நண்பர்களுக்கு வணக்கம். மார்கழி மாத அகல் மின்னிதழ் நம் பார்வைக்கு. இன்னும் சில தினங்களில் மெட்ராஸில் துவங்கவுள்ள (09/01/2019) புத்தக கண்காட்சியை முன்னிட்டு இவ்விதழில் ஏராளமான வாசிப்பனுபவக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அது தவிர பேஸ்புக்கில் இயங்கி வரும் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு அங்கத்தினர்கள் அக்குழுவில் பகிர்ந்த வாசிப்பனுபவக் கட்டுரைகளிலிருந்து ஐந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து இந்த இதழில் வெளியிடப்படுகின்றன. அக்கட்டுரைகளை எழுதிய குழு அங்கத்தினர்களுக்கு ஜான்ஸி ராணி அவர்கள் எழுதிய ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பும், ஜெயந்தி ஜெகதீஷ் அவர்கள் எழுதிய “ரெஜிஸ்தர் ஆபீஸ் மசி குண்டு” சிறுகதைத் தொகுப்பும் அகல் மின்னிதழ் சார்பில் வழங்கப்படுகிறது.
இவ்விதழில் :
நண்பர்கள் மார்கழி மாத இதழைப் படித்துவிட்டு தங்கள் மேலானக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மெட்ராஸ் வாசிகள், புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்தி சிறந்த புத்தகங்களை வாங்கிப் படித்து பயன் பெறுங்கள். முகப்புப் படத்தில் உள்ள கோலத்தை வரைந்தவர் ஸ்ரீமதி. வித்யா GM பேரன்புடன் சத்யா GP
0 Comments
தலைப்பு : சரீரம்
ஆசிரியர் : நரன் வகைமை : சிறுகதைகள் வெளியீடு : சால்ட் பதிப்பகம் எல்லா கதைகளின் சம்பவங்களையும் களைந்தால் அங்கே ஆன்மாவென "உடல்" காணக்கிடைக்கிறது என்றே நகைமுரணாக சொல்லத் தோன்றுகிறது. "சரீரம்" என்ற தலைப்பைக் கண்டதும், “வெறும் காற்றடைத்த பையடா” (எந்த சித்தரின் பாடல் இது?) *சீயும் மலமும் செந் நீரும் நிணமும் சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது(பாம்பாட்டிச் சித்தர்) *உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமூலர்) *விசையுறு பந்தினைப்போல்_உள்ளம் வேண்டிய படிசெல்லும் உடல்கேட்டேன் (பாரதியார்) இப்படி அத்தனை controversial வரிகளும் நினைவில் மின்னலென வந்து போனது. புத்தகத்தை கையில் ஏந்தியதும் நான் ரசித்தது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பக்கங்களுடன், அங்கங்கே காணக்கிடைக்கும் (ஒரு மெல்லிய திடுக்கிடலை, அதிர்வை உண்டாக்கக் கூடிய) படங்கள். pen ink drawings வகை ஓவியங்கள். இவை கலை பரிமாணத்தை கூட்டுகின்றன. 171 பக்கங்களுடன் 12 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து படிக்கும் விநோத பழக்கமுண்டு எனக்கு. நெருக்கி எழுத்துக்களை அடித்தால் ஒரே பக்கத்தில் அடங்கிவிடக்கூடும் இந்த சின்னஞ்சிறிய கதை, "இரண்டாம் உலகப்போரின் நாளில் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த மிக சிறியக் கதை" இக்கடைசி கதையைத்தான் முதலில் படித்தேன். படிமங்கள் வழியே வார்த்தைகளுக்கு பல ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ள செய்யும் தனித்துவ கதை. "அமரந்தா" "உடல்" என்பதின் தொடர்ச்சி போல தோற்றம் கொடுக்கக்கூடியது, ஏனெனில் அமரந்தா எனும் பெண் இரண்டு கதைகளிலும் வருகிறாள். "1921" untrimmed story என்ற குறிப்புடன் முடிவுறுகிறது. ஆசிரியர் அக்குறிப்பைத் தவிர்த்திருக்கலாமென நினைக்கிறேன். "வாரணாசி" படித்துக் கொண்டு செல்லும் போது, (நிறைய சினிமாக்களால் இவ்விதமானதொரு conditioning வந்திருக்கலாம்) பூரணி மழையில் நனையும் வரிகளுக்குப் பிறகு, வாசிப்பின் இடையே ஒரு பதற்றம் வந்துவிட்டது, "கடவுளே க்ளிஷேவாய் ஒரு லவ் மேக்கிங் சீன் வைக்காமல் இருக்கட்டும் கதாசிரியர்" என்று. நல்லவேளை அழகாய் அதன் மேன்மையுடன் நிறைவுறுகிறது கதை. இக்கதைகள் நிதானமான வாசிப்பைக் கோருபவை. இருண்மையின் கனத்தோடு சொற்களின் அழகியலும் இணையாகப் பயணிக்கும் நடை கொண்டவை. உதாரணத்திற்கு கண்களை வசீகரித்த இந்த வார்த்தைகளை சொல்லலாம். “துகள் துகளாய் கடலைக் கூவிக் கூவி அடுப்படிக்கு விற்றுக் கொண்டிருப்பான். தெருவிற்குள் அலைபோல யாவாரியின் சப்தம் எழுந்து எழுந்து அடங்கும்” (தேடல்) வாசிக்கும் போதே காலுக்கடியில் அலை அடிப்பதான உணர்வுடன் கடலின் இரைச்சலை கேட்கும் பாவனை தந்தன வரிகள். "உடம்பு" என்றதும் சராசரித்தனமாய் நம் நினைவில் வருவதெது காமமும் பசியுமா? நிர்வாணம், புலன்கள், பிறழ்வு, வலி, மரணம், தண்டனை, சபலம், சடலம், முக்தி, போதை, பிறப்பு, உடைகள்... இத்தனை elements களையும் பின்புலமாய் வைத்து பல்வேறு மனிதர்களை ,அவர்களின் அக உளைச்சல்களை,அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு விள்ளலை நம் எதிரே கட்டமைக்கும் சிறுகதைகள்தான் "சரீரம்" சாமியாடி ரோட்டோரத்தில் இருந்த சிறிய கீற்றுக் கொட்டகை டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான் ரவி, அதிலிருந்து இறங்காமலேயே 'இங்க சாமியாடி வீடு எங்கப்பு இருக்கு?' எனக் கேட்டபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் பின்னாலிருந்த சாமியய்யா.
"எந்தச் சாமியாடிப்பு? மேலக்காட்டாரா... இல்ல வடக்கிவூட்டானா?" கடைக்கு முன் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து தினத்தந்தியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை சத்தமாகக் கேட்டார். “இங்க ரெண்டு சாமியாடியா இருக்காவ?" சாமியய்யா ஆச்சர்யமாகக் கேட்டார். "ஆமா... நிறையச் சாமியாடிக இருக்கானுக... நண்டு சிண்டெல்லாம் சாமி ஆடுதுவ... ஆனா சாமியாடின்னு பேரெடுத்தவுக அவக ரெண்டு பேருதான்" "ம்.... இந்த பாதரக்குடியில பொண்ணக் கொடுத்துருக்காருல்ல... பெரியகருப்பத்தேவர்..." "ஓ.... செரி... செரி... அட நம்ம மேலக்காட்டார்... அதானே... இப்ப ஆரு வடக்கிவூட்டானப் பாக்க வர்றா..." "வீடு...?" "நேர போங்கப்பு... கம்மாய்க்கர தாண்டி மேக்கால ஒரு பாத திரும்பும்... அதுல போனீங்கன்னா சோத்தாங்கைப் பக்கமா பச்சக் கேட்டுப் போட்ட தோட்டமிருக்கும்... கேட்டுல கூட குஞ்சரம்மாள் தோட்டம்ன்னு எழுதியிருக்கும் அதுக்குள்ளதான் வீடு... தேவரு இப்பத் தோட்டத்துலயே இருக்காவ" "சரிங்கய்யா" "அப்பு காபி சாப்புட்டுப் போறது... நம்ம கடயில சுத்தமான பசும்பாலுங்க." டீ ஆத்தியபடி கேட்டான் கடைக்கார சுப்பு. "இப்ப காபி வேணாந்தம்பி வரும் போது குடிக்கிறோம்" "செரிங்கய்யா.... நீங்க வரும்போது ஐசு வந்துரும்... வெயிலுக்குச் சும்மா சில்லுன்னு நன்னாரி வேர் போட்ட தண்ணியில சர்பத்துப் போட்டுத்தாரேன்... அப்புடி ஒரு சர்பத்த வேற எங்கயும் குடிச்சிருக்க மாட்டீங்க" சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியைக் கிளப்பினான் ரவி. வண்டி கம்மாக்கரையைத் தாண்டி மேற்குப் பக்கமாக போன சரளை ரோட்டில் திரும்பி குஞ்சரம்மாள் தோட்டம் என எழுதியிருந்த பச்சைக் கேட்டின் முன் நின்றது. இருவரும் வண்டியில் இருந்து இறங்கி வேட்டியை அவிழ்த்து நல்லாக் கட்டிக் கொண்டார்கள். ரவி சற்று தள்ளிப் போயி ஒரு காரஞ்செடிக்குப் பின்னே அமர்ந்து ஒண்ணுக்கு இருந்தான். "அங்கயிருந்து அடக்கிக்கிட்டு வந்தியாக்கும்... கடக்கிட்ட நிக்கிம் போது போயிருக்கலாமுல்ல, வீடு வாச இருக்க இடத்துல பொண்ணு புள்ளங்க வரும் போகும்..." கடுகடுத்தார் சாமியய்யா. அவரை முறைத்துவிட்டு "இப்ப இங்கிட்டு யாரு வந்தா... சும்மா எப்பப் பாத்தாலும் நய்யி நய்யின்னு" முணங்கிய ரவி கேட்டை நோக்கிப் போனான். "தோட்டந் தொரவா இருக்காவ... நாயி கெடக்கும்... பார்த்துத் தொற" "ம்..." என்றபடி சின்னக் கேட்டைத் திறந்து காலை வைத்தான். "வவ்... வவ்...." என மூன்று நாய்கள் பாய்ந்தோடி வர, "ஏய் மணி...." எனக் கத்தியவாறு வாழைகளுக்கு இடையே வேப்பங்குச்சியால் பல் விளக்கியபடி வந்தார் உயரமான பெரியகருப்பத்தேவர். அவரின் குரலுக்கு மூன்றும் முறுவலித்தபடி நின்று, அருகே இருந்த தென்னையை ஒட்டி தண்ணி ஓடும் வாய்க்கால் கரையில் படுத்துக் கொண்டன. உள்ளே வந்த இருவரையும் பார்த்து வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு "யாருப்பு நீங்க..? என்ன வெசயம்?" என்றார். "மேக்காட்டூர்ல இருந்து வாரோம்... உங்களக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கோம்... சிறுவாச்சூர் மணிதான் சொல்லிவிட்டாப்புல" "அடடே மணி சொல்லி வாரீங்களா? நேத்து கூட பேசும்போது சொன்னான், வருவாங்க... பாத்துக் கொடுங்கன்னு... வாங்க... வாங்க" என உள்ளே அழைத்துச் சென்று வாசலில் போட்டிருந்த நீளக் கொட்டகையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமரச் சொல்லி, "ஏய் தங்கம் தண்ணி கொண்டாந்து கொடாத்தா' ன்னு சொல்லிட்டு, "'சித்த இருங்க ரெண்டு தண்ணியள்ளி உடம்புல ஊத்திக்கிட்டு வந்துடுறேன்" என மோட்டார் அறைப்பக்கமாப் போனவர், "ஏத்தா வந்திருக்கவுகளுக்கு காபி கொடுங்க... ரொம்பத் தூரத்துலயிருந்து வந்திருக்காவ... கருக்கல்ல கெளம்பியிருப்பாவ... சாப்புட்டாகளா இல்லயான்னு கூடத் தெரியல... கேட்டுச் சாப்பிட எதாச்சும் கொடுங்க... வீட்டுக்குள்ளயே அட காக்காம" எனக் கத்தினார். அவர்கள் காபி மட்டும் குடித்திருந்தார்கள்... சாப்பிட மறுத்து விட்டார்கள்... ரவி பொறுமை இழந்து உக்காந்திருந்தான். பசி பொறுக்காதவன் அவன்... காபி குடித்தும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது அவனுக்கு. நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து நடுவில் நிலாவைப் போல பொட்டு வைத்து, சட்டையில்லாத கரிய உடம்பின் மேல் ஒரு குத்தாலம் துண்டு போட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிரே வந்தமர்ந்தார். "சீக்கிரம் வந்தீக, இல்லேன்னா நாங்கிளம்பி வெளிய போயிருப்பேன், சீனமங்கலம் பெரியய்யா வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருந்தேன். வண்டி அனுப்புறேன்னு சொன்னாக... இப்ப வந்துரும்.. ம்... சொல்லுங்க... என்ன பெரச்சன" என்றார். "பொட்டப்புள்ள... கல்யாணம் வச்சிருக்கேன்... இப்ப பேய்க் கோளாறாட்டம் ஒரு மாரிக்கி உடம்பத் திருகிக்கிட்டு முழிக்கிது... எம்புட்டோ வயித்தியம் பாத்தும் சரிவரல... குறி, கோடாங்கின்னு எல்லாம் பாத்துட்டோம்... எல்லாத்தயும் பொயிட்டு வான்னு சொல்லுது. தங்கச்சி மவனுக்குத்தான் கட்டுறோமுன்னாலும் அவங்க மனசுல தப்பாத் தோனிறக்கூடாதுல்ல... நாளக்கி வாழப்போற எடத்துலயும் இப்படி இருந்தா... அதோட வாழ்க்க போயிருமே... மணிக்கிட்ட விபரம் சொன்னப்போ அதுதான் உங்களச் சொன்னுச்சு... நீங்கதான் எப்படியாச்சும் புள்ளக்கி குணமாக்கி விடோணும்... உங்கள நம்பித்தான் இம்புட்டுத்தூரம் வந்திருக்கோம்... புள்ளய கூட்டியாரச் சொன்னா.... நாள போக நாளான்னக்கி செவ்வாக்கெழம அப்ப கூட்டியாரோம்.... இல்லே நீங்க வர்றதுன்னா... என்ன வாங்கணும்ன்னு சொல்லிட்டிங்கன்னா வாங்கி வச்சிருவேன்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சாமியய்யா. "ம்... எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டிட்டீக... ம்.... செரி... புள்ளக்கி என்ன வயசாவுது?" "இந்த அப்பிய வந்தா இருவது முடியுது..." "ம்... கலியாணத்துல புள்ளக்கி சம்மதம்தானே?" "அதுக்குப் பிடிச்சதாலதானே தங்கச்சி மவனுக்கு கொடுக்கிறேன்..." "ம்... எத்தன நாளாயிருக்கு?" "நெருக்கி ஒரு மாசமா அப்புடித்தானிருக்கு" "ம்... குறி, கோடாரியெல்லாம் கேக்கலயாக்கும்" "ஆமா" "தீட்டுப் போறதுல சமீபமா பெரச்சின எதுவுமிருக்கா?" "ம்... தீட்டு நிக்காமப் போவுது" "அதுலதானே அவுக வாசம் செய்வாக விடமாட்டாக... விட்டுப் போகணுமின்னா சொத்தெழுதிக் கொடுன்னு கேப்பாக" "நீங்கதான் எப்படியாச்சும்..." "ம்... கருப்பனுக்கிட்ட வந்துட்டியல்ல கவலய விடுங்க... இனி அவன் பாத்துப்பான்... உங்க புள்ளக்கி ஒண்ணும் ஆவாது" "ம்... புள்ளய பாக்கச் சகிக்கல..." கண்கலங்கினார் சாமியய்யா. "கலங்காதிய... கருப்பனுக்கு முன்னால கலங்கி நிக்கலாமா.... ம்ம்ம்.... ஆத்தா அந்த விபூதித் தட்ட இங்க கொடு" கத்தினார். விபூதித்தட்டு வந்ததும் அதிலிருந்த சூடத்தை தட்டின் நடுவே பத்த வைத்துத் தன் முன்னே வைத்து "படியிறங்கி வாடா பதினெட்டாம் படிக்கருப்பா... பாதை மறிச்சி வாடா பாண்டி முனியா... எங்குரல் கேக்கலையோ ஏழுருக் கருப்பா... மாத்தில் ஆடி வாடா மாரநாட்டுக் கருப்பா... பரியேறி வாடா பரியமயக் கருப்பா..." அப்படின்னு சத்தமாகச் சொல்லியபடி கண் மூடி ஊரில் இருக்கும் கருப்பர்களையெல்லாம் அழைக்க ஆரம்பித்தார். அவர் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.... தலையைத் தலையை ஆட்டினார்.... திடீரெனச் சத்தமாக "அப்பா... தவிச்சி நிக்காதேப்பா... எங்கிட்ட வந்துட்டயில்ல... கவலயெதுக்கு... அல்பாயுசுல மாண்ட கன்னி ஒருத்தி புடிச்சிருக்கா... கல்யாணக் கனவோட போனவ கனவ நெற வேத்த உம்புள்ள உடம்புல ஏறியிருக்கா... எறங்க மறுப்பா... அவளுக்குத் துணையா நாலஞ்சி சேந்திருக்கு... முனியும் எடப்படுறான்... ஒண்ணுமில்ல உம்மவளுக்கு... நாம் பாத்துக்கிறேன்... போ" என்றவர் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். விபூதித் தட்டில் அதுவரை எரிந்த சூடம் அணைந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் சொம்புத் தண்ணீரோடு ஓடி வந்து அவர் முன் நீட்டினார். தண்ணியை வாங்கிக் கொஞ்சம் குடித்து விட்டு எழுந்து முகங்கழுவினார். துண்டால் துடைத்தபடி மீண்டும் அவர்களுக்கு முன்னே அமர்ந்தார். "நான் இங்க பெரும்பாலும் சாமி அழக்கிறதில்ல, அழச்சா அன்னக்கி முழுவதும் உடம்பு வலியிருக்கும். வேற வேல பாக்க முடியாது, செவ்வா வெள்ளி மட்டுந்தான் பாக்குறது, மணி சொல்லி வந்திருக்கீக, அதான் அழச்சேன், கல்யாணம் நிச்சயமாயி நின்னு போனதால மாண்ட ஒருத்தியும் மரணத்தைத் தானே தேடிக்கிட்ட சிலதுகளும் சேந்து புடிச்சிருக்குக, முனியும் எடப்பட்டிருக்கான், பயமில்ல, நாஞ் சொல்றத வாங்கிக்கிட்டு வெள்ளிக்கெழம புள்ளயக் கூட்டியாங்க, பார்த்து முடிச்சி விட்டுடலாம், கவலப்படாதீக, எல்லாஞ் செரியாகும், கருப்பன மீறுன காரியம் என்ன இருக்குங்கிறேன்" என்றார். "ம்... கருப்பன்தான் சரியாக்கணும்... எம்புட்டுச் செலவானாலும் பரவாயில்ல... புள்ளயச் சரியாக்கி விட்டுறணும்" "கவலயே வேணாம்... வெள்ளிக்கெழம உங்க மகளா வருவா பாருங்க" என்றார். "ஆத்தா அந்த பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு வா" எனச் சத்தமாய் சொல்லி, கொண்டு வந்து கொடுத்த பேப்பரில் எழுதி நீட்டினார். எழுந்து வாங்கிய சாமியய்யா, "இப்ப எம்புட்டுன்னு சொன்னீங்கன்னா" என இழுத்தார். "அதான் வெள்ளிக்கிழம வருவீங்கள்ல அப்ப வாங்கிக்கிறேன் போயிட்டு வாங்க" "மொத மொதல்ல பாத்துட்டு சும்மா போவக்கூடாது" "அப்புடியா... செரி... உங்க மனசுக்குத் தோணுனத கருப்பனோட விபூதித் தட்டுல வச்சிச்ட்டுப் போங்க." என்றார். இருநூற்றி ஒரு ரூபாயை வைத்து விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கேட்டைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த மூன்று நாய்களும்... குரைக்கவில்லை. வாசலுக்கு வந்தவுடன் ரவி அந்தச் சிட்டையை வாங்கிப் பார்த்தான். "என்ன இம்புட்டு எழுதியிருக்காரு... இதெல்லாமே வேணுமா? இதுவரக்கிம் செலவழிச்சதை மொத்தமா இவருக்கிட்ட கொடுக்கணும் போல" என்றான். "சரியாக்கணுமின்னா சும்மாயில்ல... பெரியகருப்பத்தேவர் பெரிய ஆளு... மணி அப்பவே சொன்னாப்புல... வெளியிலயிருந்து வந்து கூட்டிப் போயிருவாகளாம். அவுகல்லாம் கணக்குப் பாக்காமக் கொடுப்பாகளாம் அதான் தோட்டந்தொறவுன்னு வசதியாயிருக்காரு. செவ்வாவெள்ளி கூட இங்கேயிருக்கேன்னு சொன்னாத்தான் இருப்பாராம். வண்டியெடு... புள்ளக்கிச் சரியானப் போதும்... இதுவரக்கிம் எம்புட்டோ செலவழிச்சிட்டோம்... இதயுஞ்செய்வோம்... இவரு சரியாக்குவாருன்னு எனக்கு நம்பிக்கயிருக்கு" என்றார். ரவி வண்டியை எடுத்தான். தேவரைக் கூட்டிப்போக சீனமங்கலத்துக் கார் வந்து நின்றது. "என்னப்பு ஆளிருந்தாரா?" பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு. "ம்... இருந்தாரு" "உங்க நல்ல நேரம் இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி, முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு முடியும்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு, டீயா, காபியா?" "டீக்காபி வேணாம்... சர்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க... பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க" "என்ன சுப்பு பெரியகருப்பத்தேவர் பொயிட்டாரா?" என்றபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை, கழுத்தில் பாசி மாலைகள், காவி வேஷ்டி, சட்டையில்லாத கரிய உடம்பு. "இப்பத்தான் வண்டி போயிருக்கு இன்னக்கி எங்கயோ சாமி அவருக்கு அள்ளிக் கொடுக்குது ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம் காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றே, அப்புறம் கருப்பன் எப்படி வருவான்" "எனக்குள்ள வரவேண்டான்னுதான் சரக்கடிக்கிறேன் சுருக்குன்னு ஒரு டீப்போடு" என்றபடி சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்தான் சுந்தரம். "பெரியவரே நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு. குடிச்சே சாமியை விரட்டுறாரு ஆனா அது போவாம இவரையே சுத்துது உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்" "அதெல்லாம் வேணாம்பா பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே, சர்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா" கோபமானார் சாமியய்யா. "என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே விடுங்க இந்தா சூப்பராச் சர்பத்துப் போட்டுத் தாரேன்" ரவி டீ வாங்கிக் குடித்தான். சுந்தரமும் டீயுடன் எதிரே உக்கார்ந்து சாமியய்யாவையே பார்த்தான். ஜில்லுன்னு சர்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு. "க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... ஹக்கஹ்க்கா" சிரித்தான். சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார். டீயை வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்த்தான். கண்கள் மேலும் சிவப்பேற, அப்படியே அமர்ந்திருந்தான். "மொறக்கிறாருடா., என்னயவே மொறக்கிறாரு எம்பார்வைக்கு ஊரே பயப்படும் இவரு என்னப் பயமுறுத்துறாராம் ஹா..ஹா... கெக்கெக்கே..." சாமியய்யா தலையைக் குனிந்து கொண்டார். "பொட்டப்புள்ள உடம்ப முறுக்கிக்கிட்டுக் கெடக்காளா" அதட்டலாய்க் கேட்டான். சாமியய்யா அவனை ஏறிட்டுப் பார்த்தார்... ரவி காலியான டீக்கிளாஸை வைத்துவிட்டு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். "மாண்ட கன்னியோட மத்ததுகளும் சேர, முனியும் முன்ன நிக்கிறானேய்யா" பல்லைக் கடித்தான். "புள்ளய கூட்டிப் போறேன்னு நிக்கிறாளேய்யா. விடுவேனா எம்புள்ளய விடுவேனா" பல்லை நறநறவெனக் கடித்தான். அவரு சொன்னதையே இந்தத் தண்ணி வண்டியும் சொல்லுது சொல்லிட்டு காசு கொடுன்னு மல்லுக்கு நிக்கும். கொடுத்தா தண்ணியடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து கெடக்கும் என்று நினைத்தவர் சுப்புவிடம் காசு கொடுத்துவிட்டு "ரவி வண்டிய எடு" என்றார். "ஏய் உம்புள்ளக்கி ஒண்ணுமில்லப்பா, உன்னோட ஊருக்குப் போற வழியில பொய்யக்கர முனியனுக்கு தேங்காய் ஒடச்சிட்டுப் போ. புள்ள சரியாவா புடிச்சது ஓடிரும் சரியானதும் முனியனுக்கு அந்த புள்ளய வச்சி பொங்க வைக்கச் சொல்லு... போ திரும்பிப் பாக்காதே" "ரவி வண்டிய எடுன்னேன். குடிச்சிட்டு உளறுறான் அதப்பாத்துக்கிட்டு. நாம தேவரு சொன்னபடி சாமானோடு வெள்ளிக்கெழம வருவோம்" "சொன்னது புரியல, என்னோட வாக்க நீ மதிக்கலயில்ல? கருப்பன் பொய் சொல்றான்னு நெனக்கிறேயில்ல? போ போற வழியில காட வலமிருந்து எடம் போவும். போ... அப்ப நம்புவே இந்தக் கருப்பன, அப்ப நம்புவேடா இந்தக் கருப்பன" சப்தமாகச் சிரித்தான் சிரித்தான்... சிரித்துக் கொண்டே இருந்தான். ரவி வண்டியை எடுத்தான், சாமியய்யா அவனை திட்டிக் கொண்டே வண்டியேறினார். "அந்தாளு சொல்ற மாதிரி ஒரு தேங்காய் வாங்கி ஒடச்சிப் பாக்கலாமே, அவராத்தானே சொல்றாரு சரியான நல்லதுதானே" "போடா தண்ணியப் போட்டுட்டு உளறுறான் அதத் தெய்வ வாக்குன்னு சொல்லிக்கிட்டு" "எதுக்கு இப்பக் கடுப்பாகுறிக" "செரி அப்பா ஒண்ணுஞ் சொல்லல பேசாமப் போ" "போய்க்கிட்டுத்தான் இருக்கோம்" வண்டி வேகமாய்ப் போனது இருவரும் பேசவில்லை. "இதுவரக்கிம் தங்கச்சிக்கிப் பாத்தவங்கட்டயெல்லாம் நாமளாத்தான் வெவரஞ் சொன்னோம். அப்புறந்தான் அவங்க இது இப்படி இது அப்புடின்னு சொல்ல ஆரம்பிச்சாக... பணந்தான் செலவாச்சு... பலனில்ல ஏ இப்பப் போயிப் பாத்த சாமியாடிக்கிட்ட கூட நாமதானே வெவரம் சொன்னோம். அவராவா இதுக்குத்தானே வந்திருக்கேன்னு கேட்டாரு? இல்லயில்ல?" "அவரு கேக்கல ஆனா சரியாச் சொன்னாருல்ல? இந்தக் குடிகாரன் சொன்னததானே அவரும் சொன்னாரு" "அதேதான்... இவங்க மட்டுமில்ல இதுவர பாத்த எல்லாருமே இதத்தானே சொன்னாக... சாமியாடி பெரியகருப்பத்தேவருக்கிட்ட நாம சொன்னோம். தீர்வு சொன்னாரு. இந்தாளு அவரே இதுதானே உன்னோட பெரச்சினயின்னு சொல்லி அதுக்குத் தீர்வும் சொன்னாரு. நாம எதாச்சும் கேட்டோமா? யோசிங்க. அந்தாளுக் குடிச்சிருக்கதால அவரு சொன்ன சொல்லு சரியில்லன்னு எப்புடி முடிவு பண்ணுவீங்க." சாமியய்யா யோசிக்க ஆரம்பித்தார். பொட்டக்காட்டில் மொட்டை வெயிலில் வண்டி போய்க் கொண்டிருக்க... காடை ஒன்று வலமிருந்து இடம் போனது. வெளியேற்றம்
புனைவின் உச்சமா அல்லது உண்மையின் உச்சமா? இரண்டு நாட்களாக யுவன் சந்திரசேகரின் வெளியேற்றத்தை கீழே வைக்காமல் படித்துவிட்டு அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். கதைக்குள் கதைக்குள் கதை என்று நம் பாரம்பரியக் கதைசொல்லும் மரபின் நீட்சியாகவே இருக்கும் யுவனின் படைப்புகள் எனக்கு எப்போதுமே பிடித்தமானவை. இந்த நாவலை இத்தனை நாட்களாக எப்படி மிஸ் செய்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. யுவனின் எல்லா நாவல்களையும் போலவே இதுவும் 1950களிலிருந்து 2006 வரை நீள்கிறது. அன்றாட வாழ்வின் சகிக்க முடியாத துக்கத்திலிருந்து வெளியேற வழியில்லாத மனிதர்கள் குறைந்தபட்சம் வீட்டை விட்டாவது வெளியேறி சற்று தப்பிக்கலாம் என்று நினைப்பது மனித இயல்பு. இப்படித்தான் இந்த நாவலிலும் வேதமூர்த்தியிலிருந்து ஹரிஹரசுப்ரமணியம், மன்னாதி, சிவராமன், ராமலிங்கம், பால்பாண்டி, குற்றாலிங்கம், வைரவன், கோவர்த்தனம், என்று பலரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கதைசொல்லியும் தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியேறியவன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. அவர்கள் எல்லாரையும் பிணைக்கும் ஒரு மாயச் சங்கிலியைத் தேடிச் செல்கிறான் நாயகன். நாமும் கூடவே செல்கிறோம். விதவிதமான மனிதர்கள். விதவிதமான சூழல்கள். வேறுவேறு காலகட்டங்கள். எல்லாவற்றையும் ஒரே சீராகக் கொண்டு செல்கிறது யுவனின் வசீகரமான மாயமொழி. பட்டுநூல்காரர்களின், பிராமணர்களின், செட்டியார்களின், பிள்ளைமார்களின், மறவர்களின் பேச்சு மொழிகள் அத்தனை இயல்பாக இருக்கின்றன. அதிலும் சௌராஷ்ட்டிரர்கள் நாங்க, எங்க, நம்ம என்பதை வேறுவிதமாகப் பயன்படுத்துவதை அப்படியே பயன்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது எல்லா பாத்திரங்களும் நல்லவர்களாக இருப்பது. எல்லா பாத்திரங்களும் நல்லவர்களாக, மிகத் தெளிவோடு பேசுபவர்களாகப் படைக்கும் பிரபலமான எழுத்தாளர்கள் பலரை நாம் அறிவோம். ஆனால் ஏதேனும் ஒரு இடத்தில் ஆமா, இப்படித்தான் ஓவரா நல்லவங்களா இருப்பாங்களாக்கும்… என்று நமக்கு தோன்றும் வகையில் ஏதேனும் ஒரு இடத்தில் செயற்கையாக ஓவர் நல்லவர்களாக இருந்துவிடுவார்கள். இந்த நாவலில் அப்படி இல்லாமல் இயல்பாகவே, தம் கஷ்டங்களையும் மீறி அவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வெளியேற்றம் பெரிய அளவில் அவர்கள் கஷ்டங்களை ஒன்றும் போக்கிவிடவில்லை. ஏதோ ஒருவித நிம்மதி கிடைக்கப் பெறுகிறார்கள். அந்த நிம்மதியில், தம் வெளியேற்றத்தால் ஏற்பட்ட மற்ற இழப்புகளையும் சரி, இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இப்படி எத்தனையோ பேரை நாம் நிஜத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நாவலில் இப்போதுதான் பார்க்கிறோம். எனக்குப் பிடித்த மற்றொரு அம்சம் இந்த நாவலில் வரும் பெண்கள் – அதுவும் குறிப்பாக அம்மாக்கள். நல்ல அம்மாக்கள், கெட்ட அம்மாக்கள் எல்லோருமே தம் குழந்தைகள் மீது அப்படியொரு பாசமாக இருக்கிறார்கள். சிவராமனுக்கு மட்டும் அம்மாவின் இடத்தில் மன்னி. எல்லா பாத்திரங்களுமே அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்குகிறார்கள். கஷ்டமோ, துக்கமோ வேதனையோ. என்னவாக இருந்தாலும், எந்த அளவிற்குத் தாங்க முடியாமல் இருந்தாலும் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கினால் தற்காலிகமாகவேனும் அவை சரியாகின்றன அல்லவா? மனித வாழ்க்கையில் காரண காரியங்கள் சொல்ல முடியாத விஷயங்கள் எவ்வளவு இருக்கின்றன! என்ற ஒற்றை வரியை வைத்து எத்தனையோ மனிதர்களின் விசித்திரமான வாழ்க்கையை நேரில் பார்ப்பது போல எழுதிச் சென்றிருக்கிறார் யுவன். கதையில் வரும் அவை அனைத்துமே நிஜமாக நடந்தவை, வலுவான சாட்சியங்களும் சான்றுகளும் உள்ளவை. ஆனால் கதையில் வரும் தன்னியல்பான நடைமுறை சாத்தியம் உள்ள நிகழ்வுகள் அனைத்துமே கற்பனையானவை! என்று நாவல் பற்றிய தன் பின்னுரையில் சொல்லி முடிக்கிறார் யுவன். நாவலின் வெற்றி எது? கற்பனையின் உச்சமா அல்லது உண்மையின் உச்சமா? என்பதன் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான். இப்படியான உயிரோட்டமான பாத்திரங்களை சமீபகாலத்தில் எந்த நாவலிலும் நான் பார்க்கவில்லை. படித்து முடித்தபின்னும், இதை எழுதி முடித்தபின்னும் மனம் அவர்கள் கூடவே சுற்றிக் கொண்டிருக்கிறது. வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் வெளியீடு - கிழக்குப் பதிப்பகம்.
மனித மனம் புதிர்கள் நிரம்பியது. ஒரு புதிரை விடுவித்தால் மற்றொன்று, அதை விடுவித்தால் இன்னொன்று என நீண்டு கொண்டே செல்லக்கூடியது. இந்த புதிர்களை படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளனர். ஆனாலும் இந்த பயணம் முடிவே இல்லாமல் நீளக்கூடிது.
பிரபஞ்சன் நினைவு பரிசு போட்டியில் வென்ற நாவல்களில் ஒன்றான மெக்ஸிக்கோ நாவலை இன்று வாசித்து முடித்தேன். இதனை கனடாவில் வாழும் ஈழ தமிழரான இளங்கோ எழுதியுள்ளார். தமிழ் நாவல் பரப்பில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோர் பல உலக நாடுகளை பின்புலமாக கொண்டு பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நாவல் கனடா, மெக்ஸிக்கோ நாடுகளை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஆண் பெண் உறவு சிக்கல் என்பது பெரும்பாலும் ஒன்றுபோலதான் இருக்கிறது. இரண்டு வேறு வேறு தேசங்களில் இருந்து அகதியாக வாழ நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். அவர்களின் உறவை சொல்வதினூடாக இந்த நாவலில் மாயா இன மக்களின் கலாச்சாரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவலின் இறுதியில் நாம் எதிர்பாராத திருப்பம். இப்போது நாம் வாசிப்பது ஒரு நாவலா இரண்டு நாவலா என யோசனை தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஒரே மூச்சில் வாசித்துவிட தூண்டும் மொழி நடையை இளங்கோ கையாண்டுள்ளார். எளிமையான வர்ணனைகளின் மூலமே இடத்தை மற்றும் கதாபாத்திரத்தை நம்முள் தோன்றுபடி செய்துவிடுகிறார். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த புத்தகத்தினை சிறப்பான முறையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சனின் நினைவை போற்றும் விதமாக நடந்த இந்த நாவல் போட்டி வரவேற்கவேண்டிய ஒன்றாகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நூலின் பெயர் : மெக்ஸிக்கோ நூலாசிரியர் : இளங்கோ வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
ஓடிப் பிடிக்கும்
குழந்தையின் விரல்களுக்குள் அகப்படாமல் இலாவகமாய் தப்பிக்கிறது பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சி போல் தப்பிக்காமல் குழந்தையின் கைகளில் இலகுவாய் பிடிபட விழைகிறேன் நான். பட்டாம்பூச்சி போல் வர்ணங்களுமில்லை அழகுமில்லை என்னிடத்தில். பட்டாம்பூச்சியின் தோரணைகள் அனைத்தும் நேர்த்தியுடன் காணப்படுகிறது குழந்தையிடம். குழந்தை பட்டாம்பூச்சியாக நான் குழந்தையாகிறேன். நான் குழந்தையானதும் பட்டாம்பூச்சியைப் பிடிக்கவே விழைகிறது என் மனம். யார் முதுகிலும் நான் சவாரி செய்தவனில்லை. பரந்து விரிந்து புஜங்கள் புடைத்த முதுகாயினும் கூட அந்த ஆசை என்னுள் எழுந்ததில்லை. என் ஏமாளி முதுகில் பலரைச் சுமந்திருக்கிறேன் அந்த வலி தெரியும் எனக்கு சற்று முன்பு கூட இருவரை இறக்கிவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன் அதில் ஒருவருக்கு உன் முகச்சாயல் இருந்தது எனினும் இதுவரையில் யார் முதுகிலும் நான் சவாரி செய்தவனில்லை. கல்குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை நாம் அதிகம் இதுவரை அறிந்ததில்லை. அவர்களின் வாழ்க்கை சாதாரண வாழ்விலிருந்து மிகவும் பின்தங்கியது. கடுமையான உழைப்பில் கரைந்துவிடும் இம்மக்கள் தம் வாழ்க்கையில் கலை, பாரம்பரியம், கேளிக்கைகள் போன்றவைகள் என்னவென்று அறியாதவர்கள். கிராமங்களிலிருந்து விலகி தனித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். பல தசாப்தமாக தனித்து வாழும் இம்மக்கள் அறிந்த ஒரே சொல் கல்.
தொழில்ரீதியாக கல்லுடைப்பு என்பது எளிமையானதுதான், அதிகம் மெனக்கெடல்கள், படைப்பாற்றலை வெளிப்படுத்துவது அதில் இல்லை ஆனால் கடின உழைப்பை கோரும் அந்த வேலையை செய்ய முன்வருபவர்கள் எத்துனை கஷ்டங்களை முன்பே அனுபவித்தவர்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வயல்வேலை செய்பவர்கள், நெசவு வேலை செய்பவர்கள் மேலும் இன்னபிற வேலைகளை செய்பவர்கள் பஞ்சம் போன்ற பெரிய இடர்பாடுகள் வரும்போது அதிலிருந்து விலகி புதிய வேலைகளுக்கு செல்கிறார்கள். அப்படி சுதந்திர இந்தியாவில் புதியவேலையாக உருவாகிவந்த ஒன்று குவாரியில் கல்லுடைப்பது. எழுத்தாளர் கலைச்செல்வி எழுதியிருக்கும் சக்கை நாவல் கல்லுடைக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியது. அவர்களின் இடம்பெயர்வு, பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் இந்நாவலில் பேசப்படுகின்றன. தங்கள் சொந்த கிராமங்களிலிருந்து விலகி பல கிலோமீட்டர்கள் தள்ளி பாறைகள் நிறைந்த மலைப்பகுதியின் வெட்டவெளியில் வாழ்க்கையை புதிதாக தொடங்குகிறார்கள். புழுதி, வெப்பம், காற்று, குளிர் என்று வாழும் இம்மனிதர்கள் அவர்களின் அடுத்த சந்ததியினரை இங்கேயே வாழ விடுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் இதேவேலையை ஒரு கொத்தடிமை போன்று வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவர்களுக்கு கல்வியறிவு இல்லை. பள்ளிக்கு செல்லமுடியாது. எந்த சமூக அமைப்பும் அவர்களின் கல்வியை தொடர முன்வரவில்லை. அவர்களின் கொத்தடிமை முறையை மீட்டு தரவரவில்லை. உரையாடல்கள் மூலமாக எல்லாவற்றையும் நிறுவுகிறார் எழுத்தாளர் கலைச்செல்வி. நாவலின் உள்ளடக்கத்தை சரியாக புரிந்துக் கொண்டு எவையெல்லாம் தேவை என்கிற புரிதலும் படைக்கப்பட்டிருக்கிறது சக்கை. கிரஷ்சரில் இடப்படும் மூலப்பொருளான கற்களின் கொச்சை வார்த்தை சக்கை தலைப்பாக வைத்திருப்பது சரியான தேர்வு. இராமநாதபுரம் போன்ற வறட்சியான மாவட்டங்களிலிருந்து 60களில் வெளியேறிய மக்கள் குவாரி எனப்படும் மலைகளை ஜல்லிகளாக, பெரிய அளவுகளில் வெட்டப்படும் கற்களாக மாற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்கிறார்கள். கற்களை வெட்டி எடுப்பது, சில அளவுகளாக கற்களை உடைப்பது, பின் லாரியில் ஏற்றுவது போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். கட்டிட வேலைக்கு விவசாய ஆட்கள் வருவது போன்று இந்த வேலைக்கு வர ஆரம்பித்தார்கள். மற்ற வேலைகளைப் போலல்லாமல் இந்த வேலைக்கு ஒருமுறை வந்த பின் மீண்டும் வேறு வேலைக்கு செல்லமுடிவதில்லை. அவர்கள் பெறும் முன்பணம் மீண்டும் அங்கேயே இருக்க விட்டுவிடுகிறது. அங்கே பக்கத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்களில் குடிசை அமைத்து வாழ்க்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அங்கேயே பிறந்து படிப்பறிவற்று வளர்கின்றன. அறுபது ஆண்டுகள் அங்கே இருந்த ஆட்களும் உண்டு. கல்லுடைப்பில் புதிய தொழில்நுட்பம் வர ஆட்களை வேலையிலிருந்து எடுக்கிறார்கள். இந்நாவலில் அப்படியான ஒரு குழுவினர் வேலையிழந்து தங்கள் ஊருக்கு திரும்புகிறார்கள். இருக்கும் இடத்தை விட்டு மறந்துப்போன திசையை பாதையையும் தேடி அவர்கள் இடத்திற்கு வந்தபோது அவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டு ப்ளாட்களால் ஆகியிருக்கிறது. வெறுத்து தங்களின் குலதெய்வமாக இருக்கும் திரெளபதியம்மனின் கோவிலின் ஒரு கல்லை இடமில்லாத ஒரு காட்டில் நட்டு அங்கு தங்குகிறார்கள். சரியான உள்ளடக்கமும் வடிவமுமாக சக்கை நாவல் உருக்கொண்டிருக்கிறது. கதைமாந்தர்களின் குணாதிசயங்கள் சரியான விதத்தில் கலந்து வருகிறது. குறிப்பாக மரகத்ததின் இயல்புகள் கல்லுடைக்கும் மனிதர்களின் முகங்களை முன்நிறுத்துகிறது. மெதுவான நிகழ்வுபோக்குகளின் வழியாக பயணித்து செல்கிறது. ஆசிரியர் கல்லுடைக்கும் மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி தகவல்களுடன் சரிபார்த்தே செய்திருக்கிறார். முற்போக்கு நாவலுக்குரிய அத்தனை பண்புகளையும் கொண்டு சரியான சொல்லாட்சிகளுடன் நாவலை அமைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் கலைச்செல்வி. *** நாவல் ஆரம்பித்த இடத்திலிருந்து பயணிக்கவில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பாதி பக்கங்களுக்கு மேல் தங்களை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்கிற புலம்பலை எல்லா மனிதர்களும் திரும்பதிரும்ப சொல்லிக் கொண்டிருகிறார்கள். உரையாடல்களில் வரும் வார்த்தைகளும், ஒரே களத்தில் அதன் நிகழ்வை கொண்டிருப்பதால் அப்படி தோன்றியிருக்கலாம். வரலாற்றுணர்வு இல்லாத நாவல்கள் ஆழ்மற்றவையாக அமைந்திருக்கும். எழுபது வயது நிறைந்திருக்கும் ராசப்பன் அறுபது ஆண்டுகள் இந்த கல்லுடைப்பு தொழிலில் இருந்தாலும், அவரது காலத்தின் முன்பின் மாற்றங்களையோ மனித வாழ்வின் மாற்றங்களையோ, அவர் சந்தித்த தரிசனங்களை, அகவீழ்ச்சியை பேசப்படவில்லை. அறுபதுகளில் அவர்கள் இடம்பெயர்ந்து வந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு, ஆனால் அது மிகச்சாதாரணமாக கடந்து போய்விடுகிறது. நாவலுக்கு தேவையான நிகழ்வுபோக்கு நிகழவில்லை. அதன் மதிப்பீடுகள் எந்தவகையிலும் வாசகருக்கு உணர்த்தப்படவில்லை. தொழிலாளர்களுக்கும் கொத்துகாரர்களுக்குமான தொழிற்சார்ந்த உறவுநிலை, அதன் மீறல்கள், அவற்றின் உளச்சிக்கல்கள் பற்றிய பேச்சு, போன்றவைகள் பேசப்படவேயில்லை. தொழிமுறை வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் அல்லது தேக்கங்கள், போன்றவைகள் இருந்தும்கூட எழுத்தில் சொல்லப்படவில்லை. மலைகளின் அழிவினால் ஒருவருக்கு ஏற்படும் உளசிக்கல்கள் பேசியிருக்க வேண்டியவை. இவையெல்லாம் ஆசிரியரின் தேர்வுதான் என்றாலும்கூட வாசகரின் எதிர்ப்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. திரெளபதியம்மன் கோவிலின் கல் ஒன்றை எடுத்து புதியஊருக்கு வருகிறார்கள். அதையே வழிபடுகிறார்கள். திரும்ப போகும்போது கவனமாக அதை எடுத்துச் செல்கிறார்கள். நாவலின் நல்ல படிமம் இது. ஆனால் அதை எந்த வகையிலும் படிமமாக்காமல் அப்படியே விட்டுவிடுவது வாசகனை புதிய தளத்திற்கு கொண்டு செல்லாமல் செய்துவிட்டது. ஆனால் மனித உறவுகளின் சின்னச்சின்ன அழகியல் தருணங்களை ஆசிரியர் விட்டுவிடவில்லை. கல்லுடைப்பவர்களிடையே நட்பும் அன்பும் அவர்களது இயல்பிலேயெ அமைந்திருப்பதை சரியாக வெளிப்படுகிறது நாவலில். கூறவந்த விஷயத்தை முழுமையாக சொல்ல முயன்றிருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. புதினத்தின் பெயர் : சக்கை நூலாசிரியர் : கலைச்செல்வி வெளியீடு : என்சிபிஎச் பதிப்பகம்
இப்போதெல்லாம் 600 + பக்கப் புத்தகங்களைப் பார்த்தால் ஒரு பெருமூச்சுடன் கடந்து விடுகிறதுதான். இந்த மனநிலையில் 'பின் தொடரும் நிழலின் குரல்' (723 பக்கம்) நாவலை ஆர்வத்துடன் இரண்டே நாளில் படித்து முடித்தது ஓர் ஆச்சரியம். அப்படியொரு ஈர்ப்புவிசை எழுத்தில்.
*** கம்யூனிச கொள்கையென்பது மானுடத்தின் ஒருபெரும் லட்சியக் கனவு. ஆனால், பெருங்கனவுகள் சிதையுமென்பது விதி. இயக்கத்தின் வளர்ச்சிப்பாதையில் சித்தாந்தத்தை விட கட்சியும் தலைமையும் முக்கியமாகி சர்வாதிகாரப்போக்கு தலை காட்டுகிறது. தலைமைக்குப் பிடிக்காத திறமைசாலிகள் மெல்ல ஓரம் கட்டப்படுகிறார்கள்; அல்லது களையெடுக்கப்படுகிறார்கள். ரஷியாவில் நிகலாய் புகாரின் என்றால், இங்கே உள்ளூரில் வீரபத்ர பிள்ளை! அப்படி இயக்கத்தால் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டவர்களின் கதைகளை, அந்தரங்கங்களை நாவல் பேசுகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றி எவ்வளவோ எழுதப்பட்டு விட்டாலும் அது கம்யூனிச சகாப்தத்தின் முடிவல்ல என்பதை சீனாவும் ரஷ்யாவும் இன்று உலகுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டு தானே இருக்கின்றன. *** விரிவான அரசியல் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் நாவல், தனி மனிதர்களின் வாழ்க்கை போராட்ட ங்களை ஆழமாக பேசுகிறது. தான் கொண்ட லட்சியத்தோடு போராட்டம்; பசியோடு போராட்டம்; உடலிச்சையோடு போராட்டம்; முடிவாக தன் மனதோடும்... முடிவில்லாத போராட்டங்களினால் அருணாசலம் மனப் பிறழ்வுக்கு ஆளாகிறான். அதிலிருந்து மீண்டு வர அவன் மனைவி நாகம்மையின் பாசமும் ஆதரவும் துணை நிற்கின்றன. ஆனால், உள்மனப் போராட்டங்களில் நிலை குலைந்து போகும் வீரபத்ரபிள்ளைக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அவர் மனைவி இசக்கிதான் அவருடைய ஆளுமை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிறாள். *** கதையின் மொழி நடை தீராத போதை. வீரபத்ரபிள்ளையின் கடிதங்கள், சுய குறிப்புகள், கதைகள், நாடகங்கள்.. இவற்றில் ஜெயமோகனின் எழுத்து, மொழியின் உச்சத்தை தொடும் தருணங் கள் நிறைய. ரஷியாவின் உறைபனிக் காலங்களில் நகரவீதிகளில் நீங்கள் அலைகிறீர்கள். அதிகாரத்தின் வன்பிடியில் சிக்கி மரித்தவர்களின் பிணவாடையும், தேங்கல்களின் நாற்றமும் உங்களைச் சுற்றிப்பரவுகிறது. தப்பிக்க வழிஇல்லை. உங்களைத் தொடர்வது உங்கள் நிழல் மட்டுமல்ல; உங்கள் அந்தராத்மாவில் நுழைந்துவிட்ட தோற்றுப்போனவர்களின் நிழலும் தான்... ************************ கதையின் ஆன்மா, அருணாசலத்தின் மனைவி நாகம்மையிடம் நிலை கொண்டிருப்பதாக ஓர் எண்ணம். தன் கணவன் மீதும், குடும்பத்தின் மீதும் முடிவில்லாப் பாசம் கொண்ட சாதாரண குடும்பத் தலைவி. அருணாசலத்தின் மன அவசங்களிலிருந்து அவனை மீட்டெடுப்பதற்கும், அழுத்தங்களை குறைப்பதற்கும் அவனுடைய உடல் வேட்கையையே மருந்தாகப் பயன்படுத்துகிறாள். கணவனின் மனதை ஆற்றுப்படுத்த சாமானியப் பெண்ணான அவளுக்குத் தெரிந்த ஒரே வழி. கதிருக்கு அருணாசலம் கடைசியில் எழுதுகிற அந்தரங்கமான கடிதத்தில் தன் மனப்போராட்டங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறான். நாகம்மை மூலமே தான் மீண்டத்தை குறிப்பிடுகிறான். அப்பொழுது, 'அவள் யோனி தான் என்னை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தியது' என்று எழுதுகிறான். படிக்கையில் மனதில் ஒருவித ஏமாற்றம் பரவியது. நாகம்மையின் தன்னலமில்லா அன்பின் தாக்கத்தை அவன் சொல்லியிருக்க வேண்டும். யோனிக்கு போதுமான மாற்று இருப்பதைத்தான் கதையில் அழுத்தமாக பதிவு செய்தாகி விட்டதே. அன்பு ஊற்றெடுக்கும் மனசுதான் எங்கு தேடினாலும் மாற்று இல்லை. நாவலின் சில பகுதிகளையாவது நாகம்மையின் பார்வையில் எழுதியிருக்கலாம். இந்த நாவல் அதற்கான வாய்ப்பை நிச்சயம் கொடுத்திருக்கிறது. நாகம்மை, நாகம்மை, நாகம்மை..என்று மந்திரம் போல சொல்லிக்கொண்டிருக்க தோன்றுகிறது. *** நாவலின் தனித்த சுவைக்கு ஆதாரமாக இருக்கும் தற்குறிப்புகள், நாடகங்கள், கதைகவிதைகள் சில இடங்களில் அதிகம் நீண்டுவிடுகின்றன. அதில் கொஞ்சம் கறாராக இருந்திருந்தால், இன்னும் கச்சிதமாக வந்திருக்கும். சாதி தொடர்பான சொல்லாடல்களில், பகடிகளில் ஆசிரியருக்கு இருக்கும் ஈடுபாடு வியப்பளிக்கிறது, அவருடைய எல்லா படைப்புகளிலும் அதைப் பார்க்க நேரும்போதும்! *** எந்த நாவலையும் படித்து முடித்த கையோடு மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றாது; இந்த நாவலை படித்தபின் அப்படியொரு எண்ணம் வந்தது. தமிழின் சிறந்த நாவல்களின் வரிசையில் பின் தொடரும் நிழலின் குரலுக்கு தவிர்க்க முடியாத ஓர் இடமுண்டு. “வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” – ஃபேஸ்புக் குழுவில் வெளியான பதிவு சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஒரு தனிப் பிரியம். அது ஏன்னு எல்லாம் தெரியாது... படம் பார்ப்பதும்... பாட்டுக் கேட்பதும் எப்பவுமே பிடிக்கும் ஒன்று. தூறல் நின்னு போச்சு படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளியில் அடிபட்டு கை உடைந்த போது ‘படம் பார்த்துட்டு அதுல வர்ற சண்டைக்காட்சி மாதிரி செஞ்சு பார்த்திருப்பாக... விழுந்து கையை ஒடச்சிக்கிட்டு வந்திருக்காக’ என வலியும் வேதனையும் சுமந்து நிற்கும் போது அம்மா கொடுத்த அடி எப்போதும் மறக்க முடியாத ஒன்று. சில படங்கள் பார்த்த பின்னணி இன்னும் இனிமையாய் மனசுக்குள்! ம்.... அது ஒரு கனாக்காலம்னு எல்லாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா சினிமா பார்ப்பது என்பது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கு. இப்பவும் அது தொடரும் காலம்தான்! ஆம் இன்றும் படம் பார்ப்பது தொடர்கிறது என்றாலும் இங்கு நாம் பார்க்க விரும்பும் படங்கள் தியேட்டருக்கு வருவதில்லை. பிரபலங்களின் படங்கள் மட்டுமே வரும். அப்படியே நாம் பார்க்க நினைக்கும் படம் வந்தாலும் கணக்குப் பண்ணி வாழும் வாழ்க்கையில் டிக்கெட் விலைக்கு மூன்று நாள் சாப்பிடலாமே என்றுதான் தோன்றும். ஆம் எது தேவையான செலவோ அதை மட்டுமே செய்து நாட்களை நகர்த்தும் போதே ஏகப்பட்ட நெருக்கடி, தினம் தினம் ஒரு பிரச்சினை. எழும்போதே இன்று என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்புடன்தான் எழச் செய்கிறது அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரம். இதில் எங்கே சினிமாவுக்கான செலவையெல்லாம் யோசிப்பது? டோரண்டுகளும் சில இணைய வெளிகளுமே சினிமாவை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊருக்குப் போனாலும் ஒரு மாத விடுமுறையில் சினிமா என்பது யோசிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்காக எப்போதேனும் செல்வதுண்டு.
தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்த்து நகர்ந்த வாழ்க்கைதான் ஊரில் இருக்கும் வரை! அதுவும் காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் இருந்த போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் கிட்டத்தட்ட வெளியான எல்லாப் படங்களையும் பார்த்து விடுவோம், அது மரண மொக்கை என்றாலும் கூட! காரைக்குடி தேவகோட்டையில் எல்லாத் தியேட்டரிலும் படம் பார்த்திருந்தாலும் சென்னையில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீநிவாசாவும்தான் எங்களை அதனுள்ளே அதிகம் அமர்த்திப் பார்த்திருக்கும். நடந்து போகும் தூரத்தில் எங்கள் அறை என்பதால் நினைத்தவுடன் இரவுக்காட்சிக்குச் சென்று விடுவோம். அமீரகம் வந்தபின் தமிழ் தவிர்த்து மற்ற மொழிப்படங்களையும் டோரண்டில் தரவிறக்கம் செய்து நண்பர்கள் பார்க்கும் போது வெட்டித்தனமாய் மாலைகளைக் கடத்த வேண்டிய சூழலில், விளக்கணைக்க பதினோரு மணி என்ற சட்டதிட்டத்துடன் இயங்கும் அறையில், பெரும்பாலும் பனிரெண்டரை, ஒருமணி வரை உறக்கம் வரா உளைச்சலில் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் வார விடுமுறை தினங்களில் பிரியாணி சமைத்துச் சாப்பிட்ட பின் நேரத்தைக் கடத்த என்ன செய்வது? எல்லா மொழிப் படங்களும் பரிட்சயமானது இப்படித்தான். சமைத்தல், ஊருக்குப் பேசுதல், எழுதுதல் என்பதெல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீடித்தல் என்பது சாத்தியமில்லை. மகிழ்வான பேச்சுக்குப் பின்னே பணம் என்னும் வார்த்தை வந்தால் நம் இயலாமை எதிர்த்து நிற்கும். மகிழ்வாய் ஆரம்பித்த பேச்சும் இறுதியில் சண்டையில்தான் முடியும் என்பதால் இடைவெளி விட்ட பேச்சே கொஞ்சமேனும் மனசுக்கு மருந்தாக இருக்கக் கூடும் என்பதாலும், எவ்வளவு நேரம்தான் எழுத முடியும்? எழுத்துக்குப் போரடித்துப் போகாதா என்ற நினைப்பாலும் சில நிமிடம் பேச்சும் கொஞ்ச நேர எழுத்துமே சாத்தியமாகிப் போன சூழலில், நேரங்கடத்தி என்பது பெரும்பாலும் கணிப்பொறியில் பார்க்கும் படங்களே! சில நேரங்களில் குறிப்பாக விடுமுறை தினத்தில் அறையில் ப்ரொஜெக்டர் மூலமாக படம் போடுவார்கள். எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள் ஆனால் இறுதிவரை பார்ப்பது நானும் என் நண்பருமாகத்தான் இருக்கும். மற்ற பக்கமெல்லாம் மழை நேரத்து தவளைபோல குறட்டைச் சப்தங்கள் வர ஆரம்பித்துவிடும். நான் பார்த்த முதல் மலையாளப்படம் 'அன்னையும் ரசூலும்' - பஹத்பாசிலும் ஆண்ட்ரியாவும் நடித்தது. அருமையானதொரு காதல்கதை. ரசித்துப் பார்க்க வைத்தது. ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது மலையாளத்தில் அவருக்கு முதல்படம். இந்தப் படம் பார்த்தபின் என் கணிப்பொறித் திரையில் நீண்டநாள் அன்னா இருந்தார். அந்தப்படம் கொடுத்த ஈர்ப்பின் காரணமாக மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிறையப் படங்களைப் பார்த்தேன். மலையாளப் படத்தின் மீது தீராக்காதல் வந்தது. டோரண்டில் புதிய மலையாளப்படம் என்றால் அது எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இப்போதெல்லாம் டிரைலரையோ அல்லது விமர்சனத்தையோ பார்ப்பது உண்டு அப்போது உடனே தரவிறக்கம்தான். எத்தனை படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்... குறிப்பாக எல்லாமே நல்ல கதைகளுடன்... என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, சார்லி, பிரேமம், மகேஷிண்டே பிரதிகாரம், உஸ்தாத் ஹோட்டல், தொண்டிமுதலும் த்ரிஷாக்சியமும், த்ரிஷயம், டேக் ஆப் இப்படி நிறையப் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதாலேயே எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன். நாம் இன்னமும் மாஸ் நாயகர்களுக்காக கதை என்று ஒன்று வேண்டும் என்பதையே மறந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாலு சண்டையும் அஞ்சு பாட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. பற்றாக்குறைக்கு சூரி, விவேக், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு போன்றோரின் வறட்சியான நகைச்சுவைகளுமே தமிழ்ச் சினிமாவை எழ விடாமல் அழுத்திப் பிடித்து வைத்திருக்கின்றன. வடிவேலு என்னும் கலைஞன் இல்லாதது தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூட சொல்லலாம் என்றாலும் தொழில் மீது காட்ட வேண்டிய பக்தியை அரசியல்வாதிக்காக காட்டியதால் தானாகத் தொலைந்து போன நகைச்சுவையாளன்தானே அவர். நுணலும் தன் வாயல் கெடும் என்ற பழமொழிக்குப் பாந்தமாய்ப் பொருந்திப் போனவர். இவரால் மட்டும் தமிழ்ச்சினிமா தழைத்து விடாது என்றாலும் சவக்குழிக்குப் போகாமலாவது இருந்திருக்குமோ என்ற ஆதங்கமே கொடுக்கிறது அவரின் சமீபத்திய கமலஹாசன் விழா மேடைப் பேச்சு. சமீபத்திய தமிழ் படங்கள் இளம் இயக்குநர்களின் கையில் சிக்கி, சாதி என்னும் தரித்திரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அடக்கி வச்சே...’, ‘அடிமைப் படுத்தினே...’, ‘எழுந்து வருவோமுடா...’ என நீலம், பச்சை, சிவப்புன்னு சாதிக்கொரு கலர் கொடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சாதீயத் தீயை நன்றே வளர்க்கிறார்கள். இவர்களின் பாதையில் பயணிப்பதாலேயே தன் சாதிப்பெயரை பைக்கில் எழுதிப் பறக்கிறது இளைஞர் கூட்டம். நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டிய சினிமா சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பலர் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆதாயத்துக்காக! இது எப்போது மாறும் என்பது கேள்விக்குறியே... நம்மவர்களுக்கு நேர் மாறாய் இருக்கிறார்கள் மலையாள இளம் இயக்குநர்கள்... சின்னதாய் ஒரு கதை... அதை வைத்துக் கொண்டு திரையில் மாயாஜாலம் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக் கதைகளாய் நம்முன்னே நின்று நம்மை வசமிழக்க வைக்கின்றன. அவர்கள் சாதிக்குள்ளோ மதத்துக்குள்ளோ மறந்து நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் பயணிக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள்... அதிகாரத்தைச் சாடுகிறார்கள். அன்பை விதைத்து அநீதியைக் கொல்கிறார்கள். சாதியையோ மதத்தையோ சுமக்கவேயில்லை. சக மனிதனின் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள். நம் முன்னே அதைச் சுவையுடன் படைக்கிறார்கள். தமிழ்ச்சினிமா இன்றைய நிலையில் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒரு சிலர் மட்டுமே அதைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புதிதாய் புதிய கதையுடன் வரும் இயக்குநர்கள் முதல் படத்தை முக்கனியின் சுவையுடன் எடுத்து, தியேட்டர் கிடைக்காமல் படும் அவதியில், தனது நல்ல படம் ஓடாமல் முடங்கிப் போன வருத்தத்தில் அடுத்த படத்தை தமிழ்ச்சினிமாவின் மசாலா பார்முலாவிலோ அல்லது சாதீயப் பார்முலாவிலோ எடுக்க ஆரம்பித்துக் காணாமல் போய்விடுகிறார்கள். மலையாளத்தில் முதல் படம் கொடுத்த பெரும் தாக்கத்துக்கு இணையாக, அதையும் விட இன்னும் சிறப்பாக இரண்டாவது படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் பயணிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள். இங்கே நாம் மாஸ் நடிகர்களுக்காக கதை எழுதுகிறோம். ஆனால் மலையாளிகளோ தங்கள் கதைக்கான நடிகர்களைத்தான் தேடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்திய படங்கள் எல்லாம் மகா வெற்றியைக் குவித்திருக்கின்றன. சிறிய படங்களுக்கு இங்கே சரியான விளம்பரம் கிடைப்பதில்லை... ஆனால் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள்தான் பெரிய இலக்கை நோக்கி நகர்கின்றன. வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு நாயகனுக்கு உரிய உடலமைப்பு கொண்டவரல்ல என்றாலும் மிகச் சிறப்பாக, அற்புதமாக நடிப்பவர். நல்ல பாடகர், இயக்குநர். அவர் நடித்தால்தான் சரியாக இருக்குமென வந்த படங்கள் பல. சமீபத்தில் அவரின் 'மனோகரம்' சினிமாவைப் பார்த்தேன். அப்படியான கதாபாத்திரத்தில் நம்மவர்கள் நடிக்க யோசிப்பார்கள். ஆட்டோகிராப்பில் பலர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும்தான் சேரன் நடிகனானார். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் சிலர் நடிக்க மறுத்ததால்தான் அவரும் நடிகனானார். மனோகரத்தில் ராசி என்பது என்னவென்றே அறியாத, எதைச் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் ஒரு பெயிண்டரின் கதாபாத்திரம் வினீத்துக்கு.! மனுசன் அடித்து ஆடியிருப்பார். அந்த உருவத்தை தமிழ்ச் சினிமா என்றால் ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ஆனாலும் நாமும் இப்போது மாறித்தானே இருக்கிறோம். சரவணா ஸ்டோர் ஜாம்பவான் அண்ணாச்சியை எல்லாம் நாயகனாக்கி கொடியும் கட்டவுட்டும் வைக்கும் நாளுக்கு காத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? வினீத் எழுதி இயக்கிய 'தட்டத்தீன் மராயத்து' பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள், அழகானதொரு காதல்கதை. இவரைப் போல்தான் பஹத்பாசிலும்! நடிப்பு அரக்கன். எவனாவது ஒரு இளம் நாயகன் வழுக்கைத் தலையுடன் படங்களில் நடிப்பானா? இவர் நடித்தார். எதார்த்த நடிப்பென்றால் பஹத் எனத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டார். ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தைப் பார்க்கும் போது ‘யார்டா இவன்?’ எனத் தோன்றியது. அடுத்தடுத்த படங்களில் இவரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பஹத்தின் ஒவ்வொரு படத்தையும் தேடித்தேடிப் பார்க்க வைத்தது அவரின் அலட்டலில்லாத, ஆத்மார்த்தமான நடிப்பு. இதுவரை அவரின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு. தமிழில் வந்ததைத் தவிர. இதே வரிசையில் ஷௌபின் ஷாகிர் பற்றிச் சொல்லியே ஆகணும்... இவரின் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைப் பார்க்கும் முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகனாய்த்தான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்... சத்தியமாக சந்தானத்தைப் போல் இவர் இல்லை. இந்தப்படம் பார்த்தபோது இவரின் நடிப்பு வியக்க வைத்தது. அதன் பின் பார்த்த படங்களில் எல்லாம் ஷௌபின் என் மனம் கவர்ந்த நாயகராய் மாறிப் போனார்... அவர் இருந்தால் அந்தப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்றாகிப் போனது. கும்பளங்கி நைட்ஸில் மகிழ்ந்து கடந்த போது அம்புலியில் மனுசன் அடித்து ஆடியிருப்பார். அப்படி ஒரு நடிப்பை அந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது. அம்புலி இவரின் வாழ்நாள் சாதனைப்படம் என்றும் சொல்லலாம். இப்படியே துல்கர் சல்மான், நிவின் பாலி, சோனு நிகம், ப்ரித்விராஜ், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், ஜெயசூர்யா, குஞ்சக்கோ போபன் என ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டே செல்லலாம். மலையாள சினிமா என்று சொல்லிவிட்டு நாயகர்களின் பின்னே செல்வது முறையல்லவே! மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் வரிசை நாயகர்களுக்குப் பிறகு மலையாளத்துக்கு கிடைத்திருக்கும் இளைஞர் பட்டாளம் மிகச் சிறப்பாக நடிக்கிறது. இவர்களின் தொடர் வெற்றிக்குப் பின்னே நல்ல கதைகள் இருக்கின்றன. அதைக் கொடுப்பவர்கள் புதிதாய் பதியமிடும் இளம் இயக்குநர்களே. மலையாளச் சினிமா உயரத்தை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து நாட்களாகிவிட்டது. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மலையாள சினிமாவில் ஒவ்வொரு படமும் புதிதான கதைக்களத்துடன்... எதார்த்தமாக எடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தக் கதையாடலே அந்தப் படங்களின் வெற்றிக்கு வித்திடுகின்றன. மேலே சொன்னது போல் நாயகனுக்காக கதை என்பதைவிட கதைக்காகத்தான் நாயகன் என்பதில் மிகத் தெளிவாக, உறுதியுடன் இருக்கிறார்கள்... நாயகனுக்காக கதையில் எந்தச் சமரசமும் செய்வதுமில்லை... செய்ய விரும்புவதுமில்லை. அவர்களின் படங்களைக் களங்களே நிர்ணயம் செய்கிறது. காட்சிப்படுத்துதலில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள். தமிழ்ச்சினிமா, நான் சின்ன வயதில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இன்னும் நகர்கிறது. சில நல்ல படங்கள் எப்போதேனும் தலைகாட்டுவதுடன் சரி... மாஸ் நாயகர்களின் படங்களுடன் வெளிவந்து மறுநாளே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. மிக மிக அவசரம், மேற்குத் தொடர்ச்சி மலை, தொரட்டி, ஒத்தைச் செருப்பு போன்ற படங்களையெல்லாம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? அசுரன் கூட மாஸ் ஹீரோ என்பதால்தான் இமாலய வெற்றி பெற்றது என்பதே வெளிப்படையான உண்மை. நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா மாஸ் என்னும் கோட்டைக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கதையா..? அப்படின்னா..?’ என்ன என்று கேட்க வைத்துவிட்டது. நாங்கள் எடுப்பதுதான் கதை... நாலு சண்டை, ஐந்து பாட்டு... கொஞ்சம் பஞ்ச் வசனங்கள் இருந்தால் போதும் கட் அவுட் வைக்கவும் அதுக்குப் பால் ஊத்தவும் அப்படியே தங்களுக்கு வாக்கரிசி போட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு என்பதை உணர்ந்தபின் கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதுவும் குறிப்பாக புதிய இயக்குநர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல சாதிகளைச் சுமந்து படமெடுப்பதுதான் கேவலத்தின் உச்சம். அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவும் ‘நான் இவன்டா’ எனச் சாதி சொல்லித் திரியவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது... பின் எப்படி நல்ல கதைகளுக்கு இங்கே மதிப்பிருக்கும்..? மலையாளக் கரையோரம் இப்படியான சாதீய இயக்குநர்கள் ஒதுங்கவில்லை என்பதே ஆறுதல். நல்ல சிறுகதைகளை வாசிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு சமீபத்திய மலையாள புதிய இயக்குநர்களின் படங்களில் கிடைக்கிறது என்பதே உண்மை. சல்லிக்கட்டு, தண்ணீர் மத்தன் தினங்கள், அம்புலி, உயரே, ஜூன், கும்பளங்கி நைட்ஸ், இஸ்க், வைரஸ் எனச் சமீபத்தில் பார்த்து... ரசித்த படங்கள் எல்லாம் மனசுக்குள் இன்னும் தித்திப்பாய்... முடிந்தால் இந்தப் படங்களைப் பாருங்கள்... மனநிறைவான சிறுகதையை காட்சிப்படுத்திப் பார்த்த அனுபவம் கிடைக்கும்... நிச்சயமாய் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். கத்தியும் ரத்தமும் சாதியும் மதமும் இல்லாத ஒரு வாழ்வை ரசிக்க முடியும். மலையாளத் திரையில் மண் வாசமும் மனதின் வாசமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் காலமிது. இந்த வாசம் இன்னும் இன்னுமாய்த் தொடரட்டும். விஷக்கன்னி : எஸ்.கே. பொற்றேக்காட் (மலையாளம்)
தமிழில் மொழிபெயர்த்தவர் : குறிஞ்சிவேலன் எஸ்.கே. பொற்றேக்காட் - கவிஞர், நாவலாசிரியர், பயணக் கட்டுரையாளர், அறுபதுக்கு மேல் நூல்கள் எழுதிய இவர் ஒரு தேசத்தின்டே கதா என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசும், ஞானபீடப்பரிசும் பெற்றார். 1982 ல் மறைந்தார். இந்த நூலும் இவரது முக்கியமான நாவல்களில் ஒன்று. குறிஞ்சிவேலன் - கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர், M T வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பொற்றேக்காட்டின் விஷக்கன்னி உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விஷக்கன்னி : நாற்பதுகளில் மத்திய திருவிதாங்கூரிலிருந்து கிருத்துவக் குடும்பங்கள் இரண்டு காரணங்களுக்காக மலபாருக்குப் புலம் பெயர்கின்றன. ஒன்று அவர்கள் மதநம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் சூழல். இரண்டாவது அங்கு சென்று அவ்வப்போது இங்கே வந்து போகிறவர்கள் பெரும் பணக்காரர்களாகத் தோற்றமளிப்பது. இருக்கும் சொத்தை எல்லாம் விற்று குடும்பத்துடன் சென்றவர்களுக்கு அறிந்த நிலத்தை விட அறியாத நிலத்தில் ஆபத்து அதிகம் என்பது தெரிந்திருக்கவில்லை. என் சிந்தனைகள்: ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் போலவே இதுவும் மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டம். இயற்கையின் அட்டூழியங்களுக்கு முன்னால் சரணடையத் தயங்கும் மனிதகுலத்தின் ஒரு கதை இந்த நாவல். எழுத்தின் Richness நம்மை காட்டுப்பகுதிக்கும், கன்னிநிலத்திற்கும் எளிதாகக் கடத்திப்போகிறது. உழைப்பையும் இயேசுவையும் மட்டுமே நம்பி தூரபிரதேசம் போகும் ஏழை விவசாயிகளுக்கு உழவைப் பார்த்திராத காட்டுநிலம் கனவுகளை விரிக்கிறது. மரியம் ஐந்நூறு ஏக்கருக்கு முதலாளி என வறட்டுஜம்பம் அடித்துக் கொள்வது அங்கு குடியேறியவர்களின் மொத்த மனநிலையின் பிரதிபலிப்பு. மாதவியை ஆசிரியர் விஷக்கன்னி என்கிறார், எனக்கென்னவோ நிலம் தான் மயக்கிப் பின் உயிர் கொல்லும் விஷக்கன்னியாகத் தோன்றுகிறது. இரத்தமும் சதையுமாய் நடமாடும் மனிதர்கள், வஞ்சனைகள், மூடநம்பிக்கைகள், சந்தர்ப்பவாதம் எல்லாம் சேர்ந்த கலவை இந்தநாவல். பொற்றேக்காட்டின் பெயரை காலத்திற்கும் சொல்ல இந்த ஒரு படைப்பே போதும். இவருடைய மற்ற புத்தகங்கள், குறிப்பாக ஒரு தேசத்தின்டே கதா தமிழிலோ, ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்பட்டதா? தெரியவில்லை. சந்தர்ப்பம் இருந்தும் மலையாளம் கற்றுக்கொள்ளாத முட்டாள்தனத்தை எத்தனை முறைதான் நொந்து கொள்வது!! பிரதிக்கு, புத்தகசந்தையில் முயற்சி செய்யுங்கள். இப்பிரதி விவரங்கள் : வெளியீடு : NBT முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு : 1991 விலை ரூ. 28/-
சென்ற கட்டுரையில் சந்திரயான் – 2 தோல்வி என ஏன் எழுதக் கூடாது என்பதற்கான காரணிகளைப் பார்த்தோம். விக்ரம் தரையிறங்கு கலம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து அது பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் அலுவலகம் அதனை ஏற்ற பின் பொதுவெளியில் அவ்வறிக்கை வைக்கப்படும். இதன் நடுவே, சந்திரயான் – 3 கலத்தின் பணிகளுக்கான ஆரம்பகட்ட நிதித் தேவைகளை இந்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்த ஆண்டு (நிதியாண்டு 2019-20) ஒதுக்கப்பட்ட 666 கோடிகளுடன் கூடுதலாக 75 கோடிகளை இஸ்ரோ கேட்டது, அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் சரிவர இயங்குமானால் வரும் நவம்பர் 2020 மாதத்தில் சந்திரயான் 3 சந்திரனில் இறங்கும் வாய்ப்புகள் உண்டு! இதில் orbiter எனப்படும் சந்திரனை சுற்றி வரும் செயற்கைக்கோள் இருக்காது, தரையிறங்கு கலமும் ஒரு ரோவரும் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்ரம் தரையிறங்கு கலம் தோல்வி அடைந்த குறைபாடுகள் தொடர்புடைய விசாரணை அறிக்கை (defect investigation report) வெளிவந்த பின், அது பற்றி விரிவாகப் பார்க்கலாம். இப்போது சந்திரயான் 2 எடுத்துச் சென்ற கருவிகள் சரியாக இயங்குகின்றன என்ற தகவல்கள், சில கண்டுபிடிப்புகள் மூலம் தெரிய வருகின்றன. சந்திரயான் 2 இல் உள்ள அனைத்து உபகரணங்களும் இயங்கத் தொடங்கி விட்டன, சில கருவிகள் ஆய்வுகளைத் தொடங்கி விட்டன. அனைத்து உபகரணங்களிலும் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் சரியாக இயங்குகின்றன. CLASS எனப்படும் Chandrayaan-2 Large Area Soft X-ray Spectrometer கருவி, Moon's X-ray Fluorescence (XRF) அலைக்கற்றைகளை ஆராய உள்ளது. அது, இப்போது சந்திரனின் பரப்பில் உள்ள சிலிக்கான், சோடியம், அலுமினியம் போன்ற மற்ற பல தனிமங்களை ஆராயும். மாதத்தில் 6 நாட்கள் இது குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபடும் – காரணம், மாதத்தில் 6 நாட்கள் தான் சந்திரன் பூமியின் வால் பகுதியைக் கடக்கும். பூமியின் வால்: சூரியன், ஒளியுடன் பிளாஸ்மாவையும் (அணுக்கரு மையமும், எலக்ட்ரான்களும் தனித்தனியாக இருக்கும் வடிவம்) உமிழ்ந்து கொண்டே இருக்கிறது, இது சூரியக் காற்று (solar wind) எனப்படும். பிளாஸ்மா, அதாவது ஆற்றல் கொண்ட துகள்கள் (charged particles) வினாடிக்கு 100 km மற்றும் அதற்கு சற்று மேலான வேகத்தில் வரும், அது கோள்களின் வளி மண்டலத்துடன் உராய்ந்து, அங்கிருக்கும் அணுக்கள் / மூலக்கூறுகளுடன் வினை புரிந்து சில மாற்றங்களை உருவாக்கும். பூமியைப் பொறுத்தவரை, ஒரு சக்தி வாய்ந்த காந்தப் புலம் பூமியைச் சுற்றி இருப்பதால், சூரியனில் இருந்து வரும் ஆற்றல் கொண்ட துகள்கள் பூமிக்குள் வராமல் பூமியின் இரு பக்கங்களிலும் சிதறடிக்கப்படும், அதே சமயம், பூமியின் காந்தப் புலம், சூரியனை நோக்கி இருக்கும் பகுதியில் அதிர்ச்சிக்கு உள்ளாகி வளைந்தும் அழுந்தியும் (அதன் பெயர் வளை-அதிர்ச்சி - bow shock), பின் பகுதியில் நீண்டும் இருக்கும். பூமியின் பின் நீண்டு இருக்கும் பகுதியில் சூரியக் காற்று படாமல் / இல்லாமல் இருக்கும், அந்த இடம் பூமியின் வால் (geo-tail) எனப்படும். CLASS ஆய்வு: பூமியின் வால் பகுதியை சந்திரன் மாதத்தில் 6 நாட்கள் கடக்கும். அந்த சமயத்தில் தான், சந்திரயான் 2 இல் உள்ள CLASS கருவி இந்த ஆய்வில் இறங்கும், தனிம அணுக்கள், கலவை மூலக்கூறுகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும். அந்த ஆய்வுகளில் சந்திரனில் இருக்கும் அணு/மூலக்கூறுகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கும். CLASS கருவி, சூரியனில் இருந்து வரும் ஆற்றல் கொண்ட துகள்களின் செறிவு வேறுபாடுகளையும் (intensity variations) அளவிட்டு அனுப்பிக் கொண்டு இருக்கிறது. ஆர்கான் (Ar) கண்டுபிடிப்பு: சந்திரயான் 2 எடுத்துச் சென்ற Chandra’s Atmospheric Composition Explorer-2 (CHACE-2) – சந்திர வளிமண்டலக் கலவை ஆய்வுக் கருவி – சந்திரனின் பரப்புக்கு மேல் 100km உயரத்தில் ஆர்கான் 40 (Argon 40 – 40Ar) வாயு அணுக்கள் அதிகம் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளது. சந்திர மண்ணில் ஆர்கான் இருப்பது ஏற்கனவே 1972 ஆம் ஆண்டு, அப்போலோ - 17 விண்கலத்தில் சென்றவர்கள் (கடைசியாக மனிதர்கள் சந்திரனுக்கு சென்று வந்தது அப்போதுதான்) கொண்டு வந்த துகள்களை நிறமாலைக் கருவி மூலம் ஆராய்ந்து கண்டு பிடித்தார்கள் ஆனால் சந்திரயான் 2, சந்திரனின் வளிமண்டலத்தில் 100km உயரத்தில் இந்த வாயு அணுக்கள் இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறது, மேலும் அது எப்படி அவ்வளவு உயரத்திற்கு வந்தது எனும் கருதுகோளையும் (படம் - 2) வெளியிட்டு உள்ளது. எந்தெந்த தனிமங்கள், மூலக்கூறுகள் ஒரு இடத்தில் / பொருளில் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை பிறகு விரிவாகப் பார்க்கலாம். சந்திரனின் புறவளி மண்டலத்தில் (exosphere), மிகவும் மெல்லியதான வாயு மண்டலம் உள்ளது, மெல்லியது என சொல்லக் காரணம், அங்கு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொள்வதோ, மோதிக் கொள்வதோ அரிது. பூமியுடன் ஒப்பிட்டால், பூமியில் கடற்கரைப் பகுதியில் காற்றில் ஒரு சதுர சென்டிமீட்டரில், அதாவது உங்கள் விரல் நகப் பகுதியின் மேற்பரப்பில் சுமார் 10^19 அணுக்கள் இருக்கும் (அதாவது 10000000000000000000 அணுக்கள்), இதே சந்திரனின் புறவளி மண்டலத்தில் அதே பரப்பில் சுமார் 10000 அணுக்கள் தான் இருக்கும்.
ஆர்கான் என்பது ஒரு ஓரகத் தனிமம் (isotope). ஓரகத் தனிமங்களின் இயற்பண்புகள் வேறாக இருந்தாலும், வேதிப்பண்புகள் மாறுபடாது. இவை கதிரியக்கச் சிதைவின் காரணமாக உருவாகின்றன. ஆர்கானைப் பொறுத்தவரை, இது நிலவின் அடிப்பரப்பில் இருக்கும் பொட்டாஷியம் சிதைவுற்று, அந்நிலத்தில் உள்ள வெடிப்புகள் மற்றும் அதிர்வுகளின் காரணமாக மேற்பரப்பிற்கு வந்து வளிமண்டலத்தில் சூரிய வெப்பத்தின் காரணமாக கலந்து விடுகின்றன. அது மேலும் சூரியக் காற்றின் காரணமாக அயனியாகி, இரவு நேரத்தில், மீண்டும் நிலத்தை அடைகின்றது. சந்திரனில் பகல் மற்றும் இரவில் ஆர்கானின் அடர்த்தி மாறுபாடுகள் குறித்தும் CHACE-2 ஆய்வு செய்து வருகிறது. தொடரும் ஸ்ரீமதி. ஜெயந்தி ஜெகதீஷ் அவர்கள் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பின் பெயர் “ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு”
நூலாசிரியர் இரு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். நூல்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது அவரின் மூன்றாவது புத்தகம். இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நான்கைந்து பக்கங்களில் நிறுத்தப்படும் சிறுகதைகள் இத்தொகுப்பில் அதிகமாக காணப்படுகின்றன. பொதுவாக சிறுகதைத் தொகுப்பு அல்லது கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை நான் படிக்கத் துவங்கினால் குறைவான பக்கங்களைக் கொண்ட ஆக்கங்களை முதலில் படிப்பேன். அதற்கடுத்து சாப்பாடு தொடர்புடைய தலைப்பில் ஏதேனும் இடம் பெற்றிருந்தால் அதைப் படிப்பேன். சின்ன சின்ன சிறுகதைகள் அதிகம் இத்தொகுப்பில் இருப்பதால் எளிதாக, குறைவான நேரம் ஒதுக்கி இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து விடலாம். நூற்றி இருபது பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. நூலாசிரியர் பெண்ணாக இருந்தாலும் ஆண் பார்வையில் நிறைய கதைகளை எழுதி இருக்கிறார். இது குறிப்பிடப்பட வேண்டிய ஆற்றல். சற்று விரிவாக சொல்ல வேண்டுமெனில் சமூகத்தை, தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஆழமாக அவதானிப்பதோடு, ஒரு விஷயத்தை அணுகுவதில் ஒவ்வொருவரின் பார்வையும் எப்படி இருக்கிறது என்பதை பாலின பேதமின்றி புரிந்து கொண்டால் மட்டுமே எழுத சாத்தியப்படும். நூலாசிரியருக்கு சாத்தியமாகி இருக்கிறது. “கொப்பரை”, “கொலுபொம்மை” – இந்த இரு சிறுகதைகளும் அகல் மின்னிதழ் நடத்திய சிறுகதைப்போட்டிக்காக ஆசிரியர் அனுப்பி இருந்ததால் அந்த சிறுகதைகளுடன் எனக்குப் பரிச்சயம் உண்டு. வாழ்க்கையின் எதார்த்தம் என்ன, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நம் வாழ்வில் நடந்தேறும் சம்பவங்கள் போன்றவை நமக்கு உணர்த்தும் சங்கதிகள் என்ன? இப்படி பல்வேறு வீரியமான புள்ளிகளை இணைத்து நேர்த்தியான கோலமாக “கொப்பரை” சிறுகதை படிக்கும் நம்முள் படர்கிறது. நான்கு பக்கங்கள் கொண்ட சிறிய கதையானாலும் அது பேசும் விஷயங்கள் மிக மிக கனமானவை. பெண்ணின் பார்வையையும், ஆணின் பார்வையையும் சரி சமமான விகிதத்தில் கொண்டதாக எழுதப்பட்ட சிறுகதை “கொலு பொம்மை”. “கொப்பரை” சிறுகதையின் பேசு பொருளுக்கு அப்படியே எதிரான கருத்தைக் கொண்ட கதை இது. இரண்டையும் படிக்கும் வாசகர்கள், “ஆசிரியரின் பார்வை சரியானது” என்று படித்து முடித்து நினைக்கும் அந்த மனநிலையில் தான் நூலாசிரியர் வெற்றி பெறுகிறார். ஒரு கதை சொல்லிக்கு அவசியம் தேவையான ஆற்றல் இது. ஆணின் பார்வையில் சரளமாக எழுதும் நூலாசிரியர் அதில் முக்கிய கருவாக கையாளுவது “ஒரு ஆண் தன் காதலை பெண்ணிடம் வெளிப்படையாக சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்து மருகுவது”. சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் இதை கையிலெடுத்து லாவகமாக ஆசிரியர் நிறைய எழுதுகிறார். இத்தொகுப்பின் மாஸ்டர் பீஸ் என நான் நினைக்கும் சிறுகதை “எனக்குள் நான்” ஒரு பெண்ணின் உடல் சார்ந்த பிரச்சனைகளை பேசும் சிறுகதை இது. துவக்கத்திலிருந்து கதையை நிறுத்துவதற்கு சற்று முன்பு வரை ஒரு பார்வையில் பேசிகொண்டு இருந்த கதை சடாரென வேறொரு பார்வைக்கு மாற்றம் அடைகிறது. படிப்பவர்கள் மறக்காமல் இருக்கும் விதத்தில் கதையை நிறுத்த அந்த பார்வை பேருதவியாக இருக்கிறது. நூலாசிரியர் இயல்பில் கவிஞர். ஒவ்வொன்றையும் கவித்துவமான பார்வையில் அணுகும் தன்மை கொண்டவர். அந்த குணாம்சம் சில சிறுகதைகளிலும் வெளிப்படுகிறது, கவிதை வேறு, கதை வேறு. அதிகாலை நேரத்தில் வாகனம் ஓட்டியபடி சாலையில் பயணிக்கும் தருணத்தில் ஒரு சூரியோதயத்தை நாம் பார்த்தால் அதில் பரவசமாகி நாம் கவிதை எழுத முடியும். அதையே கதையாக எழுத முடியாது. அந்தக் காட்சியை ஒரு பேசு பொருளாக எடுத்துக் கொண்டு அந்த தரிசனம் வாழ்க்கையில் எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை எவ்வாறு நினைவுபடுத்துகிறது என்றெல்லாம் விரிவாக சொல்லி வாக்கியங்களை அடுக்கி கதையாக எழுதலாம். இத்தொகுப்பில் கவிதைப்பார்வையில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் உண்டு. “ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு” சிறுகதை மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. முக்கியமாக சம்பவங்களை விவரிக்கும் பாங்கு, எழுத்து நடை, சொல்ல வந்த விஷயத்தை நாசுக்காக அதே சமயம் வளர்த்தாமல் நறுக்கென எடுத்து சொல்லும் விதம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது. என் பார்வையில் “வேலைக்காரி” சிறுகதை பெரியதொரு கவனத்தை ஈர்க்கவில்லை. கதை எழுதுபவர்கள் அனைத்தையும் படிப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் எழுதுவது தேவையற்றது. படிக்கும் வாசகன் புத்திசாலி என்ற எண்ணத்துடன் எழுத்தாளர் எழுத வேண்டும். சில விஷயங்களை வாசகனின் யோசனைக்கு விட்டுவிட வேண்டும் என்ற பார்வை எழுத்துலகில் பரவலாக பேசப்பட்டு இப்போது அனைவரும் அதை ஏற்றுக்கொண்ட பார்வையாகிவிட்டது. “நீட்சி” என்ற சிறுகதை, “ஒரு கோணத்தை மட்டும் படிப்பவர்களை யோசிக்க வைப்பது” என்ற பார்வைக்குள் எழுதப்படாமல் ஒட்டு மொத்த முழு சிறுகதையையும் படிக்கும் வாசகனின் புரிதலுக்கு ஏற்றார் போல் என்ற பதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த யுக்தி மிகச் சிறப்பானதொரு வாசிப்பு அனுபவத்தை எனக்குத் தந்தது. பதினைந்து சிறுகதைகளையும் எடுத்து பதினைந்து பத்திகள் எழுதுவதைக் காட்டிலும் ஒரு பானை சாதத்திற்கு சில பருக்கைகள் பதம் போதுமானது என்ற சொலவடைக்கு ஏற்ப சில சிறுகதைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். நூலாசிரியருக்கு சிறுகதை வசப்பட்டுவிட்டது. கவிஞர் பார்வையிலிருந்து விலகி (கதை எழுதும் போது மட்டும்) தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும். எழுதுவார் என்பது என் நம்பிக்கை. ஒரு யதார்த்தமான இயல்பான வாழ்க்கை அனுபவத்தை இந்த சிறுகதை தொகுப்பானது வஞ்சனை இல்லாமல் வழங்குகிறது. நண்பர்கள் தொகுப்பை வாங்கிப் படித்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். சிறுகதைத் தொகுப்பு : ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிக்குண்டு ஆசிரியர் : ஸ்ரீமதி. ஜெயந்தி ஜெகதீஷ் இந்நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9445912564 உலகப்படங்கள் என்றாலே பிரெஞ்சு, கொரியன், ஈரானியப் படங்கள் என்று போய்விடுகிறோம். தமிழில் அப்படியான தன்மை கொண்ட படங்களே வருவதில்லையா என்று பொதுவான தமிழ்சினிமா ரசிகர்கள் சிலர் கருதுவது வாடிக்கையான ஒன்று. அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிவிட முடியாது. உலகப்படங்களுக்கு நிகராக தரமான காட்சியமைப்புகளுடன் தமிழிலும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அப்படி வந்த ஒரு தமிழ்ப்படம்தான் 2010ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா. மிஷ்கின் படங்களில் பிரதானமாய் துருத்தித் தெரிவது படத்தின் அடிநாதமாய் விளங்குகிற அன்புதான். இதற்குச் சிறந்த உதாரணங்களாய் இரண்டு படங்களைக் குறிப்பிடுகிறேன். முதல் படம் பிசாசு. அன்பே உருவான ஒரு பிசாசு... (இங்கு பிசாசு என்பது பெண்ணையோ அல்லது அதீத பாசக்காரரையோ குறிப்பதல்ல.) இருந்தால் அது என்ன செய்யும்... இந்தக்கருவை நேர்த்தியான திரைக்கதை செய்தது ஒருபக்கம். இன்னொன்று மிகச்சமீபமாய் வெளியான துப்பறிவாளன். இந்தப்படத்தில் ஒரு சிறுவன் தன் வளர்ப்பு நாயின் மேல் வைத்த அன்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு மிஷ்கின் கையாண்ட திரைக்கதை உத்தி. மிஷ்கின் படங்கள் எத்தகைய தன்மை கொண்டவை என்பதற்கு இந்த உதாரணங்களே போதுமானவை. நந்தலாலா இதற்கெல்லாம் ஒருபடி மேலேயே அன்பைப் பேசுகிறது. மனப்பிறழ்வு கொண்ட ஒருவன் தான் இருக்கிற காப்பகத்திலிருந்து வெளியேறி தன் தாயைக் கண்டுபிடித்து "ஏன் இத்தனை நாள் என்னைப் பார்க்க வரவில்லை" என்று கேட்டுக் கன்னத்தில் அறைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணத்தைத் தொடங்குகிறான். புகைப்படத்தில் மட்டுமே தன்னைப் பார்த்துப் புன்னகைக்கும் தாயைப் பார்த்து அவள் கன்னத்தில் முத்தமிடத் தனியாய்ப் பயணப்படும் சிறுவன் அஷ்வத்ராம் மிஷ்கினோடு சேர்ந்து கொள்கிறான். இவர்களின் இந்த அன்புப் பயணமே நந்தலாலா எனும் சினிமாவாக கண்முன் விரியத் தொடங்குகிறது. முதலில் இந்தப்படம் தமிழின் நேரடிக்கதை அல்ல என்பதை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். மிஷ்கின் தன் படங்கள் எல்லாவற்றையுமே ஏதாவதொரு படைப்பின் பாதிப்பிலேயே உருவாக்கியிருப்பார். நந்தலாலா படமும் அதறகு விதிவிலக்கல்ல. 2009ல் வெளியான ஜப்பானியத் திரைப்படம் "கிக்குஜிரோ" வின் தழுவலாகவே நந்தலாலாவைச் சிருஷ்டித்திருப்பார் மிஷ்கின். ஆனாலும் தமிழில் இங்கிருக்கிற மண் தன்மைக்கேற்ற, மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ற படைப்பாக மாற்றிக் கொடுப்பதும் சாதாரண காரியம் என்று சொல்லிவிட முடியாது. அதை ஒரு சவாலாய் எடுத்து நந்தலாலாவைச் செய்திருப்பார் மிஷ்கின். ஆற்றுநீர் ஆர்ப்பரித்து ஓடாமல் நிதானமாய் சலசலத்துச் செல்கிறது. நந்தலாலா என டைட்டில்கார்டு ஆற்றுநீர் மேலேதான் மிதக்கிறது. அதில் கிடக்கிற நாணல் புற்கள் ஆற்றுநீரின் வேகங்களுக்கேற்ப அசைந்து கொடுக்கிறது. மனிதர்கள் கொஞ்சமே கொஞ்சம் Flexible ஆக நடந்து கொண்டால் வாழ்வு ஆர்ப்பாட்டமில்லாத தெளிந்த நீரோடை தான் எனச் சொல்லிப் பயணத்தைத் தொடர ஆரம்பிக்கிறார் இயக்குனர். ஆனால் ஒரிஜினலுக்கான எந்த அங்கீகாரமும் படத்தின் டைட்டிலில் இடம்பெறவில்லை என்பது கண்டனத்துக்குரியது. சினிமா என்பது வசனங்களால் நிரம்பியது அல்ல. அது காட்சிமொழி என்பதை இப்படத்தில் மிகச்சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்கள் வசனங்களை வளவளவென்று எங்கும் பேசவில்லை. ஆனால் பல முக்கியமான காட்சிகளில் முடிந்தளவுக்கு வசனத்தைக் குறைத்து பின்னணி இசையிலேயே படத்தை நகரவிடுகிறார்கள். நான்கு பக்க வசனங்கள் தரும் புரிதலை விட இந்த வெற்று அமைதி நம்மை இன்னும் படத்துக்குள் இழுக்கிறது. படத்தில் வருகிற மனிதர்களின் உணர்வுத் தொகுப்புதான் நந்தலாலா முழுமைக்குமான மையப்புள்ளி. எல்லா மனிதர்களுக்குள்ளும் எல்லாமும் உண்டு. நாம் அவர்களை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து அவர்களின் ஏதாவதொரு குணம் வெளிப்படுகிறது என்பதைப் படத்தில் வருகிற பல்வேறு வித மனிதர்களின் வாயிலாக அழுத்தமாகக் காட்சி பண்ணியிருக்கிறார்கள். உதாரணமாய் ஒரு காட்சியைச் சொல்லலாம். மாணவி ஒருத்தி சைக்களிலிருந்து கீழே விழுகிறாள். ஒரு குழந்தைக்கான பரிதவிப்போடு அங்கே ஓடும் மிஷ்கின் அவளின் பாவாடையை முழங்காலுக்கும் சற்றுமேல் தூக்க, அவள் அதிர்ந்து அறைந்து விடுகிறாள். மிஷ்கின் பதிலுக்கு "எச்சை தொட்டு வை. வலிக்காது" எனச் சொல்லும் போது அந்த மாணவியின் ரியாக்சன்... சான்ஸ்லெஸ். தன் தவறை உணர்கிறாள். மிஷ்கினை வாஞ்சையாய் அவள் பார்க்கும் இந்தக்காட்சி ஒரு சோறு பதம். இப்படியான காட்சிகளே படம் முழுக்க விரவிக் கிடக்கிறது. படத்தின் உருவாக்கம் நாடகவியலை ஞாபகப்படுத்துகிறது. ஆம். படத்தின் காட்சிகளில் ஒரு சாலையோ அல்லது வீடோ எதுவாகினும் அங்கு வைக்கப்படும் கேமரா ஃப்ரேமிற்குள் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். நடிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து சென்று விடுகிறார்கள். அதாவது ஃப்ரேமிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் வெளியேறிய பிறகும் கேமரா சில நொடிகளுக்கு அந்தச் சூழலிலேயே இருக்கிறது. அங்கு அவ்வளவு சம்பவங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. ஆனாலும் அந்த இடத்தில் பெரிதாய் எந்த மாற்றங்களும் நிகழாமல் இயற்கை மௌனமே சாட்சியாய் நிற்கிறது. படத்தில் பிரதானமாய் குறிப்பிடத் தகுதியுள்ள இரண்டு விஷயங்கள் இசையும் ஒளிப்பதிவும். வசனங்கள் இல்லாத இடங்களிலெல்லாம் பின்னணி இசை நின்று பேசுகிறது. குறிப்பாக பாலியல் தொழிலாளி ஸ்னிக்தா தன் கதையைச் சொல்லி முடித்து "நான் அழுக்காகிட்டேன்" என்று சொல்கிற போது பெய்து கொண்டிருக்கும் மழையைக்காட்டி "அதுல குளி... சுத்தமாகிருவ" என்று மிஷ்கின் சொல்கிற காட்சியில் பின்னணி இசை அவ்வளவு கம்பீரம். "ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே..." பாடலில் நெகிழ வைக்கிறார்கள். அதே மாதிரி மிஷ்கின் சிறுவன் அஷ்வத் ராமின் தாயைச் சந்திக்கிற காட்சி மிக நீண்ட நேரத்துக்கு லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. படத்தின் உயிர்நாடியாக விளங்குகிற இந்தக்காட்சியில் எந்த வசனங்களும் இடம்பெறாது. ஆனால் இளையராஜாவின் இசையும் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் மாயாஜாலம் புரிந்து கொண்டிருக்கும். தவிர இப்படத்தின் ஒரு காட்சியின் முடிவு அடுத்த காட்சியில் இருந்து ஆரம்பிப்பதாகக் காட்டப்பட்டிருக்கும் திரைக்கதை உத்தியும் இயக்குனர் ரசனையின் கட்டியம் கூறுகிற சிறப்பான இடங்கள். உதாரணமாய் பயணத்தின் இடையில் இவர்களோடு வந்து சேருகிற ஸ்னிக்தா ஒரு கட்டத்தில் விடைபெறுகிறார். ஆனால் பிரிய மனமின்றி இரு தரப்பும் பார்த்துக் கொண்டிருக்க காட்சி தாவுகிறது. ஒரு லாரியில் மூவரும் ஒன்றாய்ப் பயணிக்கிறார்கள். இதுபோல் காட்சிகள் படத்தில் நிறைய இடம்பெற்றிருக்கிறது. அஷ்வத்ராமின் பாட்டி, அங்கே வேலை செய்கிற பணிப்பெண், கால்களை இழந்த அதே சமயம் கெத்து காட்டுகிற ஊனமுற்ற இளைஞர், அவருக்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர், ஹாரனை திருடியதாரல் மிஷ்கினை அடித்துப் பின்பு அவர் பற்றித் தெரிந்து வாஞ்சையாய் நடந்து கொள்ளும் லாரி டிரைவர், ஐஸ் விற்பவர், அஷ்வத்ராமின் ஆங்கிலம் கண்டு மிரளும் சப் இன்ஸ்பெக்டர், போதையில் உற்சாகமாய் வாகனங்களில் வலம் வருகிற இளைஞர்கள், மிஷ்கின் நடவடிக்கைகள் கண்டு மிரண்டு போகும் புதுமணத் தம்பதிகள் எனப் படம் முழுக்க பல நிறங்களில் மனிதர்கள். அன்பென்ற ஒற்றைக் குடை கீழ் ஒரு புள்ளியல் திடீரெனச் சங்கமித்து அவரவர் இயல்புக்குத் திரும்பும் இடங்கள் என படம் நீரோடை போலவே பயணிக்கிறது. கால்களில் குவியும் கேமரா மிஷ்கின் படங்களின் தனித்துவமிக்க அடையாளம். இந்தப்படத்திலும் அவ்வாறான காட்சிகள் நிறையவே இருக்கிறது. குறிப்பாய்ச் சாலைகளில் மிஷ்கின், அஷ்வத்ராம் நகர்ந்து கொண்டிருக்கிற காட்சிகளை அபாரமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அஷ்வத்ராமின் தாயை மிஷ்கின் எதிர்கொள்கிற விதமும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் மிஷ்கின் மனப்பிறழ்வு நோயில் அவர் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் எனும் கேள்வியை நமக்கு உண்டாக்குகிறது. காரணம் அவ்வளவு முதிர்ச்சியாக அந்தச் சிக்கலைக் கையாளுகிறார். அதே போல தன் தாயைப் பார்க்கிற காட்சியிலும் அதே முதிர்ச்சி வெளிப்படுகிறது. இந்தக் குறைகளெல்லாம் இருந்தாலும் கிக்குஜிரோ படத்தின் பாதிப்பு இருந்தாலும் இது மாதிரிப் படத்தைத் தமிழில் நம் மண்ணின் கலாச்சாரப் பின்னணியில் பார்க்கிற போது பெருமைமிகு படைப்புதான் இது என்று ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது.
அஷ்வத்ராம் கடைசியாய் ஸ்னிக்தாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு முத்தமழை பொழிந்து கொண்டிருக்கிறான். நாணல், ஆற்று நீரில் வளைந்து கொடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கிறது. நடக்கிற சம்பவங்களின் சாட்சியான சாலைகளும் கட்டிடங்களும் அசையாமலேயே மௌனத்தைச் சுமந்தபடி இருக்கின்றன. படம் : நந்தலாலா நடிகர்கள் : மிஷ்கின், அஷ்வத்ராம், ஸ்னிக்தா அகோல்கர். வருடம் : 2010 மொழி : தமிழ். ஐயாவின் கணக்குப் புத்தகம் ஐயா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார். என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க முடியாது, நாங்கள்தான் உண்டாக்கவேண்டும். சாதரண மாங்கன்று ஒன்றை வாங்கி நல்ல பழம்தரும் மரக் கிளையுடன் ஒட்ட வைத்து தினம் தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த வேலைதான் எனக்கு தரப்பட்டது. என் சகோதரர்களின் பொறாமையை தக்க வைப்பதற்காக நான் என் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.
தினமும் அதிகாலை சிறாப்பர் வீட்டுக்குப் போய் நான் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவேன். சிறாப்பர் என்பது அவருடைய பெயர் அல்ல. அப்பொழுதெல்லாம் வங்கிகளில் காசாளர்களை சிறாப்பர் (shroff) என்றே அழைத்தார்கள். இவர் தன் வீட்டிலும் ஒரு வங்கி நடத்தினார். ஐயா இவரிடம் காசு கடன் வாங்குவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து வட்டி வாங்கிப் போவார். அவருடைய கன்னச் சதைகள் தண்ணீர் நிரப்பியதுபோல ஊதிக்கிடக்கும். சிரித்தால் கண் இமைகள் தானாகவே மூடிவிடும். ஒரு தாரா நடப்பதுபோல போல கால்களை அகட்டி வைத்து நடப்பது வேடிக்கையாக இருக்கும். நானும் சிறுவயதில் அப்படித்தான் நடப்பேனாம். எனக்கும் ஒருகாலத்தில் வீட்டிலே பட்டப் பெயர் சிறாப்பர். பின்னர் அது வழக்கழிந்துவிட்டது. ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது. அதற்குள் நான் விரும்பிய இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்று எங்கள் சாதகக் கட்டுகள். சாத்திரியார் வரும்போது அவை வெளியே எடுக்கப்படும். இரவிரவாக வீட்டிலே சாதகம் பார்ப்பார்கள். இரண்டாவது, ஒரு தடித்த அட்டை போட்ட தொக்கையான கணக்குப் புத்தகம். குத்து விளக்கை கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் ஐயா, வயலட் பென்சிலை நாக்கில் தொட்டு தொட்டு கணக்கு எழுத்துவார். பின்னர் கணக்குப் புத்தகம் மரப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படும். ஐயாவுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. அவராக ஒரு வேலைக்குச் சென்றதில்லை. புகையிலை வியாபாரம்தான். சிப்பம் சிப்பமாக கட்டி ரயிலில் கொழும்புக்கும், கண்டிக்கும், மாத்தளைக்கும், கேகாலைக்கும் அனுப்புவார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒரு முறை புறப்பட்டு இந்த ஊர்களுக்கெல்லாம் சென்று பணத்தை அறவிட்டு வருவார். அநேகமாக பாதி பணம்தான் கிடைக்கும். அம்மா ஏதும் தேவைக்கு காசு கேட்டால் மீதி கடன் அறவிட்ட பின்னர் தருவதாகச் சொல்வார். அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தினம் பெட்டகத்தை திறந்து கணக்குகள் எழுதிவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பார். ஐயாவுக்கு புத்தகங்கள் எதிரி. வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதிகமாக உபயோகம் கண்டதும் அந்தப் புத்தகம்தான். வீட்டிலே பல்லி யாராவது உடம்பிலே விழுந்து கொண்டேயிருக்கும். ஐயா உடனே பஞ்சாங்கத்தை புரட்டி பலன் பார்ப்பார். நாலு நாள் கழித்து அது எப்படி பலித்தது என்று நாலு பேருக்குச் சொல்வார். பஞ்சாங்கத்தை தவிர வீட்டிலே பாடப்புத்தகங்களும் இருந்தன. மூத்த அண்ணர் ஒருவர்தான் புதிதாக புதிய மணத்துடன் புத்தகத்தை அனுபவிப்பார். அதன் பின்னர் அது வரிசையாக ஒவ்வொரு வருடமும் கைமாறி கீழே வரும். என் முறை அணுகும்போது, முன் அட்டை பின் அட்டை எல்லாம் கிழிந்துபோய் பரிதாபமான நிலையில் தொட்டால் ஒட்டிப் பிடிக்கும் தன்மையுடன் இருக்கும். எனக்குப் பின்னர் இன்னும் இரண்டு பேருக்கு அது போகவேண்டும். நாவல்களையும், வாரப்பத்திரிகைகளையும் இரவல் வாங்கி ஐயாவுக்குத் தெரியாமல் படிப்பேன். அம்மா என் பக்கம் என்றபடியால் விசயம் ஒருமாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒரே எதிரி தம்பிதான். ஐயாபோல அவனும் புத்தகங்களுக்கு எதிரி. என்னை எப்பொழுதாவது நாவலுடன் பார்த்தால் ஐயாவுக்கு மூட்டிவிடுவான். அப்படியிருந்தும் பாடப் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து திகம்பரசாமியார் முழு நாவலையும் படித்துவிட்டேன். பஞ்சாங்கத்தில் பலன் பார்ப்பதோடு மட்டும் ஐயாவுக்கு பல்லியுடனான சம்பந்தம் முடிவுக்கு வரவில்லை. ஐயாவின் வாழ்வில் பல்லி பெரும் பங்கு வகித்திருக்கிறது. அவருக்கு இரண்டுதாரம். நாங்கள் ஏழு பேர் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவர்கள். முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். முதல் தார மனைவி இறந்தவுடன் பிள்ளைகளைப் பார்க்க ஐயாவுக்கு ஆள்தேவை. நல்லூரில் இருந்து ஒரு பெண்ணின் சாதகத்தை தரகர் அவசரமாகக் கொண்டு வந்தார். சொந்தக்காரர்கள் நெருக்கினார்கள். ஐயாவால் முடிவெடுக்க முடியவில்லை. கோயில் சுவரில் ஏறிக்குந்திவிட்டார். ஏதாவது ஒரு சைகை கிடைத்தால்தான் இறங்குவதாக சங்கல்பம். காலையில் ஏறியவர் மதியம் ஆகியும் இறங்கவில்லை. பின்னேரமும் மறைந்து வானத்திலிருந்து இருட்டு மட்டும் இறங்கியது. ஐயாவுக்கு பசியில் கண் மங்கியது. அப்போது ஒரு பல்லி சத்தம் போட்டது. அதுக்கும் பசி. ஐயா எதிர்பார்த்த சம்மதம் கிடைத்து பொத்தென்று குதித்தார். திருமணம் முடிந்து நாங்களும் பிறந்தோம். அம்மா எப்படி 15 வயதில் இரண்டாம் தாரமாக இரண்டு பிள்ளைகளுடைய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டார் என்பது இன்றைக்கும் புதிர்தான். அந்தக் காலத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்? பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவேண்டியதுதானே. மணமுடித்து வரும்போது அவருக்கு நீண்ட கூந்தல் இருந்தது என்று சொல்வார்கள். தூங்கும்போது ஒரு தலையணையில் அவர் தலையும் இன்னொரு தலையணையில் அவர் கூந்தலும் கிடக்குமாம். ஒருநாள் நான் அம்மாவிடம் நேரில் கேட்டுவிட்டேன். அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்; அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு. ஐயாவுக்கும் எங்களுக்குமிடையே நிறையத் தூரம் இருந்தது. அவர் என்னைத் தூக்கியது நினைவில் இல்லை. தலையை தடவியது கிடையாது. நான் பெரிய குளப்படிக்காரன் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். சின்ன வயதில் வீட்டில் உள்ள பொருள்களை உடைத்துவிடுவேன். ஒருமுறை அம்மாவுடைய வெண்கலக் குடத்தை போட்டு நெளித்துவிட்டேன். இன்னொரு தடவை ஐயா அருமையாகப் பாதுகாத்த சுவிஸ் மணிக்கூட்டை உடைத்தேன். ஆனால் ஐயாவால் மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். எங்களிடம் மிகப் பழமையான கருங்காலி மரத்தில் செய்த கட்டில் ஒன்று இருந்தது. நாலு பக்கமும் நுளம்பு வலை போடுவதற்கு வசதியாக மரத்தூண்கள் இருக்கும். ஒருநாள் இந்த மரத்தூணை எவ்வளவு தூரத்துக்கு வளைக்கலாம் என்று பரீட்சித்துப் பார்த்தபோது அது படாரென்று பெரிய சத்தத்துடன் முறிந்தது. ஐயாவின் கண்களில் முதலில் கோபமும் பின்னர் சோகமும் தெரிந்தது. அது பரம்பரையாக வந்த கட்டில். அவருடைய மனதில் அது எத்தனை பெரிய துயரத்தை உண்டாக்கியிருக்கும். நான் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை தண்டிக்கவே இல்லை. அதன் பின்னர் ஐயா வெளியே புறப்படும்போது வீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் தனியே அழைத்து இப்படி சொல்வார். ‘சுவர், தூண்கள், கூரை பத்திரம். நான் திரும்பும்வரை பார்த்துக்கொள். உடைத்துவிடாதே.’ ஒரு தடவை எனக்கு ஒரு ரூபா கிடைத்தது. வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் எனக்கு கொடுத்தது. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய காசு. நான் அதுவரை சில்லறைக் காசுகளைத்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு தாளாக ஒரு ரூபா கிடைத்திருந்தது. மூளையில் கனவு தொடங்கிவிட்டது. ஆங்கிலப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து ஒவ்வொருநாளும் தொட்டுப் பார்ப்பேன். இந்தச் செய்தி ஐயாவின் காதுகளுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது. ஏதோ அவசரத்துக்கு அவர் என்னிடம் ஒரு ரூபா கடன் கேட்டார். ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. திரும்பக் கிடைக்குமா என்ற அச்சமும் என்னை திக்குமுக்காட வைத்தது. என் முழுச் செல்வத்தையும் கேட்கிறார். எப்படி மறுக்கமுடியும்? அந்த புதுத்தாளை ஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக் கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்து அடுத்த வாரமும் கேட்டேன். ’இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படி தினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு?’ என்றார். எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா? அவருக்கு மறந்துவிட்டது. என் முகத்தை திருப்பி ஐயாவுடன் நான் பலநாள் பேசவில்லை. நான் கோபத்தில் அவருடன் பேசவில்லை என்பது ஐயாவுக்கே தெரியாது. கொழும்பு, கண்டி போன்ற வெளியூர்களுக்கு ஐயா போகும்போது வீடு பெரும் தடல்புடலாக இருக்கும். அம்மா சுழன்று சுழன்று வேலை செய்வார். ஐயாவுக்கு வேண்டிய பலகாரங்களைச் சுட்டு பெட்டிகளில் அடைப்பார். சூட்கேசை இரண்டுநாள் முன்னரே அடுக்கினாலும் ஐயா மறுபடியும் அடுக்குவார். ஐயா திரும்பும்வரைக்கும் அம்மா பதற்றமாகவே இருப்பார். ஒருமுறை ஐயா போய் பல நாட்களாக கடிதம் இல்லை. திடீரென்று ஒருநாள் தந்தி வந்தது. அம்மா குழறி அழத்தொடங்கினார். தந்தியின் வாசகம் இதுதான். ‘நான் அநுராதபுரம் ரயில் ஸ்டேசனில் சேமமாக இருக்கிறேன்.’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் பாதி வழியில் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விட்டனர். இந்தச் செய்தி எங்களுக்கு தெரியாது. ஐயா சிறு காயத்துடன் தப்பி காட்டு வழியில் நடந்து அநுராதபுரம் ஸ்டேசனில் நின்று தந்தி கொடுத்திருக்கிறார். ஐயா வீட்டுக்கு வந்த பின்னரும் அம்மாவின் அழுகை ஒருவாரமாக ஓயவில்லை. அபூர்வமாக ஐயா சந்தோசமாக இருந்திருக்கிறார். பெரிதாக குடிக்கும் பழக்கம் இல்லை. கள்ளுக்கொட்டில் போனதே கிடையாது. வீதியிலே ஆடி ஆடி நடந்தது கிடையாது. எப்பொழுதாவது அவருடைய வெளியூர் வியாபார சிநேகிதர்கள் வந்தால் டவுனுக்கு போய் பிராண்டி வாங்கிவந்து நண்பரும் அவருமாக மரக்கட்டிலில் உட்கார்ந்து குடிப்பார்கள். மகிழ்ச்சி அப்படியே துள்ளும். தொடையிலே தாளம்போட்டு பாட்டுப் பாடுவார். எங்களை கைகாட்டி அருகில் வரும்படி கூப்பிடுவார். நாங்கள் போகமாட்டோம். இவர் வேறு யாரோ என்று எங்களுக்குத் தோன்றும். ஒருவர் வாழ்ந்த மிக நீண்ட வாழ்க்கையில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே நினைவில் வருகின்றன. சிதறியிருக்கும் புள்ளிகளை தொடுத்து ஒட்டகம் உண்டாக்குவதுபோல இந்தச் சம்பவங்களின் கூட்டுத் தொகைதான் என் ஐயாவின் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நிறைய பலாமரங்கள் இருந்தன. அவற்றைக் கயிறு கட்டி இறக்கி ஊர்க்காரருடன் பங்குபோடுவோம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கொடுக்கு கட்டிக்கொண்டு மரம் ஏறினார். ஒரு பக்கம் கத்தியையும், மறுபக்கம் கயிற்றின் நுனியையும் செருகியிருந்தார். இதுவே அவருக்கு முதல் தடவை. உச்சக் கொம்பில் பெரிய பழம் தொங்கியது. கயிற்றினால் காம்பைக் கட்டினார். ஒரு கிளையின் மேலால் கயிற்றை கீழே விட்டார். ஐயா கயிற்றை இழுத்துப் பிடிக்க அண்ணர் காம்பை வெட்டினார். பலாப்பழம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. கயிற்றுக் கட்டுக்கு மேலே வெட்டாமல் அண்ணர் கீழே வெட்டிவிட்டார். அண்ணரின் கால்கள் நடுங்கின. அவருக்கு கீழே நூறு அடி காற்று. அப்பொழுது ஐயா சொன்னது மறக்க முடியாதது. ‘சரி, மகனே. கத்தியையும் கயிறையும் ஞாபகமாக மேலே எடுத்துப்போனாய். மூளையை மட்டும் கீழே விட்டுவிட்டாய். சரி, களைத்துப் போயிருப்பாய். மெதுவாக இறங்கு.’ அருமையான பழம் சிதறிப் போனதில் ஐயாவுக்கு பெரும் கோபம். ஒருமுறை என்னிலும் அந்தக் கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின் சைக்கிளை பார்க்கலாமே ஒழிய தொடமுடியாது. ஐயாவை பார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோல பெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயா இல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத் தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான் சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கே சுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன். இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும், நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவது புழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன் , அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார். நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன். அன்று நான் வீட்டுக்கு திரும்பவில்லை. மாலையாகும் வரைக்கும் வீதிகளில் சுற்றினேன். பசி தாங்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். ஐயா காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கால் செருப்பைக் கழற்றி என்னை அடிக்க வந்தார். நான் வீட்டைச் சுற்றி மூன்று தரம் ஓடினேன். பின் நாளில் இந்தச் சம்பவதை விவரிக்கும்போது நான் இப்படி எழுதினேன். ’சப்பாத்தை தூக்கிக்கொண்டு ராசகுமாரன் சிண்டரெல்லாவை துரத்தியதுபோல அப்பா என்னை துரத்தினார். எவ்வளவு துரத்தினாலும் ஐயாவின் செருப்பு என் முதுகை சந்திக்கவே இல்லை.’ ஐயாவுக்கு வயதானபோது அவரால் வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. நிறுத்தலாம் என நினைத்தார், அனால் பொருட்களைக் கடனாக வாங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. எத்தனை முயன்றும் பணத்தை மீட்க முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கத் தொடங்கினார்கள். ஐயாவுக்கு வேறு வழியில்லை. மூன்று தலைமுறை கண்டு வந்த பெரிய காணி ஒன்றை விற்று கடனை அடைத்தார். அப்பொழுது நான் கணக்காளர் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவாறு விசயம் புரிந்தது. 30 வருடமாக ஐயா செய்த வியாபாரம் நட்டத்தில்தான் ஓடியது. அவர் வியாபாரம் செய்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பத்திலேயே காணியை விற்றிருந்தால் அந்தக் காசிலேயே எங்கள் காலத்தை ஒட்டியிருக்கலாம். இதை நான் ஐயாவிற்கு சொல்லவே இல்லை. அவர் மனது கஷ்டப்பட்டிருக்கும். வீட்டிலே ஓர் ஆண்மகன் எப்படி சும்மா இருப்பது? வியாபாரம் செய்வதுபோல ஒரு பாவனை இருக்கவேண்டும். அப்பொழுதுதானே மரியாதை. ஐயாவுக்கு ஓர் அண்ணர் இருந்தார். பெரிய ஐயா என்று அழைப்போம். அவர் என்ன செய்தார் என்பது தெரியாது. எந்த நேரமும் அவருக்கு ஒரு தேவை இருக்கும். மிக உயரமாக, மேல் சட்டை அணியாமல் முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிப்பார். கைகளைத் தொட்டால் மரப்பட்டை போல இருக்கும். ஏதாவது உதவி கேட்டு வருவார். ஒரு நாள் இரவு சூள் பிடித்துக்கொண்டு இலைகளை மிதித்தபடி அவசரமாக வந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாக சூள் என்னவென்று பார்த்தேன். தென்னம் பாளையை கீறி பற்றவைத்த தீப்பந்தம் அது. ஐயாவுடன் ஏதோ சத்தமாக பேசிவிட்டு யோசனையுடன் திரும்பினார். தீப்பந்தத்தில் அவர் நிழல் பின்னால் விழுந்தது. அது ஏதோ சோகச் செய்தி சொன்னதுபோல பட்டது. அடுத்தநாள் அதிகாலை பெரும் ஆரவாரம் கேட்டு எழுந்தேன். எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓட நானும் ஓடினேன். தண்டவாளத்தை தாண்டியதும் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் பெரிய ஐயா தூக்கில் தொங்கினார். அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. எப்படி அத்தனை உயரம் ஏறினார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. ஒருத்தருக்கும் கேடு நினைக்காத மனிதப் பிறவி அவர். ஐயாவின் கண்களில் நீர் வழிந்ததை முதல்முறை பார்த்தேன். இரண்டாவது தடவை அம்மா இறந்தபோது கண்ணீர் விட்டார். பெரிய ஐயாவுக்கு ஏதோ துயரம் இருந்தது. ஐயா அதைத் தீர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. மிக உயரத்தில் ஒற்றைக் கயிற்றில் அவர் உடல் ஆடியது மறக்கமுடியாத காட்சியாக நிற்கிறது. ஒட்டுமாங்கன்று எப்பொழுது காய்க்கும் என்று ஐயா பார்த்துக்கொண்டே இருந்தார். அது காய்க்க முன்னரே ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். ஐயாவை அவருடைய மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். ஒரு காலத்தில் தண்டவாளத்தை ஒரு கையால் தூக்கியவர், ஊரில் பிரபலமான சண்டியனை ஒற்றை விரலால் நெஞ்சில்தொட்டு நிறுத்தியவர். அவர் உடலை பார்த்து திடுக்கிட்டேன். சதைகள் உருகி வெறும் எலும்புக்கூடுதான் எஞ்சியிருந்தது. 31ம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன். அப்பொழுது சாட்டர்ட் கணக்காளர் பரீட்சையில் சித்தியடைந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே ஐயாவின் கணக்குப் புத்தகத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது. கணக்காளர் படிப்பில் ஒற்றை பக்க கணக்கு, இரட்டைப் பக்க கணக்கு என இரண்டு வகை இருந்தது. இரண்டுக்கும் இடைப்பட்ட கணக்குத்தான் ஐயாவுடையது. அவராக உண்டாக்கியது. புத்தகத்தில் சிட்டை கணக்குகள், ரசீதுகள், காசு வரவுகள், செலவுகள், கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் என சகலதும் இருந்தன. ஆனால் என்னுடைய கணக்காளர் மூளையில் ஒன்றும் ஏறவில்லை. ஒருவருடைய பெயரை எழுதி வெட்டியிருப்பார். அவர் கடனை தந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா? ஒவ்வொரு மாதமுடிவிலும் கோடு இழுத்து புதிய மாதம் தொடங்கியது. எப்படி இந்தப் புத்தகம் அவருக்கு உதவியது என்பது புரியவே இல்லை. திடீரென்று ஒரு பக்கத்தில் வரவேண்டிய கணக்குகள் இருந்தன. அதிலே 10 – 15 பேர்கள். அந்தக் கடன்கள் வந்தனவா என்றும் தெரியவில்லை. அடுத்த பக்கத்தில் கொடுக்கவேண்டியவர்கள் கணக்கு. பெயர்களை வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன். பல பெயர்கள் எனக்கு தெரிந்த பெயர்கள்தான். ஒரு பெயரில் கண் நின்றது. சிறாப்பர் – ரூ 1.00. அதன் பின்னர் என்னால் ஒன்றுமே படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடினேன். தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் மேலாக அகல் மின்னிதழில் கவிதைகள், கட்டுரைகள், வாசிப்பு அனுபவங்கள், சிறுகதைகள் என எழுதி வரும் ஸ்ரீமதி. ஜான்ஸி ராணி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”
எழுதுவதைத் தாண்டி புத்தகங்கள் படிப்பதிலும் கவிஞர் ஆர்வம் காட்டுபவர். அகல் மின்னிதழ் பிரசுரம் வெளியிட்ட ஸிடோர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தார். புத்தகம் வாங்கினார். அதன் பிறகு என்னுடைய இரு புத்தகங்களையும் வாங்கி ஊக்குவித்தார். புத்தகம் பற்றி தம் கருத்துகளையும் வெளியிட்டு சிறப்பித்தார். மனோதத்துவம் படித்தவர் என்ற தகவல் கிடைத்தவுடன் அது தொடர்பாக நிறைய விஷயங்கள் இவரிடம் கேட்டுப் பெற்றேன். பல்வேறு தலைப்புகளில் அத்துறை பற்றி இவரிடம் விவாதித்து அகலில் கட்டுரைகள் எழுதும்படி வேண்டினேன். மிகச் சிறப்பான முறையில் எழுதித் தந்தார். “ஆத்ம பலம் தா மனோபலம் தா” என்ற தலைப்பை சொல்லி அது பற்றி பேசி நான் ஒரு கட்டுரை கேட்க, சலிக்காது எழுதித் தந்தார். “இது ரெகுலர் டெம்ப்ளேட்ல இருக்கு ஜி, நீங்க “mental strength” என்கிற பதத்தை அடிப்படையா வெச்சு அறிவியல் பூர்வமா ஒரு விளக்கம் தருவது போல எழுதித் தாங்க” என்று கேட்டேன். சிறிதும் முகம் சுளிக்காது மாறுபட்ட ஜானரில் அந்த பதத்தை எடுத்தாண்டு எழுதித் தந்தார். இவரிடம் இன்னொரு சிறப்பம்சம், கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், சிறுகதையாகட்டும் (அகல் சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றுக்கு பரிசும் கிடைத்திருக்கிறது) அதனதன் வடிவை மாற்றாமல் துல்லியமாக எழுதுவார். கடவுள் கொடுத்த வரமாக இதைக் கருதுகிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் இடம் பெற்றுள்ள முதல் கவிதையான “முழு முதற் கடவுள்” பற்றி சொல்ல வேண்டும். இவர் எழுதிய கவிதை ஒரு சஞ்சிகையில் பிரசுரமாகி இருந்தது அது பற்றி ஃபேஸ்புக்கில் பதிவெழுதி இருந்தார். நான் எதுவுமே சொல்லவில்லை. வாட்ஸப்பில் ஒரு கோப இமோஜியை மட்டும் அனுப்பி வைத்தேன். அன்று முழுதும் மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாத ஒரு பணி நிமித்ததில் சிக்கிக் கொண்டேன். மாலை ஏழு மணியளவில் டேட்டாவை உயிர்ப்பித்து ஃபேஸ்புக்கை அசுர கதியில் ஆராயும் போது வாட்ஸப் நோட்டிஃபிகேஷன் ஒன்று, கவிஞரிடமிருந்து! “கவிதை, கோபமா ஜி?” அந்தக் கவிதை தொடர்பாக மறுநாள் அரை மணித்தியாலத்திற்கு தர்க்கம் செய்ய பொறுமையாக அனைத்தையும் கேட்டு பதிலளித்தார். அதில் முத்தாய்ப்பாக சொன்னது “என் இஷ்ட தெய்வமே விக்ன விநாயகர் தான், என்கிட்ட 30 க்கும் மேல வித விதமான பிள்ளையார் விக்ரஹங்கள் இருக்கு” பொதுவாக நாம் வணங்கும் கடவுளின் உருவங்கள் அது சிவனோ, விநாயகரோ, பெருமாளோ, இயேசுவோ, உருவம் இல்லை என்றாலும் அல்லா - இறைவன் அவன் என்று ஆண் பால் சார்ந்து புழங்கும் கடவுள்களை என் மனம் எளிதாக ஏற்றுக் கொள்ளும். மனிதர்களை தெய்வம் என்று உருவகப்படுத்தும் போது பெற்ற அம்மா போன்ற பெண் பால் மனிதர்களை கடவுளாக விகல்பமின்றி ஏற்கும் அதே மனம் ஆண் பால் மனிதர்களை தெய்வமாக உருவகப்படுத்துவதை ஏற்க மறுக்கிறது. (மனோதத்துவம் படித்த கவிஞர் தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்) அந்த விவாதத்தின் இறுதியில் நான் சொன்னது “புனைப் பெயர் சத்யா ஆனால் என்னோட இயற் பெயர் கணேஷ், என் கோபம் உங்களுக்குப் புரியும்னு நம்பறேன் ஜி” என்று நிறைவு செய்தேன். வீட்டில் இப்புத்தகத்தை வாசித்த என்னைப் பெற்ற அம்மா சொன்னது “முதல் கவிதையே அட்டகாசமா இருக்கு, தனித்துவமா இருக்கு”. தான் எழுதியவற்றிலிருந்து மிக கவனமாக தேர்ந்தெடுத்து சில கவிதைகளை முதல் தொகுப்பில் சேர்த்திருப்பதில் கவிஞரின் மெனக்கெடல் நன்கு புலப்படுகிறது. முழு முதற்கடவுள் விக்ன விநாயகரிலிருந்து ஆரம்பிக்கிறார். பெண் சார்ந்த பெண் பார்வை பொதிந்த பெண் கஷ்டங்களைப் பேசும் கவிதைகளே இத்தொகுப்பில் ஏராளமாக உள்ளன. தொகுப்பின் தலைப்புக்கு பொருத்தமானதாகவும், அழகு சேர்ப்பதாகவும் இருக்கின்றன. இறுதியில் மரணத்தைப் பற்றிய கவிதையுடன் தொகுப்பை நிறைவு செய்கிறார். ஒரு சிறந்த சிறுகதைக்கான இலக்கணமாக அதில் பாண்டித்தியம் பெற்றவர்கள் சொல்வது : “சிறுகதைக்கு முடிவென்பது கிடையாது, சரியான இடத்தில் நிறுத்துவது என்றே நாம் பார்க்க வேண்டும், நிறுத்தும் போது வாசிப்பவர்களுக்கு ஒரு அதிர்வை அச்சிறுகதை ஏற்படுத்த வேண்டும்” கவிஞரின் பல கவிதைகள் அத்தகையதொரு பண்பைக் கொண்டிருக்கின்றன. கவிதை நிறைவடையும் போது ஒன்றிப் போய் வாசிப்பவர்களின் மனதை ஆழமாக உலுக்கும் கண்ணிகளை தன்னுள்ளே பல கவிதைகள் புதைத்து வைத்து தக்க சமயத்தில் வெடிக்கின்றன. “என் கேள்வியெல்லாம் நான் புலியோ பசுவோ?!” “பெண்ணியக் கவிதைகளிட்டு ஓராயிரம் லைக்குகள் வாங்குதல் சுலபம் கொஞ்சம் நிமிர்ந்து பார் உன் மனைவியையும்” “நியாயத்திலிருந்து நியாயப்படுத்துதலுக்கு நகர்ந்த பிறகு அது எதுவாய் இருந்தாலென்ன” இப்படி நிறைய சொல்லலாம். பொதுவாக கவிஞர்களுக்கு உவமானங்கள் இயற்கையிலிருந்து வற்றாமல் கிடைக்கும். அவர்களுக்கு இயற்கையானது ஒரு அமுதசுரபி ஆனால் நம் கவிஞருக்கு சிட்டிகை உப்பு, தாளிக்கும் கடுகு கூட வசப்படுகிறது. “இனிப்பின் சுவைகூட்டும் சிட்டிகை உப்பு நீ கண்டுகொள்ளாமல் நடிக்கும் பாவனைகள்” உப்பு மட்டும் சேர்த்து எலுமிச்சை சாறு அருந்தும் குழுவினர்களில் முதன்மையானவன் நான் ஆனால் ஜீனி சேர்த்து சாறு குடிப்பவர்கள் சிட்டிகை உப்பு சேர்த்து ஜீனி கரைந்த குளிர் ஜலத்தில் தயாரித்த எலுமிச்சை சாறை அருந்தும் போது வெளிக்காட்டும் முகபாவம்... அவர்களால் இக்கவிதையினை உணர்வுப்பூர்வமாகவும் அனுபவப்பூர்வமாகவும் ரசித்து லயித்துக் கொண்டாட முடியும். தொகுப்பை படிக்கும் போது அடிக்கடி படித்து சலித்த வார்த்தைகள் எதையும் கவிஞர் பயன்படுத்தக்கூடாது என்ற பரிதவிப்பு வெளிப்பட்டது. கவிஞரும் ஏமாற்றவில்லை. இருப்பினும் மதுப்போத்தல் என்ற வார்த்தையை ஓரிரு இடத்தில் பிரயோகித்து கவிதைக்குரிய நவீன இலக்கணத்தை சுட்டி இருக்கிறார். ஒரு தேர்ந்த கவிஞரின் தொகுப்பாகவே இப்புத்தகம் மிளிர்கிறது. கவிஞருக்கு இது முதல் தொகுப்பு என்று சொல்ல இயலாது. சற்று மாறுபட்டு எழுதப்பட்ட கவிதைகள் கொண்ட இத்தொகுப்பிற்கான அட்டைப்படத்திற்கு டிஸைனர் இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம். சராசரியான முகப்புப் படம் தொகுப்பின் வீரியத்தை எடுத்துக் காட்டாது நம்மைக் கடக்கிறது. நண்பர்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற என் பரிந்துரையுடன் நிறைவு செய்கிறேன். கவிஞர் மேலும் பல சிறப்பான கவிதைத் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்று கோரி அதற்கு எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கவிதைத் தொகுப்பின் பெயர் : ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் ஆசிரியர் : ஸ்ரீமதி. ஜான்ஸி ராணி வெளியீடு : வாசகசாலை பதிப்பகம் இந்நூலைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் : 9942633833/ 9790443979 |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |