்பார். சில நேரங்களில் நமக்கே நமக்காகவும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிடுவார். இந்த வாசிப்பின் நீட்சியாய் கல்லூரி நூலகத்தில் பாடப்புத்தகம் தவிர்த்து சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் என புத்தகங்களை எடுத்து வாசிக்கவும் முடிந்தது. தோழி சுபஸ்ரீ கல்லூரி நூலகத்தில் உணவு இடைவேளை மற்றும் ஆசிரியர் வராத பாடவேளைகளில் தன்னார்வ சேவை செய்ததால் விருப்பப்பட்ட புத்தகத்தைச் சொன்னால் அவர் எடுத்துக் கொடுப்பார். வாசித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தால் அடுத்த புத்தகம் வரும். அதன் பின்னான நாட்களில் வாசிப்பு என்பது மீண்டும் வெகு தூரமாகிப் போனது... பெரும்பாலும் வேலை, வீடு எனச் சென்னையில் வாழ்க்கை நகர்ந்து செல்ல, எழுத்தும் வாசிப்பும் சொல்லாமல் கொள்ளாமல் இனிதே காணாமல் போனது, அமீரகம் வந்த பின்னும் வாசிப்பிலும் எழுதுவதிலும் நாட்டமில்லை... ஏன் வாழ்க்கையிலும் கூட நாட்டமில்லாமலே இருந்தது. கோவில்களில் தினசரி பூஜை எப்படி நேராநேரத்துக்கு நடக்குமோ அதுபோலானது வாழ்க்கை... அதிகாலை விழிப்பு... குளியல்... அலுவலகம்... மதிய உணவு உண்ணக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாத வேலைப்பளு... மாலை அறைக்குத் திரும்புதல்... ஊருக்குப் பேசுதல்... பெரும்பாலும் வருத்தத்தை மட்டுமே சுமக்க வைக்கும் பேச்சு... )வலிகளை இறக்கி வைக்க முடியாமல் வருத்தங்களைக் கூடுதலாய்ச் சுமக்க மட்டுமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கையில் எப்போது நிம்மதியான பேச்சுக் கிடைக்கும்) சமையல்... சாப்பாடு... மனசை ஆசுவாசப்படுத்த பாடல்கள் அல்லது படம்... உறக்கம்... மீண்டும் அதிகாலை விழிப்பு... என தினசரி வாழ்க்கை கோவில் பூஜை நேரம்போல சுருங்கிப் போனது. வெள்ளிக்கிழமை என்பது விடுமுறை தினமான போதும் இதுநாள் வரை அதிக நேரம் தூங்க வேண்டுமென மற்றவர்களைப் போல் நினைத்ததேயில்லை... அதே அதிகாலை விழிப்பு... குளியல் என்பது இப்போதுவரை அப்படியே... சில நாட்கள் மற்றவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதால் மிஞ்சிப்போனால் எழாமல்.... தூங்காமல்... அரைமணி அல்லது ஒரு மணி நேரம் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழல்... இருப்பினும் வாட்ஸப்பும் முகநூலும் முந்திக் கொள்ள, அவற்றின் பின்னே படுத்தபடி நகர ஆரம்பித்து விடுகிறேன். இங்கு வியாழன் இரவு முதல் சனி விடுமுறை என்றால் சனி இரவு வரை கொண்டாட்டம்தான்... குடி மனிதர்களைக் குடித்து மகிழும் நேரம் அது... ரசித்துக் குடிக்க ஆரம்பித்து அவர்களை குடி ரசித்துக் குடிக்கும் வரை தொடரும்... ஒரு வாரத்துக்கான சரக்கை ஒரே நாளில் குடித்து... ஒட்டகத்தைப் போல சேமித்து வைத்து அடுத்த வாரம் முழுவதும் ஓட்ட வேண்டும் என்பதாய்... குடித்துக் குடித்துக் குடித்துக் கொண்டேயிருப்பார்கள்... அரசியலும் அந்நிய நாட்டு நிகழ்வுகளும் பேச்சாய் ஆரம்பித்து சண்டையாய் முடியும்... சில நேரங்களில் அடிதடி, கத்துக்குத்து, கொலை வரை செல்லும். அதிகமான குடியால் எழ முடியாமல்... நடக்க முடியாமல்... போட்டது போட்டபடி அதே இடத்தில் படுத்தாலும் மறுநாள் காலை மணக்க மணக்கக் குளித்து மறுபடியும் குடிக்க ஆரம்பிப்பார்கள். இது ஆறுதலில்லாத வாழ்க்கை... குடி ஒன்றே வலி போக்கும் மருந்தென நினைத்துத் தன்னையே அழித்துக் கொள்பவர்கள் இங்கே 90%க்கு மேல்தான். இந்த வாழ்க்கை குறித்து நிறைய எழுதலாம்... இது வாசிப்புக்கான பகிர்வு என்பதால் மாறிய குடிகாரப்பாதையிலிருந்து மறுபடியும் வாசிப்பு என்னும் வளமான பாதைக்குள் நுழைவோம். அமீரகம் வந்த பின் வாழ்க்கை மீதான வெறுப்பு அதீதமாய் துளிர்விட்ட தருணத்தில்தான் வலைப்பூ (BLOG) அறிமுகமானது. அதில் எழுத ஆரம்பித்த பின்தான் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்தேன்... உண்மையிலேயே மனசுக்குப் பிடித்த, வாழ்க்கைக் கதைகள் இங்குதான் எழுத்தாய் மலர்ந்தன... தனிமை இந்த எழுத்தில் தன்னிறைவு பெற ஆரம்பித்தது. கிராமத்து மனிதர்கள் என் கதைக்குள் வலம் வந்தார்கள்... வாழ்க்கை மீதான வெறுப்பு, குடும்பத்தைப் பிரிந்த விரக்தி, அறை... அலுவலகம் என்ற வழக்கமான வாழ்க்கை என எல்லாவற்றையும் இந்த மனிதர்கள்தான் மறக்கச் செய்து எழுத்தின் மூலம் கொஞ்சமாய் எழ வைத்தார்கள். அப்போதும் வாசிப்பு என்பது தூரமாகவே இருந்தது ஆனால் சினிமா மொழி கடந்து இன்னும் நெருக்கமானது. இணையத்தில் புதிய படங்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க நானும் அதிகமாய் சினிமா பார்த்தேன். வலைப்பூ வழி நட்பான சகோதரர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ் குமார் மற்றும் நிஷாந்தினி அக்கா மூவரும் புத்தக வாசிப்பில் இறங்க, அவர்களின் பின்னத்தி ஏராய் நானும் இறங்கினேன். பெரும்பாலும் பிடிஎப் பைல்களாகத்தான் அவர்களிடமிருந்தும் மற்ற நண்பர்களிடமிருந்தும் பெற்றேன். வேலைக்குப் போக, வர பேருந்தில் 40 நிமிடத்துக்கு மேலாகும் என்பதால் அதுவே வாசிக்கும் நேரமானது. கல்கியின் பொன்னியின் செல்வனின் ஆரம்பித்து உடையார், கடல்புறா என பாலகுமார், சாண்டில்யனில் பயணித்து ஏறக்குறைய சாண்டில்யனின் எல்லா வரலாற்று நாவல்களையும் வாசித்து முடித்து, அதைப் பற்றி விவாதித்தல்... வலைப்பூவில் எழுதுதல் என சில மாதங்கள் வாசிப்பின் பின்னே நகர்ந்தது... மகிழம்பூப் போல... மல்லிகைப்பூப் போல... வாசிப்பு அத்தனை வாசமாய் இருந்தது... உண்மையில் வாசிப்பு மகிழ்வைக் கொடுத்தது... வலிகளை மெல்லக் குறைத்தது... குறிப்பாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் வாசிப்புக்குள் மூழ்கி மெல்லக் கரைந்து போனதும் பின்னர் ஒரு தொய்வு... வாசிப்பு மீண்டும் தூரமாய்த் தள்ளி நிற்க ஆரம்பித்தது. அமீரக எழுத்தாளர் குழுமத்துக்குள் இணைந்த போது மீண்டும் வாசிப்புக்குள்... பிடிஎப், புத்தகமெனக் கலந்து கட்டி வாசிக்க ஆரம்பித்தோம்... ஆம் அதிகமான வாசிப்பாளர்கள் ஒரு இடத்தில் இருப்பதும் வசதிதான்... இதைப்படி.. அதைப்படி எனச் சொல்லிச் சொல்லி புத்தகங்கள் கிடைத்தன... வாசிப்பு நிறைய நட்பைக் கொடுத்தது... வாசிப்பு நிறைய விஷயங்களை அள்ளிக் கொடுத்தது... ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமாய்... எத்தனை கதைகள்... எவ்வளவு தகவல்கள்... என்ன மாதிரியான எழுத்துக்கள்... வாசிப்பு தொடரத் தொடர ஒவ்வொருவரின் எழுத்தும் வெவ்வேறு விதமாய் மனசுக்குள் தங்கியது. மீண்டும் வாசிப்பில் களம் காண நண்பர்களே முக்கியக் காரணமாக அமைந்தார்கள். கிராமத்துக் கதைகள் என்றால் அதனோடு ஒன்றி வாசித்துப் பழகியவன் வரலாற்றுப் புதினங்களையும் ரசித்து வாசிக்க ஆரம்பித்தவன் நமக்கு சரிவராதென்றாலும் தகவல்கள் நிறைந்த நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. தங்களின் எழுத்துக்காக அந்தந்த இடங்களுக்கே சென்று வருடக் கணக்கில் தங்கி, விவரங்களைச் சேகரித்து எழுதப்பட்ட நாவல்களை வாசிக்கும் போது ஒரு நாவலுக்காக இத்தனை மெனக்கெடலா என்று ஆச்சர்யமும் அவர்கள் மீதான மரியாதையும் கூடிப் போனது. சிலர் வரலாறுகளை ஆராய்ந்து... தீவிரமாய்த் தேடிப் படித்து... விவரணைகளுடன் எழுதியிருப்பதை வாசிக்கும் போது என்னால் எழுத முடியும் என்பதைவிட என்னால் இத்தனை விவரங்களுடன் எழுத முடியும் என்று காட்டும் அவர்களின் திறமை மீதும் தனி மரியாதை உண்டாகியது. சிலரோ இணையம் சொல்வதை உண்மையென நம்பும் விதமாய் புனைவு எழுதுகிறார்கள்... சிலரின் கதைகள் காமத்துக்குள் காவிரியாய்ப் பாய்ந்து வெளிவருகிறது... சிலரோ வாழ்க்கையைப் படம்பிடித்து எளிய மனிதர்களை நம் கண்முன்னே நடமாட விடுகிறார்கள்... எத்தனை வண்ணமான எழுத்துக்களை இப்போதெல்லாம் வாசிக்க முடிகிறது... இதையெல்லாம் கொடுத்தது எழுத்து மூலம் கிடைத்த நட்புக்களே. இரா.முருகவேளின் முகிலினி வாசித்தபோது பஞ்சாலையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களுமெனச் சுற்றி வந்த மனசு, கரன் கார்க்கியின் மரப்பாலம் வாசித்தபோது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்குள் நகர்ந்து சயாம் - பர்மா மரப்பாலம் கட்டும் பணியில் ஜப்பானிடம் மாட்டிய மக்கள்பட்ட துயரக்கடலுக்குள் நீந்திய மனசை, முஹம்மது யூசுஃப்பின் மணல் பூத்த காடு சௌதிக்குள் கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக வரலாற்றுச் செய்திகளுடன் சுற்றிக் காட்டி அமைதிப்படுத்தியது... ஆசுவாசப்படுத்தியது. சோளகர் தொட்டி வீரப்பன் வேட்டை என வனக் காவலர்கள் பழங்குடி மக்களைச் சித்திரவதை செய்ததை, அவர்கள் அனுபவித்த நரகவேதனையை நெஞ்சுக்குள் நிறுத்தி இன்னும் என்னை அதிலிருந்து மீளமுடியாமல் வைத்திருக்கிறது... உண்மையில் இந்த நாவலுக்காக அந்த மக்களோடு சில காலம் தங்கியிருந்த ச.பாலமுருகன் அவர்கள் பாராட்டுக்குரியவர். வீரப்பன் வேட்டை மலைவாழ் பழங்குடி மக்களை என்னவெல்லாம் செய்தது என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஒரே நாவல் இது. இன்னும் ஒருமுறை படிக்க முடியாத வலி என்றாலும் மீண்டும் அந்த மக்களுடன் வலம் வர வேண்டும் என்ற ஆசையிருக்கத்தான் செய்கிறது. நான் வாசித்தவரை என்னை அதிகம் பாதித்த நாவல் இது. இன்னும் மீளமுடியவில்லை... மாதியும் சித்தியும் இன்னமும் கண் முன்னே கதறுகிறார்கள். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்... மிக அற்புதமான புத்தகம்... சல்லிக்கட்டு நடக்கும் இடம் மட்டுமே கதைக்களம்... மாடும் அதைப் பிடிப்பவனுமே பிரதானம்... எத்தனை விவரிப்பு... என்ன அழகான காட்சிப்படுத்துதல்... சிறிய நாவல் என்ற போதும் சிறப்பான நாவலாய்... இப்படி ஒரு நாவல் எழுதினால் என்ன என்று தோன்ற வைத்த எழுத்து... குறிப்பாக வட்டார வழக்கில்தான் முழு நாவலும் நகர்கிறது என்றாலும் நம்மை வாடிவாசலில் கட்டிப் போட்டு விடுகிறது என்பதே உண்மை. சில நாள் முன்பாக முஹம்பது யூசுஃப்பின் இரண்டாம் நாவலான கடற்காகம் வாசித்தேன்... டெல்மா தீவுக்குச் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் கதையின் மனிதர்களும் அவர்கள் பேசும் இனப்பிரிவினை, சிரியா யுத்தமென வாசிக்கும் போது நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாவலில் எழுத்தாளரின் எழுத்துநடை மெருகேறியிருக்கிறது. தகவலைச் சொல்வதிலும் ஒரு கலை இருக்கத்தான் செய்கிறது. கதையின் போக்கில் சொல்லத் தெரிந்தவர்களின் எழுத்து வீரியம் பெற்று நம் முன்னே உயர்ந்து நிற்கிறது. தகவல்களுக்காக அதிக சிரத்தை எடுக்கும் போது கதை மாந்தர்களுக்குப் பதில் எழுத்தாளனே நம்மிடம் நேரடியாகச் சொல்வது போல் மாறிவிடும் போது அதன் வீரியம் குறைந்து உயரம் தடைபடுகிறது. எது எப்படியென்றாலும் அந்த எழுத்தாளர்களின் தேடுதலுக்காவேனும் அவர்களைக் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறலாம்... தப்பேயில்லை... அந்தத் தேடுதலில் 1% கூட என்னிடம் இல்லை... நான் தேடுவதெல்லாம் கிராமத்து மனிதர்களின் மனசை மட்டுமே. அப்படியான எழுத்துத்தான் வாய்த்திருக்கிறது. கலைஞரின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்த போது அந்த எழுத்து என்னைத் தொடர்ந்து வாசி என ஈர்த்தது. கலைஞரைப் பிடிக்காது என்றாலும் அந்தத் தமிழ் என்னமாய்க் கொஞ்சி விளையாண்டிருக்கிறது... வார்த்தை விளையாட்டுக்களும் அதில் அடக்கம். சிறப்பான தமிழ் புத்தகமும் முழுவதும் விரவிக் கிடந்தது. கலைஞரின் மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. விதவிதமான கதைகள்.... வித்தியாசமான எழுத்துக்கள்... பலதரப்பட்ட கதைக்களன்கள் என வாசிப்பின் பாதை நீண்டு கொண்டே போனாலும் வாசிப்பின் மூலம் நம் பார்வை விரிந்து கொண்டு போக ஆரம்பிக்கிறது... நிறையத் தேடல்களை நம்முள்ளே பதியம் போட்டு வைக்கிறது... அடுத்து என்ன... அடுத்து என்ன... என வாசிப்பின் வாசலைத் திறந்து வைக்கிறது. நம் எழுத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரத் தோன்றுகிறது. வாசிப்பு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... இப்போதெல்லாம் எதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. விடுமுறை தினங்களில் சினிமா என்னிடமிருந்து விலகி, வாசிக்கச் சொல்கிறது... சில புத்தகங்கள் எடுத்ததும் முடித்தால்தான் கையிலிருந்து விலகுவேன் என்கிறது. வாசிப்பை நான் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை விட வாசிப்பு என்னை நேசிக்க மட்டுமில்லாமல் இழுத்து அணைத்துக் கொண்டு விட்டது. அந்த அணைப்புக்குள் பல புத்தகங்களை மாறி மாறி வாசித்துக் கொண்டே இருக்கிறேன். வெக்கையின் அறுபது பக்கங்களைக் கடந்து காட்டுக்குள் திரிந்தபடி, பெயரிடப்படாத புத்தகத்தின் ஆறாவது கட்டுரையில் அமிழ்ந்து கிடக்கிறேன்... காடோடியின் பின்னே நூறு பக்கங்களைத் தாண்டி ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் மரம் வெட்டச் செல்லும் மனிதர்களுடன்... இடையே நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கதையை... வாசிப்பு உங்களின் பார்வையை விரிவாக்கும்... நிறைய கற்றுக் கொடுக்கும்... வாசியுங்கள்... நிறைய... நிறைவாய்.... வாசிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடமாட்டீர்கள். ஆம்... வாசிப்பு என்பது சுகானுபவம்தான். நரைகூடிக் கிழப்பருவமெய்திய பின்னர் தளும்பிப் பெருகுகிற உன்னதக் காதலை எத்தனை சினிமாக்கள் பேசியிருக்கிறது? இளைய காதலை விட வாழ்வின் இறுதிக் காலக் காதல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அது எத்தனை பரிபூரணமானது என்பதையும் 2012ல் வெளியான ஒரு பிரெஞ்சு படம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. வாழ்வின் கடைசி கட்டங்களில், மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முதிய ஆதர்சமான தம்பதிகளின் இறுதிக்கால காதலை மனம் வலிக்க வலிக்கச் சொல்லி முடிக்கிறது Amour. அந்தக் காதல் தன் கடைசி நிமிடங்களில் மோட்சம் பெறுகிற போது விழிகளில் கசியும் நீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. Amour என்றால் நேசம் என்று பொருள். தமிழில் இத்தகைய முயற்சிகள் மிகக் குறைவு. கொஞ்ச வருடங்கள் முன்பு வந்த "பண்ணையாரும் பத்மினியும்" இந்த முதுமைக் காதலை இலேசாக சொல்ல முயன்றது ஆனால் அது இந்தக் கருவைச் சொன்ன முழுமையான படமென்று சொல்ல முடியாது. வாழ்வு எனும் நெடும் பயணத்தில் எல்லாமுமாய் நம்மோடு இணைந்து கொண்ட ஓர் உறவின் அத்தனை அம்சங்களையும் ஜார்ஜ் மற்றும் ஆனா கதாபாத்திரங்களின் வழியாக யதார்த்தமாகப் பதிகிறார் இயக்குனர் Michael Haneke. இயல் வாழ்வில் நாம் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். எவ்வளவோ பேரால் நன்மையடைகிறோம். எவ்வளவோ பேருக்கு அன்பைக் கொடுக்கிறோம். எவ்வளவோ பேரால் ஏமாற்றப்படுகிறோம். நம் வாழ்வோடு சம்பந்தப்பட்ட நிறைய பேர், இவ்வளவு ஏன் நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய நிறைய பேரைக் கூட ரயில் சிநேகமாய் நினைத்து அவர்களைக் கடக்கப் பழகியிருக்கிறோம். இவை தாண்டி நம்மோடு நெடுந்தூரம் பயணிக்கும் உறவு மனைவி அல்லது கணவன். அந்த உறவுகளின் அர்த்தத்தை, முக்கியத்துவத்தை இந்தத் திரைப்படம் கற்பிக்கிறது என்றே சொல்லலாம். படத்தின் துவக்கத்திலேயே ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக புகார் போகிறது. தீயணைப்புத்துறை, போலீஸ் சகிதமாக அந்த வீட்டைத் திறந்து பார்க்கிறார்கள். அப்போது அந்த வீட்டின் குறிப்பிட்ட ஒரு அறையில் பூக்கள் அலங்காரத்தின் மத்தியில் வயதான பெண்ணின் பிணம் ஒன்று இருக்கிறது. யார் அந்தப் பெண்? என்ன நடந்தது எனும் பின்னணியை விவரிக்கிறது Amour. முதிய தம்பதிகள் ஜார்ஜ் (Jean Louis Trintignant) ஆனா (Emannuelle Riva) ஜோடி பாரிஸ் நகரில் வசிக்கிறார்கள். இவர்களின் ஒரு மகள் ஈவா (Isabelle Hubbert) வெளியூரில் வசிக்கிறாள். இந்த தம்பதிகள் முன்னாள் இசைக்கலைஞர்கள். இவர்களின் பழைய மாணவனொருவனின் இசைவாசிப்பை பார்த்த தினத்தன்று வீட்டிற்கு வந்து ஒன்றாக உணவருந்துகின்றனர். திடீரென்று ஆனா Stroke ஏற்பட்டுச் சிலை போல் ஆகிறாள். உடனடியாய் மருத்துவமனை கொண்டு செல்கிறார் ஜார்ஜ். அங்கே இதய அடைப்பை நீக்குகிற சிகிச்சையில் தவறு நிகழ பக்கவாதத்தாலும் பாதிக்கப்படுகிறாள். வீட்டிற்குத் திரும்பும் மனைவி இனி மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் செல்ல வேணாம் என ஜார்ஜிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள். ஆனாவை ஜார்ஜ் கவனிக்கத் துவங்குவதிலிருந்து இந்தத் தம்பதிகளின் அன்பு வானம் விரியத் தொடங்குகிறது. படத்தின் இறுதிக்கட்ட காட்சி நம் மனதில் அதிர்வலைகளை உண்டாக்கி பிறகு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமைதியாய் விசும்ப வைக்கிறது. சொல்லொண்ணாத் துயரம் ஒன்று மனம் கவ்விக் கொள்ளுகிறது. முதியவர்களின் ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கிய பய(ண)ங்கள். முதுமை தன் ரேகைகளை அவர்கள் உடலில் படரவிடத் தொடங்கி சில நாட்களில் குழந்தைமையும் அவர்களின் மீது படர்ந்து விடுகிறது. உடல்நிலை இயலாத சூழ்நிலையில் ஆனாவும் ஒரு குழந்தை போல ஜார்ஜிடம் நடந்து கொள்கிறாள். ஜார்ஜ் ஒரு குழந்தையை விடவும் அதீத அக்கறையோடு தன் மனைவியை கவனித்துக் கொள்ளுகிறார். மகள் ஈவா அம்மாவை மருத்துவமனை அழைத்துச் செல்ல வலியுறுத்தியும் ஜார்ஜ் அதை மறுத்து தானே அத்தனை தேவைகளையும் நிறைவேற்றுகிறார். தன் முதுமையையும் மீறி ஜார்ஜ் மனைவிக்குச் செய்யும் பணிவிடைகள் தரும் தாக்கம் படத்தில் ஏராளமாய் நிறைந்து கிடக்கிறது. முதலில் படம் மிக மெதுவாக நகர்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஆனால் இம்மாதிரிப் படங்களுக்கு வேகமோ பரபரப்போ தேவையில்லை என்பதையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். காட்சிகளில் இருக்கும் வலு படத்தின் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பதும் குறிப்பிட வேண்டிய அம்சம். உதாரணமாய் இந்த முதிர் தம்பதிகளின் முன்னாள் மாணவன் ஒருவன் இவர்களைத் தேடி வீடு வருகிறான். இவர்களின் நிலை அறிந்து துயர் கொள்கிறான். பிறகு ஆனாவுக்குப் பிடித்த இசையை வாசித்துக் காட்டுகிறான். மிக நெகிழ்ச்சியாக அமைந்த காட்சி இது. அதே போல ஆனா உணவருந்த மறுக்கும் சமயம் ஜார்ஜ் அவரையும் மீறி ஆனாவை அடித்து விடுகிறார். இந்த மாதிரி வலுவான காட்சிகளால் படத்தை நிறைத்திருப்பதால் படத்தில் வேகம் ஒரு பொருட்டாய்த் தெரியவில்லை. வேகம் தேவைப்படுகிற களமும் இதுவல்ல. இயக்குனர் இவ்வளவு அழகாய் இந்தக் காதலையெல்லாம் காட்சிப்படுத்திவிட்டு உச்சகட்ட அதிர்ச்சிக்கு நம்மை தயார் படுத்துகிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். படத்தின் இறுதியில் ஒரு முடிவை பார்வையாளர்களுக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர். அது என்ன என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 2012ல் வெளியான இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் "தங்கப்பானை" விருது, கோல்டன் க்ளோப் விருது உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 55 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. சென்னை 10வது சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை பிரிவில் இப்படத்தில் நடித்த 85 வயதான Emmanuelle Riva நாமினேஷன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குனரான Michael Haneke ன் பிற படங்களான The piano teacher, Time of the Wolf, Cache, The White Ribbon அனைத்தும் மனித மென் உணர்வுகளைக் கையாண்டு வெளிவந்த படங்களே.
இதில் சுவாரஸ்யமான இன்னொரு தகவல் என்னவென்றால் இவரது அனைத்து படங்களின் பிரதான கதாபாத்திரப் பெயர்கள் ஜார்ஜ் மற்றும் ஆனாதான். படம். Amour மொழி. பிரெஞ்சு நடிகர்கள் : Jean Louis Trinticntant Emmanuelle Riva Isabelle Hubbert படம் வெளிவந்த ஆண்டு : 2012 (தொடரும்) காலை ஆறு மணிக்கு அந்த உணவகம் இயங்க ஆரம்பிக்கிறது. இட்லி, வடை, வெண் பொங்கல், பூரி கிழங்கு, தோசை, கல் தோசை, இடியாப்பம் போன்ற உணவுப் பதார்த்தங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். முற்பகல் பதினொன்றரை மணி வரை காலை உணவு கிடைக்கும். சாம்பார், பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்தரைத்த சட்னி, தக்காளிச் சட்னி போன்றவை காலை போஜனத்திற்கு. இடியாப்பத்திற்கும் சட்னி சாம்பார் தான். டீ காபி போன்ற பானங்கள் விற்பனை கிடையாது. மதியம் கடை திறப்பதில்லை மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு ஆரம்பமாகும் உணவு விற்பனை இரவு பதினோரு மணி வரை நீடிக்கிறது. இட்லி, தோசை, கல் தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா, வெண் பொங்கல் போன்ற உணவு வகைகளை மாலை நேரத்தில் விற்பனை செய்கிறார்கள். காலை போன்றே சாம்பார், பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்தரைத்த சட்னி, தக்காளிச் சட்னி. இத்துடன் சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு குருமாவும் உண்டு. இது போன்ற உணவகங்கள் பல உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்? மேற்குறிப்பிட்ட உணவகத்தில் கெட்டிச் சட்னி என்றொரு வஸ்துவே கிடையாது. அவர்கள் அரைத்து டேபிளில் சாப்பிட வருபவர்கள் எடுத்து உண்ண வசதியாக பாத்திரத்தில் வைக்கும் பொட்டுக்கடலை சட்னியே கெட்டிச்சட்னி போன்றே இருக்கிறது. உருளை, கேரட், பீன்ஸ் போன்ற காய்கள் நர்த்தனமாடும் அட்டகாசமான குருமா இவர்கள் கடையில் கிடைப்பது வாடிக்கை. இரவு உணவுக்கு தக்காளி காரச்சட்னி சாப்பிட்டாலும் நள்ளிரவு உறக்கம் கலைந்து நெஞ்செரிச்சலில் அவதியுறும் துன்பம் அறவே இருக்காது. இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்? தோசை, சப்பாத்தி, பரோட்டா என தருவிக்கும் மாஸ்டர் சுறுசுறுப்பின் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தோசை கேட்டு காத்திருப்பவர்களின் பொறுமையை சோதிப்பதே இல்லை. தான் அரசாளும் அடுப்புகளின் மீதுள்ள கல்லில் உடனுக்குடன் மாவு ஊற்றி தோசை வார்ப்பது, கோதுமை மாவை இட்டு சப்பாத்தி வார்ப்பது, பரோட்டா தயாரிப்பது போன்றவற்றை துரித கதியில் செய்து முடிக்கிறார். நன்கு வேக வைத்து பதார்த்தங்களைத் தருவதிலும் வல்லவராகத் திகழ்கிறார். இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்? வாடிக்கையாளர்கள் இருக்கையில் அமர்ந்த உடனேயே சப்ளை செய்பவர்கள் வந்து இலை போட்டு டம்ளரில் குடிநீர் நிரப்பி வைக்கிறார்கள். “என்ன வேண்டும்” என்று தன்மையாக கேட்டு உபசரிக்கிறார்கள். சாப்பிடும் போது சட்னி, சாம்பார், குருமா... எதன் அளவு குறைகிறதோ உடனே அதை கவனித்து குறைந்ததை நிறைக்கிறார்கள். இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்? காலை பதினொன்றரை மணி வரை உணவகம் இயங்குவதால் தோசை மாவு, சாம்பார், தக்காளி காரச்சட்னியின் இருப்பை குறையாமல் பார்த்துக் கொண்டு சாப்பிட வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாமல் வயிறு நிறைய வைக்கிறார்கள். இது போன்ற உணவகங்கள் ஏராளமாக உண்டு. இந்த உணவகத்தில் என்ன விசேஷம்? இரவு நேரங்களில் பத்து மணிக்குப் பிறகும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பதை கவனத்தில் கொண்டு மளமளவென இரண்டாவது சுற்று முறையில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி அரைத்து தாளித்து பரிமாறுகிறார்கள். சாப்பிட வருபவர்களிடம் தேங்காய் சட்னி இல்லை என்று சொல்லக் கூடாது என்பதில் உறுதியுடன் வளைய வருகிறார்கள். இது போன்ற உணவகங்கள்... இந்த உணவகம் எங்கிருக்கிறது? மெட்ராஸில் ஜன நடமாட்டம் அதிகமுள்ள முக்கியமான நகரப்பகுதியான நங்கநல்லூரில் அதன் இதயப் பகுதியான ஹிந்து மிஷன் மருத்துவமணி, சக்ரா மருத்துவமனை மின்சார வாரியம் போன்ற முக்கியமான சேவை மையங்கள் அமைந்துள்ள நூறடி சாலையில் அமைந்துள்ளது. இந்த உணவகத்தை நடத்துபவரின் பூர்வீகம் என்ன? இந்த உணவகத்தின் உரிமையாளர் பெயர் ஆறுமுகம். பூர்வீகம் வால்பாறை, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். உணவகத்தின் பெயர் என்ன? ரோஹினி உணவகத்தின் சிறப்பம்சங்கள் என்று வேறு ஏதாவது? உண்டு. மெட்ராஸின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரண்டு படுக்கை அறைகள் வசதி உள்ள ஒரு ஃபிளாட்டின் மாத வாடகையே 15,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் என்ற அளவிற்கு உச்சம் தொட்ட ரியல் எஸ்டேட் பகுதி இது. உயர்வான வாடகை, உச்சம் தொட்ட ரியல் எஸ்டேட்... இதற்கும் அந்த உணவகதிற்கும் என்ன சம்பந்தம்? ரோஹினி உணவகத்திற்கு இன்னொரு பெயர் உண்டு அதன் பெயர் இருபது ரூபாய் உணவகம். இது தொடர்பாக உரிமையாளர் ஆறுமுகம் சொன்னது : “நானும் எல்லார் மாதிரியும் தான் சார் ஹோட்டலை நடத்திக்கிட்டு இருந்தேன், பக்கத்துல ஹாஸ்பிட்டல் இருக்கு, அங்க பேஷண்ட்ஸ் கூட தங்கி அவங்களைப் பார்த்துக்கறவங்க அதிகமா நம்ம கடைல சாப்பிட வந்தாங்க, அவங்களுக்கு மலிவா சாப்பாடு தரணும்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் தான் ரேட்டை மாத்தி குறைச்சு விற்க ஆரம்பிச்சேன்” “இந்த விலைவாசில கட்டி வருதா சார்”
“நான் எல்லா பொருளையும் ஹோல்சேல்ல தான் சார் வாங்குறேன், தேங்காய் கூட இளசா பாத்து மொத்தமா சாக்குல அள்ளிட்டு வந்துருவேன், உண்மையை சொல்றேன் சார், திட்டமிட்டு உணவுத் தொழில் செய்தால் எல்லாராலயும் இந்த விலைக்கு வியாபாரம் செய்ய முடியும், எனக்கு நஷ்டம் எதுவும் இல்லை, நஷ்டப்பட்டா தொடர்ந்து தொழில் செய்ய முடியுமா” “உங்களுக்கு உங்க ஹோட்டல்ல எந்த டிஃபன் ஐட்டம் சார் ரொம்ப பிடிக்கும்” “அப்படியெல்லாம் கிடையாது சார், சாப்பிட வரவங்க எல்லாரும் சாப்பிடனும் அப்புறம் மாஸ்டர், சப்ளையர்ஸ், டேபிள் தொடைக்கறவங்க, க்ளீனிங் வேலை செய்யறவங்க எல்லாம் வயிறார சாப்பிடனும் அது தான் சார் எனக்கு முக்கியம்” “உங்களுக்கு என்ன சார் பிடிக்கும்? அதை சொல்லவே இல்லியே?” “கச்சட்டில மொத நாள் செஞ்ச காரக் கொழம்பை சாதத்தில ஊத்தி நல்லெண்ணெய் விட்டு பிசைஞ்சு அம்மா கை நிறைய அள்ளி வெச்சு சாப்பிட சொல்வாங்க பாருங்க அந்த சாதம் தான் சார் பிடிக்கும், அந்த ருசி மாதிரி உலகத்துல எதுவுமே கிடையாது” இருபது ரூபாய் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பதாரத்தங்களின் விலைப் பட்டியல் 4 இட்லிக்கள் – ரூபாய் 20/- 4 மெது வடைகள் – ரூபாய் 20/- 1 செட் இடியாப்பம் - ரூபாய் 20/- (காலை மட்டும்) 1 செட் பூரி கிழங்கு – ரூபாய் 20/- (காலை மட்டும்) 1 ப்ளேட் பொங்கல் – ரூபாய் 20/- (காலை மட்டும்) 1 தோசை – ரூபாய் 20/- 1 செட் சப்பாத்தி – ரூபாய் 20/- (இரவு மட்டும்) 1 செட் பரோட்டா – ரூபாய் 20/- (இரவு மட்டும்) 1 செட் கல் தோசை – ரூபாய் 20/- தெய்வம் மனுஷ ரூபேனா! |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |